கல்லூரி தொடங்க இரண்டு நாட்கள் இருந்த நிலையில், வினோத் பிறந்தநாளை கொண்டாடவும் அவன் ஏற்கனவே ஒப்புக்கொண்டது போல் அவன் நண்பர்கள் அனைவருக்கும் ட்ரீட் கொடுப்பதற்காகவும் அனைவரும் சேர்ந்து அருகில் இருந்த ஒரு இடத்திற்கு ஒருநாள் முழுவதும் சுற்றுலா போல் சென்று வரலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.
எனவே கல்லூரி தொடங்கும் முன்பே வானதியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
வெகு நாட்கள் கழித்து அவள் நண்பர்களை பார்த்து அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆரம்பத்தில் அனைத்தையும் புதிதாக சிறு தயக்கத்துடன் பார்த்தவள், அந்த ஒரு வருடத்தில் கல்லூரி வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் சேர்ந்து செலவிட பழகி இருந்தாள்.
எனவே விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்த நாள் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக தோன்றியது.
அவள் உடைமைகளை கல்லூரி விடுதியில் வைத்து விட்டு, பின்க் நிற சுடிதார் அணிந்து மிகவும் எளிமையாக தன்னை அலங்கரித்து கொண்டு அவள் நண்பர்களுக்காக காத்திருந்தாள்.
அவள் நண்பர்களை பார்க்க போகும் ஆனந்தம் ஒருபுறம், தன்னவனை பதினைந்து நாட்கள் கழித்து சந்திக்க போகும் குதூகலம் ஒருபுறம் இருந்து அவளை மிகவும் ஆர்வமாக காத்திருக்க வைத்தது.
அரைமணி நேரத்தில் இரண்டு கார்கள் வந்து அவள் காத்திருந்த இடத்தில் நின்றன. அதில் இருந்து அவள் தோழிகள் அனைவரும் ஓடி வந்து அவளை கட்டி கொண்டு அவளிடம் நலம் விசாரிக்க, அவளும் மகிழ்ச்சியாக அவர்களுடன் பேசி கொண்டே, கண்களால் மதனை தேடினாள்.
அவன் தான் ஒரு காரை ஓட்டி வந்திருந்தான். எனவே உள்ளே அமர்ந்த படியே அவளின் முகத்தை பார்த்து சந்தோஷமாக புன்னகைத்தான். அவளும் மலர்ந்த முகத்துடனேயே கண்களால் அவனிடம் நலம் விசாரித்தாள்.
இருவரது பார்வை பரிபாலனைகளும் முடிந்த பிறகு, அங்கிருந்து அவர்கள் அனைவரும் கிளம்பி இருந்தார்கள்.
வானதி மதன் ஓட்டி வந்த காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவனும் கண்ணாடியில் அவள் பிம்பத்தை பார்த்தவறே கவனமாக காரையும் செலுத்தினான்.
அவர்கள் கல்லூரியில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு அருவிக்கு தான் அவர்கள் முதலில் சென்றார்கள்.
அழகாக வெள்ளி ரசம் போல் கொட்டிக் கொண்டிருந்த அருவியை பார்த்த பெண்கள் அனைவரும் ஆரவாரமாக அதன் அருகில் சென்று அதில் விளையாட தொடங்கி இருக்க, அருவிகளின் அரசி இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்த நம் நாயகிக்கு அதில் அவ்வளவு ஆர்பாட்டம் இல்லாமல் போனது.
இருப்பினும் தன் தோழிகளுடன் இவ்வாறு ஒரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைப்பது அரிது என்பதால் அதை வீணடிக்க மனமில்லாமல், அவர்கள் செய்யும் கலாட்டாக்களில் அவளும் கலந்து கொண்டாள்.
மதனும் அவன் நண்பர்களுடன் இன்னொரு புறம் சென்று அங்கிருந்து அருவியில் குளித்து, அதை படம் பிடித்து கொண்டு மகிந்திருந்தான்.
இரண்டு மணி நேரம் அந்த அருவியில் செலவிட்ட பின், அங்கேயே ஒரு பாறையில் அமர்ந்து அவர்கள் ஆர்டர் செய்து வர வைத்த உணவுகளை அனைவரும் பகிர்ந்து உண்ண தொடங்கி இருந்தனர்.
வானதியின் பார்வை எதேச்சையாக அவனிடம் செல்ல, அவனோ ஏற்கனவே அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். திடீரென அவன் பார்வையை சந்திக்க நேர்ந்தது அவளுக்கு சற்று படபடப்பாக இருக்க, வேகமாக தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள்.
