42 ஷீலாவா...?
வடிவாம்பாள் பாட்டியும், கோதையும் திருமணத்திற்கு செய்ய வேண்டிய சடங்குகளை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, மாமல்லனுக்கென்று சடங்குகளை செய்ய யாரும் இல்லை என்ற பேச்சு எழுந்தது.
"காதம்பரி உயிரோட இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்...! இந்த கல்யாணம் நடக்கணும்னு அவ மனசார ஆசைப்பட்டா. அவ இந்த உலகத்துல இல்லங்கிறதை என்னால நம்பவே முடியல மா" என்று வருத்தப்பட்டார் கோதை.
"நீ சொல்றது உண்மை தான். நான் கூட, அவ நம்ம பிள்ளையோட வாழ்க்கையை கெடுத்துட்டான்னு ரொம்ப கோபப்பட்டேன். ஆனா, உண்மையிலேயே அவ ஒரு நல்ல ஆத்மா" என்றார் வடிவாம்பாள்.
"மாமல்லனுக்கு யாருமே இல்லையே, பேசாம அவருக்கு செய்ய வேண்டிய சடங்கையும் நம்மளே செஞ்சிட்டா என்ன?"
"நானும் அதைத்தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். நம்மளே செஞ்சிடலாம். அந்த பிள்ளைக்கும் மனசுக்கு நிறைவாய் இருக்கும்"
"சரிங்கம்மா. கோவிலுக்கு எடுத்துக்கிட்டு போக, வேண்டிய பொருளை எல்லாம் எடுத்து நான் பையில வைக்கிறேன். சாயங்காலம் மாமல்லனை இங்க வரச் சொல்லி பேசிடலாம்"
"என்ன்னனது? அப்படின்னா, நீயும் எங்க கூட கோவிலுக்கு வரணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா?"
"அப்படின்னா, கோவிலுக்கு நான் வர வேண்டாமா?"
"நீ இப்படி எல்லாம் சுத்திக்கிட்டு இருக்கிறது நல்லதில்ல. தென்றலோட கல்யாண நேரத்துல, உனக்கு உடம்புக்கு ஏதாவது ஆனா என்ன செய்றது? எல்லாருக்கும் மனசு கஷ்டம் தானே?"
"நீங்க சொல்றதும் சரி தான். நான் வீட்டிலேயே இருக்கேன்"
"நீ படுத்து ரெஸ்ட் எடு. நாங்க கோவிலுக்கு போயிட்டு சீக்கிரம் வந்துடுறோம்"
அவர்களின் பேச்சைக் கேட்டபடி முழுவதும் தயாரான நிலையில் அங்கு வந்த இளந்தென்றல்,
"ஆமாம்மா. நாங்க சீக்கிரம் வந்துடுறோம். நீங்க ரெஸ்ட் எடுங்க" என்றாள்.
பாட்டியும், இளந்தென்றலும், ஆட்டோவில் கோவிலுக்கு புறப்பட்டார்கள். அவர்கள் கோவிலை சென்றடைந்த போது, கோவிலில் ஏகப்பட்ட கூட்டம் இருந்ததை பார்த்து, அங்கு என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள ஆர்வமானார்கள். அங்கு மாமல்லன், வந்திருந்தவர்களுக்கு புடவைகளை தானம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் முகம் மலர்ந்தது. மிக நீண்ட வரிசையில் நின்று பெண்கள் அதை வாங்கிச் சென்றார்கள். வழக்கம் போல், அவனருகில் நின்று ஒவ்வொரு புடவையாய் மாமல்லனிடம் கொடுத்துக் கொண்டிருந்தான் பரஞ்சோதி. எதற்காக அவர்கள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவர்களிடம் வந்தார் வடிவாம்பாள்.
"என்ன தம்பி இதெல்லாம்?" என்றார் மாமல்லனை பார்த்து.
"ஒவ்வொரு வருஷமும் அம்மாவோட பிறந்தநாளுக்கு நான் புடவை தானம் கொடுக்கிறது வழக்கம். என் கல்யாணத்துக்கு முன்னாடி அதை செய்யணும்னு நினைச்சேன். அதான் செஞ்சுகிட்டு இருக்கேன் பாட்டி"
"கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி"
"இதை எல்லாருக்கும் கொடுக்க, நீயும் ஹெல்ப் பண்றியா தென்றல்?" என்றான் மாமல்லன்.
