அப்பொழுது தான், அந்த நோட்டு கட்டிலிருந்து தன் கண்களை நகர்த்தினாள் வித்யா. நேரே ஓடிச் சென்று, கோவிந்தனின் சட்டை காலரை பிடித்து, அவனை கோபமாய் அறைந்தாள்.
"என்னடா இதெல்லாம்? நாயே... எதுக்குடா என்னை ஏமாத்தின? ஏன்...? இப்போ நான் வீட்டை எப்படிடா விப்பேன்?" என்று பைத்தியம் பிடித்தவள் போல கத்தினாள்.
அவளை தள்ளி விட்டான் கோவிந்தன்.
"போய் உன் மருமக பிள்ளைகிட்ட கையெழுத்து வாங்கிக்கோ. உன்னோட வீடு மாதிரி நூறு வீட்டை வாங்க முடியும் அவனால..."
அவனை முகம் சுளித்து பார்த்தாள் வித்யா.
"உன்னால யோசிச்சி கூட பார்க்க முடியாத அளவுக்கு, குவியல் குவியலாக பணம் வச்சிருக்கான். அவன் கோடிஸ்வரன். உன்னுடைய அதிர்ஷ்டம், அவன் உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான். போய் அவன் கால்ல விழு.. பணத்தால, பூமியிலேயே சொர்க்கத்தை உருவாக்க முடியும் அவனால."
"அவன் எங்கிருந்து வந்தான்?" என்றாள் வீணா.
"எனக்கு தெரியாது. அவனுடைய பெயர் அர்ஜுன். அவ்வளவு தான் தெரியும்"
"அவன் உனக்கு பணம் கொடுத்தானா?" என்றாள் வீணா.
"பின்ன...? வேறே எதுக்காக நான் அவனை இந்துவை கல்யாணம் பண்ணிக்க விட்டேன்?"
"எவ்வளவு கொடுத்தான்?" என்றாள் வித்யா.
"அம்பது லட்சம்"
"என்ன....? அம்பது லட்சமா?" என்று வாயை பிளந்தாள் வித்யா.
"எதுக்காக?" என்றாள் வீணா.
"உன்னோட அக்காவை கல்யாணம் பண்ணிக்க"
வீணா குழப்பம் அடைந்தாள். இந்துவை திருமணம் செய்து கொள்ள அவன் 50 லட்சம் கொடுத்தானா? ஆனால், எதற்காக? அப்படி இந்துவிடம் என்ன இருக்கிறது, அவன் 50 லட்சம் கொடுக்கும் அளவிற்கு? அவளுடைய மூளைக்கு எதுவும் எட்டவில்லை. அவர்களை குழப்பத்தில் விட்டு அங்கிருந்து சென்றான் கோவிந்தன்.
.......
இந்துவுடன் விமான நிலையம் வந்தடைந்தான் அர்ஜுன். அங்கு அவர்களுக்காக ஒரு ஹெலிகாப்டர் காத்திருந்தது. அதைப் பார்த்து இந்து திகைப்படைந்தாள். அர்ஜுனை, அவன் ஏதோ கொள்ளைக்கூட்டத் தலைவனோ என்பது போல அதிர்ச்சியாய் பார்த்தாள் இந்து.
7 அர்ஜுனின் வீட்டில் இந்து
Start from the beginning