❤கலையாத உன் பிம்பம்
கண்ணோரமாய்
இன்றும்..
கலையாமல்
ஏந்திச்செல்கிறேன்
எங்கும்...❤
ரயில் பயணம் மனதிற்கு மிகவுமே இதமாக இருந்தது சக்திக்கு. எப்போதும் விரும்பியது தான் ஆனால் இதுவரை சென்றிட தோன்றிடவில்லை..தன்னவள் நினைவுகளுடன் ஜன்னலோர இருக்கை அதிலும் மாலை நேர தென்றல் காற்று இதமாய் மனக்காயம் வருடிட வெளியில் பார்த்துக்கொண்டிருந்தான்.
புகையிரதம் நகரத்தொடங்கி சில கணங்களில் தன்னெதிரே காலியாக இருந்த சீட்டை அடித்துப்பிடித்துக்கொண்டு வந்து அடைத்தது ஓர் பெரிய உருவம். ஜன்னலோர பக்கம் அவள் முதலில் அமர்ந்து தன் உருவத்திற்கு வசதியாய் இடத்தை சரி செய்து கொண்டு.."என்ன வெத்தல பாக்கு வச்சி அழச்சாதான் வருவியோ சீக்கணம் வந்து இப்படி உக்காரு.." உருவத்திற்கு ஏற்றது போன்ற குரலிலே ஏவினாள் யாரையோ பார்த்து. யார் என சக்தி அங்கே திரும்பிப்பார்க்க.. அமைதியே உருவாய் புடவையின் துப்பட்டாவால் முகத்தை முழுதாக மறைத்துக்கொண்டு தயங்கித்தயங்கி அவளருகில் வந்து அமர்ந்தாள் ஒரு இளம் பெண்.
அவர்களுடனே அடியாட்கள் போன்று தோற்றமளித்த இருவர், ஏறி இவர்கள் அமர்ந்திருந்த சீட்டிற்கு பின்னால் சீட்டில் அமர்ந்து கொண்டனர்.
அவளுக்கோ மனம் இருவிதமாய் இருந்தது. வரும் போது பேசிய பேச்சுக்களை வைத்து ஏதோ திட்டம் என அறிந்தாள். இங்கு இவனை கண்டதும் அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இவன் தான் இருப்பானோ என மனம் மீண்டும் ஒரு கேள்வியை தூக்கிவிட.. உதவி கேட்டு தப்பிக்கலாம் என்ற எண்ணம் குறைந்து விட்டது.
சக்தி ஜன்னல்புறம் திரும்பிட பெரியவளின் பார்வை அவசர அவசரமாக சக்தியை மொய்த்து எடை போட்டது.
இவனோ கண்டும் காணதது போல அமர்ந்து விட அவளே.."சார்.." என்றாள்.
இவன் என்ன என்று கேட்கவும் விழித்து விட்டு "இல்ல இது **** ஊர் போற ரயில் தான..?" என்றாள். ஏனோ சக்திக்கு அவளைப்பார்த்ததுமே பிடிக்கவில்லை வெள்ளை நிறமே மறந்து போயிருந்த சிவப்பு நிற சாயம் படிந்த பற்களை அவள் மீண்டும் காட்டி சிரிக்க..அவள் அந்த அப்பாவி பெண்ணை ஏவியதும் வேறு சக்தியை எரிச்சலூட்டியிருக்க.." ஏன் பார்த்து டிக்கட் எடுக்கலயோ.." என்றான் எரிச்சலாய்.
மீண்டும் அதே சிரிப்பை உதிர்த்து.."தம்பிக்கு பொசுக்குனு கோபம் வராப்ல.." என்று விட்டு ஏதோ பெரிய ஜோக் கூறியது போல் சிரிக்க சக்தியோ எரிச்சலில் முகம் திருப்பிக்கொண்டான்.
"தம்பி இவ என் பொண்ணு..பாவம் புள்ளக்கி பேச முடியாது.." அவள் இழுக்கவும்.."நான் டாக்டர் இல்ல.."பட்டென வந்தது சக்தியிடமிருந்து பதில்.
அதற்கும் வெட்கமே இல்லாமல் சிரித்தவள் தன் பெரிய உடம்பை ஜன்னல் பக்கம் சாய்த்து கால்களை தூக்கி அந்த பெண்ணின் மடியில் வைத்து ஒரு பார்வை பார்க்க அவள் புரிந்தது போல் தலையாட்டி விட்டு அழுத்திவிட ஆரம்பித்தாள்.
சக்திக்கோ அவளைப்பார்க்கவே பாவமாய் இருந்தது. கண்டிப்பாக அவள் இவளது பெண்ணாக இருக்க முடியாது என மனம் கூறியது. அவள் நன்றாக குறட்டை அடித்து தூங்கிட சக்தி ஒரு பெருமூச்சோடு ஒரு புத்தகத்தில் ஆழ்ந்தான்.
