25 எதிர்பாராத சுவாரசியம்
சிறிது நேரத்திற்கு பிறகு /
எம் கே அலுவலகம்
அலுவலகத்தில் அமர்ந்திருந்த பரஞ்சோதிக்கு மாமல்லனிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை உடனே ஏற்றான் பரஞ்ஜோதி.
"சொல்லு மல்லா..."
"ஷீலா, அவ புத்தியை காட்டிட்டா. இளந்தென்றல் என் வீட்டில் இருக்கிற விஷயத்தை, அவ தான் பாட்டிக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கா"
"அப்படியா? உனக்கு எப்படி தெரியும்?"
"பாட்டியே என்கிட்ட சொன்னாங்க. யாரோ ஒரு பொண்ணு தான் அவங்களுக்கு போன் பண்ணி சொன்னாளாம்"
"பாட்டி ஆசிரமத்தில் இருக்கிற விஷயம் ஷீலா ஒருத்திக்கு தான் தெரியும்"
"அது மட்டும் இல்ல... இளந்தென்றல் என் வீட்டில் இருக்கிற விஷயமும் அவளுக்கு மட்டும் தான் தெரியும்..."
"இப்போ நான் என்ன செய்யணும்?"
"அவளை வேலையை விட்டு அனுப்பிடு"
"டன்..."
அழைப்பை துண்டித்தான் பரஞ்ஜோதி.
மல்லையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், கரை கடந்து சென்றது ஷீலாவிற்கு. விஷயத்தை பாட்டியிடம் பற்றவைத்த பிறகு, இளந்தென்றலுக்கு எதிராய், மிகப்பெரிய நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருந்தாள் அவள். அவள் மல்லையில் கால் வைப்பதை கூட விரும்பாத மாமல்லன், இளந்தென்றலை மட்டும் அங்கு அமர வைத்து சீராட்டிக் கொண்டிருக்கிறான். எவ்வளவு பெரிய முட்டாள் அவன்...!
*இப்போ நீ என்ன செய்றான்னு பாக்குறேன், மாமல்லா... உன்னோட பாட்டி எந்த அளவுக்கு *பழமை விரும்பின்னு* எனக்கு நல்லா தெரியும். என்ன சொல்லி நீ அவங்களை சமாதான படுத்துறேன்னு நான் பாக்குறேன். அந்த நாட்டுப்புறத்து பொண்ண, நிச்சயம் அவங்க கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ள போறாங்க* என்று மனதிற்குள் என்னை சிலாகித்தாள் ஷீலா.
தனது கற்பனை உலகத்தில் பாடித்திரிந்தாள் ஷீலா. முழுமையாய் அவள் அதில் லயித்திருந்ததால், அங்கு வந்த பரஞ்சோதியை அவள் கவனிக்கவில்லை. அவனைப் பார்த்தவுடன், நிமிர்ந்து அமர்ந்து, வேலையில் மும்முரமாய் இருப்பது போல் பாசாங்கு செய்தாள் அவள்.
"ஷீலா, உங்களோட டிரான்ஸ்ஃபர் ஆர்டரை குடுங்க"
"ஏன் அதை திருப்பி கேட்கிறீங்க? மல்லன் சார் அதை கேன்சல் பண்ணிட்டாரா?" என்றாள் ஆர்வமாக.
"ஆமாம். மல்லன் அதை கேன்சல் தான் பண்ணிட்டான்" என்று அவன் கூறியவுடன் ஷீலாவின் முகம் பிரகாசித்தது.
"அதுக்கு பதிலா, வேற ஒரு ஆர்டரை கொடுத்திருக்கான்"
அவளிடம் ஒரு உரையை நீட்டினான். அந்த உரையை அவசரமாய் பிரித்து, அதிலிருந்த கடிதத்தை படித்தாள் ஷீலா. அவளது முகம் இருண்டு போனது. அது அவளை வேலையை விட்டு தூக்கி விட்டதற்கான ஆணை. அவளுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.
