50 புதிய வாழ்க்கை
மறுநாள் காலை
காலை எழுந்தவுடன் சமையலை துவங்கி விட்டாள் இளந்தென்றல். அவளது கை மனதில் தயாரான பாயசத்தின் வாசனை, சாராவை சமையலறைக்கு அழைத்து வந்தது.
"இந்த வாசனையே என்னை சாப்பிட சொல்லி தூண்டுது" என்றார் சாரா.
"அதே தான்" என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய பொழுது, அங்கு புன்னகையுடன் நின்றிருந்தான் பரஞ்ஜோதி.
"தாராளமா சாப்பிடுங்கண்ணா" என்றாள் இளந்தென்றல்.
"பாவம், மல்லனால இதை சாப்பிட முடியாதுல்ல?"
"அவருக்கு சுகர் ஃப்ரீ பாயாசம் ரெடியா இருக்கு"
"ஓ சூப்பர்... "
அவர்கள் இருவருக்கும் பாயசத்தை கிண்ணங்களில் ஊற்றி கொடுத்தாள் இளந்தென்றல். சுகர் ஃப்ரீ கொண்டு சமைக்கப்பட்ட பாயசத்தை எடுத்துக்கொண்டு தன் அறையை நோக்கி சென்றாள் இளந்தென்றல். அங்கு மாமல்லன் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். பாயச கிண்ணத்தை மேசையின் மீது வைத்து விட்டு, அவன் அருகில் அமர்ந்து மெல்ல அவன் தலையை வருடி கொடுத்தாள். அவள் கரத்தைப் பற்றி தன்னிடம் இழுத்துக் கொண்டான் மாமல்லன்.
"என்ன வேலை இது? என்னை விடுங்க"
"ஷ்ஷ்ஷ்... அதையெல்லாம் சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல. இப்போ நீ எனக்கு சொந்தம்... ஞாபகத்துல வச்சுக்கோ"
"இன்னைக்கு எங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு சொன்னீங்களே, மறந்துட்டீங்களா?"
"நான் மறக்கல..."
"அப்படின்னா போய் ரெடி ஆகுங்க. குளிச்சிட்டு வந்து, நான் செஞ்ச பாயசத்தை சாப்பிடுங்க"
"எனக்கு பாயசம் வேண்டாம். கேரட் அல்வா தான் வேணும்" என்றான் ரகசியமாக.
"சாயங்காலம் செஞ்சு தரேன்" என்றாள் வேறு எங்கோ பார்த்தபடி.
"வேண்டாம், நீ என் கூட இரு. போதும். நானே எடுத்துக்குவேன்"
தன் வெட்க புன்னகையை மறைக்க போராடினாள் இளந்தென்றல். அவள் புதிதாய் அணிந்திருந்த மஞ்சள் தாலியும், அவள் நெற்றி வகிட்டை நிரப்பியிருந்த குங்குமமும், அவளை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கொள்ளை அழகாய் காட்டியது.
"இந்த தாலியும் குங்குமமும் உனக்கு ரொம்ப அழகா இருக்கு" என்றான் மாமல்லன்.
"ஏன்னா அது என் புருஷனோட பேரை சொல்லுது"
"அப்படியா? என்ன உன்னோட புருஷன் பேரு?"
"மாமல்ல கிறுக்கன்..."
அதைக் கேட்டு சிரித்த மாமல்லன்,
"கிறுக்கியோட புருஷன் கிறுக்கனா தானே இருப்பான்?" என்றான்.
"நான் கிறுக்கியா?"
"பின்ன என்ன? மூஞ்சி முகம் தெரியாத ஒருத்தனுக்காக யாராவது பதினைஞ்சி வருஷம் காத்திருப்பாங்களா?"
"நான் காத்திருந்தது ஒன்னும் வீண் போகலையே... அதனால நான் ஒன்னும் கிறுக்கி இல்ல"
"நீ எனக்காக காத்திருந்தது நல்லது தான்... அதனால தான் நீ எனக்கு கிடைச்ச..."
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை யாரோ கிறுக்கின்னு சொன்னாரே..." என்றாள் எகத்தாளமாய்.
