24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
அன்று முழுவதும் இளந்தென்றலை கவனித்தபடி இருந்தார் அன்னபூரணி. அவளோ, தான் உண்மையிலேயே வேலைக்காரி தான் என்பதை நிரூபிப்பதற்காக படாத பாடு பட்டு கொண்டிருந்தாள். அதை தானும் நம்பி விட்டதாய் காட்டிக்கொண்டார் அன்னபூரணி. தேவைப்பட்டாலே ஒழிய, அவர் அவளிடம் பேசவில்லை. அதன் பிறகு, அவர் தன்னிடம் ஒன்றும் கேட்காததால், இளந்தென்றலும் நிம்மதி அடைந்தாள். அவரது மிடுக்கான சுபாவம், இளந்தென்றலின் வயிற்றில் புளியை கரைத்தது.
அப்பொழுது சமையலறைக்கு வந்தார் அன்னபூரணி. அவரைப் பார்த்த இளந்தென்றல் பதட்டமானாள். இவர் எதற்காக இங்கு வந்திருக்கிறார்? ஏதாவது கேட்கப் போகிறாரோ?
"எனக்கு தேவையானதை நானே சமைச்சுக்கிறேன்" என்றார் அன்னபூரணி.
"நான் உங்களுக்கு சமைச்சு கொடுக்கிறேன் பாட்டி" என்றாள் இளந்தென்றல் தயங்கியபடி.
"என்னோட உணவு பழக்கத்தை பத்தி உனக்கு என்ன தெரியும்?"
அதைப் பற்றி ஒன்றும் தெரியாத இளந்தென்றல், அமைதியாய் நின்றாள்.
"நான் சாப்பிடற மாதிரி சமைக்க உன்னால முடியாது" என்றார் உறுதியான குரலில்.
"நீங்க எப்படி சாப்பிடுவீங்கன்னு சொன்னா, நான் முயற்சி பண்ணி பார்க்கிறேன் பாட்டி"
"நான் என் சாப்பாட்டில், வெங்காயம், பூண்டு கலந்துக்க மாட்டேன்... குளிர்ச்சியான காய்கறிகள் சேர்த்துக்க மாட்டேன்... புளிப்பு, காரம், கிடையாது... அரை உப்பு தான் சேர்த்துக்குவேன். எண்ணெய் கூடவே கூடாது..."
இளந்தென்றலுக்கு தலைசுற்றியது. இப்படி கூட சமைக்க முடியும் என்று அவள் இதற்கு முன் கேட்டதே இல்லை. ஆனால், ஏன் முயற்சித்துப் பார்க்கக் கூடாது என்று தோன்றியது அவளுக்கு. அவளை ஏளனமாய் பார்த்தார் அன்னபூரணி.
"உன்னால சமைக்க முடியும்ன்னு, இன்னமும் நீ நம்புறியா?" என்றார் எகத்தாளம் கொப்பளிக்க.
"முயற்சி பண்றேன், பாட்டி" என்றாள்.
"சரி, நடக்கட்டும். ஆனா, ஒரு விஷயத்தை உன் மனசுல வச்சுக்கோ. ஒரு வேளை, எனக்கு பிடிக்கலன்னா, நீ சமைச்ச சப்பாட்டை நான் தொடவே மாட்டேன்" என்று அவளுக்கு ஒரு *செக்* வைத்தார் அன்னபூரணி.
சரி என்று தயக்கத்துடன் இளந்தென்றல் தலையசைக்க,
சமையலறையை விட்டு அகன்றார் அன்னபூரணி.
*வெங்காயம் இல்ல, பூண்டு இல்ல, காரமில்ல, புளிப்பு இல்ல, எண்ணெய் இல்ல, இவ்வளவும் இல்லாம அந்த சாப்பாடு எப்படி நல்லா இருக்கும் தெரியலையே* இன்று உள்ளுக்குள் புலம்பினாள் இளந்தென்றல்.
