❤ஏன் தேவி இன்று நீ
என்னைக் கொல்கிறாய்..
முள் மீது ஏனடி
தூங்கச் சொல்கிறாய்..
உன்னைத் தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது..❤
அன்றைய நாள் அழகாக விடிந்திருந்தது அவர்கள் இருவருக்கும், முக்கியமாக அவளுக்கு. ஆனால் அந்த அழகிய என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவருக்கும் பின் இருந்த காரணம் வேறு தான்.
"செம்மயா பன்னிட்டயே வேலு.. நான் கூட உனக்கு பேச்சு மட்டும் தான் நினைச்சேன்.. " தீக்ஷா தன் முன் கைகட்டி நின்றிருந்த வேலுவை பார்த்து மெச்சுதலாய் பேச..
"நன்றி மேடம் நன்றி.."என அவனும் நெளிந்து கொண்டிருந்தான்.
"சரி அந்த லாறிய என்ன பன்ன.."
"அது பத்தி நீங்க கவலையே பட வேணாம்.. ஆக்ஸிடன்ட் ஆனதும் நம்ம பய அங்கேயே வண்டிய நிறுத்திட்டான். நம்ம ப்ளான் பன்னாத ஒன்னு சிக்னல்ல அந்த பொண்ணு வண்டிய நிறுத்தாதது அதுனால தப்பும் நம்ம பய மேல இல்ல அதே நேரம் ஆக்ஸிடன்ட் மாதிரியே நம்மளுக்கு நினைச்சதையும் செய்ய முடிஞ்சது மேடம்.." வேலு கூற கூற தீக்ஷாவின் வெற்றி சிரிப்பு மேலும் கூடிக்கொண்டே போனது.
"மேடம்.." தீக்ஷா அமைதியாய் இருக்க மெதுவாய் அழைத்துப்பார்த்தான். அவள் நிமிர.. "நீங்க சொன்னது போல செஞ்சாச்சி.. இப்ப உங்க ரூட்டும் க்ளியர்.. நான் பேசினது கொடுத்தீங்கன்னா..நான் என் வழியில போயிட்டே இருப்பேன்.."வேலு தலையை சொறிந்து கொண்டே கூறினான்.
"ராகுல்.." என தனக்கு கொஞ்சம் தொலைவாய் நின்றிருந்த அவளது பி ஏ வை அழைத்தாள். எங்கே நடந்து வந்தாலும் மேடம் சாலரியை வெட்டி விடுவாளோ என ஓடி வந்து அவள் முன் நின்றான். தனது கையால் இரண்டு என காட்டி வேலுவை காட்டினாள்.
அவனும் புரிந்து கொண்டு தலையாட்டி விட்டு உள்ளே சென்று ஒரு பையோடு வந்து அதை வேலுவிடம் கொடுக்க அவன் கண்களை அவனுக்கே நம்ப முடியவில்லை. ஐம்பது லட்சம் தான் அவன் கேட்டது ஆனால் அங்கிருந்ததோ கட்டு கட்டாய் ஐம்பதையும் தாண்டிய பணக்கட்டுக்கள்.
"மேடம்.." வேலு நம்ப முடியாமல் இழுக்க.. பதிலுக்கு சிரித்து விட்டு ராகுலை கையாலே சைகை காட்டி போகச்சொல்லி விட்டு.. "இதுல இரண்டு கோடி இருக்கு.. " வேலு தொடர்ந்து ஏதோ பேச வர கையசைவால் தடுத்தாள்.
"உனக்கு நான் சொன்னது நினைவிருக்கும் நினைக்கிறேன். இனிமே என் வழில நீ வர கூடாது.. ஏதாவது இந்த விஷயத்தில நீ மாட்டினாலும் என் பக்கம் உன் கை நீள கூடாது.. அதுக்கெல்லாம் சேர்த்து தான் நீ கேட்டதுக்கு அதிகமாகவே கொடுத்திருக்கேன்.. புரிஞ்சதா ? இல்ல புரியலன்னா உனக்கு வேற பாஷையில சொல்லனுமா" தீக்ஷா பேச பேச வேலு அவசர அவசரமாய் தலையை ஆட்டினான். பின் அவன் ஏதோ கூற வரவும் கை நீட்டி தடுத்தவள் தன் வாயில் கை வைத்து பேச வேண்டாம் என்பது போல் சைகை செய்து விட்டு அவனை போகச்சொன்னாள்.
வேலுவும் சரி என்று அந்த பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர..
"வேலு ஒன் மினிட்.." என்று மீண்டும் அவனை அழைத்தாள்.
