பகுதி - 21
கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.. என்ற குரல் அந்த இடத்தையே நிறைத்திருக்க , முகம் இறுகியிருந்தவனின் பற்களின் நறநறவென சத்தம்.. அந்த மேளச்சத்ததிலும் அருகில் இருந்தவர்களுக்கு நன்கு கேட்டது .
பதுமையாக அமர்ந்திருந்தவளின் செவிகளை மட்டும் எட்டாமல் போகுமா..? தாமரைக்கும் நன்கு கேட்டது . ஆனாலும் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல், அதேபோல் இமையை குடையாய் தாழ்த்தி அவள் அமர்ந்திருக்க , அதில் மேலும் அவன் உள்ளக் கொதிப்பு அதிகரிக்கவே செய்ய.. தனக்கு எதிரே இருக்கு தீ குண்டத்தைக்காட்டிலும்.. அதிகமாக உள்ளுக்குள் எரிந்துக் கொண்டிருந்தான்.
தாலியை தன் கரத்தில் வைத்துக் கொண்டு, அவளை ஏறிட்டால்.. வந்தது முதல் எப்படி இருந்தாளோ அப்படியே அவள் இருக்கிறாள் . அதில் மேலும் வெகுண்டவன் , முகத்தில் எவ்வித கோபத்தையும் காண்பிக்காமல், அவள் காதின் அருகே ,
" நான் என்னடீ பண்ணணும்.. கட்டவா.. விசிறியடிக்கவா..? " என்ற உறுமலில்.. திடுக்கிட்டு சரணின் முகம் பார்க்க , அது அழகாக புகைப்படக் கருவியில் பதிவானது .
அவன் உதடுகள் அசைந்ததாக தெரியவில்லை . "நாழியலாகறது.. " என்று கூறிய ஐயரையும் கண்டுக் கொள்ளாமல்,' நீ சொல்..' என்பது போல் பார்த்திருக்க.. ம்.. என்று வெளிவராத குரலில் முனங்கிய அடுத்த கணம்.. மங்கள நாணலை பூண்டிருந்தான் . மூன்றாம் முடிச்சை போடுவதற்காக.. குனிந்திருந்த தங்கையிடம்.. முறைப்பை பதிலாக்கி.. அவனே மூன்று முடிச்சுக்களையும் போட்டவனாய்..
இந்த திருமணம் வேண்டவே வேண்டாம் என்று அழுச்சாட்டியம் செய்தவனா.. தாலியை கட்டாமல் அரை நொடியே.. ஆனாலும் அவள் வார்த்தைக்காக காத்திருந்தான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவன் அன்னை மயூரியால் .
ஆஹா.. பாவம் ! அவர் அறிய வாய்ப்பில்லையே.. அவன் கூறிய வார்த்தைகளை.. அதுமட்டும் தெரிந்திருந்தால்.. இந்த யோசனைகளுக்கே அவரிடத்தில் இடமிருந்திருக்காது.
நான் மணந்து கொண்டவள் என்று அழைத்து வந்த தாமரையை.. எங்களின் முன்பும் மணந்துக் கொள் என்று கூறி.. குடும்ப அளவில் வெகு விமர்சனையாகவே, இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தேறி இருக்க.. இதை சற்றும் எதிர்பார்க்காத சரணிற்கு பேரிடி என்று நினைத்தவனாக.. கோபத்தில் சிவந்து கொந்தளித்துக் கொண்டிருந்தாலும்.. வெளிக்காட்ட முடியாத நிலையில் இருப்பதால்.. அவளிடம் வெடித்தவனாய் இருந்தான் .
தன் கழுத்தில் ஏறிய தாலியை பற்றிய நினைப்பற்றவளாய்.. " எதுக்காக.. எதுக்காக.. ராம் ஸார் இப்படி பண்ணாரு.. அவ்வளவு தூரம் சொன்னப் பிறகு.. இந்த திருமணம்.. எதற்காக.. அருகில் இருப்பவனே.. எரியும் அடுப்பாய் இருக்கிறான் என்றால் எதிரில் இருக்கும் மயூரியை பார்த்த பிறகோ.. அய்யோ.." , என்று அதிகமாக குளிர் எடுக்க தொடங்கிவிட்டது.
மணமக்கள் என்றதற்கு அடையாளமாக.. பட்டு உடுத்தி.. அணிகலன்கள் அணிந்திருந்தாலும்.. ஆணின் முகத்தில் இருக்க வேண்டிய கர்வமோ.. பெண்ணவளிடத்தில் இருக்கக் கூடிய நாணமோ இல்லாமல்.. இருவரும் அவரவர் யோசனையில் மூழ்கியவர்களாக.. இருந்தார்கள்.