"இல்ல இல்ல... நீங்களே கொடுங்க" என்றாள் பாட்டியை பார்த்தபடி.
"உங்க கல்யாணத்துக்காக செய்றது. நீயும் சேர்ந்து செய்யணும்னு அவர் விரும்புறாரு. போய் அவருக்கு ஹெல்ப் பண்ணு. நான் போய் ஐயர் கிட்ட பூஜைக்கு தேவையான ஏற்பாட்டை எல்லாம் செய்ய சொல்றேன். அதுக்குள்ள நீயும் முடிச்சுட்டு வா."
அவளை தன்னருகில் இழுத்த வடிவாம்பாள்,
"உனக்கு விருப்பமில்லைன்னு அவர்கிட்ட காட்டிக்கிட்டே இருக்காத... புரிஞ்சுதா உனக்கு?" என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.
அவளிடம் புடவையை கொடுத்து *ஆரம்பி* என்பது போல் செய்கை செய்தான் மாமல்லன். சந்தோஷமாய் அதை அனைவருக்கும் வழங்க தொடங்கினாள் இளந்தென்றல். பரஞ்சோதியின் கண்கள் கோவில் வளாகத்தில் கூடியிருந்த கூட்டத்தை துழாவி கொண்டிருந்தன. அது இளந்தென்றலை பின் தொடரும் நபருக்கு, அவளை காயப்படுத்த மிகச் சிறந்த சந்தர்ப்பம் அல்லவா?
"நீ கோவிலுக்கு வரும் போது நானும் வருவேன்னு நான் சொன்னேன்ல?" என்று ரகசியமாய் கேட்டு சிரித்தான் மாமல்லன்.
"இது தற்செயலா நடந்தது தானே? நீங்க இங்க புடவை கொடுக்க வந்திருக்கீங்க..."
"உன்னை பார்க்க அது ஒரு சாக்கு..."
"என்னை பார்க்கவா இதையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?" என்றாள் நம்ப முடியாமல்.
"நீ தானே சொன்னே, நம்மளை பாட்டி சந்திக்க விட மாட்டாங்கன்னு... அப்புறம் எப்படி நான் இங்க வராம இருக்க முடியும்?"
"நான் இன்னைக்கு இங்க வர போறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"
"நீ தான் சொன்னியே, மாமல்லனுக்கு எல்லாமே சாத்தியம்னு..." என்று சிரித்தான் மாமல்லன்.
அவர்களை அப்படி சந்தோஷமாய் பார்த்த பரஞ்சோதியையும் அந்த சந்தோஷம் தொற்றிக் கொண்டது.
*இவர்களது சந்தோஷத்தை கெடுக்க நினைப்பது யார்? அதிலும் குறிப்பாய் இளந்தென்றலை குறி வைத்திருப்பது யார்? அவர்கள் ஏன் மாமல்லனை விட்டு விட்டார்கள்? இதை செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? ஆரம்பத்தில், மாமல்லனுடைய பாட்டியால் தான் பிரச்சனை வரும் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் அவர் முழுமனதாய் அவனது திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டார். அவர்களிடம் வாலாட்டிய ஷீலாவுக்கும் நல்ல பாடம் கற்பித்தாகிவிட்டது.* என்று எண்ணிய பரஞ்சோதியின் மனதை ஏதோ உறுத்தியது.
*ஷீலா???? ஏன் அந்த நபர் ஷீலாவாய் இருக்கக் கூடாது? அவள் இந்த அளவிற்கு போகக்கூடியவளா? ஏன் மாட்டாள்? மாமல்லனின் பாட்டிக்கு இளந்தென்றலின் மீது தவறான அபிப்பிராயம் ஏற்படட்டும் என்று அவரை மல்லைக்கு அனுப்பியதே அவள் தானே?* அவனது யோசனை, மாமலனின் குரலால் தடைபட்டது.
"பரா, நாங்க எல்லாத்தையும் குடுத்து முடிச்சிட்டோம். வேற யாராவது வந்தா அவங்களுக்கு நீ கொடுத்துடு" என்றான் மாமல்லன். சரி என்று தலையசைத்தான் பரஞ்ஜோதி.
