1

8.4K 139 12
                                    

நான்--நீ

ஒரு அக்டோபர் நாள்...

சூரியன் துயில்விழித்து 'திங்கள் கிழமையா இன்னிக்கு' என சற்றே சலிப்புடன் தன் வேலையைத் தொடங்கியது. அதன் கிரணங்கள் மெல்ல தத்தித் தத்தி நகர்ந்து தன் அறையில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த மஹிமாவின் முகத்தை தொட்டது. பொன்னிற ஒளி முகத்தில் பட்டதும் சன்னமான முனகலுடன் திரும்பிப் படுக்க எத்தனித்தவளை, காபியுடன் அவளறைக்குள் வந்த பங்கஜம் அம்மாள் அதட்டினார்.

"ஏய் மஹிமா! என்ன இது மணி எட்டு ஆகுது இன்னும் தூக்கமா? ஒன்பது மணிக்கு க்ளாஸ்...எழுந்து ரெடியாகு!"

பதினைந்து வருடமாக அவர்கள் வீட்டில் வேலை பார்ப்பதால் வந்த சரளமான அதிகாரம் அது. சிறுவயதில் இருந்தே மஹிமாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருப்பவர் என்பதால், அவர்களுக்கு மஹிமா பற்றித் தெரியாத விஷயம் கிடையாது. அவள் காலை பல்துலக்கும் பற்பசை ஃப்ளேவரில் தொடங்கி, வருடாவருடம் அவள் தாயின் நினைவு நாளன்று அணியும் தங்க வளையல்கள் வரை.

ஆம். மஹிமாவுக்கு நான்கு வயதிருக்கும் போது அவள் அன்னை(அந்நாள் மத்திய அமைச்சர்) ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவர்களுக்கு சுப்புலட்சுமி நினைவாகக் கிடைத்தது அவர் அன்று அணிந்திருந்த வளையல்கள் மட்டுமே. மஹிமா அவளது அம்மாவை நினைவுதெரிந்து பார்த்ததே இல்லை. அன்னை என அவருடன் நேரம் செலவிட்டதும் இல்லை. அவளுக்கு எல்லாமே அப்பா தான்.

"இன்னும் அஞ்சு நிமிஷம்... ஃப்ளீஸ்..." இழுத்து போர்த்திக் கொண்ட அவளைப் பார்த்த பங்கஜத்திற்கு சிரிப்பு தான் வருகின்றது. இருப்பினும் அவளை நேரத்தில் கிளம்பச் செய்வது அவரது கடமையாச்சே! எப்படியோ அவளை அதட்டி உருட்டி மிரட்டி எழுப்பி அவசர அவசரமாக கிளப்பி குளியலறைக்குள் விரட்டினார்.

அவள் சீருடையுடன் தயாராகி வரும்போதே தாமதமாகிவிட்டாலும், விடாமல் சாப்பிட வைத்து அனுப்பிய பின்னர்தான் அவர் ஓய்ந்தார்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now