"என்ன பரஞ்ஜோதி இது? எதுக்காக மல்லன் இப்படி எல்லாம் செய்றாரு? அவருக்கு உண்மையா உழைச்ச ஒர்க்கருக்கு அவர் காட்ற நன்றி இது தானா?" சீறினாள் ஷீலா.
"தன்னோட ஒர்க்கரை எப்படி நடத்தணும்னு மல்லனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்ல. அது அவனுக்கு நல்லாவே தெரியும்"
" சரியான காரணத்தை சொல்ற வரைக்கும் நான் இந்த வேலையை விட்டு போக மாட்டேன்" என்றாள் கோபம் குறையாமல்.
"சினம் கொண்ட சிங்கத்தை சீண்டி பாக்காதே ஷீலா. உன்னோட நல்ல நேரம், இந்த விஷயத்தை மல்லனே நேரடியா ஹேண்டில் பண்ணாம, என் மூலமா பண்றான். உன் மரியாதை முழுசா கெட்டு போறதுக்கு முன்னாடி இங்கிருந்து கிளம்பு" என்றான் பரஞ்சோதி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்.
தனது கைப்பையை எடுத்துக் கொண்டு, விடுவிடுவென கதவை நோக்கி நடந்தாள் ஷீலா.
"பை தி வே... எங்க வேலையை நீ ரொம்ப சுலபமாகிட்ட" என்ற பரஞ்சோதியை குழப்பத்துடன் ஏறிட்டாள் ஷீலா.
"மல்லனோட பாட்டிக்கு, இளந்தென்றலை ரொம்ப பிடிச்சிடுச்சு. ஏன்னு தெரியுமா?"
பதில் கூறாமல் மென்று விழுங்கினாள் ஷீலா.
"இளந்தென்றல், மத்த பொண்ணுங்களை மாதிரி அரைகுறை உடை உடுத்திக்கிட்டு, தலைகனம் பிடிச்சு அலையாம இருந்தது தான் காரணம். பாட்டியை மல்லைக்கு வரவச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்று அவன் நமுட்டு சிரிப்பு சிரிக்க, திகில் அடைந்த முகத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் ஷீலா.
அவள் செய்த காரியம், மாமல்லனுக்கு தெரிந்து விட்டது என்பது தான் அவளுடைய திகிலுக்கு காரணம். பரஞ்சோதி கூறியது உண்மை தான். இந்த விஷயத்தை மாமல்லன் நேரடியாக கையாண்டு இருந்தால் அவள் கதி என்னவாகி இருக்குமோ...!
மல்லை
திதிக்காண பூஜையை துவங்கினார் பண்டிதர். மாமல்லனின் பெற்றோரை காண வேண்டும் என்ற ஆவல், இளந்தென்றலின் மனதில் மேலோங்கியது... குறிப்பாய், அவன் ஈடில்லா அன்பு கொண்டுள்ள அவனது அம்மாவை காண வேண்டும் என்று காத்திருந்தாள்.
சமையல் அறையிலிருந்து, மெல்ல எட்டிப் பார்த்து, பாட்டி தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். அங்கு வைக்கப்பட்டிருந்த மாமல்லனின் பெற்றோரின் புகைப்படத்தில் இருந்த அவனது அம்மாவை பார்த்து, சற்று நேரம் மெய் மறந்தாள். அவர் அழகாகவும், இளமையாகவும் இருந்தார். அவரை எங்கோ பார்த்தது போல் இருந்தது இளந்தென்றலுக்கு. அவர், யாரோ ஒரு பழைய நடிகையை போல் இருப்பதாய் எண்ணினாள் அவள்.
அப்பொழுது, அன்னபூரணி அவள் பக்கம் திரும்ப, வெடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்ட இளந்தென்றல், பதட்டத்துடன் தூணுக்குப் பின்னால் மறைந்து நின்றாள். காலையில், பாட்டியிடம் இசக்கி வாங்கிய திட்டு, அவளுக்கு நினைவுக்கு வந்தது. அதனால் சமையல் அறையை விட்டு அவள் வெளியே வரவில்லை.