இடையில் ஒரு ஸ்டேஷனில் நிறுத்தியிருக்க டீ மற்றும் சில சிற்றுண்டிகளுடன் ஒருவன் இவர்களருகில் வர சக்தி அவனை அழைத்து டீ ஒரு கப்பும் இரவு உணவையும் வாங்கிக்கொண்டான். வாங்கிக்கொண்டு அவன் திரும்பவும் தான் கவனித்தான் மீண்டும் அந்த பெண்ணை. அவளிற்கு தான் பேச முடியாதுல சட்டென நினைவு வர பெரியவளும் உறக்கத்தில் இருக்க ஒரு டீ கப்பை வாங்கிய சக்தி அவளிடம் தர அவளோ வேண்டாம் என தலையசைத்தாள். இவன் அவள் கையில் கிட்டத்தட்ட திணிக்க முயல புடவை சற்றே மேலாக அங்கு கையில் தீக்காயத்தை கண்டவன் திகைத்து அவளை பார்க்க முகம் தெரியா அவளோ சட்டென கையை இழுத்து மூடிக்கொண்டாள். அப்போது பார்த்து விழித்துக்கொண்டது அந்த பெரிய உருவம்.
பெரிய சோம்பலுடன் எழுந்தவள் அந்த சிறிய பெண்ணை முறைத்து விட்டு பிடிங்கிக்கொண்டாள் கப்பை. "அடடா தம்பி ரொம்ப நன்றி.." என்று ஒரே உறிஞ்சலில் அவள் உறிஞ்சிட.. விட்டால் கப்பையும் சேர்த்து உறிஞ்சிடும் போல நீர்யானை என மனதுள் திட்டிக்கொண்டே அந்த சிறு பெண்ணை அவன் பார்த்தான். அவளோ தலை குனிந்து அமர்ந்திருந்தாள் இப்போதும். ஏனோ அவனுக்கும் குடிக்க தோன்றாமல் போக டீ கப்பை எடுத்துக்கொண்டு வாசலிற்கு வந்தான். வந்தவனுக்கு அவள் குனிந்த தலையும் அந்த காயமுமே நினைவில் வர ஒரு முடிவு எடுத்தவனாய் அடுத்த ஸ்டேஷனிற்கு எவ்வளவு நேரம் என கேட்டு தெரிந்து கொண்டான்.
அவன் நினைத்தது போலவே அடுத்த ஸ்டேஷன் நெருங்கவும் மெதுவாக வந்து அந்த பெண்ணை பார்க்க இப்பொழுது அந்த பெரியவள் முழு சீட்டையும் பிடித்து உறங்கியிருக்க மற்றையவள் ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள் அதே குனிந்த தலையாகவே. இதுதான் சரியான சமயம் என நினைத்தவன் அவள் கையை பற்ற அவளோ பட்டென தட்டி விட்டாள். சக்திக்கு கோபம் வர அமைதியாய் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவள் அனுமதி எதிர்பாராமல் ஒரே இழுப்பில் அவளுடன் வாசல் பக்கம் வந்து சட்டென இறங்கினான். இப்போது அவளும் அவன் இழுப்பிற்கே வர உள்ளிருந்த அந்த பெண்ணின் குரல் நன்றாகவே ஒலித்தது...."டேய் பிடிங்கடா அவன..." சக்தி அப்போதுதான் கவனித்தான் அது ஸ்டேஷனாக இருந்த போதும் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாது ஏதோ பொருட்கள் ஏற்றுவதற்காக தான் ரயில் நிறுத்தப்பட்டிருப்பதையும்.
இருபுறமும் காடு மட்டுமே இருக்க செய்வதறியாது காட்டினுள் நுழைந்தான் அவளோடு.. பின்னால் கூச்சல்கள் தொடர்ந்து கேட்க அப்போது சக்தியின் போனும் அலறியது. அவளை ஒரு கையில் பற்றிக்கொண்டு ஓடியவன் மறுகையால் போனை எடுத்து காதில் வைத்து.."சொல்லு வினோ.." என்றான்.
அங்கு எதிப்பக்கம் வினோ.." சக்தி சாரு
.... சாரு இல்ல சாரு போலவே ஒரு பொண்ணோட பாடி கண்டுபிடிச்சிருக்கதா கால் வந்திருக்கு.. உன்ன வந்து..." அவன் கூறி முடியுமுன்னே இவன் ஏதோ கூற வரவும் முன்னால் இருந்த கிளையை கவனிக்காது மோதியவன் தடுமாறி நிற்க போனோ எங்கே உருண்டு சென்றது.. அதனை தேடினால் கண்டிப்பாக பின்னால் வருபவர்கள் பிடித்து விடுவார்கள் என அறிந்ததால் மீண்டும் வேகம் எடுத்தான்.
