மதுரை சென்று வந்த அர்ஜுனனின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் இருப்பதை கவனித்த பார்வதி மகனிடம் சென்று பேசினார், "எனக்கும் அதே மாதிரி தான் ம்மா இருக்கு, இந்த ஒரு வாரமா ஏதோ ரொம்ப சந்தோசமா இருக்காங்க""நமக்கு தெரியாம எதையாவது மறைக்கிறாரோ?"
புருவத்தை சுருக்கி மகனிடம் அன்னை கேட்டுக்கொண்டிருக்க, "என்ன ரகசியம் பேசுறீங்க?" காலை வாக்கிங் சென்று வந்த அர்ஜுனனுக்கு அன்னை மகனின் தீவிர பேச்சில் கேள்வி வந்தது.
"இல்லங்க இன்னைக்கு சரக்கு என்ன வந்ததுன்னு கேட்டுட்டு இருந்தேன்"
"சரி சரி, எல்லாரும் வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" அனைவரையும் வீட்டின் முற்றத்தில் அமர வைத்திருந்தார்.
இரண்டு மகள்களின் குடும்பம் கூட வந்திருந்தது. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் எவருக்கும் அர்ஜுனனிடம் என்ன என கேள்வி கேட்க தைரியமில்லை.
"உங்க யாருக்குமே உங்க தம்பிய பாக்கணும்னு ஆசை இல்லையா?" மொத்த தலையும் ஆச்சிரியத்தில் விரிந்த கண்களோடு இமை தட்டாமல் பார்த்தது.
அனைவரது பார்வையையும் கண்டும் காணாமலும் தவிர்த்தவர், "யாருக்கெல்லாம் ரத்தினத்தை பாக்கணுமோ அவங்க இன்னும் அரை மணி நேரத்துல இங்க வந்து நிக்கணும்" என் வேலை முடிந்ததென மூத்தவர் கிளம்பி சென்றதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தது எல்லாம் ஒரு சில நொடிகள் தான். அவரவர் வீட்டிற்கு கிளம்ப ஓடினர்.
சந்தோசமாக வீட்டிற்குள் வந்த சீதா முதலில் செய்தியை கணவனிடம் கூற வேண்டும் என்ற எண்ணத்தோடு கைபேசியை தேட, அவரின் கைபேசிக்கு அருகில் அமர்ந்திருந்த மகளை பார்த்தார்.
அமைதியாக ஒரு மூலையை வெறித்தபடி கால்களை கட்டி சோபாபில் அமர்ந்திருந்தாள், பைரவி. கடந்த சில காலங்களாக அந்த முகத்தில் ஒரு முறையாவது வேதனையை, வலியை தேடி பார்த்த சீதாவிற்கு எப்பொழுதும் கிடைக்கும் ஏமாற்றமே இன்றும் கிடைத்தது.