சுடும் நிலவு சுடாத சூரியன் – 22
சித்தார்த் வண்டியில் வந்தமர்ந்ததும், ஸம்யுக்தாவிற்கு உடனே வண்டியில் இருந்து இறங்கி விட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதற்குள் டிரைவர் வண்டியை எடுத்து விட, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள். ஒரு மனது வண்டியை நிறுத்தி இறங்கி விட சொல்ல, அவளது இன்னொரு மனம், என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று சொல்லியது.
மித்ரனும், அகிலனும் அருகே இருக்கும் போது என்ன நடந்து விடும் என்ற தைரியம் இருந்த போதும், உள்ளுக்குள் சொல்ல தெரியாத பயம் பரவியது. இந்த இடத்தின் அருகே தானே, தன்னை வைத்தியர் வீட்டில் கண்டு பிடித்தார்கள் என்று நினைத்த போது, பயம் இன்னும் அதிகரித்தது. ஆனாலும் மனதின் ஓரத்தில், மித்ரனிடம் இவனும், அவனும் ஒன்று தான் என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை பிறந்தது.
காட்டின் உள்ளே இருக்கும் வன அலுவலகத்தில் சென்று அனுமதி பெற்றதும், ஒரு வன காவலரை இவர்கள் துணைக்கு அனுப்பினார்கள். வழியில் தென்பட்ட பல வித மான்களை வேடிக்கை பார்த்த படி சென்றனர்.ஸம்யுக்தாவிற்கு எதையும் ரசிக்க முடியவில்லை. திரும்பி மித்ரனை பார்த்த போது, அவள் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். மித்ரனது பார்வை, அவளது மனநிலையை தான் நன்றாக உணர்ந்திருப்பதை சொன்னது.
ஆயிரம் சொற்கள் அளிக்க முடியாத தெம்பையும், தைரியத்தையும், அவளது அண்ணனின் ஒற்றை பார்வை அளித்துச் சென்றது. மனம் சற்றே தெளிவாக சுற்றிலும் பார்த்துக் கொண்டே சென்றாள்.
மான்களும், காட்டெருதுகளுமே கண்களில் தென்பட்டன. காட்டெருதை கண்டதும், தன்னை துரத்திய காட்டெருது மனதில் வந்து போனது. தனக்கு நடந்தது அனைத்தையும் மித்ரனிடமும், அகிலனிடமும் சொன்ன பிறகு அதே இடத்திற்கு தன்னை ஏன் கூட்டி வந்தார்கள் என்று கோபம் வந்தது. அகிலனிடம் ஒரு வாரத்திற்கு மேல் சொன்னதையே தினமும் திருப்பி திருப்பி சொல்லியிருக்கிறாள். அவன் கேள்விகளால் அவளை துளைத்து எடுத்திருந்தான். சிறிய விஷயங்களையும் துருவி துருவி கேட்டிருக்கிறான். அவளைக் கடத்திய போது, அவள் விழித்திருந்த நேரங்களில் என்ன நடந்தது என்று அவனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் அவனும் ஏன் என்னை இங்கே கூட்டி வந்தான் என்று யோசித்தபடி நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தான்.
YOU ARE READING
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்