வெறிச்தோடிய மண்டபத்தில் ஒளிர்மதியின் மொத்த குடும்பமும் இருந்தது. வயதான அந்த மூத்த தம்பதிகளுக்கு வலம்புரி, வண்ணமதி, சங்கீதா என ஆறுதல் கூற, கிள்ளிவளவன் எப்போதோ கோபமாக சென்றுவிட்டிருந்தார்.
மணமகள் அறையில் தனது மொத்த அலங்காரங்களையும் கண்டு அழுகையோடு, அணிந்த வளையல்களை சுக்கல் சுக்கலாக உடைத்து, கண்ணீரால் கண்மை அழித்து, குழல் அலங்கரித்த மலரை கசக்கி, தனது வாழ்க்கையினை நொந்துக்கொண்டு தன்னை உடைத்துக்கொண்டிருந்தாள் அன்புமதி. நடந்ததை அவளால் ஏற்க முடியவில்லை.
சிம்புத்தேவன் புறப்பட்டதும், "அக்கா! கண்டிப்பா உனக்கு கல்யாணம் நடக்கும், நீ கவலைப்படாத.", என அறிவுமதி அவளிடம் கூறவிட்டு தாத்தாவின் அருகே வந்தவள், "தாத்தா! அக்கா போனா என்ன? அன்பன் மாமாவ கட்டிக்க அன்பு இருக்கா, நான் அமுதன் மாமாவ கட்டிக்கிறேன்.", என்று பட்டென கூறிவிட்டாள்.
வலம்புரி அவளது தோளை பற்றி இழுத்து, "என்னம்மா பேசுற நீ?", என்று அதிர்ந்தார்.
"அப்பா! இந்த கல்யாணம் யாருக்கு யாரோட நடக்கனும்னு நாம முடிவு பண்ண முடியாதுல...", எனும்போதே கிள்ளிவளவன் கொதித்தார்.
"இங்க பாருங்க மாமா! ஒளிர்மதிய அன்பனுக்கு தரதா தான் பேச்சு, அவளே போன பிறகு இந்த கல்யாணம் ஒன்னும் எனக்கு அவசியமில்லை. அத்தோட முதல தடவ கல்யாண பேச்சு தடங்கலாச்சு, இப்போ கல்யாணம் வரை வந்தும் நின்னுடுச்சு, இதுக்கு மேலயும் இந்த சம்பந்தம் சரியா வராது.", என்றுவிட்டார் முடிவாக.
"மாமா அப்டி சொல்லாதீங்க!", என அறிவுமதி அழ, "இங்க பாரும்மா, பெரியவங்க பேசுற இடத்துல நீ இருக்காத!", என்று கொஞ்சம் அதட்டலாகவே கூறினார்.
"ஏன்ங்க இப்டி எரிஞ்சு விழறீங்க?", என வண்ணமதி கூற,
"இங்க பாருடி! உன் மவனுங்கள கூட்டிட்டு வீடு வந்து சேரு. இப்டி மானங்கெட்டு போய் நான் இங்க நிக்கனும்னு அவசியமில்ல. ஆமா!", என்று சொல்லியவர் புறப்பட்டுவிட்டார்.