"அந்த யாரோ, தானும் ஒரு கிறுக்கண்ணு ஒத்துக்கிட்டானே..."
"நம்ம ரெண்டு பேருமே கிறுக்கு தான். டைம் ஆகுது போய் ரெடியாகுங்க"
"ஓகே ஓகே... பத்து நிமிஷத்துல ரெடி ஆயிட்டு வரேன்..." அழுத்தமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு குளியலறை நோக்கி சென்றான்.
.........
மாமல்லனும், இளந்தென்றலும் கோதை மற்றும் வடிவாம்பாளால் வரவேற்கப்பட்டார்கள்.
"எங்க கூட டிபன் சாப்பிட்டு தான் போகணும்" என்றார் பாட்டி.
"என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க? அப்படின்னா, மத்தியானம் சாப்பாடு போட மாட்டீங்களா? வெறும் டிபன் மட்டும் தானா? டிபன் சாப்பிட்டுட்டு நாங்க கிளம்ப வேண்டியது தானா?" என்றான் மாமல்லன்.
"என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க? நம்ம எல்லாரும் ஒரே குடும்பம். நீங்க எப்ப வேணா இங்க வரலாம்... உரிமையோட என்ன வேணாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம்" என்றார் கோதை.
"நீங்க சொன்னது உண்மையா ஆன்ட்டி? நம்ம எல்லாரும் ஒரே ஃபேமிலியா?"
"அதுல என்ன சந்தேகம் தம்பி? நீங்க எங்க மாப்பிள்ளை மட்டுமில்ல. எங்க பிள்ளையும் கூட" என்றார் பாட்டி.
"நான் வந்த வேலையை நீங்க ரொம்ப சுலபமாக்கிட்டீங்க பாட்டி"
"என்ன சொல்றீங்க?"
"நீங்களும், ஆன்ட்டியும் எங்க கூட சென்னைக்கு வந்துடணும்"
கோதையும், வடிவம்பாளும் பேச்சிழந்து போனார்கள். இளந்தென்றலோ வியந்து போனாள். இதைப் பற்றி மாமல்லன் அவளிடம் எதுவுமே பேசியிருக்கவில்லை.
"அதெல்லாம் நல்லா இருக்காது தம்பி. நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க" என்றார் கோதை.
"உங்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டப்போ, எந்த நாலு பேர் வந்து உதவி செஞ்சாங்க ஆன்ட்டி? எது நடந்தாலும், ஏதாவது சொல்ல, நாலு பேர் இருக்கத்தான் செய்வாங்க. நம்ம அதை பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. உங்க ரெண்டு பேரையும் இங்க விட்டுட்டு, தென்றலால அங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்? எங்க அம்மா உயிரோட இருந்திருந்தா, அவங்களும் இதைத்தான் செஞ்சிருப்பாங்க. தயவுசெய்து மறுக்காதீங்க. எல்லாத்துக்கும் மேல, என்னால தனியா இந்த பொண்ண சமாளிக்க முடியும்னு எனக்கு தோணல. நீங்க இருந்தா தான் எனக்கு துணையா இருக்கும்... எங்க கூட வாங்க ஆன்ட்டி"
கட்டிக்கொண்டு வந்த கண்ணீருக்கு இடையில், லேசான சிரிப்பை உதிர்த்தாள் இளந்தென்றல்.
"ஆனா, கோதை ரொம்ப தூரம் பிரயாணம் பண்ணக்கூடாதே தம்பி..."
"ஆமாம்... ஃப்ளைட்ல போனாலும், டேக் ஆஃப் ஆகும் போதும், லேண்டிங் ஆகும்போதும் பிரச்சனை ஆகும்னு டாக்டர் சொல்லியிருக்காரு" என்றார் கோதை.
"அதைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். ஹெலிகாப்டர் வாடகைக்கு கிடைக்குது. அதுல டேக் ஆஃப் லேண்டிங் பிரச்சினை கிடையாது"
"ஆனா... " என்று தயங்கினார் கோதை.
"நீங்க தானே சொன்னீங்க நான் உங்க பிள்ளைன்னு... நீங்க ரெண்டு பேரும் இங்க தனியா இருந்து என்ன செய்யப் போறீங்க? நம்ம எல்லாம் ஒரே குடும்பம்னா, ஒண்ணா தானே இருக்கணும்?"
