ஜெகன் மலருக்கு திருமணம் என்றதும் அனைவரும் அதிர்ந்தனர். "என்ன ஜெகன் இப்படி திடீர்ன்னு முடிவு பன்னி இருக்கிங்க" என்று ஆதன் கேட்க "இல்லை மாமா ஏற்கனவே இரண்டு வருஷம் லேட் ஆகிடுச்சி" என்று இழுத்தான்.
"அப்படி பார்த்தா எனக்கு கூட தான் இரண்டு வருஷம் அதிகமா ஆகுது" என்று திவ்யா கூறினாள். "நீ கல்யாணம் பன்னிக்க விருப்பம் இல்லாம இருக்க மலர் அப்படி இல்லை இல்லை திவ்யா" என்று ஜெகன் கூறினான். "அவளுக்கு விருப்பமான்னு கூட கேக்கலையா ஜே நீ" என்று ராகவி கேட்க "அவளுக்கு என்ன தெரியும் ராகவி" என்று கேட்டான்.
"அவ வாழ்க்கையில முடிவெடுக்க அவளுக்கு எப்படி டா தெரியாம போகும்" என்று ராகவி கேட்டாள். "அதில்லை ராகவி" என்று ஜெகன் தொடங்கும் போதே "ஜெகன் மலர்ர இளமாறனுக்கு கல்யாணம் பன்னி கொடுப்பியா" என்று ஆதன் கேட்டான். அதில் ஜெகனின் குடும்பம் மொத்தமாக அதிர்ந்து நிற்க இளமாறனுக்கும் மலருக்கும் சற்று நிம்மதியானது.
"ஆதன்" என்று ஆதனின் தந்தை அதிர்ச்சியாக அழைக்க ஆதன் தன் தந்தையின் அருகில் அமர்ந்து "அப்பா ... நம்ம வீடு இப்படியே சந்தோஷமா உடையாம இருக்கனுன்னா கவி மாதிரி விட்டுக் கொடுத்து போற பொண்ணு இளாக்கு ஒய்ப்பா அமைஞ்சா தான்ப்பா நல்லா இருக்கும் ... மலர் அங்க எங்க கூட இருந்தத வச்சி தான் சொல்ரன் அவ இளாக்கு கரெக்ட்டா இருப்பா ... நா முடிவா எல்லாம் சொல்லலப்பா உங்க கிட்ட அவ இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொல்ரன் அப்பறம் உங்க முடிவு" என்று தன்மையாக கூறி விட்டு எழுந்துக் கொண்டான்.
"மாமா என்ன மாமா நீங்க இப்படி சொல்ரிங்க மலர் இங்க சரி வராது" என்று ஜெகன் கூறினான். "ஏன் பெரிய இடமா எதிர் பாக்றியா" என்று ஆதன் கேட்க "ஐய்யோ மாமா பெரிய இடம்ன்னு இல்லை" என்று தயக்கத்துடன் நிறுத்தினான். "டேய் என்னன்னு முகத்துக்கு நேரா சொல்லு" என்று ராகவி கேட்டாள்.
"மலர்க்கு நகை பணம்ன்னு எதும் எதிர்பாக்காத குடும்பமா இப்ப தான்ம்மா அமைஞ்சிருக்கு அதை விட்டு கொடுக்க அவனால முடியல" என்று ஜெகனின் தந்தை கூறினார். "ஜே நாங்க மலர்ர வரதட்சணை கொடுமை பன்னுவோம்ன்னு நினைக்கிறியா" என்று ராகவி அதிர்ச்சியாக கேட்டாள்.