நெஞ்சோரம் பரவசம்,
கதை பேச வருகிறதோ?
பஞ்சு போல் மனம் மாறி,
இன்பவிதை தூவிச் செல்கிறதோ?
விழியினில்...
கனவுகள் கசிந்துருகும் நேரம்!
வழியினில்...
கவிதைகள் செவியிரண்டில் ஓதும்!
மழையாய்...
இசை வந்து என் வாசல் பார்க்கும்!
சிலையாய்...
நின்றிருந்த புவி சட்டென பூக்கும்!
சிந்தையில் அலை,
இயற்கையில் கலை!
விந்தையாய் நிலை,
இல்லையோர் பிழை!
வானம்பாடி ஆகும் மனசு,
ஆடிப்பாட கெஞ்சும் வயசு;
நீரலையில் போவது போல்,
விரல் நுனியில் காலமே பரிசு!
நிழலாக நிம்மதி மாறி,
உடன் இணைந்து வருகிறதோ?
சூழலோடு முழுதும் மோதி,
மடல் திறந்து தருகிறதோ?
மெய்யான சந்தோஷம்,
நெஞ்சுக்குள் அனுபவிக்க,
பொய்யான வாழ்விடுத்து,
இயற்கையோடு ஒன்றிடுவோம்!
இழுத்து விடும் மூச்சிலே,
இசை இருப்பதை அறியவும்!
வாழும் நொடி ஒவ்வொன்றிலும்,
திசை திறப்பதை உணரவும்!
பெரிய இன்பம் நம்மை தீண்டிடக்
காத்துக் கிடக்கிறது வெளியிலே!
கரிய மனதை சலவை செய்திட,
பார்த்துக் கொண்டிருக்கிறது, நனவிலே!