கோதையும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"சரின்னு சொல்லுங்கம்மா" என்றாள் இளந்தென்றல்.
சரி என்று மெல்ல தலையசைத்தார் கோதை.
"இப்போதைக்கு தேவையான பொருளை மட்டும் எடுத்துக்கோங்க. மிச்சத்தை நம்ம ஆளுங்களை விட்டு எடுத்துக்கலாம்" என்றான் மாமல்லன்.
அப்போது அங்கு வந்த காவியா, தென்றலை அனைத்துக் கொண்டாள்.
"உன்னை பார்க்க நான் சரியா வந்துட்டேன் பாத்தியா?" என்றாள்.
"நீ வருவேன்னு தெரிஞ்சு தானே நான் உனக்கு ஃபோன் பண்ணேன்..."
"சரி வா, நான் உனக்கு பேக்கிங் பண்ண ஹெல்ப் பண்றேன்" என்றவள், அங்கு வந்த பரஞ்ஜோதியை பார்த்து திகைத்து நின்றாள்.
அவளை அங்கு எதிர்பார்க்காத பரஞ்சோதியும் திகைத்து தான் போனான்.
"உள்ள வாங்க தம்பி" என்ற பாட்டியின் குரல் அவனை பூமிக்கு அழைத்து வந்தது.
"நானே உங்களை கூப்பிடனும்னு நெனச்சேன்" என்றாள் தென்றல்.
"மல்லன் வர சொன்னான். அதான் வந்தேன்"
ஏதோ கூறப்போன பரஞ்சோதி, அங்கு வந்த சாராவை பார்த்து திகைத்து நின்றான்.
"நீங்க என்னமா இங்க?" என்ற பரஞ்சோதிக்கு, இளந்தென்றல் பதில் கூறினாள்.
"நான் தான் அவங்களை வர சொன்னேன். நீங்க தானே அன்னைக்கு சொன்னீங்க, உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நான் எந்த ஆர்வமும் காட்டலைன்னு...? அதனால, பாட்டி கிட்ட சொல்லி உங்களுக்கு நல்ல பொண்ணா தேட சொன்னேன். அவங்க ஒரு பொண்ணை தேடி கண்டுபிடிச்சுட்டாங்க. உங்களை பேசி முடிக்க இன்னைக்கி அவங்க அம்மா அப்பா இங்க வர போறாங்க"
"என்னது பேசி முடிக்கவா?" என்று அதிர்ந்தான் பரஞ்சோதி.
"உன்னை எப்படி அவளால விட்டிட முடியும்? என்ன இருந்தாலும் அவ உன் தங்கச்சி இல்லையா?" என்றான் மாமல்லன்.
"அதானே? தென்றல் எனக்கு வேலை இல்லாம செஞ்சுட்டா. இப்படி ஒரு தங்கச்சி கிடைக்க நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்" என்றார் சாரா.
பரஞ்சோதியின் கண்கள், தரையை பார்த்தபடி சோகமாய் நின்றிருந்த காவியாவின் மீதே இருந்தது. அவனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அன்று மாலை, காவியாவை பற்றி இளந்தென்றலிடம் பேசலாம் என்று எண்ணியிருந்தான் அவன். ஆனால் அதற்கு முன்பாக இவர்கள் எல்லாவற்றையும் வெகுவேகமாய் ஏற்பாடு செய்துவிட்டு இருக்கிறார்கள். இப்பொழுது அவன் காவியாவிற்கு என்ன பதில் கூற போகிறான்? நேற்று இரவு தானே அவளுக்கு ஃபோன் செய்து அவளை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாய் கூறினான்? அவள் அவனைப் பற்றி என்ன நினைப்பாள்?
அவனுக்கு எதிர்ப்புறமாய் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் காவியா. அவளது கண்கள் கலங்கியது போல் தோன்றியது அவனுக்கு. அதற்கு மேல் அங்கு தாமதிக்காமல் இளந்தென்றலின் அறையை நோக்கி நடந்தாள் காவியா. தனது உடைமைகளை பேக்கிங் செய்ய தனது அறைக்கு வந்த இளந்தென்றல், காவியா வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்ததை கவனித்தாள்.