ஆனால் வினோ கூறியது உள்ளே அரித்துக்கொண்டே இருந்தது சாருவை யாராவது கடத்தியிருக்கலாம் என இவன் இவனுக்கு தெரிந்த பொலிஸிடம் கூறி தேடச்சொல்லியிருந்தான். அவள் இறந்திருக்க மாட்டாள் என்பதற்கான முதலும் பிரதானமுமான காரணம் அந்த பள்ளத்தாக்கு.. அதில் எப்படியும் சில அடி தூரங்களுக்கு கீழே ஒரு சிறு விலங்கிற்கு கூட போக முடியாது அவ்வளவு அடர்த்தியாக அந்த சரிவில் பின்னிப்பிணைந்திருந்தது மரக்கிளைகள். இருந்தும் அந்த குறிப்பிட்ட அடி வரை தேடலில் பைக் அகப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஒரு உடலோ அதன் பாகங்களோ கண்டறியப்படவில்லை.. இருந்தும் சக்தியின் கட்டளையின் பேரில் அந்த சரிவிலும் தேடி விட்டார்கள் ஆனால் பலன் தான் பூச்சியம்.
இப்போதோ உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்றால் யாரோ கடத்தி ஏதும் பன்னி.. அதற்கு மேல் யோசிக்க முடியாது அவன் பின்னிருந்து வந்து பாய்ந்த கைக்குண்டு ஒன்று அந்த பெண் அருகில் வெடிக்க மயங்கிச்சரிந்தாள் அவள். சட்டென அவளைத் தாங்கிப்பிடித்தவன் அவளை தோளில் போட்டுக்கொண்டு கடினம் என்றாலும் இயன்றளவு வேகமாய் ஓடினான்.
ஆனாலும் விடாது துரத்திக்கொண்டே இருந்தது அந்த குழு. ஒரு கட்டத்தில் ஓடுவது முடியாத செயல் என உணர்ந்தவன் அருகில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் அவளுடன் குதித்தான் சக்தி.
"உன்னால ஒரு வேள கூட ஒழுங்கா பன்ன முடிலயா.. வர்ர கோபத்துக்கு கழுத்த நெறிச்சிரலாம் போல இருக்கு..எத்தன நாள் கனவு எவ்வளவு கஷ்டப்பட்டு போட்ட ப்ளான்.. எல்லாம் கைகூடி வர்ர நேரம் பொண்ண தொலைச்சிட்டு வந்து நிக்கிற..அவ இல்லாம இந்த ஊர் பக்கம் வந்து என் கையால சாவ தேடிக்காத நீ."
சாருவை கடத்தியவன் போல ஒருவனை காட்டி அவனுடன் சாருவிற்கு திருமணம் என நடத்தும் வேளை வேலு வந்து அவளை காப்பாற்ற.. அங்கிருந்து அவளை உரிமையின்றி அழைத்துப்போக முடியாது போன்ற ஒரு இக்கட்டை இவர்கள் எழுப்ப அப்போது வேலு அங்கிருந்த தாலியை எடுத்து சாருவிற்கு கட்டி உரிமையோடு கம்பீரமாய் அழைத்து செல்வது தான் வேலுவின் திட்டம். சாரு எப்போதும் அவன் தன்னை காப்பாற்றியவன் என்ற கண்ணோட்டத்தில் கடமைபட்டிருப்பாள் வாழ்க்கையில் எல்லாம் இனி சுபம் என கணக்கிட்டிருந்தான்.
ரயில் பயணத்தை தேர்வு செய்தது கூட அங்கிருந்து வேலு இடையில் ஏறி சாருவை கண்டு பின்தொடர்ந்ததாக கூறலாம் என. ஆனால் என்னவோ அவன் எதிர்பார்க்காதது சக்தியும் அங்கு வருவான் என்பதை. அதோடு அவ்வளவு பெரிய கலவர நிலையிலும் அதுவும் அடியாட்கள் கொண்ட சாருவை கடத்தியவர்கள் உரிமைக்கான ரிப்போர்ட் கேட்பார்களா இதெல்லாம் திட்டத்தின் ஓட்டைகள் தான். ஆனால் அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தானே சாருவை சக்தி கையில் ஒப்படைத்தது போல ஆகிவிட்டதே என கொதித்துப்போய் போனில் ராஜம்மாளை வறுத்துக்கொண்டிருந்தான் வேலு.
அடுத்து ராஜம்மாள் பயத்துடன் பம்மிக்கொண்டே கூறிய செய்தி இறந்திருந்த நம்பிக்கையை இருபது வீதம் உயிர் கொடுத்து எழுப்ப போனை கோபம் காட்டி தூக்கி எறிந்து விட்டு அடுத்த திட்டத்தில் தானே இறங்கிட தீர்மானித்தான்.