35 சிறப்பான போர்வை...
"என்ன தேடிக்கிட்டு இருக்க?" என்றான் மாமல்லன்.
திடீரென்று மாமல்லனின் குரலை கேட்ட இளந்தென்றல் திடுக்கிட்டாள். பின்னால் திரும்பி அவனை பார்த்த அவள், கட்டிலை விட்டு அவசரமாய் கீழே இறங்கினாள். மாமல்லனின் முக பாவமோ கல்லாய் சமைந்திருந்தது. அவனது திடீர் வருகையால் தடுமாறிப் போனாள் இளந்தென்றல். மதியம் தானே வருவேன் என்று கூறிவிட்டு சென்றான்? பிறகு ஏன் சீக்கிரம் வந்து விட்டான்? ஒருவேளை, அவனுக்கு உடல்நிலை மீண்டும் சரியில்லாமல் போய்விட்டதோ? அல்லது மிகவும் களைப்பாக இருந்திருப்பானோ? மாமல்லன் தன்னிடம் கேட்ட கேள்விக்கு பொருத்தமாய் என்ன பொய்யை கூறி சமாளிக்கலாம் என்று யோசித்தாள் இளந்தென்றல்.
"இல்ல... நான் எதையும் தேடல. இந்த பெட் ஷீட்டை மாத்தணுமான்னு பாத்துகிட்டு இருந்தேன்"
அறையின் உள்ளே வந்த மாமல்லன்,
"அப்படியா? தொலைஞ்சு போன உன்னோட கொலுசு கிடைச்சிடுச்சா?" என்றான். அவனது பார்வை, அவள் முகத்தில் ஆழமாய் பதிந்திருந்தது.
"இல்ல... இன்னும் கிடைக்கல" என்றாள், புன்னகையை வலிய வரவழைத்துக் கொண்டு.
தனது பாக்கெட்டிலிருந்த அவளது கொலுசை வெளியே எடுத்து, அதை அவளிடம் காட்டினான் மாமல்லன்.
"இது உங்க கிட்ட கிடைச்சிடுச்சா? நல்லதா போச்சு..."
அதை அவனிடமிருந்து பெற இரண்டு அடி முன்னே எடுத்து வைத்தாள். ஆனால், அவனது கையை பின்னால் இழுத்துக் கொண்டான் மாமல்லன். அது அவளை குழப்பியது. அவனது அடுத்த வார்த்தைகள் அவள் முகத்தின் பொலிவை வடிவ செய்தன.
"இது எனக்கு என்னோட பெட்ல கிடைச்சது" அவனது குத்திட்டுப் பார்வை அவளது இதயத்தை பிளந்தது.
தனக்கு ஏற்பட்ட சங்கடத்தை விழுங்க முயன்றாள் இளந்தென்றல்.
"நான் உங்களை கவனிச்சுகிட்டப்போ அது கழண்டு விழுந்திருக்கும்னு நினைக்கிறேன்" என்றாள் தாழ்ந்த பார்வையுடன்.
தனது கைகளைக் கட்டிக் கொண்ட மாமல்லன்,
"நீ என்னை எப்படி கவனிச்சுக்கிட்டேன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?" என்றான்.
தடுமாறிப் போனாள் இளந்தென்றல். அவனிடமிருந்து தப்பிக்க வார்த்தைகளை தேடினாள்.
"நான் உன்கிட்ட ஏதோ கேட்டேன், தென்றல்"
"உங்க கையிலயும், கால்லையும் தைலம் தேச்சு விட்டேன்... கம்பளியால உங்களைப் போர்த்தி விட்டேன்" என்றாள் தட்டுத்தடுமாறி.
"எந்த கம்பளி?" என்றான் புருவத்தை உயர்த்தி.
"கபோர்டுல இருந்த கம்பளியால..." என்றாள் அலமாரியை சுட்டிக்காட்டி.
"எனக்கு முன்னாடி பேசவே தடுமாறிக்கிட்டு நிக்குற, இந்த ஸ்பெஷல் கம்பளியை பத்தி ஒன்னுமே சொல்லலையே...???"
அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள் இளந்தென்றல். தான் கேட்ட கேள்விக்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை மாமல்லனுக்கு. அது அவனை கோபத்தின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது. அவளது தோள்களைப் பற்றி தன்னை நோக்கி இழுத்த அவன், சிங்கமென கர்ஜித்தான்.