"காவியா என்ன ஆச்சு?"
ஒன்றுமில்லை என்பது போல், வலிய புன்னகைத்த காவியா,
"பரஞ்சோதி சாருக்கு யாரை பேசி முடிச்சிருக்க?" என்றாள்.
"அதைத்தான் இன்னும் கொஞ்ச நேரத்துல நீயே பாக்க போறியே... நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? பரஞ்சோதி அண்ணனும் மதுரை பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க போறாரு"
"நீ ரொம்ப அவசரப் படுறியோனு எனக்கு தோணுது. இது அவர் வாழ்க்கை பத்தின விஷயம் இல்லையா...? ஒருவேளை அந்த பொண்ணு அவருக்கு பொருத்தமா இல்லன்னா, அவர் வாழ்க்கை வீணா போகாதா?" என்றாள் காவியா.
"நீ சொல்றதும் சரி தான். நான் எப்படி இந்த கோணத்தில் யோசிக்காம விட்டேன்?"
அப்பொழுது பெண் வீட்டார் வந்து விட்டதாய் இளந்தென்றலை அழைத்தார் பாட்டி.
"இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடலாம்னு நினைக்கிறேன்... நீ என்ன நினைக்கிற காவியா?"
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்"
"சரி வா போகலாம்"
இளந்தென்றலுடன் வெளியே வந்த காவியா, அங்கு வந்திருந்த தன் பெற்றோரை பார்த்து அதிர்ச்சியானாள்.
"இந்த கல்யாணம் வேண்டாம்ணு சொல்லிடட்டுமா?" என்று சிரித்தாள் தென்றல்.
அவள் கையை இறுக்கமாய் பற்றி, வேண்டாம் என்று அவசரமாய் தலையசைத்தாள் காவியா.
"அப்போ சரின்னு சொல்லிடலாமா?" என்றாள் தென்றல் கிண்டலாய்.
காவியா அங்கிருந்து ஓட முற்பட, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள் தென்றல். பரஞ்சோதியோ சந்தோஷத்தில் திளைத்தான். அவன் கூறுவதற்கு முன்பே, அவன் இதயத்தில் இருப்பது என்ன என்பதை அவனது பிரியமானவர்கள் கண்டு கொண்டார்கள் அல்லவா...!
பரஞ்சோதிக்கும் காவியாவிற்கும் கல்யாணம் பேசி முடிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு திருமணம் என்று நிச்சயத்துக் கொண்டார்கள். அனைவரும் ஒன்றாய் உணவருந்தினார்கள். பரஞ்சோதியும் சாராவும் மீண்டும் மாமல்லனின் இல்லம் திரும்ப, காவியா அவளது பெற்றோருடன் விடைபெற்றாள்.
இளந்தென்றலின் அறையில் கட்டிலில் படுத்திருந்தான் மாமல்லன். உள்ளே வந்த இளந்தென்றல் கதவை சாத்தி தாளிட்டு விட்டு அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
"தேங்க்ஸ் ஃபார் பரஞ்சோதி" என்றான் மாமல்லன்.
"உங்க தேங்க்ஸை உங்க பாக்கெட்லயே வச்சுக்கோங்க. என் கடமையை செஞ்சதுக்கு நீங்க ஒன்னும் தேங்க்ஸ் சொல்ல வேண்டாம்"
"சரி, என் தேங்க்ஸை நான் திரும்பி எடுத்துக்கிட்டேன்" சிரித்தான் மாமல்லன்.
எதையோ யோசித்த இளந்தென்றலின் முகம் சட்டென்று மாறியது, அவனது நெஞ்சில் தலை சாய்த்தாள்.
"ஏய்... தென்றல்... என்ன ஆச்சு...?"
"நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டேன். ஆனா தேங்க்ஸை தவிர வேற என்ன சொல்லணும்னு எனக்கு தெரியல"
"எதுக்கு?"
"அம்மாவையும் பாட்டியையும் நம்ம கூட கூட்டிக்கிட்டு போகணும்னு நீங்க எப்ப முடிவு பண்ணீங்க?"
