21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு வில...
Published: July 13, 2021 NOTE: picture above Arjun and Suganthi.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
நம்ம வாழக்கையிலேயே சிறந்த நாள்... சந்தோஷமான நாள்.. நமக்கான ஸ்பெஷல் நாள்... அன்னிக்கு யாராச்சும் அந்த சந்தோஷம் எல்லாத்தையும் பிடுங்கிகிட்டு, தன்னோட ஆளுமைனால அந்த நாளையே குட்டிச்சுவரு பண்ணுனா எப்படி இருக்கும்? அப்படி தான் இருந்தது பூங்கா காலனியில இருந்த மூணு வீட்டு ஆட்களோட மனநிலை.
~~~~~~
தங்கள் இணையுடனான வாழ்க்கை பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வை உறுதி படுத்தும் நாள்!
அர்ஜுன்- சுகந்தி நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தேதி குறிக்கும் நாள்!
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க, பல வண்ண கனவுகளோடு வெட்கி கிடந்த தோழி சுகந்தியை, மேலும் சிவக்கச்செய்து ஏறக்குறைய மணப்பெண்ணைப் போல அலங்கரித்து அழைத்து வந்தாள் பூரணி. மகள் புகுந்த வீடு செல்லும் நாட்கள் வெகு அருகில் எனும் நிதர்சனம்; சந்தோஷத்தையும், சிறிதே சிறிது வலியையும் பெற்றவர்கள் நெஞ்சில் ஏற்றிவைத்து, கண்ணையும் நிறைத்தது. அது வரை சிண்டு பிடித்து சண்டையிட்ட இளையவனும் அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டான், சொல்ல வார்த்தைகள் தேடி.
மகளின் புகுந்தவீடு என்று அவள் வேறு ஊருக்கோ, நாட்டுக்கோ செல்லவில்லை, இதோ பத்து படிகள் கீழே இறங்கினால் அவளை பார்க்கலாம் தான், ஆனாலும் இந்த பெற்றவர்கள் உள்ளம் படும் பாடு! உணர்ச்சி பரவசத்தில் லயித்தவர்களை கைபேசியின் ஒலி நிகழ்விற்கு மீட்டுவந்தது. ஜோசியரின் வரவை தெரியப்படுத்த மாமனாரை அழைத்தான் அர்ஜுன். அனைவரும் கீழே இறங்கினர், கார்த்திக் தேர்விற்கு படிக்க வேண்டி வீட்டிலேயே இருந்துவிட்டான்.