மாமல்லனும், இளந்தென்றலும் கோவிலுக்கு உள்ளே சென்றார்கள்.
காலத்தை கடத்தாமல் தனது கைபேசியை எடுத்து தனது பிஏவான லீனாவுக்கு ஃபோன் செய்தான்.
"குட் மார்னிங் சார்"
"மிஸஸ் லீனா, நீங்க ஒரு வேலை செய்யணும்"
"வெயிட்டிங் சார்"
"எனக்கு ஷீலாவோட அட்ரஸ் இம்மீடியட்டா வேணும்"
"பத்து நிமிஷத்துல கொடுக்கிறேன் சார்"
அழைப்பை துண்டித்தான் பரஞ்ஜோதி.
வடிவாம்பாளிடம் வந்த மாமல்லன்,
"நாங்க புடவையை கொடுத்து முடிச்சிட்டோம் பாட்டி. நான் கிளம்பறேன்" என்றான், அவனுக்கு நன்றாகவே தெரியும் பாட்டி நிச்சயம் பூஜையை முடிக்காமல் அவனை அனுப்ப மாட்டார் என்று.
"என்ன தம்பி, இவ்வளவு தூரம் வந்துட்டு பூஜை செய்யும்போது நீங்க இல்லன்னா எப்படி? இது உங்க கல்யாணத்துக்காக நடக்கிற பூஜை தானே? எங்க கூட இருந்து முடிச்சுட்டு கிளம்புங்க"
"சரிங்க பாட்டி"
மாமல்லனும், இளந்தென்றலும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
"பூசாரி ஐயா, மாமல்லனும் இளந்தென்றலும், அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்க போறாங்க. அவங்க நல்லா இருக்கணும்னு நல்லபடியா பூஜை பண்ணி ஆசீர்வாதம் பண்ணுங்க" என்றார் பாட்டி.
"பேஷா செஞ்சிடலாம்..." என்றபடி அவர்களிடம் சங்கல்பம் பெற்ற பண்டிதர்,
"மாமல்லன், இளந்தென்றல் நாமதேயஸ்ய..." என்று மந்திரம் உச்சரித்தபடி உள்ளே சென்றார்.
தங்களது பெயர்கள் ஒன்றாய் உச்சரிக்க கேட்ட மாமல்லனும், இளந்தென்றலும், பரவசமடைந்தார்கள் என்று கூற தேவையில்லை. பூஜை நல்லபடியாய் முடிந்ததில் பாட்டிக்கு பரம திருப்தி.
இதற்கிடையில்,
ஷீலாவின் முகவரியை பரஞ்சோதிக்கு வழங்கினார் லீனா. அதைப் பெற்றுக் கொண்டு தமிழுக்கு ஃபோன் செய்தான் பரஞ்சோதி. அவனுடைய அழைப்புக்காக எந்நேரமும் காத்திருந்த தமிழ், முதல் மணியிலேயே அந்த அழைப்பை ஏற்றான். இளந்தென்றலை பின்தொடர்ந்து வந்த அவன், கோவிலுக்கு வெளியில் தான் இருந்தான் என்பது வேறு விஷயம்.
"சொல்லுங்க பரஞ்சோதி சார்"
"தமிழ், நான் ஒரு ஆள் மேல ரொம்ப ஸ்டராங்கா சந்தேகப்படுறேன். நான் உங்களுக்கு அனுப்புற அட்ரஸ்க்கு உங்க ஆட்களை அனுப்பி, அந்த ஆளைப் பத்தி விசாரிக்க சொல்லுங்க"
"கண்டிப்பா செய்யலாம் சார். நீங்க யாரை சந்தேக படுறீங்க?"
"அவ எங்க ஆஃபீஸ்ல தான் மாமல்லனுடைய பிஏ வா வேலை செஞ்சுகிட்டு இருந்தா. அவ, மிஸ்ஸஸ் மாமல்லன் ஆகணும்னு ரொம்பவே ட்ரை பண்ணா"
"அப்படின்னா, நம்ம சந்தேக லிஸ்ட்டுல அவளை தான் முதல்ல வைக்கணும்"
"அதே தான்... அவளோட ஹாஸ்டலுக்கு உங்க ஆளுங்களை அனுப்பி, இப்போ அவ எங்க இருக்கா, என்ன செஞ்சுகிட்டு இருக்கா, அப்படின்னு தெரிஞ்சுக்கங்க. ஒரு வேலை, அவ அங்கேயே இருந்தா, அவளை கண்காணிங்க"
"சரிங்க சார். அட்ரஸை சொல்லுங்க"
"ஷீலா, இந்திரா காந்தி வொர்கிங் உமன்ஸ் ஹாஸ்டல்"
"ஷீலாவா? இந்த பேரை சமீபத்தில் நான் எங்கேயோ கேட்டேனே... "
"எங்க கேட்டீங்க?" என்றான் ஆர்வமாய் பரஞ்சோதி.
