ஆதன் திவ்யா கழுத்தில் தாலியை கட்ட செல்லவும் ராகவி அழுகையுடன் திரும்பி அங்கிருந்து வெளியேற நடந்தாள். மங்கல வாத்தியம் ராகவியின் செவிகளில் விழுந்ததில் இருந்தே ஆதன் திவ்யா கழுத்தில் மாங்கல்யம் கட்டி விட்டான் என்பது ராகவிக்கு புரிந்தது.
உள்ளே ஜனனி தன் அண்ணனின் கையை பிடித்து தடுத்து "வேணா அண்ணா" என்று கூறினாள். அனைவரும் அதிர்ந்து நிற்க ஜெகன் வேகமாக அவள் அருகில் சென்று அவள் கையை பிடித்து இழுத்தான்.
உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்த ஜனனி "அண்ணா எங்க ஜெகா விடு டா அண்ணா கட்டாத" என்று கத்தி அங்கும் இங்கும் ஆதனை தேடினாள். ஜெகன் மார்பின் குறுக்கே கையை கட்டிக் கொண்டு ஜனனியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"எருமை மாடே காங்காத்தால கனவு கண்டு எதுக்கு கத்திட்டு இருக்க எழுந்து ரெடி ஆகு முகூர்த்ததுக்கு நேரம் ஆச்சி" என்று ஜெகன் ஜனனியை திட்டி விட்டு சென்றான். ஜனனியும் தன்னை தானே நொந்துக் கொண்டு எழுந்து தயார் ஆக சென்றாள்.
"என்ன மச்சான் என் தங்கச்சிய எதுக்கு திட்ர" என்று இளமாறன் கேட்க "உங்க அண்ணன் கல்யாணத்தை பத்தி உங்க அண்ணனோ ராகவியோ கனவு கண்டிருந்தா பரவால்ல உன் தங்கச்சி கனவு கண்டுட்டு ... சொன்னா பாரு ஒரு வார்த்தை அண்ணா வேணான்னான்னு இவ உங்க அண்ணன தடுக்றாளாம் ... உங்க அண்ணன் லைட்டா முறைச்சாவே ஒரு கிலோ மீட்டர்க்கு ஓடிருவா இவ உங்க அண்ணனை தடுக்கறாளாம் ... எல்லாம் என் நேரம்" என்று ஜெகன் ராகவி மேல் இருக்கும் கடுப்பு பத்தாதென்று தன் மனை கனவு கண்டு விட்டு அலறுவதை நினைத்து இன்னும் கடுப்பாகினான். இளமாறன் சிரித்தவாறே "சரி வா அண்ணன் என்ன பன்றார்ன்னு பாப்போம்" என்று அழைக்க ஜெகனும் அவனுடன் சென்றான்.
ராகவி திருமணத்திற்காக தயார் ஆகி திவ்யா அறைக்கு சென்றவள் அதிர்ந்தாள். அங்கு திவ்யாவின் தந்தை தாய் மற்றும் சில நெருங்கிய நம்பிக்கையான உறவினர்களும் இருந்தனர். அனைவரும் பதட்டமாக இருக்கவும் ராகவி "அம்மா என்னம்மா" என்று அவர்களிடம் சென்று கேட்டாள்.