இரவின் இருள் உருக்கி,
பூவின் நிழல் பரப்பி,
கேசம் என அலையவிட்டு...
தேசம் எல்லாம் திசை மறந்து,
உந்தன் பின்னே சுற்ற வைத்தாய்!
ஆழ்கடலின் ரகசியத்தைப் பதுக்கி வைத்து,
வான் நிலா முகம் பார்த்த நீர் கொண்டு,
ஒளியலையில் குளித்து வந்த இரு விழிகள்!
முகிலின் சதையில் விளைந்த இமைத்திரைகள்!
மந்திரம் பழகாக் கண்கள்!
வீசும் மெல்லியதொரு மாயப் பார்வையில்,
பேசும் புது மௌனத்தில், சொக்க வைத்தாய்!
மாதுளை முத்துக்களை குழைத்தெடுத்து,
மலரிதழ்களாலே வரிகள் அமைத்து,
வானவில்லில் அஞ்சல் அனுப்பி வைத்து,
மங்கை இதழ்கள் என்றாகி...
முத்தமிட மனம் போதை கொள்ள,
உதட்டை நீ சுழிக்கையில்,
சத்தமில்லாமல் உடைந்தேன் நானும் மெல்ல!
பகலிலே நேரம் போதாதென்று,
கனவிலும் உன் அழகை ரசிக்கிறேன்!
விடியலும் வந்து விழி திறந்தால்,
உடனே உன் முகம் காண துடிக்கிறேன்!