35 அந்தரங்க விருப்பம்
அனைவரும் சென்று விட்ட பிறகு அந்த அரசவை வெறுமையானது. ஆனால் ஒருத்தி மட்டும் அங்கிருந்து செல்லவில்லை... காஞ்சனமாலை. அமுதனும் தன்மயாவும் நின்றிருந்த இடம் நோக்கி மெல்ல நகர்ந்த அவள், ஒரு தூணுக்கு பின்னால் மறைந்து கொண்டாள், அவர்கள் பேசுவதை கேட்க. மணல் கடிகாரத்தை மறைத்து வைத்த பிறகு, அவர்களுக்குள் உறவு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அவளுக்கு.
அருகன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த எழிலரசியை கவனித்தாள் தன்மயா.
"எதற்காக அருகன் இப்படி ஓடுகிறார்?" என்றாள் தன்மயா அமுதனிடம், எழிலரசியை தன் ஓரக்கண்ணால் கவனித்தவாறு.
"வெகு நாட்களுக்குப் பிறகு தலைநகருக்கு வந்திருக்கிறான் அல்லவா? அதனால் தன் பெற்றோரை காண விரைகிறான்" என்றான் அமுதன்.
"அவரிடம் ஏதோ ஒரு பதற்றம் தெரியவில்லை?" என்றாள் தன்மயா, எழிலரசியின் முகத்தில் தெரிந்த தவிப்பை கவனித்தவாறு.
"நீ என்ன நினைக்கிறாய்?" என்றான் அமுதன், அவள் தேவையில்லாமல் எந்த கேள்வியையும் எழுப்ப மாட்டாள் என்று அவனுக்கு தெரியும் என்பதால்.
"அவருக்கு காதலி இருக்கலாம் என்று தோன்றுகிறது... நீ என்ன நினைக்கிறாய், எழிலரசி?" என்றாள் தன்மயா.
"ஆங்?" என்றாள் எழிலரசி திணறலுடன்.
"அவர் தன் காதலியை சந்திக்க செல்கிறார் என்று நினைக்கிறேன். அதனால் தான் அவருக்கு அவ்வளவு அவசரம். நான் கூறுவது சரி தானே?" என்றாள்.
செயற்கையான புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள் எழிலரசி.
"அவள் பதற்றம் அடைந்து விட்டாள்" என்றான் அமுதன்.
"ஏன்?"
"இந்நாட்டு பெண்களைப் பற்றி உனக்கு தெரியாதா? காதல் என்று வந்துவிட்டால், அவர்களுக்கு வெட்கம் வந்துவிடும்"
"ம்ம்ம்... எழிலரசி போகட்டும், தாம் கூறுங்கள்..."
"என்ன கூற வேண்டும்?"
![](https://img.wattpad.com/cover/359982763-288-k478558.jpg)
YOU ARE READING
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
Fantasyகாலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!