பகுதி - 2
தன் கை முஷ்டியை இறுக்கி.. நின்றிருந்தவனின் தோற்றத்தில் , அப்படியொரு கோபம் . அதை வெளிப்படுத்த முடியாத இயலாமை . உடனே , வேகமாக செருப்பை மாட்டிக் கொண்டு வெளியேற.. முயன்றவனை தடுத்து நிறுத்தி , அழைத்து வருவதற்குள் , உண்டது அனைத்தும் செறித்திருந்தது அவன் நண்பனான விக்கிக்கு .
" அதுக்கு குடிச்சா எல்லாம் சரியாச்சா... " என்றவனின் குரலில் , சரணை மிஞ்சிய கோபம் இருக்க , அமைதியாய் ஏறிட்டவனிடம் , தாங்கிக் கொள்ள முடியாமல் ,
" பாரு... நல்லா பாருடா... இந்த ஒரு வருஷத்துல.. அவ... எப்படி இருக்கா... நீ எப்படி இருக்கேன்னு பாரு... " என்று கண்ணாடியையும் , அவன் விட்டெறிந்த காகிதத்தையும் சரண் முன் போட , அசையாமல் நின்றிருந்தான் .
" இங்க பாரு சரண் , இவ்வளவு நாள் எப்படியோ ? ஆனா , இனிமேலாவது.. பெத்தவங்கள குடும்பத்தை யோசி..." என்றதும்... ம்ஹூம்., என்று விரக்தியாய் சிரிக்க.. அதில் சுதாரித்த விக்கி
" சரி வேண்டாம்... உன்னை யோசி.." என்றான் .
என்ன என்பது போல் பார்த்தவனை , அசையாது நோக்கி... " நீ தோத்து அவள ஜெயிக்க வைக்கப் போறியா ?" என்றவன் கேட்க...
விழி சுருக்கி நின்றான் ஒழிய.. வாய் திறவாமல் இருக்கவும்.. " போராட்டம் நிறைந்தது தான்டா வாழ்க்கை... அதில ஜெயித்து வரவன் தா நிஜமான ஆம்பள... இல்ல... உங்க பாஷைல சொல்லணும்னா... ஹீரோ... அவளுக்கு இருக்குற தைரியம் கொஞ்சமாச்சு , ஆம்பள உனக்கு இருக்காடா..." என்று கூறியவனின் கழுத்துச்சட்டை சரண் கரத்தில் மாட்டியிருக்க...
" அடிடா... நல்லா அடிடா... ஏன் ஓங்குன கையை அப்படியே இறக்கிட்ட... சொல்லு... அடுத்தவங்களுக்கு பயந்தா நம்மால வாழவே முடியாது... இந்த ப்ரஸ் மீடியான்னு பயந்துட்டு இன்னும் எத்தனை காலத்துக்கு ஊர் ஊரா தண்ணியடுச்சு சுத்தீட்டு இருக்கப் போற... ஒரு பொண்ணு.. அவளுக்கு இருக்க துணிச்சல் கொஞ்சமாச்சு உனக்கு இருக்கா ? பாரு எவ்வளவு அசால்ட்டாக... காதுல வாங்காம... நக்கலா பதில் சொல்லிட்டு போறா ! அவளை கேக்காததையாடா... உன்ன கேக்கப் போறானுக... இல்ல தெரியாம கேக்குறேன்... இந்த தொழிலில்ல இதெல்லாம் சகஜம்ன்னு தெரியாதவனா நீ..." என்று விக்கியும் நிறுத்தவில்லை...
" போதும் விக்கி.. உனக்கு சொன்னா புரியாது... விடு..." என்று பல்கடித்து... தன் நெற்றியை கரத்தால் அழுத்தியவனாக கூற...
" சரி , எனக்கு எதுவும் புரிய வேண்டாம்... புரியற மாதிரி நீயே சொல்லேன்..." என்று அவன் முன் , ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொள்ள , சரணால் தலைகுனிந்து நிற்க மட்டுமே முடிந்தது .