மாலை
அன்று மாலையே அங்கிருந்து புறப்பட தயாரானார் அன்னபூரணி. அவர் அங்கு செய்ய வேண்டியது தான் ஏதும் இல்லையே...! இளந்தென்றலை தன்னிடம் வருமாறு சைகை செய்தார். அவர் என்ன கூறப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள, அவரது அருகில் நின்று அவரை பார்த்துக் கொண்டிருந்தான் மாமல்லன்.
"நான் கிளம்புறேன்" என்றார்.
"சரிங்க பாட்டி" என்றாள் இளந்தென்றல்.
"வரப்போற நாள்ல, உன் மனசுல ஏற்பட்டிருக்கிற குழப்பத்தை தெளிய வைக்க முயற்சி பண்ணு" என்றார் முகத்தில் எந்த பாவமும் இன்றி பாட்டி.
அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்று புரியவில்லை இளந்தென்றலுக்கு.
"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல பாட்டி" என்றாள் தயக்கத்துடன்.
"நீ நேத்து என்கிட்ட சொன்ன விஷயத்தைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கேன்... மாமல்லன், நல்லவனா கெட்டவனான்னு உன்னால ஒரு முடிவுக்கு வர முடியலன்னு நேத்து நீ சொன்ன இல்ல?"
இளந்தென்றலின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, கிண்டலாய் சிரித்த மாமல்லன்,
"இது எப்போ நடந்தது பாட்டி? என் வீட்டுல நிறைய சுவாரசியமான விஷயம் நடக்கிறது எனக்கு தெரியாம போச்சே..." என்றான்.
இளந்தென்றலை பதற்றம் தொற்றிக் கொண்டது. பாட்டி, மாமல்லனின் முன்னால், இப்படி குட்டை போட்டு உடைப்பார் என்பதை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.
"உன்னைப் பத்தி இன்னும் நிறைய விஷயம் சொன்னா... ஆனா அவ்வளவு ஒன்னும் மோசமா சொல்லல..." என்று புன்னகைத்தார்.
சங்கடத்தின் உச்சிக்கே சென்றாள் இளந்தென்றல்.
"ஒன்னும் பிரச்சனை இல்லை பாட்டி, உங்களுக்கு ஃபோன் பண்ணும் போது, எல்லாத்தையும் உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிறேன்" என்றான் மாமல்லன் இதழோர புன்னகையோடு.
"கண்டிப்பா... நீ இல்லாத நேரத்துல, உன்னை பத்தி மத்தவங்க என்ன பேசுறாங்கன்னு நீ நிச்சயம் தெரிஞ்சுக்கணும்" என்று சிரித்தார் பாட்டி.
"ஆமாம்மாம்..."
"நான் கிளம்புறேன் இளந்தென்றல். எல்லாத்தையும் கவனிச்சுக்கோ" என்றார் பாட்டி.
"சரிங்க பாட்டி" என்று தலையை குனிந்து கொண்டாள் இளந்தென்றல்.
மாமல்லனை பார்த்த பாட்டி,
"நான் கிளம்பறதுக்கு முன்னாடி, என்கிட்ட ஆசீர்வாதம் வாங்க மாட்டியா?" என்றார்.
தலை குனிந்த படி நின்றிருந்த இளந்தென்றல், பாட்டி அவளைத் தான் அவரிடம் இருந்து ஆசி பெற சொல்கிறார் என்றெண்ணி, குனிந்து அவரது காலை தொட்டாள். அதேநேரம் மாமல்லனும் அவரிடம் ஆசி பெற குனிந்தான். இளந்தென்றலும் தன்னுடன் சேர்ந்து ஆசி பெற்றதை ஆச்சரியத்துடன் பார்த்தான் அவன். இளந்தென்றலோ, தர்ம சங்கடத்திற்கு ஆளானால். ஏனென்றால், தம்பதிகள் தான் ஒன்றாய் சேர்ந்து ஆசி பெறுவது வழக்கம்.