"உங்களோட குடும்ப நிலைமை தெரிஞ்ச அன்னைக்கே முடிவு பண்ணணிட்டேன்"
"இதை பத்தி நீங்க என்கிட்ட எதுவுமே சொல்லலையே..."
"அதுக்கு பேரு தானே சர்ப்ரைஸ்...?"
"எல்லாத்துக்காகவும் நான் உங்களை ரொம்ப காதலிக்கிறேன்..."
"அவ்வளவு தானா?"
"அதிலேயே எல்லாம் அடங்கிடுச்சே"
"நீ இதுல எமோஷனல் ஆக எதுவும் இல்ல. என்ன செய்யணுமோ அதைத்தான் நான் செஞ்சிருக்கேன்..."
"உண்மையிலேயே நீங்க அவங்களை நம்ம கூட மல்லையில இருக்க வைக்க போறீங்களா?"
"ஆமாம்... ஏன்? என்ன சந்தேகம்?"
"நம்ம கூட இருக்க அவங்க சங்கடப்படலாம்... அவங்களுக்கு தனியா ஒரு வீடு பார்த்து கொடுத்திடலாமே..."
"முடியவே முடியாது. அவங்க நம்ம கூட தான் இருக்கணும். அது தான் என்னோட முடிவான முடிவு. அது எங்க அம்மாவுக்காக. அவங்களோட ஆத்ம சாந்திக்காக"
"அவங்கள உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ல?"
"ரொம்ப... அவங்க தான் எனக்கு எல்லாமே... உன்னை மாதிரியே..."
"என்னை ஏன் உங்களுக்கு இவ்வளவு பிடிச்சது?"
"என்கிட்ட பதிலே இல்லாத ஒரே கேள்வி இது தான். உன்னை முதல் முதல்ல பார்த்த போது, ஏதோ ஒரு விசித்திரமா ஒரு உணர்வை நான் முதல் தடவையா உணர்ந்தேன். உன்னோட விட்டுக் கொடுக்காத குணம், எனக்கு உன்கிட்ட ஒரு வித கிறக்கத்தையே ஏற்படுத்திச்சு. உன்கிட்ட நெருங்கி பழக பழக நீ எங்க அம்மாவோட சின்ன வர்ஷன்னு புரிஞ்சுகிட்டேன். அவ்வளவுதான்... அதுக்கு மேல உன்னை விட்டுக் கொடுக்க நான் தயாரா இல்ல"
"நான் உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷ்டசாலி"
"சென்னை வந்ததுக்கு பிறகு, ஒழுங்கா என்கூட ஆபீசுக்கு வர ரெடியாகு"
"என்ன சொல்றீங்க? நான் உங்க கூட ஆபீஸ்ல சேர போறேன்னா?" என்றாள் ஆச்சரியமாய்.
"பின்ன? ஏற்கனவே உனக்காக அங்க ஒரு சீட்டு ரெடி ஆயிடுச்சு"
"என்ன சீட்டு?"
"வேற என்ன? நீ தான் என்னோட பர்சனல் செகரட்டரி"
"நெஜமா தான் சொல்றீங்களா?"
"உன்னை வீட்டில விட்டுட்டு நான் ஆபீஸ்ல என்ன செய்றது?"
"என் கூடவே இருந்து உங்களுக்கு போர் அடிக்க போகுது"
அவளைப் பார்த்து முறைத்தான் மாமல்லன்.
"விளையாட்டுக்கு கூட அந்த மாதிரி பேசாத தென்றல்... நான் எந்த அளவுக்கு உன் கூடவே இருக்கணும்னு நினைக்கிறேன்னு உனக்கு தெரியாது..."
"சாரி, சாரி..." மீண்டும் அவளது நெஞ்சில் முகம் புதைத்தாள் தென்றல்.
தொடரும்...
குறிப்பு: அடுத்த பாகத்துடன் *இன்னார்க்கு இன்னாரென்று...* நிறைவு பெறுகிறது. தங்களது மேலான ஆதரவுக்கு நன்றிகள் ஆயிரம்🙏🏻🙏🏻.