தாமரையின் விழிகளில் கோர்த்திருந்த நீர்களோ.. இந்தோ விழுந்துவிட்டுவேன் என்று பயங்காட்டியதாக இருந்தது.
கல்யாணமே இல்லாத கல்யாணத்திற்கு.. ராம் அவளுடைய உறவுகளையும் வரவழைத்திருக்க.. அனைத்தும் பொய்யென அவர்கள் அறியும் பொழுது.. ஏற்படப் போகும் நிலையை அறியாதவராக.. நடந்துக் கொண்டாரே என்று மேலும் தவித்துப் போனாள்.
தன் வாழ்வில் மீண்டும் நிகழவே கூடாது என்று நினைத்திருந்த ஒன்றை நிகழ்த்திக் காட்டிய.. அவன் குடும்பத்தினரின் மீதுள்ள கோபம் அதிகரித்ததாய்.. அதற்கு மேல் அருகில் இருப்பவளோ.. என்னவோ.. கிணற்றுக்குள் தள்ளிவிடுவது போல முகத்தை வைத்திருந்ததில்.. " ஏன் இவளுக்கு நான் கசக்குறேனோ.." என்ற தேவையில்லாத நினைப்பும் அவனுக்கு விசிறிவிடுவதாய் இருக்கவே.. தன்னை கட்டுப்படுத்த வழித் தெரியாமல் குமைந்துக் கொண்டிருந்தான்.
ஒருவழியாய்.. அவர்கள் கூறிய அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தவன்.. ஒரு கட்டத்தில்.. "என்னால் எதுவும் இனி முடியாது.." என்று கூறி.. அவளை தனித்து விட்டு மாடியேறிவிட்டான்..
தாமரையின் சொந்தங்களாய் வந்த நெருங்கியவர்களை.. சமாளிப்பதற்குள்.. அப்பொழுதே போதும் போதுமென்றானது.." அட ஆண்டவா.. இன்னும் என்னென்ன வச்சு காத்துயிருக்க.. " என்று அலறியவளாய் இருந்தாள்.
அன்னபூரணியோ.. பேரனின் திருமணத்தை கண்டதில் துள்ளித் திரிந்தவராக.. " மயூ.. தாமரைய மாடிக்கு ரெஸ்ட் எடுக்க அனுப்புமா.." என்றார்.. அவள் அருகில் நின்றவராய்..
" மாடிக்கா.. ப்ளீஸ் வேணாம் பாட்டி .. நான் கீழேயே.. ஏதோ ஒரு ரூம்ல.." என்று முடிப்பதற்கு முன்பாகவே.. தரதரவென மேலே இழுத்துச் சென்றிருந்தான் சரண்.
அவன் அதிரடியில் அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளிப்படையாக மிரண்டாலும்.. பெண் வீட்டார் அதிர்ந்து நிற்கவே.. கண்களால் வேந்தனிடம்.." சமாளி " என்ற கட்டளையா.. கெஞ்சலா.. என்று புரியாதொரு விதத்தில் ராம் சொல்லியதால் ஏற்றுக் கொண்டவனாய்.. சமாளித்தான்.
ஆனால ரிச்சர்டிற்கும்.. விக்கிக்குமோ.. 'இதை காட்டவா.. அங்கிருந்து.. நம்மலையும் இழுத்துட்டு வந்தான்..',' இவன் அடங்கவே மாட்டான் போல..', என்று பொறுமியவர்களாக.. இருந்த மனநிலைக்கு.. வந்ததில் இருந்து.. ரிச்சர்ட்டையே வட்டமிடும் கண்களை மறந்தும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை... ஏற்கனவே கோபத்தின் உச்சாணிக் கொம்பில் நின்றுக் கொண்டிருப்பவனை.. மேலும் கொம்பு சீவி விடுவது போல் சரண் நடந்திருக்க.. தாரா.. தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் .
சரண் கோபத்தால் மாடியேறி இருந்தாலும்.. செய்த தவறு புரியே உடனே கீழே இறங்கி வர.. அவளோ.. அவனோடு இருக்க மாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருந்தாள்.. இறங்கியிருந்தது மீண்டும் ராக்கெட் வேகத்திற்கு எகுறியிருக்க.. யாரைப் பற்றியும் எதை பற்றியும் யோசிக்காமல்.. அவளை தன்னோடு இழுத்து வந்துவிட்டான்..
" அய்யோ.. மித்ரன் ஸார்.. கைய விடுங்க. என்ன பண்றீங்க.. வலிக்குது.. ஸார்.. ", என்று வலி தாளாதவளாய் போராடியவாறு வந்தது.. மேலும் அவன் வேகத்தை கூட்டியிருக்க.. " வாய மூடு டீ.. " என்று அறைக்குள் தள்ளிய மறுநொடி கத்தியிருந்தான் .