திரும்பி பழைய இடத்திற்கே ஓடி வந்து கைகட்டி நின்றான் வேலு. "என்ன மேடம்.."என்றான் பணிவாய்.
"இப்போவே எந்த முயற்சியும் வேணாம். கொஞ்ச நாள் போகட்டும்.. பொலீஸும் இப்போ ரொம்ப தீவிரமா இருப்பாங்க.. " தீக்ஷா பேச வேலுவும் எப்போதும் போல் தலையை ஆட்ட, அவளது கை அசைவிற்கு காத்திருந்து விட்டு அது கிடைத்ததும் பணப்பையை அள்ளிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் வேலு.
*******
மயக்க மருந்தின் வீரியத்தில் தன் புலம்பல்களை நிறுத்தி விட்டு அவன் அறையில் கண்ணயர்ந்திருந்தான் சக்தி. இருந்தும் முனகிக்கொண்டே இருந்தவன் அருகில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான் வினோத்.
அவன் அருகில் வந்து தோள் பற்றிய வினிதா.." வினோ நீ கேட்ட எல்லாம் இதுல இருக்கு.." என்றவாறு அந்த கவரை அவனிடம் கொடுத்தாள். ஓர் நன்றியுடன் அதனை வாங்கிக்கொண்டவன் முதலாவதாய் அந்த சிசிடிவி வீடியோவை கொண்டிருந்த பென்ட்ரைவை லேப்டாப்பில் இணைத்து அதனை பார்வையிட வினிதாவும் ராஜேஷும் சேர்ந்துகொண்டனர்.
பைக் வருவது தெரிய அதன் போதே கண்ணிமைக்கும் நொடியில் வந்து மோதியது லாறி.. மோதிய வேகத்தில் மறுபக்கம் திரும்பிய பைக்.. அதில் ரம்யாவின் தலை பலமாக தரையில் மோதுவதும் தெளிவாகத்தெரிய அதற்கு மேல் பார்க்க முடியாமல் தலையை மேசையில் கவிழ்த்துக்கொண்டான் வினோத். அவன் குலுங்குவதே அவன் அழுவதை உணர்த்த ஆறுதலாய் அவனை பற்றிக்கொண்ட வினிதா ராஜேஷை பார்க்க அவனும் கண்ணீரைத் துடைத்ததுக்கொண்டு கவரில் இருந்த ரம்யாவின் ரிப்போர்ட்டை பார்வையிட தொடங்கினான்.
" ரிப்போர்ட்ல என்ன இருக்கு?" என்றாள் வினிதா.
"ஹ்ம் ரம்யாவுக்கு தலைல பலமா அடிபட்டிருக்கனால அவளுக்கு உடனடியா ஒரு ஆப்ரேஷன் பன்ன இருந்திருக்கு சொன்னாங்க ரம்யாவுக்கு ட்ரீட் பன்ன டாக்டர். ஆனால் அதுக்கு அந்த ஹாஸ்பிடல்ல வசதிகள் இல்ல..அதுனால சார் போற வரை வெய்ட் பன்ன வேண்டிய கட்டாயம்.. அப்போ தான் ஒரு அம்மா வந்து ரம்யா தன்னோட மகள்ன்னு சொல்லி உடனே கூட்டிட்டு போயிருக்காங்க.. ஆனால்.."
"எல்லாம் சரி ராஜேஷ் ஆனால் அவங்கதான் ரம்யாவோட அம்மான்னு இவங்க எப்படி நிரூபிக்காம அனுப்பலாம் சொல்லு..கேட்டியா நீ..?" வினோ ஆவேசமாய் எழுந்து வினவ.."அப்போ இருந்த நிலமையில டாக்டர்க்கு அதெல்லாம் தோணல்ல.. ஒரு உயிர்தான் முக்கியமா தெரிஞ்சது.. அதுனால அம்மான்னு யாரும் பொய் சொல்ல மாட்டாங்கன்னு அனுப்பிட்டாங்க.. ஆனால் அவங்கள பார்த்தா தப்பா தெரியல்ல சொன்னாரு.. எப்படியாவது ரம்யாவ காப்பாத்திரனும் என்ற தவிப்பு மட்டும் தான் அவங்ககிட்ட இருந்ததாம்."
மீதி வீடியோவில் பைக் பள்ளத்திற்குள் சாருவுடனே சென்று விழுவதும் தெரிந்தது. வீடியோ முடிந்தவுடனும் கூட நீண்ட நேரம் அறையினுள் மௌனமே ஆட்சிபுரிய.."சாருவோட.. சாரு.. பாடி கிடைச்சிதா?" எப்படி கேட்பது தெரியாமல் திக்கி திக்கி வினவினான் வினோ..பதிலுக்கு இல்லை என்று தலையசைத்தான் ராஜேஷ்.