"சொல்லு தென்றல், என்னை சாவுல இருந்து நீ எப்படி காப்பாத்தின? ஏன் தென்றல்? உயிரை விட மேலான விஷயத்தை கொடுத்து என்னை நீ காப்பாத்தினது, தினம் தினம் என்னை கொஞ்சம் கொஞ்சமா கொல்ல தானா? என்னை எதுக்காக இப்படி நரகத்தில் தள்ற? அதை செய்யறதுல உனக்கே விருப்பம் இல்லைன்னு நல்லா தெரியுதே..."
கண்ணீர் ததும்பும் கண்களுடன் அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் இளந்தென்றல்.
"என்னை அந்தப் பார்வை பார்க்காத தென்றல். உன் மனசுல நீ எனக்காக என்ன ஃபீல் பண்றேன்னு உன் கண்ணே சொல்லுது... ஏன் இப்படி எல்லாம் செய்ற? எல்லாத்தையும் விட, உனக்கு நான் தான் முக்கியம்னு உனக்கே தோணும் போது, எது என்கிட்ட வர உன்னை தடுக்குது? பேசு தென்றல்..."
தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் இளந்தென்றல்.
"அழுறதை நிறுத்து தென்றல். உன்னோட அழுகை, உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்த போறதில்ல. நீ எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்"
"என் வாழ்க்கையில ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியல. எல்லாமே பின்னோக்கி போற மாதிரி இருக்கு. எனக்கு ஒண்ணுமே புரியல. நான் உங்களை ஏத்துக்கணும்னா, எதுக்காக என்னோட வாழ்க்கையில நிச்சயதார்த்தம்னு ஒன்னு நடக்கணும்? நான் அந்த நிச்சயதார்த்தத்துக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கணும்னா, நான் ஏன் என் வாழ்க்கையில உங்களை சந்திக்கணும்? அந்த பதில் இல்லாத கேள்விகளை நினைச்சு நினைச்சு நான் ரொம்ப சோர்ந்து போயிட்டேன். என்னால எந்த ஒரு நிச்சயமான முடிவையும் எடுக்க முடியல" தரையில் அமர்ந்து தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் இளந்தென்றல்.
ஒருபுறம், அவனுக்கு கோபமாக இருந்தாலும், மறுபுறம் அவளை பார்க்க பாவமாகவும் இருந்தது அவனுக்கு. முழங்காலிட்டு அவள் அருகில் அமர்ந்தான் மாமல்லன்.
"தென்றல், நம்ம வாழ்க்கையில நடக்கிற எல்லாமே, நம்ம ரெண்டு பேரையும் ஒருத்தருக்கு ஒருத்தர் பக்கத்துல கொண்டு வர தான் நடக்குதுன்னு ஏன் நீ நினைக்க மாட்டேங்குற? நீ எவ்வளவு தூரம் என்கிட்ட இருந்து விலகி போகணும்னு நினைக்கிறியோ, அவ்வளவு தூரம் விதி உன்னை எனக்கு நெருக்கமா கொண்டு வந்து சேக்குறது உனக்கு புரியலையா...?" என்றபடி அவள் தோளை தொட்டவன், அங்கு அவன் கையில் ஏதோ தட்டுப்பட, துணுக்குற்றான்.
தன் முகத்தை சுருக்கியபடி அதை தன் விரலால் லேசாய் தடவி, அது என்ன என்பதை அறிய முயன்றான். அதிர்ச்சியுடன் தன் தலையை உயர்த்திய தென்றல், தரையிலிருந்து எழ முயன்றாள். சட்டென்று அவளது தோளை இறுக்கமாய் பற்றி இழுத்த மாமல்லனுக்கு, அவள் தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த திருமாங்கல்யம் கண்ணில் பட்டது. அவர்கள் இருவரது நிலையுமே, விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. கண்ணீர் அருவியென பொழிந்த இளந்தென்றலை, என்றும் இல்லாத அளவிற்கு கோபத்துடன் முறைதான் மாமல்லன்.
"மிஸஸ். இளந்தென்றல் மாமல்லன்..."
தன் பெயரை புதிய பரிணாமத்தில் கேட்ட இளந்தென்றல் அழுகையை நிறுத்தினாள்.
"நான் கட்டின தாலியை நீ வெளியே காட்டிக்கவும் இல்ல... கழட்டவும் இல்ல"
"கழட்றதா? அது என்ன சாதாரண செயினா உறுத்துதுன்னு கழட்டி வைக்க?" என்றாள் வேதனையுடன்.
"அப்படின்னா, புருஷனை காப்பாத்தறோமுங்குற உணர்வோட தான் நீ என்னை காப்பாத்தியிருக்க..." என்ற பொழுது அவன் குரலில் சந்தோஷம் மேலோங்கியது.