" ஸார்...", என்று ஆரம்பிக்க..
அவளது பின்னங்கழுத்தில் கரம் வைத்து அழுத்தியவனாக முகம் காண வைத்தவன்.. " ஸார்.. ஸார்ன்னு ஏலம் விட்ட உன்னை கொன்னுடுவேன்..", என்றான்..
" அய்யோ அம்மா வலிக்குது.. என்னை விடுங்க.. ஏன் ஸார் இப்படி பண்றீய.. நீங்க நடந்துக்கறது உங்களுக்கே நியாயமா படுத்தா.. இப்படி பிடிச்சு இழுத்துட்டு வரியளே.. எங்க வீட்டுல உள்ளவிய என்ன நினைப்பாக.. கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தீயளா.. " என்று அழவும்..
" நீ யோசிச்சியாடீ.. அந்த நினைப்பு இருந்திருந்தா.. என் பாட்டிட்ட.. என் ரூமுக்கு வர மாட்டேன்னு சொல்லியிருப்பியா.. " என்று அழுத்தமாக தன் குரலை உயர்த்தாமல் கொதிப்பாய் கேட்டிட.. உறைந்து வெறித்தவளாய் நின்றுவிட்டாள் .
அவன் கோபமாய் கத்தியிருந்தால் .. பயமே இல்லை.. ஆனால் இந்த அடக்கப்பட்ட உறுமல்.. அவளுள் கிலியை ஏற்படுத்தி கால்களை தள்ளாட வைக்க.. பயத்தில் வெடவெடத்துப் போனாள் என்றால் மிகையில்லை.
ஏற்கனவே இருக்கும் வலி போதாதென்று தாமரையின் செயல்.. மேலும் அவனுக்கு தூண்டிவிடுவதாய் இருக்கவே கொந்தளித்தவனாய்.. தன் முழு முரட்டுத்தனத்தையும் பிடியிலும்.. பேச்சிலும் வெளிப்படுத்த.. செய்வதறியாது.. சிறுப்பிள்ளையை போல் பயந்து மலங்க மலங்க விழித்து பார்த்தவளிடம்.. வேகத்தை தொடர முடியாதவனாக.. கையை எடுத்து விட்டான் .
தன் உஷ்ணத்தை குறைக்கவோ.. இல்லை கசகசப்பை தீர்க்கவோ.. குளியலறைக்குள் அவன் புகுந்து கொண்ட பின்னே.. இயல்பாக மூச்சை வெளியேற்றியவளுக்கு , ஏற்கனவே இருந்த மன உளைச்சலோடு.. அவனின் பிடியும் சேர்ந்துக் கொள்ள.. முழுதாய் சோர்ந்ததில்.. உடனே படுக்கையில் வீழவே உடல் கெஞ்சிற்று..
மணம் முடிந்து முழுதாய் ஒரு மணிநேரம் முடிந்திருக்கவில்லை. அதற்குள் அவனோடு இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க.. சுவாசத்துக்கு ஏங்கியவளாய் தவித்து போனவள்.. அதேசமயம் எந்த நிமிடம் வேண்டுமானாலும்.. அவன் வந்துவிடலாம் என்பதாலேயே.. சிறிதும் யோசனையின்றி.. சுவரோரமாய்.. தரையில் கைகளையே தலையணையாக்கி.. படுத்து கண் மூடினாள்.. அதிக களைப்பின் பிடியில் இருந்தவள் உடனே உறங்கியும் போனாள். கட்டாந்தரையில் படுத்து உறங்குபவளுக்கு.. கீழே படுப்பதற்தோ.. உறங்குவதற்கோ சிரமம் ஏற்படவில்லை.
கீழே நின்றிருந்தவர்களோ.. திகைப்பின் உச்சியில் இருந்தவர்களாக.. யாரையும் மதிக்காமல்.. மேல் ஏறியது மட்டுமின்றி அவளை எழுத்து சென்ற விதத்தில்.. முதல் முறையாக.. ராம் தவறாக கணித்துவிட்டேனோ.. என்று எண்ணியவராய்..
அவன் வேகத்தை எப்படி அச்சிறு பெண் தாங்குவாள்.. மகனின் நல்வாழ்வை நினைத்து.. அவளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டோமோ.. என்ற பதற்றத்தில் பெரியவர்கள் இருந்தாலும்.. ஏனோ சரணின் அறைக் கதவை தட்டும் தைரியம் மட்டும் ஒருவருக்கும் வரவில்லை.. இருவரின் வருகைக்காக காத்திருப்பதை தவறி வேறு வழியும் அவர்களுக்கு இருந்திருக்கவிீல்லை என்பதால் காத்திருக்க தொடங்கியவர்களாக இருந்தார்கள்.
