பாகம் 42
மறுநாள் காலை
இந்து, தலையணையின் மீது கவிழ்ந்து படுத்து உறங்கி கொண்டிருந்தாள். தூக்கத்திலிருந்து கண் விழித்த அர்ஜுன், அவள் தன்னிடமிருந்து விலகி சென்று படுத்திருப்பதை பார்த்தான். உருண்டு சென்று, அவள் முதுகில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவனுடைய அந்த செயல், அவள் தூக்கத்தை கலைத்தது. தன் முதுகின் மீது படுத்திருப்பது யார் என்பதை உணர்ந்து, அழகிய சிரிப்பை அவள் இதழ்கள் சிந்தின. அர்ஜுனுடைய கூர்மையான காதுகளில் அந்த மெல்லிய சப்தம் விழுந்தது.
"எதுக்காக என்னை விட்டு தள்ளிப் போய் படுத்திருக்க?" என்றான்.
"எனக்கு தெரியல. தூக்கத்துல விலகிப் போயிட்டேன்னு நினைக்கிறேன்" என்றாள் கண்ணை திறக்காமல்.
"அப்படின்னா இன்னிக்கு ராத்திரியில இருந்து, உன்னை என்னோடு சேர்த்து இறுக்கமா கயிறால கட்டிக்கிட்டு தூங்க போறேன்" என்றான்.
அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தாள் இந்து.
"நான் எப்பவும் உன் கூட இப்படியே இருக்கனும்..."
"அது நடக்காது" என்றாள் சாதாரணமாக.
அதைக் கேட்டு அர்ஜூனின் கண்கள் அகல விரிந்தன.
"இந்த மாதிரி நான் உங்க கூட இருக்க மாட்டேன்"
தன் தலையை உயர்த்தி அவளை பார்த்தான் அர்ஜுன்.
"அப்படி நடக்க வாய்ப்பே இல்லை" என்றாள் இந்து.
கவிழ்ந்து படுத்திருந்த அவளை, தன்னை நோக்கி திருப்பினான்.
"என்ன பேசுற நீ?" என்றான் கோபமாக.
"நம்ம வீட்டுக்கு போனதுக்கு அப்புறம், நான் உங்களுக்கு முன்னாடி எழுந்து வேலை செய்ய ஆரம்பிச்சிடுவேன்னு சொல்ல வந்தேன்..."
"நீ ஒன்னும் எனக்கு முன்னாடி எழுந்துக்க வேண்டாம். எத்தனை ஆளுங்களை வேணும்னாலும் வேலைக்கு வச்சுக்கோ... எனக்கு முன்னாடி எழுந்து போற வேலையை வச்சுகாதே" என்றான் உறுதியாக.