"பேச கூடாதது எல்லாம் பேசிட்டு இப்ப ஒக்காந்து இழுவுனா எல்லாம் சரியாகிடுமா?"உணவை உண்ணாமல் அதை பார்த்தபடியே அமர்ந்திருக்கும் மகளை எத்தனை திட்டியும் மனம் ஆறவில்லை சீதாவிற்கு.
அன்று தேவா பேசிய வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து மீளாத பைரவியை தேவா நேரமாகிறதென வீட்டிற்கு அழைக்க, மாட்டேன் என சொல்லவும் உன் விருப்பம் என அவனும் சென்றுவிட்டான்.
இதோ பத்து நாட்கள் ஆகிறது அவனும் சென்று. ஒரு முறை கூட அவனும் கைபேசியில் கூட பேசவில்லை, அவளும் பேச விரும்பவில்லை. கோவம், ஏமாற்றம், காழ்ப்புணர்ச்சி, வருத்தம், வேதனை என மனிதன் வாழ்க்கையில் சங்கடத்தை ஏற்படுத்தும் உணர்வுகள் மட்டுமே பைரவியிடம்.
அனைவர் முன்பும் வைத்து இருவரது அன்னையும் பேசியதை கேட்டும் அமைதியாக இருந்தான் என்றால் அந்த எண்ணம் தான் அவன் மனதிலும் இருந்ததா என்ற வருத்தம். சரி அன்று தான் உணர்ச்சிகளின் பிடியில் இருந்தான்...
அதற்கு பிறகான நாட்கள் கூட தன்னை பற்றி யோசிக்காமல் இருந்துவிட்டானா என்று மனம் விட்டு போன உணர்வு. திருமணத்திற்கு முன்பு எப்படி அறையினுள்ளே அடைந்து கிடந்தாலோ அதை விட அதிகம் ஒடுங்கிபோனாள்.
அப்படியே விடுபவன் தேவா இல்லை தான் என்ற நம்பிக்கை இருந்தாலும் இந்த இரண்டு வாரங்களில் அவன் காட்டும் ஒதுக்கம் அவ்வளவு தானா என்ற விரக்தி நிலையை கொடுத்தது.
"உன் அண்ணன் வார்த்தை ரெண்டு விட்டா, அது உனக்காகன்னு தெரியாத அளவா கூறுகெட்டு போன கூவ மாதிரி இருப்ப நீ?"
"நானும் கண்ண கண்ண பின்னால இருந்து காட்டிட்டே இருக்கேன். நிறுத்துறியா நீ? ப்பா ஆனாலும் ஒரு பொட்ட புள்ளைக்கு இம்புட்டு கோவமும் பிடிவாதமும் ஆகாது, கடைசில ஒக்கார வச்சிடுச்சுல ஒரு மூலைல" மனம் ஆரமாட்டாது தன் வாக்கில் மகளை அலசிக்கொண்டே வேலையை பார்த்தார் சீதா.
"ஊர்ல ஒரு பயலும் நீ பண்ண காரியத்துக்கு உன்ன கட்டிக்க மாட்டேன்னு நின்னப்போ கடவுளா உன் மேல பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுத்தவன் அந்த பையன்.."