"நெஜமாத் தான் சொல்றேன். அவங்க உங்களை பத்தி நிறைய சொன்னாங்க. என் பையன பத்திரமா பாத்துக்கோ. அவன் எதுவுமே பிடிக்காத மாதிரி ரொம்ப நடிப்பான்... கோவக்காரன் மாதிரி காட்டிக்குவான்... ஆனா, நீ அதையெல்லாம் நம்பாத. அவன் வெளியில பார்க்க எப்படி இருக்கானோ அது உண்மையில்ல. எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் ஒத்துக்க மாட்டான்... சரியா சாப்பிட மாட்டான்... அவனை விட்டுடாத... அவனை இறுக்கமாக கட்டிப் பிடிச்சு, அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுடு அப்படின்னு சொன்னாங்க... "
"எனக்கு ஊட்டி விடுற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா?" என்றான் தனது ஆர்வத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.
"தைரியமா? நான் என்ன போருக்காக போறேன்..? புருஷனுக்கு சாப்பாடு ஊட்டி விட தைரியம் எதுக்கு? அன்பு இருந்தா போதாதா...?"
அர்ஜூனின் மனதில் சந்தோசம் கொப்பளித்தது. நீண்ட பெரு மூச்சை இழுத்து அதை அடக்கிக் கொண்டான்.
"பூரியும் பட்டாணி குருமாவும் எப்படி இருக்கு? உங்களுக்கு பிடிக்கலையா?"
சாப்பிடுவதை நிறுத்தினான் அர்ஜுன். பிடிக்கவில்லையாவது...? எவ்வளவு அருமையாய் இருக்கிறது...! அதே மாவு, அதே தேங்காய், அதே பட்டாணி, ஆனால், இந்த பெண்ணின் கைப்பக்குவம் தான் எவ்வளவு சுவை கூட்டுகிறது...! ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான். இந்தப் பெண்ணின் மனதில் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அவளுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தால், அவள் பேசியே அவனை மயங்கச் செய்து விடுவாள். சாப்பிட்டு முடித்து அலுவலகம் சென்றான் அர்ஜுன், நிறைந்த மனதோடு.
சங்கர் இல்லம்
மாஷாவிற்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அவர் தலைக்குள் பெரு வெடிப்பு நிகழ்ந்ததை போல் உணர்ந்தார் மாஷா. அவருடைய நீண்ட கால சேமிப்புகள் வருமானவரி துறை அதிகாரிகளால் சோதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அவருக்கு முன்னால் தன் கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார் சங்கர். அவரிடம் தான் எல்லாவற்றிற்கும் கனகச்சிதமான கணக்கு இருக்கிறதே... ஆனால், மாஷாவிடம் அவருடைய தனிப்பட்ட எந்த சேமிப்பிற்கும் எந்த கணக்கும் இல்லை. அவருடைய ஊட்டி டீ எஸ்டேட், சொகுசு பங்களா, பத்து கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், எதற்கும் கணக்கில்லை. அவர் அவற்றையெல்லாம் சங்கருக்கு தெரியாமல் அல்லவா சேர்த்து வைத்தார்...? அவர் சங்கரின் நேரடி உதவியாளராக பணியாற்றிய பொழுது, அவருக்கு தெரியாமல், பொய் கணக்கு காட்டி, அவற்றையெல்லாம் சேர்த்திருந்தார். மாஷாவின் வேலை தெரிய வந்த பொழுது, அவரை அந்த பணியில் இருந்து நீக்கினார் சங்கர். அன்று, அவர் செய்த வேலை தான், இன்று அர்ஜுனின் ரூபத்தில் அவரை தாக்கிக் கொண்டிருக்கிறது. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார் மாஷா.
![](https://img.wattpad.com/cover/269739794-288-k552515.jpg)
Part 24
Zacznij od początku