"எங்க... எங்க... எங்க... ஆமாம் சார், ஷீலான்னு ஒரு பொண்ணை நான் ஏர்போர்ட்ல பார்த்தேன். நாங்க வந்த அதே ஃபிளைட்ல தான் அவளும் மதுரைக்கு வந்தா."
"நிஜமாத்தான் சொல்றீங்களா?"
"நிச்சயமா சொல்றேன் சார். ஏன்னா, அவ பர்தா போட்டுக்கிட்டு இருந்தா. அது தான் அவ மேல எனக்கு சந்தேகத்தை வரவச்சது. பிளைட்டுக்குள்ள கூட அவ பர்தாவை போட்டுக்கிட்டு தான் இருந்தா"
"அப்படின்னா அவ இப்ப மதுரையில தான் இருக்காளா?"
"ஒரு வேலை நீங்க சொல்ற ஷீலா இவ தான்னா, அவ மதுரையில தான் சார் இருக்கா"
"அவளை உங்களால் அடையாளம் சொல்ல முடியுமா?"
"நிச்சயமா முடியும் சார்"
"ரெண்டு நிமிஷத்துல உங்களை நான் மறுபடி கூப்பிடுறேன்" என்று அந்த அழைப்பை துண்டித்து விட்டு, மீண்டும் லீனாவுக்கு ஃபோன் செய்தான்.
"சொல்லுங்க சார்"
"எனக்கு ஷீலாவுடைய ஃபோட்டோ அர்ஜெண்டா வேணும். அது, அவளோட அப்ளிகேஷன் ஃபார்ம்ல இருக்கும்"
"அவ ஃபோட்டோ என்கிட்ட இருக்கு சார். நம்ம ஆபீஸ்ல நடந்த பார்ட்டில எடுத்த போட்டோவுல அவ இருக்கா. அதை நான் உங்களுக்கு அனுப்பட்டுமா சார்?"
"ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் அனுப்புங்க" என்று அழைப்பை துண்டித்து விட்டு காத்திருந்தான் பரஞ்ஜோதி.
கோவிலின் உள்ளே,
"தம்பி, சாயங்காலம் வீட்டுக்கு வார முடியுமா?" என்றார் பாட்டி.
"பாட்டி உங்களுக்கு தெரியாதா, அவர் எவ்வளவு பிஸியான ஆளுன்னு? எதுக்காக அவரை டிஸ்டர்ப் பண்றீங்க?" என்றாள் இளந்தென்றல் கிண்டலாய்.
அவளை பார்த்து முறைத்தான் மாமல்லன், இந்த பெண் சற்று ஓவராகத்தான் போகிறாள் என்பது போல.
"நான் வீட்டுக்கு வர்றது அவளுக்கு பிடிக்கல போல இருக்கு பாட்டி" என்றான் மாமல்லன்.
"நீ வாயை மூடிகிட்டு சும்மா இருக்க மாட்டியா? நாங்க ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் அவரை வர சொல்றோம். ( மாமல்லனின் பக்கம் திரும்பிய பாட்டி) நான் சொல்றதை நீங்க கேளுங்க தம்பி. இந்த பைத்தியக்காரியை நீங்க பெருசா எடுத்துக்காதீங்க" என்றார் பாட்டி.
"நீங்க சொல்றதும் சரிதான் பாட்டி. கல்யாணத்துக்கு பிறகு இந்த பொண்ணை நான் எப்படித்தான் சமாளிக்க போறேனோ தெரியல" என்றான் போலியான சோகத்துடன்.
"அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல தம்பி. ஒரு அறை விட்டா எல்லாம் சரியா போயிடும்" என்றார் பாட்டி.