அவளுக்கு அப்போது தான் அவர்களின் முதல் சந்திப்பு நினைவுக்கு வந்தது. அந்த நாளில் இதே போல தான் அவள் தோழிகளுடன் குளிக்க சென்ற போது அவனை முதல் முறையாக சந்தித்தாள்.
அவள் கையில் இருந்த உணவை பார்த்து அவளுக்கு மேலும் ஆச்சர்யமாக இருந்தது. அன்று அவள் அவனுக்காக கொடுத்து வந்த அதே உணவு வகைகள் தான்.
அதை வைத்தே அவன் அதை எல்லாம் தனக்கு நினைவு படுத்தான் அதை ஆர்டர் செய்திருக்கிறான் என்று உணர்ந்து தனக்குள்ளேயே புன்னகைத்து கொண்டாள்.
மீண்டும் அவன் முகத்தை பார்த்து, அவர்கள் சந்தித்த முதல் நொடியை தான் மறக்கவில்லை என்பதை அவனுக்கு கண்களாலே சொல்லி விட்டு மென்மையாக புன்னகைத்தாள்.
அவனும் பதிலுக்கு புன்னகைக்க, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது.
அடுத்து ஒரு பூங்காவிற்கு சென்று அங்கு சிறிது நேரம் செலவிட்டு விட்டு, அடுத்ததாக அங்கிருந்த கோவிலுக்கு சென்றார்கள்.
கோவிலில் அனைவரும் தெய்வத்தை வழிபட்டு கொண்டு இருக்க, வானதியும் எப்படியாவது அவள் மனதில் இருக்கும் குழப்பங்களை தீர்த்து, மதன் மீது தனக்கிருக்கும் காதலை அவனிடம் வெளிப்படுத்த தைரியத்தை கொடுக்குமாறு கடவுளிடம் வேண்டி கொண்டாள்.
அவள் சாமி கும்பிட்டு வெளியே வந்த போது தான் மதன் உள்ளே வராமல் வெளியேயே நின்றிருந்தது தெரிந்தது.
அவன் ஏன் சாமி கும்பிட கோவிலுக்குள் வரவில்லை, என்ற யோசனையுடனே அவன் அருகில் சென்று நின்றாள்.
"என்ன மா ஜூலியட், சாமி எல்லாம் கும்பிட்டாச்சா? அப்படி என்ன ஸ்ட்ராங் வேண்டுதல்?" என்றான் புன்னகையுடன்.
"வேண்டுதல் எல்லாம் வெளியே சொல்லுறது இல்ல. அது இருக்கட்டும், நீங்க ஏன் உள்ள வரல? சாமி கும்பிட மாட்டீங்களா?" என்றாள்.
"எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல! சின்ன வயசுல இருந்தே இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல" என்று சாதாரணமாக அவன் கூற,
"உங்க அம்மா வீட்டுல பூஜை செய்யும் போது கூட நீங்க உள்ள போய் என்னன்னு பார்த்தது இல்லையா?" என்று அவள் கேட்டதும் அவன் முகம் இறுகியது.
"ஒருவேளை அப்படி ஒருத்தங்க இருந்திருந்தா எனக்கும் இந்த நம்பிக்கை எல்லாம் இருந்திருக்குமோ என்னவோ!" என்றான் வெறுமையாக.
அவனுக்கு அம்மா இல்லை என்ற விஷயமே அவளுக்கு அப்போது தான் தெரிந்தது. அவன் மனதை கஷ்டபடுத்தி விட்டோமே!" என்று நினைத்து,
"அதுக்கு என்ன, அதான் இப்போ நான் இருக்கேனே! இனிமேல் பழகிக்கலாம்!" என்று கூறி அவன் நெற்றியில் விபூதியை வைத்து அது அவன் கண்களில் விழுந்து விடாமல் இருக்க அதை ஊதி விட்டு, அவன் முகத்தை பார்த்து புன்னகைத்தவாறு அங்கிருந்து சென்றாள்.
அவன் மனம் ஆனந்தத்தில் திளைத்திருந்தது. இனி அவள் இருக்கிறாள் என்று எந்த அர்த்தத்தில் சொல்லி இருப்பாள், என்று யோசித்தவாறே அவள் சென்ற திசையை பார்த்து கொண்டு நின்றிருந்தான். அவன் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது.