பிறகு என்ன? எப்பொழுது தன்னுடைய அம்மாவின் மாங்கல்யத்தை அவளது கழுத்தில் அவன் அணிவித்தானோ, அப்பொழுதிலிருந்து, அவர்கள் உறவுமுறை மாறி தானே போய்விட்டது? கலாச்சார பின்னணியில் வளர்ந்த பெண்ணான இளந்தென்றல், எப்படி அதை கழட்ட துணிவாள்? திருமணம் என்பது, *புனிதமான உறவு* என்று கூறி வளர்க்கப்பட்டவள் அல்லவா அவள்? எப்பொழுதோ நடந்த நிச்சயதார்த்தத்திற்கு அவள் அவ்வளவு மதிக்குப்பளிப்பவள் என்றால், திருமணத்தைப் பற்றி கேட்கவா வேண்டும்?
"என்னோட புருஷன் இல்லாத ஒருத்தரை நான் தொடுவேன்னு நீங்க நினைச்சீங்களா?" என்றாள் கண்ணீர் சிந்திய படி.
அவளது முகத்தை கையால் பற்றிய அவன்,
"இல்ல... நிச்சயமா இல்ல... அதனால தான் உன்னோட கொலுசு என்னோட படுக்கையில் கிடைச்ச போது கூட நான் உன் மேல சந்தேகப்படல. ஆனா எதுக்காக தாலியை மறைச்சு வச்ச?"
"இந்த விஷயத்துல உங்க நிலைப்பாடு என்னன்னு தெரிஞ்சுக்க நினைச்சேன். நான் தாலியை மறைச்சி வைச்சா, நீங்க இந்த விஷயத்தை உடனே ஒரு முடிவுக்கு கொண்டு வருவீங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்க எல்லாத்தையும் போட்டு உடைக்க ஆரம்பிச்சிட்டீங்க"
*ஐயோ* என்றானது மாமல்லனுக்கு.
"ஆனா நான், நீ இந்த உறவை ஏத்துக்கலன்னு நினச்சேன். இன்னும் கூட, நடந்து முடிஞ்ச நிச்சயதார்த்தத்தையே நினைச்சுக்கிட்டு இருக்கிறதா தப்பா நினைச்சுக்கிட்டேன். தென்றல், எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரடியா பேசலாம். நான் ஒத்துக்கிறேன், ஆரம்பத்துல, உனக்கு எது சரின்னு முடிவு பண்றதுக்கு கஷ்டமா இருந்திருக்கும். ஆனா இனிமே அப்படி கிடையாது. ஏன்னா, இப்போ நான் உன் புருஷன். அதைத் தவிர வேற எத பத்தியும் தயவு செய்து நினைக்காத. இன்னொரு விஷயத்தையும் நல்லா ஞாபகம் வச்சுக்கோ. நமக்குள்ள இவ்வளவு தூரம் நடந்ததுக்கு பிறகு, நீ என் கிட்ட இருந்து போக முடியாது. நான் உன்னை போக விடவும் மாட்டேன். எப்பாடுபட்டாவது உன்னை என்கிட்ட நிறுத்திக்க தான் பார்ப்பேன்"
"நீங்க என் கழுத்துல தாலி கட்டின அந்த நிமிஷமே நான் என்னோட நிச்சயதார்த்தத்தை விட்டு வெளியே வந்துட்டேன். ஆனா..."
"மறுபடியும்... மீனாட்சி, காமாட்சினு ஆரம்பிக்காத... உன்னோட மீனாட்சி அம்மனே நம்ம ரெண்டு பேரும் ஒன்னா இருக்கணும்னு தான் விரும்பி இதெல்லாம் செய்றாங்க. அதைத் தவிர வேற எதை பற்றியும் யோசிக்காத. ப்ளீஸ்..."
அவளை இழுத்து மென்மையாய் அணைத்துக் கொண்டு,
"நீ என்னோட வைஃப். எனக்கு மட்டும் தான் சொந்தம்..." என்றான்.
கண்களை மூடி அவன் நெஞ்சில் சாய்ந்து நின்றாள் இளந்தென்றல்.
"சரி, உன்னோட ஃபியான்ஸியை பத்தி என்கிட்ட சொல்லு" என்றான் மாமல்லன்.
"எனக்கு தெரியாது" என்றாள் தயக்கத்துடன்.
"தென்றல், நான் உனக்கு ப்ராமிஸ் பண்றேன். நான் நிச்சயம் அவனை எதுவும் செய்ய மாட்டேன். அவனுக்கு பொறுமையா விஷயத்தை எடுத்து சொல்லி புரிய வைப்பேன்"
"நிஜமா எனக்கு தெரியாதுங்க"
"தெரியாதுன்னா என்ன அர்த்தம்?"