சரணை , பார்க்க பார்க்க மனம் தாளவில்லை . எவ்வளவு அழகானவன் . சாக்லேட் பாய் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவன் . நகமும் அவ்வளவு வெண்மையாக இருக்கும் . ஆனால் ! இன்று , கண்களில் கருவளையம் சூழ்ந்து , பரட்டை தலையும் , சவரம் செய்யாத தாடி மீசையும்.. கசங்கிய சட்டையுமாய் இருக்கிறான் . கோடிகளின் சொந்தக்காரன். சினிமா துறையில் வளர்ந்து வரும் முன்னனி நட்சத்திர நாயகன் . இந்த உண்மையை சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள் . இவன் தான் புன்னகை நாயகன் சரண் மித்ரன் என்றால் , ஒருவராலும் நம்பவும் முடியாது . அப்படி இருக்கிறான் தோற்றத்தில் ! ஏன் ? பெற்றவர்களுக்கே.. இப்பொழுது , அவனை பார்த்தால் அடையாளம் தெரியுமோ... தெரியாதோ ?
ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே... எவ்வளவு உண்மை என்று தோன்றிற்று , விக்கிக்கு . தன் நண்பனைப் பார்த்ததும் . இன்றைய , அவன் அழிவிற்கு முழு முதற் காரணம் , அவன் மனைவியாய் இருந்த மான்சியே , என்று எண்ணாமலும் இருக்க முடியவில்லை .
" இப்ப என்ன சொல்ற ?அவள மாதிரி.. என்னையும் இருக்க சொல்றியா..? " என்று சரண் காட்டமாக சொன்னாலும்.. " என்னால அது முடியும்ன்னு நினைக்கிறியா... கண்டிப்பா முடியாதுடா..." என்று தன் கண்ணீரை மறைக்க தலைகுனிந்து சொல்லவும் , வேகமாக எழுந்தோடி , இறுக்கிக் கொண்டான் விக்கி .
" வேண்டாம் மச்சி... நீ அவள மாதிரி இருன்னு சொல்லவே மாட்டேன்... அப்புறம் அவளுக்கும் உனக்கும் என்னடா வித்தியாசம்... கொஞ்ச நாள் அப்ராட் போ... அங்க உள்ள உங்க ஹோட்டல் பிசினஸை நீ பாத்துக்க... உனக்கு எப்ப இந்தியா வரணும்னு தோணுதோ... அப்ப.. வா... ஆனா இந்த குடி வேணாம் மச்சி... இப்பவே நாங்க பாதி உன்னை இழந்துட்டோம்டா... முழுசா இழக்க கண்டிப்பா முடியாது" என்று கெஞ்சவும்... ஒருவாறு சம்மதித்துவிட்டான்...
ஆனால் அதற்கு முன் மருத்துவமனையில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்த... மாட்டேன் எதற்கும் நான் அடிமையில்லை என்று திடமாக மறுத்தும் விட்டான் .
அன்றே ராம் பிரசாத்திற்கு , விவரத்தை விக்கி தெரிவிக்க , பெற்றோரின் குரல் கேட்க எண்ணம் எழுந்தாலும்... பேச மறுத்தவனின் செயலில்.. தலையை பிடித்து , விக்கி அமர்ந்துவிட்டான் .
" இவன வச்சுகிட்டு சத்தியமா முடியலைடா சாமி...! " என்று வாய்விட்டே புலம்பியவன். வெறித்து அமர்ந்திருந்தவனின் அருகே சென்று... " மச்சீ... போதும்டா சாமி... என்னை வச்சு செய்யறடா நல்லவனே... பேச முடியாதுன்னு சொல்லிட்ட... கொஞ்சம் உன் வேஷத்தையாவது மாத்த கூடாதா.." என்று சளைத்தவனிடம்...
" என்னடா உனக்கு இப்ப வேணும்..? சும்மா , எதாவது சொல்லீட்டே இருக்கே... " என்று களைப்பாய் கேட்க...
" அப்பா... சாமி... உன் குடும்பமே இந்நேரம் கிளம்பியிருக்கும்டா... நல்லாயிருப்ப... போய் முதல்ல ஷேவ் பண்ணி குளிச்சிட்டு வாடா... நான் நல்லா இருக்குறது பிடிக்கலையா ? கொஞ்சமே கொஞ்சம் கருணை வைடா... அம்மா மட்டும் உன் ஸ்டைல பாத்தாங்க... நான் பரலோகம் போக வேண்டியது தான்... கன்னிப்பையன்டா...." என்று சொல்லிக் கொண்டே போக... வாய்விட்டு சிரித்தவன் , நண்பனின் முதுகில் ஒன்று போட்டு , குளியலறைக்குள் புகுந்தான்.