"சாரி பாட்டி. நான் என்ன நினைச்சேன்னா..." என்று தடுமாறினாள்.
"நான் மல்லனை தான் என்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க சொல்லி சொன்னேன். ஆனா, நான் உன்னை சொன்னதா நீ நினைச்சுகிட்ட... சரி தானே?"
ஆமாம் என்று சங்கடத்துடன் தலையசைத்தாள் இளந்தென்றல்.
"பரவாயில்ல விடு... சில சமயங்களில் இப்படிப்பட்ட எதிர்பாராத சுவாரசியங்கள் நடக்கிறதுண்டு" என்று அவர் புன்னகைக்க, *என்னடா இது சோதனை?* என்றானது இளந்தென்றலுக்கு.
அவர்களிடமிருந்து விடை பெற்று சென்றார் பாட்டி. தனது கார் ஓட்டுநரான சாரதியிடம், பாட்டியை ஆசிரமத்தில் கொண்டு விட்டு வரும்படி கட்டளையிட்டான் மாமல்லன்.
இளந்தென்றல் தன் அறையை நோக்கி செல்வதை பார்த்த மாமல்லன், வேகமாய் ஓடிச் சென்று, அவள் முன் நின்று, அவளை வழிமறித்தான். அவன் அப்படி செய்வதை பார்த்த இளந்தென்றல், திடுக்கிட்டு பின்னோக்கி நகர்ந்தாள்.
"நடக்கிறதுக்கு எல்லாம் ஒரு காரணம் இருக்குன்னு நீ தான் ஆணித்தரமா நம்புவியே... அப்படின்னா, இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து, தம்பதிகள் மாதிரி பாட்டிகிட்ட எதுக்காக ஒன்னா ஆசீர்வாதம் வாங்கினோம்? சொல்லு தென்றல்..." அவளது வழியிலேயே சென்று, தன்னிலை விட்டு வழுவாமல் இருக்கும் அவளது மனதை மாற்ற எண்ணினான் மாமல்லன்.
அவனைப் பிடித்து தள்ளிவிட்டு, தன் அறைக்கு ஓடிச் சென்று, மாமல்லன் உள்ளே நுழைவதற்கு முன், கதவை சாத்தி தாளிட்டு கொண்டாள் இளந்தென்றல்.
கண்களை மூடி கதவில் சாய்ந்து நின்றாள். ஆம்... எது அவர்களை ஒன்றாய் ஆசி பெறச் செய்தது? அவளுக்கே பதில் தெரியாத போது, அவளால் மாமல்லனுக்கு என்ன பதில் சொல்லி விட முடியும்? மாமல்லனை சந்தித்த நாளிலிருந்து, எதற்காக அவளது வாழ்க்கையில் இப்படிபட்ட நிகழுவுகள் நடந்து அவளை குழப்பிக் கொண்டிருக்கிறது? முன்னாவை சீக்கிரம் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவள் கேதார கௌரி விரதம் இருந்த அன்று, அவளுக்கு தண்ணீர் கொடுத்து, மாமல்லன் அவளுடைய விரதத்தை முடித்தான்... அவனை முதன் முதலாய் கோவிலில் சந்தித்த போது, அம்மனுக்கு அர்ச்சனை செய்த குங்குமம் அவர்கள் இருவர் மீதும் கொட்டிக்கொண்டது... அம்மனுடைய ஆசிர்வாதம் அவளுக்கு கிடைத்ததாய் பூசாரி கூறினார்... இன்று பாட்டியிடம் ஒன்றாய் ஆசிர்வாதம் வேறு பெற்றார்கள்... இதெல்லாம் ஏன் நிகழ்கிறது என்று புரியாமல் தவித்தாள் இளந்தென்றல்.
விதியின் விளையாட்டை அவ்வளவு எளிதாய் யாரேனும் புரிந்து கொண்டு விட முடியுமா என்ன?
தொடரும்...