மறக்காதே நீ மறுக்காதே நீ - 20
பதினான்காம் நாள்...
அதிகாலை நாலு மணி......
சித்தார்த் இரவு முழுவதும் தூக்கம் வராமல் பால்கனியில் அலைந்து கொண்டிருந்தான். கண்கள் சிவந்து, தலைமுடி கலைந்து, நிலையில்லாமால் ஒரு இடத்தில் நிற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
நேற்று சம்யுக்தாவுடன் எந்த பிரச்சனையில்லாமல், எந்த சண்டையும் இல்லாமல் இயல்பாக பேசி கொண்டிருந்தது அவனுக்கு உலகத்தையே வென்று விட்டது போலிருந்தது. மேகங்களில்லாத பெளர்ணமி இரவில், சலனமில்லாத நதியின் மேல், இனிய தென்றல் வீச, சத்தமில்லாமல் செல்லும் படகின் மேல் அவர்கள் இருவரும் தங்கள் மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ள தொடங்கியிருந்தனர்.
எப்போதும் இயல்பாக இல்லாமல், இறுக்கத்துடன் இருக்கும் சம்யுக்தா, நேற்று தான் முதன் முதலாய் இயல்பாய் இருந்தாள். பூங்கொத்தை கையில் வாங்கி சிரிப்புடன் நன்றி சொன்னாள். அவளை முதலில் எப்போது அவன் பார்த்தான் என இயல்பாய் கேட்டாள். கண்களில் வெட்கம் தெரிய அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள். இன்னும் ஒரு ஐந்தே ஐந்து நிமிடம் சென்றிருந்தால், சம்யுக்தா அவனுக்குச் சம்மதம் சொல்லியிருப்பாள் என்று நம்பினான்.
சசிதரன் அந்த நேரத்தில், அந்த உணவகத்திற்கு வருவான் என்றோ, அவர்கள் இருவருடனும் பேசுவான் என்றோ எதிர்பார்க்கவே வில்லை.
"ஹாய் சம்யு, ஹலோ சித்தார்த்" என சசிதரன் சொன்னவுடன், ஒரு விநாடி நீ எங்கடா இங்கே என சித்தார்த்திற்கு தோன்றியது. நம்முடைய பிளான் ஏ, பிளான் பி என்று எதிலும் இவன் இல்லவே இல்லையே, எங்கிருந்துடா வரீங்க நீங்கெல்லாம் என நினைத்தான்.
வெட்கத்தில் பார்வையை தழைத்திருந்த சம்யுக்தாவின் முகம் மாறிவிட்டிருந்தது.
"ஹாய் சசி" என உணர்ச்சியற்ற குரலில் சொன்னவள், அவனை பார்த்து வலிந்து சிரித்தாள்.
"சித்தார்த் மூணு நாள் முன்னாடி ஈவனிங் கால் செஞ்சி டின்னருக்கு கூப்பிட்டே, அது பாதியிலே கட் ஆயிடிச்சு. நான் திரும்பவும் கால் செஞ்சேன். நீ எடுக்கவேயில்லை. அதற்குப்புறம் நீ கூப்பிடவே இல்லை" என சொன்னான் சசிதரன்.
ESTÁS LEYENDO
Completed - Marukkathe Nee Marakaathe Nee
RomanceSudum Nilavu Sudatha Suriyan - Part 2