சரணிடம் எதை எதையோ பேசி அனுப்பினாலும்.. அவன் கண்ணை எட்டாத சிரிப்பில் , மனம் கனத்துப் போக , பார்த்திருந்தான் . எந்த ஒரு சுழ்நிலையிலும் சரணின் முகம் சிரிப்பை மறந்ததேயில்லை.. அவனுடன் பழகிய நாள் முதல் , என்றும் பூவாய் மலர்ந்திருக்கும் புன்னகை.. இன்று சுத்தமாய் துடைக்கப்பட்டிருக்க , அவன் முதுகையே பார்த்திருந்தவன்... பெருமூச்சை ஒன்றை வெளியேற்றி , உணவு வாங்க சென்றான் .
குளியலறைக்குள் புகுந்தவனோ... தன் கண் முன் இருந்த கண்ணாடியை பார்க்க... அதில் தோன்றிய பிம்பத்தில் விரக்தி புன்னகை .
அன்று , சொந்தங்கள் சூழ்ந்திருக்க வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது . அந்த வீட்டு மூத்தத் தலைவரின் எழுபதாம் கல்யாணம் . அதாவது , 'பீமரத சாந்தி ' என்ற விழா , மிக எளிமையாக வீட்டிலேயும் அதேசமயம் மிகச் சிறப்பான முறையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
விழா நாயகன் பாலா கிருஷ்ணன் ; நாயகி அன்னப்பூரணி தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் என்று இருக்க..
மூத்த மகன் ராம் ப்ரசாத் . அவருடைய மனைவி மயூரி மற்றும் குழந்தைகள் சரண் மித்ரன் ; சசிரேகா .
இரண்டாம் மகள் சாவித்திரி . அவர்களுடைய கணவன் கிருஷ்ணன் மற்றும் மகன் - சந்தோஷ் ; மகள் - ஹரிணி .
மூன்றாவது மகள் ஷோபா . அவருடைய கணவன் ரவி சந்திரன் ; மகன் - விஷ்வேஷ் .
என்று அனைவரும் கூடியிருக்க... அந்த முந்தைய தலைமுறையினர் உடன்பிறந்ததோர்களும் குழுமி.. வீடே கோலாகலமாக இருந்தது . அங்கு இருக்க வேண்டிய மூத்தப் பேரனின் மனைவி.. அந்த வீட்டுப் புது மருமகள் மான்சி இல்லாமல் இருந்தாள் .
மான்சியை குறித்து கேட்பவர்களிடம் முகம் சுழிக்காமல் , அதேசமயம் விட்டுக் கொடுக்காமல் , பதில் அளிக்கும் மயூரியை பெருமைப் பொங்க இருவரும் பார்த்து இருந்தனர் .
பேரன் சரண் முகத்தில் இருக்கும் புன்னகை.. அவர்கள் குடும்பத்தையே ஒளியேற்றி வைத்திருக்கும் . காலை பத்து மணிக்கு வீடு நுழைந்தவள் , யாரையும் திரும்பியும் பார்க்காமல் விறுவிறுவென , மாடியேறி விட்டாள் . ஒருகணம் அந்த இடமே ஸ்தம்பித்து , பின் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது .
சில நாட்களாக , இருவருக்கும் வாக்குவாதம் மட்டுமாகவே இருக்க , விழா நடக்கும் இந்த நேரத்திலும் அவள் யாரோ போல் நடந்துக் கொள்வதில் வருத்தம் எழுந்தாலும் , மனைவியைத் தேடி அவர்களது அறைக்குள் நுழைந்தான் . சரணை , கண்டுக்காமல் குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் மான்சி .
ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன் , அவள் வரவிற்காக காத்திருக்க , வந்தவளோ அவன் அங்கு ஒருவன் இருக்கிறான் என்ற சிந்தனையில்லாமல் டீ சர்ட் மற்றும் ஜீன் ஒன்றை அணிந்து வெளியேற போகையில் ,
எங்க போற என்றான் ..