"அவரோட அம்மாவும், எங்க அம்மாவும் ஃபிரண்ட்ஸ். அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் அவங்களுக்கு மருமகளா வரணும்னு அவங்க ஆசைப்பட்டாங்க. அதனால எனக்கு ஒரு செயினை போட்டு நான் தான் அவங்க மருமகள்னு சொன்னாங்க. ஆனா அதுக்கப்புறம் நான் அவங்களை பார்க்கவே இல்ல. அவங்க எங்க வீட்டுக்கு வரவும் இல்ல."
"பைத்தியமா நீ? இப்படிப்பட்ட ஒரு நிச்சயதார்த்தத்தை பிடிச்சுக்கிட்டு தான் இவ்வளவு நாளா தொங்கிக்கிட்டு இருந்தியா? அது எப்போ நடந்தது?" என்றான் எரிச்சலுடன்.
"அப்போ எனக்கு எட்டு வயசு"
"என்ன பைத்தியக்கார பொண்ணு நீ?"
"நான் என்ன செய்யறது...? நான் அப்படித்தான் வளர்ந்தேன். என்னை பொறுத்தவரை நம்ம வாழ்க்கையில நடக்கிற எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குன்னு நான் நம்புறேன்"
"அப்படியா? அப்படின்னா, உருப்படாத உன்னோடு நிச்சயதார்த்தத்துக்கு என்ன காரணம்னு நீயே சொல்லு"
"நமக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து நானும் அதைத் தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். எங்க அம்மாவுடைய ஃபிரண்டு எவ்வளவு நல்லவங்க தெரியுமா? அவங்க மட்டும் திரும்பி வந்து கேட்டா, நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?"
கோபத்தில் பல்லை கடித்தான் மாமல்லன்.
"அப்படி அவங்க வந்தா, அவங்களுக்கு நான் பதில் சொல்றேன். நீ சொல்ற மாதிரி அவங்க ரொம்ப நல்லவங்களா இருந்தா, ஒரு சின்ன பெண்ணோட மனசை எப்படி கெடுத்து வச்சிருக்காங்கன்னு அவங்களே புரிஞ்சுக்குவாங்க"
"நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல" என்றாள் மெல்லிய குரலில்.
"ஆமா மா... பெரிய விஷயத்தை செஞ்சு புருஷனை காப்பாத்துற அளவுக்கு நீ ரொம்ப பெரிய பொண்ணு தான்..." என்றான்.
உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு தலை குனிந்தாள் இளந்தென்றல்.
"சரி அதை விடு, உனக்கு நிச்சயம் பண்ணாங்களே, அந்த *பைத்தியக்காரன்* பேராவது தெரியுமா உனக்கு?"
"தெரியும்... அவரோட போட்டோ இருக்கிற செயின் கூட என்கிட்ட இருக்கு"
தன் அறையை நோக்கி ஓடினாள் இளந்தென்றல். அவளை பின்தொடர்ந்து சென்றான் மாமல்லன். தன் அறையின் அலமாரியில் இருந்த ஒரு சிறிய டப்பாவை வெளியில் எடுத்த இளந்தென்றல், அதிலிருந்த தங்கச்சங்கிலியை எடுத்து மாமல்லனிடம் கொடுத்தாள். அதை திறந்து, அதில் இருந்த புகைப்படத்தை பார்த்த மாமல்லன் திகைத்து நின்றான். பேசும் திறனை முழுதாய் இழந்து, தன் எதிரில் நின்ற இளந்தென்றலை நம்ப முடியாமல் பார்த்தான் மாமல்லன்.
அவனது முக மாற்றத்தை பார்த்த இளந்தென்றல் குழம்பினாள்.
"என்ன ஆச்சுங்க? உங்களுக்கு இவரை தெரியுமா?"
ஆமாம் என்று மென்று முழுங்கினான் மாமல்லன். இளந்தென்றல் திகிலடைந்தாள்.
"தாயே மீனாட்சி... ஏன் என்னை இப்படி சோதிக்கிறிங்க?" என்று புலம்பினாள் இளந்தென்றல்.
"இவன் பேரு உனக்கு தெரியாதா?" என்றான் மாமல்லன் அமைதியான முகத்துடன்.
"முன்னா" என்ற இளந்தென்றலை மலைப்புடன் பார்த்து நின்றான் மாமல்லன்.
தொடரும்...