"அது என்ன..? என்றாள் வினி..ராஜேஷ் கையிலிருந்த மற்றுமொரு பைல்லை பார்த்து.
"இது ரமி அவளோட மூன்று வயதில இருந்து அனாதை இல்லதுல தான் வளர்ந்தா என்பதற்கான ஆதாரம்."
"வினோ இப்படி செய்யலாமே..இந்த பைல் எல்லாம் கொண்டு போய் பொலீஸ்ல ஒரு கம்ளைன் கொடுக்கலாம்.. இது கடத்தலா இருக்கலாமே.. அப்படி இல்லன்னாலும் அவங்க எப்படி ரமிய பொய் சொல்லி கூட்டிட்டு போகலாம்?"
வினி கேட்க மறுப்பாய் தலையசைத்தான் வினோத்.
"இல்ல வினி..ரமி கூட நாம இப்ப ஒரு மூன்று வருஷமாகதான் இருக்கோம்.. அதோடு அவளோட மூன்று வயதிற்கு முன்ன என்ன நடந்தது இதுவும் எங்களுக்கு தெரியாது.. நாம இத மட்டும் கொண்டு போய் கொடுத்த இது கடத்தலா இருக்கலாம் என்று கம்ளைன் கொடுக்க முடியும் என்று நான் நினைக்கல.. இதுக்கு சப்போர்ட்டா அந்த டாக்டரும் வர மாட்டாரு காரணம் இதுல அவர் சைட்டுலயும் தப்பு இருக்கு சோ வந்தா அவர் ஹ்ஸ்பிடலுக்கு தான் கெட்ட பெயர். அதேநேரம் எங்களோட சைட்டுலயும் தப்பு இருக்கு.. நாங்க அங்க போன டைம்ல ரமிய அவங்க கூட்டிட்டு போயிருக்கால்லன்னா அவள் உயிர்க்கு கூட ஆபத்து தான். பேப்பர்ல அவ போட்டோ போட்டு தேடலாம் ஆனால் அது ரமிக்கு பாதுகாப்பு இல்ல.. ரமி நல்லா தான் இருப்பா.. எங்கள தேடி வருவா.. இல்லன்னா கண்டிப்பா நாங்க அதுக்குள்ள அவள கண்டுபிடிப்பம்.." பேசிவிட்டு மனதினுள் நினைத்து கொண்டான்..காதல் நிச்சயமாக என்கிட்ட சேர்க்கும் அவள..
காதல் சொல்லி அவன் உணர்ந்து முழுதாக மூன்று நாள் கூட தாண்டி முடியவில்லை அதற்குள் தன்னவளை இழந்து நிற்கிறோமே என மௌனமாய் கதறியது அவன் இதயம்.
இரண்டு நாட்கள் இவ்வாறே கழிய சாருவின் வீட்டிற்கு தகவல் சொல்வதா வேண்டாமா என்ற பெரிய குழப்பத்தில் இருந்தார் சாவித்ரி. சாருவின் இழப்பு அனைவரையுமே கலங்கச்செய்திருந்தது.. பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தவளை இங்கே நல்லது செய்வதாக எண்ணி கூட்டி வந்தது தன் தவறு என குற்ற உணர்வில் தவித்துக்ககொண்டிருந்தார் சிவா. சதீஷும் நிலாவும் ஒரு பக்கம்..சக்தி மறுபக்கம் கொஞ்சமாய் தேறி வந்திருந்தான்.
முதல் நாள் அவனை முழுவதுமாகவே மயக்க மருந்தின் பிடியிலேயே வைத்திருந்தனர். பின் கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் புரிய வைத்து அவனை தெளிய வைத்தனர். இருந்தும் யாரிடமும் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை.. அவன் நிலை பார்க்க பொறுக்காது ராஜேஷ் வினிதா.. வினோதும் கூட தன் சோகமும் மறந்து அவனை தேற்ற முயன்று கொண்டிருந்தார்கள்.
சாருவின் உடல் கிடைக்காமலே போக அதனால் இறுதி சடங்குகள் என்ற எண்ணம் கூட யாருக்கும் தோன்றவில்லை..அவள் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது இருந்தது அனைவருக்கும்.
ரம்யா பற்றி தனக்கு தெரிந்தவரையில் தேடிக்கொண்டிருந்தான் வினோ. அவள் நலமாகத்தான் இருப்பாள் என்பது மட்டும் அவனுக்கு உறுதியாய் இருந்தது.