வேண்டா வெறுப்பாக ஷூட்டிங் என்றதும் இன்னைக்கா..? நா உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன்ல... நான் எது சொன்னாலும் கேட்கவே மாட்டியா..?
நான் எவ்வளவு நாளா.. அந்த படத்தில நடின்னு சொல்லிட்டு இருக்கேன்.. நீ கேக்குறியா... ?
எதையும் எதையும் சேர்த்து வச்சு பேசுற மான்... நா நம்ம வீட்டு விஷேசம்.. நடந்துட்டு இருக்கறத பத்தி பேசுறேன்...
உனக்கு வேணா எந்த அசிங்கமும் இல்லை... ஆனா எனக்கு அவமானமா இருக்கு.. வெளில தலைகாட்ட முடியலை... உங்க மேரேஜ்க்கு அப்புறம் நடிச்ச இரண்டு படமும் சரணுக்கு படு மோசமா இருக்கே.. நீங்க தொடர்ந்து ஹிட் கொடுக்கும் போது அவரால ஏன் முடியலை... தனியா நடிக்காம.. உங்க படங்க எல்லாத்தையும் அவர ஹீரோவா மாத்திடுங்கன்னு... சொல்ற அளவு ஃபீல்ட்ல உன் லட்சணம் இருக்கு . இதுல என்னையும் உன்னை மாதிரி உட்கார சொல்ற... என்று கத்த..
ஷ்..ஷ்.. எதுக்கு இவ்வளவு சத்தம்.. நான் பக்கத்துல தான இருக்கேன். தாத்தா ஃபங்ஷனுக்கு இருன்னு சொன்னா.. நீ என்ன பேசுற... எல்லோரும் வந்ததுலேருந்து என் அருமை பொண்டாட்டி எங்க..எங்கன்னு.. உன்னையே கேக்குறாங்க.. இப்ப நீ வெளிய போனா நல்லாயிருக்குமா.. சொல்லு... என்று அவள் கூறுவதை பற்றி காதில் வாங்காதவனாக... கட்டியணைத்து சமாதானம் செய்தவாறே சொல்ல...
ஒரே திமிறலில்.. ஹோ.. அதான பாத்தேன்.. என்னடா திடீர்னு கட்டிப்பிடிக்கிறியேன்னு... என்று நக்கல் அடித்தவள்.. இங்க பாரு .. நீ வேணா உங்க குடும்பத்து பேர் பின்னாடி ஒளிஞ்சுக்க... என்னால எல்லாம் முடியாது . எனக்கு அசிங்கமா இருக்கு... ஷூட்டிங் கேன்சல் பண்ணீட்டு உங்க தாத்தாவுக்கு எழுவது வயசுல கூத்தாடிக்க.. என்னால முடியாது . என்று மரியாதையின்றி பேசியவளாய் திரும்பியே பாராமல் வெளியேறிவிட்டாள் .
முகம் கருத்து நின்றிருந்தவனுக்கு குடும்ப நபர்களை ஏறிடும் தைரியம் அற்று அங்கேயே நின்றிருந்தான் .
சரண் பின்னோடு வந்த மயூரியின் காதுகளிலும் அனைத்தும் விழுந்திருந்தது . அறையின் வாசலில் பிரம்மை பிடித்தவர் போல் அதிர்ச்சியில் நின்றிருந்தவரை , பார்த்தும் அலட்சியமாக தோள் குலுக்கலோடு கடந்துவிட்டாள் .
திருமணத்திற்கு பிறகு வெளியான இரண்டு படங்களும் அவனுக்கு படுத்தோல்வி.. மூன்றாவது படமும் அப்படியொன்றும் சொல்லும் படியாக இல்லை... ஆனால் மான்சியின் நடிப்பில் வெளிவந்த நான்கு படங்களும் அருமையான வெற்றி.. அதாவது சூப்பர் டூப்பர் ஹிட் .
மான்சி படத்தின் வெற்றிகள் , சரண் மித்ரன் படத்தின் தோல்விகள் , அதன் தாக்கம் சரண் மான்சியின் நிஜ வாழ்வில் எப்பொழுதோ பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிவிட்டது .
ஆனால் , அவனே அறியாத ஒன்று இன்றே , அனைவரின் முன் தன்னையே கை நீட்டும் படி செய்து விடுவாள் என்பது..!