இறுதியாக அந்த கோவில் அருகில் இருந்த ஒரு காடு போன்ற இடத்திற்கு சென்றார்கள். அவர்கள் அங்கு சென்ற போது மாலை நான்கு மணிக்கு மேல் ஆகி இருந்தது.
சூரியன் மெதுவாக மறைவதை அந்த இடத்தில் இருந்து பார்க்க மிகவும் அழகாக இருக்கும் என்பதால் அதை அவர்கள் அனைவரும் பார்க்க அந்த இடத்திற்கு மதன் தான் அனைவரையும் அழைத்து வந்திருந்தான்.
அனைவரும் தங்கள் கைபேசியில் புகைப்படங்கள் எடுத்து கொண்டு அந்த இடத்தை ரசித்து கொண்டு இருக்க, அர்ச்சனா தயங்கி தயங்கி மதனிடம் வந்து நின்றாள்.
அதே சமயம், வானதியும் மதனை ஃபோட்டோ எடுக்க அழைத்து செல்வதற்காக அங்கு வர, அவளுக்கு முன் அர்ச்சனா அவனிடம் நின்று பேசிக் கொண்டு இருந்தாள்.
"மதன் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்தேன்" என்றாள் அவள், அது அங்கு வந்த வானதியின் காதிலும் விழ, அவள் அங்கே நிற்கலாமா போய்விடலாமா! என்று யோசித்தவாறு தயங்கி நின்றாள்.
"சொல்லு அச்சு மா! என்னாச்சு, உன் ஸ்னாக்ஸ்ஸ வினோத் பிடுங்கி சாப்பிட்டுட்டானா?" என்றான் சிரித்து கொண்டே,
"மதன் நான் சீரியஸான ஒரு விஷயத்தை பற்றி பேச வந்திருக்கேன்" என்றாள்.
"சரி சொல்லு! என்ன விஷயம்?" அவன் சாதாரணமாக கையை கட்டிக் கொண்டு கேட்டான்.
"மதன் ரொம்ப நாளாவே இதை உன் கிட்ட சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன். இவ்வளவு நாள் இதை சொல்ல எனக்கு தைரியம் வரல, இப்போ என்ன ஆனாலும் பரவாயில்லைனு இதை உங்கிட்ட சொல்லியே ஆகணும்னு வந்திருக்கேன்" என்று அவள் புதிராக பேச,
"என்னன்னு சொல்லு" என்றான் பொறுமை இழக்காமல் மென்மையான குரலிலேயே கேட்டான். அது வானதியின் காதிலும் விழுந்தது. அவள் அப்படி என்ன சொல்ல போகிறாள் என்று தெரிந்து கொள்ள அவளுக்கும் ஆர்வமாக தான் இருந்தது.
"மதன், உங்களை பார்த்த நாள்லயே உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போயிருச்சு. அதுக்கு அப்புறம் உங்க கூட பழகினதுக்கு அப்புறம், கொஞ்ச கொஞ்சமா என் மனசை உங்ககிட்ட பறிகொடுத்துட்டேன். நீங்க என் லைஃப் பார்ட்னரா வரணும்னு ஆசைப் படுறேன்.
ஐ லவ் யூ மதன்" என்று கூறி அவன் கையில் ஒரு ரோஜா பூவையும் கொடுத்தாள்.
இதை பார்த்து வானதி நிலைகுலைந்து போனாள். அர்ச்சனா அவனை காதலிப்பதாக சொல்வாள் என்று அவள் எண்ணி பார்க்கவே இல்லை. அதை விட, அவன் எந்த மறுப்பும் சொல்லாமல் அந்த பூவை வாங்கி கொண்டானே என்று மேலும் பதறினாள்.
"என் லவ்வ அக்ஸெப்ட் பண்ணிக்கிட்டீங்களா?" என்றாள் ஆர்வமாக.
"சாரி அர்ச்சனா! இந்த பூவை வேணும்னா நான் அக்ஸெப்ட் பண்ணிக்குறேன், ஆனா என்னால உன்னுடைய காதலை ஏற்றுக்க முடியாது" என்று நேரடியாக சொல்லிவிட, அவள் முகம் வெளுத்து போனது.
"ஏன்? உங்களுக்கு என்ன பிடிக்கலையா?" என்றாள்.
"உன்ன பிடிக்காம இல்ல! எனக்கு உன் மேல அப்படி ஒரு தாட் வந்தது இல்ல" என்றான் சாதாரணமாக.
