பாகம் 43
*அஸ்வின் இல்லம்*
அஸ்வினை அணைத்துக் கொண்டு, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. தன் உடலின் மேல் தன் கண்களை ஓடவிட்ட அஸ்வின், தன் மனைவி பரிசளித்திருந்த தழும்புகளை பார்த்து, பெருமூச்சுவிட்டான். எவ்வளவு மூர்க்கம்... ஒருவேளை, சரியான நேரத்தில் தான் வந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்த பொழுது, அவன் ரத்தம் கொதித்தது. தருண், அவளை மொத்தமாய் சிதைத்திருப்பான். அப்படி நடந்திருந்தால் ஸ்ருதியின் முடிவு என்னவாக இருந்திருக்கும்?
அவனுக்கு சுரீர் என்று உரைத்தது. இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். இந்த போதை மருந்தினால், இன்னும் எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது. ஸ்ருதியின் பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்டான்.
கீழ் தளத்திற்கு வந்தவன், தன் கண்களால் வரவேற்பறையை சலித்தான். ஸ்ருதி, தேநீர் அருந்திய குவளை அவன் கண்ணில் பட்டது. அதில் தான், அந்த மருந்து கலக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அவன் யூகித்தான். ஏனெனில், வீட்டில் தான் அவளைத் தவிர யாருமே இல்லையே. ஆம். உடைந்த பூ ஜாடியை சுத்தப்படுத்தும் நேரத்தில், அவள் அந்த குவளையை கழுவி வைக்க மறந்து தான் போனாள். அந்த குவளையை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்தான் அஸ்வின்.
ஸ்ருதிக்கு சுலபமாய் அணிவிக்கும் வகையில், அலமாரியிலிருந்து அவளுடைய இரவு உடையை எடுத்து அவளுக்கு அணிவித்தான்.
ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தையை போல் இருந்த அவள் முகத்தை பார்த்த பொழுது, சற்று நேரத்திற்கு முன் அவள் ஆடிய ஆட்டத்தை பற்றி கூறினால், யாராவது நம்புவார்களா என்ன? என்று நினைத்து கொண்டான். அன்பாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, அவளை தன் கையில் அள்ளிக் கொண்டு, அந்த குவளையையும் தன் கையோடு எடுத்துக் கொண்டான்.
அவன் ஸ்ருதியை தூக்கிக் கொண்டு வருவதை, மனோஜும், அருணும் பார்த்தார்கள். அவனுக்கு தெரியாமல் சுவரின் பின் ஒளிந்து கொண்டார்கள். அஸ்வின், ஸ்ருதியை காரில் அமரவைத்து, சீட் பெல்ட்டால் அவளை பினைத்தான். அங்கிருந்து மருத்துவமனையை நோக்கி பயணமானான்.
YOU ARE READING
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
RomanceThis is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.