"என்னை அடிக்க அவருக்கு சொல்லி தரீங்களா?" என்றாள் இளந்தென்றல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு.
"பின்ன என்ன? நான் உன்னை கவனிக்காம இருக்கேன்னு நினைக்காத. ஆரம்பத்துல, அவரு யாருன்னு தெரியாதப்போ அந்த பிள்ளை மேலே எரிஞ்சு விழுந்த... ஆனா இப்போ, அவரு காதம்பரி பிள்ளைன்னு தெரிஞ்ச பிறகும் அதையே செய்ற... அவர் உனக்கு புருஷனாக போறாருன்னு மறந்துடாதே"
மாமல்லனின் முன்பு, தலை குனிந்து வாயை பொத்தியபடி பவ்யமாய் நின்றாள் இளந்தென்றல்.
"பைத்தியக்காரி" என்று சிரித்தான் மாமல்லன்.
"உண்மையிலேயே இவ பைத்தியக்காரி தான். சாயங்காலம் வீட்டுக்கு வர மறந்துடாதீங்க" என்றார் பாட்டி.
"நிச்சயம் வறேன் பாட்டி. நான் உங்களை வீட்டில் விடச்சொல்லி பரஞ்சோதி கிட்ட சொல்றேன்" என்றான் மாமல்லன்.
ஷீலாவின் புகைப்படத்தை தமிழுக்கு அனுப்பி கொண்டிருந்த பரஞ்சோதியை அழைத்தான் மாமல்லன்.
"பாட்டியையும், தென்றலையும் அவங்க வீட்ல விட்டுட்டு வந்துடு" என்றான்.
"ஷ்யூர்... வாங்க பாட்டி என்றான் பரஞ்சோதி.
பாட்டிக்காக காரின் கதவை திறந்து, அவர் அமர உதவினான் மாமல்லன். பிறகு, காரின் பின் கதவை, இளந்தென்றலுக்காக திறந்து விட்டான். காரில் அமர்ந்து கொண்ட இளந்தென்றல், * வீட்டுக்கு வருவீர்கள் தானே?* என்பது போல், தன் புருவம் உயர்த்தினாள். *ஆம்* என்பது போல் கண்ணிமைத்தான் மாமல்லன். *நான் காத்திருப்பேன்* என்பது போல் புன்னகைத்தாள் இளந்தென்றல். அவர்களது செய்கைகளை கவனித்தபடி இருந்த பரஞ்சோதி, கண்ணாடி மூலம் அவளை பார்த்து இரும்ப, வெட்க புன்னகையுடன் தலைகுனிந்தாள் இளந்தென்றல். அங்கிருந்து காரை கிளப்பினான் பரஞ்ஜோதி. அப்பொழுது அவனுக்கு தமிழிடமிருந்து அழைப்பு வந்தது. தனது காதில் பொறுத்தியிருந்த ப்ளூடூத்தை ஆன் செய்து பேசினான்.
"சொல்லுங்க"
"சார் நான் ஏர்போர்ட்டில் பார்த்த அதே பொண்ணு தான் இது"
"நிஜமா தான் சொல்றீங்களா?"
" ஆமாம் சார் "
"இப்போ எங்க இருக்கீங்க?"
"உங்களை தான் சார் ஃபாலோ பண்ணி வந்துகிட்டு இருக்கேன். நீங்க தென்றல் மேடத்தை வீட்டில் விட தானே போறீங்க?"
"ஆமாம்" என்று அழைப்பை துண்டித்தான் பரஞ்ஜோதி.
இதற்கிடையில்,
ஷீலாவுக்கு ஃபோன் செய்தான் அழகன். அந்த அழைப்பை உடனே ஏற்ற ஷீலா,
"ஏதாவது தெரிஞ்சுதா?" என்றாள்
"இளந்தென்றல் வீட்டு லேண்ட் லைன் நம்பரை உனக்கு அனுப்பி இருக்கேன்"
"வெல்டன்... நான் சொன்ன வேலையை தொடர்ந்து செஞ்சுக்கிட்டே இரு" என்று குரோத புன்னகை பூத்தபடி அழைப்பை துண்டித்த ஷீலா,
*வரப்போற புயலை எதிர்கொள்ள தயாராகு மாமல்லா* என்று பேய் சிரிப்பு சிரித்தாள்.
தொடரும்...