"இப்போ வரலைன்னா என்ன! ஃப்யூச்சர்ல வரலாம்ல! அதுவரைக்கும் நாம டேட் பண்ணலாம், அதுக்கு அப்புறம் நிச்சயம் உங்களுக்கு என்ன பிடிக்கும்" என்று வெட்கமே இல்லாமல் கூறியவளை ஓங்கி அறைய வேண்டும் என்று தோன்றியது வானதிக்கு.
அவன் புன்னகைத்தான்.
"சாரி! எனக்கு இதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல" என்றான்.
"அமேரிக்கால இருந்து வந்திருக்கீங்க, டேட்டிங்னு சொல்றதுக்கு கூட யோசிக்கிறீங்க! இதெல்லாம் அங்க சாதாரணம் தானே! எனக்கும் அதுல எந்த பிரச்சனையும் இல்ல.
ரெண்டு பேரும் சேர்ந்து டைம் ஸ்பெண்ட் பண்ணா தானே நாம ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்க முடியும். என்கூட பழகாமலே என்ன பிடிக்கலைனு எப்படி உங்களால ஒரு முடிவுக்கு வர முடிஞ்சுது" என்றாள். அதற்கும் அவன் புன்னகைக்க தான் செய்தான்.
"எந்த ஊர்ல இருந்தாலும், லவ் வரதுக்கு டேட்டிங் போகணும் அவசியம் இல்ல. ஒரு வருஷம் நாம எல்லாரும் ஒரே இடத்துல தானே இருக்கோம். இந்த ஒரு வருஷத்துல வராத ஃபீலிங், உங்கூட தனியா ஸ்பெண்ட் பண்ணுற கொஞ்ச நாள்ல வரும்ன்னு நீ நினைக்குறது தான் தப்பு" என்றான் புன்னகை மாறாமல்.
"நீ அழகா இல்ல! உன்ன எவ்வளவு நாள் பார்த்தாலும் எனக்கு பிடிக்காதுனு சொல்லுறீங்களா?" என்று அவள் கோபமாக கேட்க,
"நீ அழகா இல்லைனு நான் சொல்லல, நீ அழகா தான் இருக்க, ஆனா அழகுக்கும் லவ்வுக்கும் என்ன சம்மந்தம்? நீ பேசுறதே எனக்கு புரியல. எனக்கு உன் மேல லவ் வரல, அதனால உன் லவ்வ என்னால ஏத்துக்க முடியாதுன்னு சொன்னேன், அவ்வளவு தான்!" என்றான் அலட்சியமாக.
"இப்போ வரைக்கும் வரல, இனிமேல் வரலாம்னு தானே நானும் சொல்லுறேன். அதுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க" என்றாள் ஏதோ வேலைக்கு விண்ணப்பிப்பது போல்.
"இங்க பாரு அர்ச்சனா, இப்போ இல்ல எப்பவும் எனக்கு உன் மேல லவ் வராது! அதை புரிஞ்சுக்கோ! நாம அட்லீஸ்ட் இந்த வருஷம் முடியுற வரைக்கும் ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம். அதுக்கு அப்புறம் நான் இங்க இருக்க போறது இல்ல, நான் இங்கிருந்து போனதுக்கு அப்புறம் நீ என்ன நினைக்க போறதும் இல்ல. அதுவரைக்கும் இப்படி எல்லாம் பேசி அந்த ஃப்ரெண்ட்ஸிப்பையும் கெடுத்துக்காத" என்று கூறி அவள் பதில் சொல்வதற்குள் அங்கிருந்து சென்றிருந்தான்.
இதை கேட்ட வானதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவன் அவளை திட்டாமல் பொறுமையாக எடுத்து சொன்ன விதமும் அவளுக்கு பிடித்திருந்தது.
அவள் புன்னகையுடன் அங்கிருந்து திரும்பிய போது தான் இன்னொரு விஷயம் அவள் மனதில் தோன்றி அந்த மகிழ்ச்சியை இருந்த இடம் தெரியாமல் விரட்டியது.
அவன் வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை அவள் மனதில் ஓடியது.
ஒருவருஷத்துக்கு அப்புறம் தான் அங்கு இருக்க போவது இல்லை, இங்கிருந்து சென்ற பிறகு இதை எல்லாம் மறந்து விடுவேன் என்று அவன் கூறியது அவள் மனதை உறுத்தியது.
அவள் தன் மனதில் அவன் மீது காதல் கொண்டிருப்பதாக தெரிந்தால், அவளிடமும் இதே பதிலை தான் சொல்வான் என்று உணர்ந்ததும் அதுவரை அவள் மனதில் இருந்த மகிழ்ச்சி முற்றிலும் மறைந்து, ஆறாத ரணமானது.
அவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்.
"ஹேய் ஜூலியட்! என்ன சோகமா இங்க உக்காந்துட்டு இருக்க? வா ஃபோட்டோ எடுக்கலாம்" என்று கூறி அவள் எதிரில் வந்து நின்றான் மதன்.
"நீங்க போங்க! எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது. நான் இங்கேயே இருக்கேன்" என்று கூறி அவனுடன் செல்ல வர மறுத்தாள்.
"ஹம், தலை வலியா, என்னாச்சு?" என்று கேட்டவாறு அவள் அருகில் அமர்ந்து கொண்டான். அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல், அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவன் கைபேசியை எடுத்து இருவரையும் சேர்த்து செல்ஃபி எடுத்தான். ஆனால் அவளோ சிரிக்காமல் உம்மென்று இருந்தவாறே அமர்ந்திருக்க,
"என்ன தான் ஆச்சு உனக்கு! இங்க பாரு முஞ்சி எப்படி இருக்குனு" என்று கூறி அவன் எடுத்து புகைப்படங்களை அவளுக்கு காட்டினான்.
"வீட்ல இருந்து வந்ததால கொஞ்சம் வீட்டு நியாபகமாவே இருக்கு! அதான்" என்று கூறி அவள் அந்த சூழ்நிலையை சமாளித்து கொண்டாள்.
அவனும் அது தான் உண்மையான காரணம் என்று நம்பி, அவளை சிரிக்க வைக்க பெரும் பாடு பட்டான்.
மாலை ஆறு மணி அளவில், அனைவரும் அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள். மதன் அவன் காரில் இருந்த அனைவரையும் அவரவர் வீட்டில் இறக்கி விட்டு விட்டு இறுதியாக தான் அவளை விடுதியில் விட சென்றான்.
அவள் அமைதியாக இருப்பதை பார்த்து, அவள் மனதை மாற்ற,
"காலேஜ் தொடங்கின அப்புறம் தானே கேன்டீன்ல சாப்பாடு இருக்கும்? ஹாஸ்டல்ல நீ மட்டும் தனியா இருந்துப்பயா?" என்றான்.
அப்போது தான் அவளுக்கும் அது நினைவுக்கு வந்தது. அவள் தோழி ஒருத்தியின் வீட்டில் ஒருநாள் தங்கி விட்டு மறுநாள் கல்லூரிக்கு வந்து விடலாம் என்று தான் எண்ணி இருந்தாள். ஆனால் அவளுக்கு ஏற்பட்ட மன குழப்பத்தில் அதை முற்றிலும் மறந்து போயிருந்தாள்.
அவள் பதட்டமான முகத்தை பார்த்தவன், "ஹேய் என்னாச்சு?" என்றான்.
"நான் வசந்தா வீட்டுல தங்கிட்டு திங்கள்கிழமை காலேஜ் வந்தரலாம்னு நினைச்சேன், மறந்துட்டேன்" என்றாள்.
"சரி அவளுக்கு கால் பண்ணி கேளு! நான் உன்ன கொண்டு போய் அங்க விடுறேன்" என்றான்.
அவளும் அவளை அழைக்க, அவளோ அவள் குடும்பத்தோடு தன் பாட்டி வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருப்பதாக சொல்லி விட, இவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
"என்னாச்சு?" அவன் கேட்க,
"அவ பாட்டி வீட்டுக்கு போறாளாம்! இப்போ என்ன பண்றதுனு தெரில! இதை பற்றி யோசிக்காம கிளம்பி வந்துட்டேன். ஹாஸ்டல்ல யாருமே இல்ல. காலையில ஒரே ஒரு பாட்டி தான் இருந்தாங்க, வார்டன் கூட நாளைக்கு தான் வருவாங்கனு சொன்னாங்க.
எனக்கு தெரிஞ்ச ஃப்ரெண்ட்ஸ் யாருமே இங்க இல்லையே!" என்று அவள் பதட்டமாக கூறியதை கேட்டவன்,
"பேசாம ரெண்டு நாள் என் வீட்டுல தங்கிக்கோ!" என்று அவன் கூறியதை கேட்டு அவள் விழிகளை உருட்டி அவனை முறைத்தாள்.
வணக்கம் நண்பர்களே,
கானல் நீ என் காதலே தொடர்கதையின் 22ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.