அன்பன், அன்புமதி, அறிவுமதி என ஐவரும் தியேட்டர் வாசலில் நின்றிருந்தனர். அமுதனும், ஒளிர்மதியும் டிக்கெட் வாங்க சென்றிருந்தனர்.
"என்னடா அரசி மூட்டை விலைய விட, டிக்கெட் விலை அதிகமா இருக்கு? படத்துக்கு போயே ஆகனுமா?", என அமுதன் காதை கடித்தாள்.
"வேலைக்கு போனதும் உனக்கு பொறுப்பு வந்திடுச்சோ, கணக்கு பாத்து செலவு பண்ற!", என நக்கலடித்தவன், "எப்பயாவது தான வரோம், அதனால தப்பில்ல!", என்றான். ஒளிர்மதியும் அமைதியாகிவிட்டாள்.
ஐவருமாக உள்ளே வந்து, அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
அன்பன், அன்புமதி, ஒளிர்மதி, அறிவுமதி, அமுதன் என வரிசையாக அமர்ந்துக்கொண்டனர். படம் துவங்க, மற்ற மூவரைவிட ஒளிர்மதியும், அமுதனும் விசில் அடிப்பது, கைத்தட்டுவது, கத்துவது என ஆர்ப்பாட்டம் செய்ய, அன்பன் சங்கோஜத்தோடு அவர்களை அடக்க முயல நினைத்தான், ஆனால் அது முடியாதென்பது அவனுக்கு தான் தெரியுமே!
படம் பார்த்துவிட்டு, மாலுக்கு சென்று, ஆறுமணிப்போல் வீடு வந்தனர். ஏனோ அன்று வீட்டில் அசாத்திய அமைதி, ஓங்கி ஒலிக்கும் பாட்டியின் குரலோ, ஓயாமல் நடக்கும் அன்னையின் கொலுசு சிணுங்கும் காலடி ஓசையோ, தாத்தா ஹைப்பீச்சில் வைத்து கேட்கும் டிவி செய்திகளோ எதுவுமே இல்லை.
ஆனால் ஒளிர்மதியை அதிர வைக்கும் வண்ணம் மேஜை மீது படித்துவிட்டதற்கு சான்றாக திறந்த நிலையில், அவளது கேட்டரிங் ஜாப் அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் தனது வருகையை பதிவு செய்திருந்தது.
"வாடிம்மா!", என பாட்டி அழைத்த ராகமே, அடுத்து நடக்கவிருக்கும் வில்லங்கத்தை எடுத்துக்கூறியது.
ஒளிர்மதி பயமும் வீட்டினரது பாவனை கண்டு குழம்பிய அன்பன், அக்கடிதத்தை எடுத்து படித்து பார்த்தான். உண்மையில் அவள் இப்படி செய்வாள் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அவனது அதிர்ந்த முகபாவத்திலே தெரிந்தது.