தங்கத் தாரகை வானில் இருந்து இறங்கி வந்தவளாக.. வைரத்தாலும்.. வைடூரியத்தாலும் மின்னி மிளிர்ந்தவளின் அழகில்.. கர்வம் கொண்டவனாய்.. முத்துப் பற்கள் மின்ன.. சிரித்து மணவறையில் இருந்து வரவேற்றவனின் காதல் பார்வையில்.. பொங்கி வழிந்த நாணத்தின் அழகோடு.. தன் காதல் பார்வையை அவனோடு கலக்கவிட்டவளாய்.. அன்னநடையோடு நடந்து வந்து அருகே அமர்ந்தவளை ஆசை தீர விழிகளால் முழுங்கியவனின் செயலில்.. முதன்முதலாக சிக்கித் தவித்தவள்.. மற்றவர்களின் கேலியால்.. தன் முகத்தில் இருந்த மேக்கபையும் மீற கன்னம் சிவந்தவளை.. பருகியவனை எப்படி பார்வையை திருப்ப வைப்பது என்று புரியாமல்.. யாரை பற்றியும் யோசிக்காமல்.. சிவந்திருந்த விரல்களை அவன் கன்னத்தில் வைத்து முகத்தை திருப்பியதில்.. பேரிரைச்சலாய் கேலி அலைகளுக்கு நடுவில் மாங்கல்யத்தை அணிவித்து... தயங்காமல் முதல் முறையாக மான்சியின் நெற்றியில்
முத்தம் பதிக்க.. மையிட்ட விழிகளில் வழிந்த ஆனந்தக் கண்ணீரால்.. அவளுக்கு இருக்கும் அவன் மீதான நேசத்தை பறைச்சாற்ற.. அடுத்த கணம் அந்த ஆண்மகனின் நெஞ்சம் காதல் கர்வத்தால் நிமிர்ந்து.. அழுத்தமாக அவளது கன்னத்தில் முத்தம் பதிக்க தூண்டியதில்.. முத்தம் கொடுத்திருந்தான்.
ஓ... ஹேய்.. என்ற ஆர்ப்பரிப்பில்.. நிதானத்திற்கு வந்ததால் மட்டுமே இதழை விட்டு வைத்தான்.. அதன் பிறகு நடந்தேறிய சடங்குகள் ஒவ்வொன்றிலும்.. ஆனந்தம் ஆனந்தம்.. ஆனந்தமே..
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திருமணம் சரண் மான்சியின் வைபோகம்.. அவர்கள் இருவரும் எப்பொழுது.. காதலை மீடியாவின் முன் அறிவித்தார்களோ.. அன்று முதல்.. ஒரு துண்டு செய்தியாவது.. அவர்களை பற்றி வந்துக் கொண்டேயிருக்கும்.. அதனால் அதிக பிரபல ஜோடியாக இருந்தவர்களின் கொண்டாட்டத்தில் மூன்றாவது கண்ணிற்கும் அதிக வேலை இருந்ததால்.. அனைவரின் கவனமும் அவர்களிடத்திலே இருந்தது.
அவர்களது திருமணத்திற்காக.. ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்ய.. அனைத்திலும் பணத்தின் செழுமை.. அன்று அவள் கண்களில் வழிந்த காதலும்.. ஏக்கம் நிறைவேறிய சந்தோஷமும் பார்வையால் வெளியிட்டது அனைத்து பொய்யாய் போகுமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.
மறந்துவிட்டேன் என்று இறுமாப்போடு இருந்தவனுக்கு பேரிடியாய்.. மான்சியின் நினைவுகள். இன்றும் உதறிச் சென்றவளையே நினைத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு தன் பலவீனத்தை வெறுத்தவனாய்.. 'அவளை மனசுல வச்சுக்கிட்டு.. எந்த தைரியத்தில் இந்த பொண்ணு கழுத்தில தாலி கட்டின..' என்று கேள்விக்கும் அவனிடத்தில் பதிலில்லை.
குளிர்ந்த நீர் பட்டால் தன் வெப்பம் குறையும் என்றெண்ணியவனுக்கு இல்லை என்றே தோன்றியது.. காற்றில்லா புவியில்லை என்பது போல்.. அனைத்திலும் மான்சியின் நினைவு அவனோடு கலந்து.. அவனையே தின்றுக் கொண்டேயிருக்க.. முதல் மனைவி எப்படி பொய்யாய் போனாளோ.. அதேபோல் இவளும்.. என்று நியாயம் கற்பித்த பின்னே தெளிந்தவனாய் வெளி வந்தவனின் கண்களில் , தரையில் படுத்து நிர்மலமாய் உறங்கிக் கொண்டிருக்கும் தாமரை விழுந்தாள்.