இறுதியாய், பருப்பு தாளித்து, கத்தரிக்காய் வதக்கல், புடலங்காய் கூட்டு, புதினா துவையல், செய்வது என முடிவு செய்தாள். சமைத்து முடித்து, ருசித்துப் பார்த்தவளுக்கு, அதில் *சுவை* என்று கூற ஒன்றுமே இல்லை. அவளுக்கு *ஐயோ* என்றானது. இசக்கியை சுவைத்து பார்க்க சொல்லலாம் என்று எண்ணி,
"இசக்கி அண்ணா, இந்த சாப்பாடு எப்படி இருக்குனு கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்த்து சொல்றீங்களா.... ஏதாவது மாத்த முடியும்னா மாத்திடறேன்"
அதை கேட்ட இசக்கி பதட்டமானார்.
"நம்ம யாராவது அவங்க சாப்பாட்டை டேஸ்ட் பண்ணினோம்னு தெரிஞ்சதுன்னா, பாட்டிக்கு ரொம்ப கோபம் வந்துடும்" என்றார்.
இளந்தென்றலின் கண்கள் பாப்கான் பொறிவது போல் பெரிதானது. அடக்கடவுளே, பாட்டிக்கு அவள் உணவை சுவைத்த விஷயம் தெரிந்து விட்டால் என்ன ஆவது? சுவைத்து பார்க்காமல் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
"பாட்டி டைனிங் டேபிளுக்கு வந்துட்டாங்க. எல்லாத்தையும் எடுத்துட்டு போங்க" என்றார் இசக்கி.
கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டு, அனைத்தையும் எடுத்து வந்து உணவு மேஜையின் மீது வைத்தாள் இளந்தென்றல்.
பாட்டிக்கு சமைத்த அதே உணவை, சற்று காரம், உப்பு தூக்கலாக மாமல்லனுக்காக சமைத்து வைத்திருந்தாள். பாட்டி சாப்பிட தொடங்கினார். அவரது முக பாவத்தை வைத்து ஏதாவது தெரிந்து கொள்ள முடிகிறதா என்று அவரது முகத்தையே பார்த்தபடியே நின்றிருந்தாள் இளந்தென்றல். ஆனால், அவரது முகத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. சாப்பிட்டு முடித்து, தனது அறையை நோக்கிச் சென்றார் அன்னபூரணி. அதற்கு என்ன அர்த்தம்? அவர் ஒன்றுமே கூற வில்லையே...
அவள் பதட்டமாய் இருந்ததை பார்த்த மாமல்லன்,
"இவ்வளவு பதட்டத்தோட அப்படி என்ன யோசிச்சுகிட்டு இருக்க?" என்றான்.
"நான் சமைச்ச சாப்பாடு பாட்டிக்கு பிடிச்சதா இல்லையானு தெரியல..."
"அவங்களுக்கு பிடிச்சிருந்தது" என்றான்.
"ஆனா, அவங்க அதைப் பத்தி ஒன்றுமே சொல்லலையே... "
"அவங்களுக்கு பிடிச்சிருந்ததுனால தான், அதை பத்தி அவங்க ஒன்னுமே சொல்லல"
"அப்படின்னா என்ன அர்த்தம்?"
"அவங்களுக்கு பிடிக்கலைன்னா, அவங்க அதை சாப்பிட்டிருக்க மாட்டாங்க"
நிம்மதி பெருமூச்சு விட்டாள் இளந்தென்றல். அவளிடம் ஒரு தட்டை எடுத்து நீட்டி,
"நீயும் உக்காந்து சாப்பிடு" என்றான்.
வேண்டாம் என்று அவசரமாய் தலையசைத்தாள் இளந்தென்றல்.
"ஏன்?" என்றான் முகத்தை சுருக்கி
"நான் இங்க உக்காந்து சாப்பிடுறதை பார்ட்டி பார்த்தா, என்ன ஆகும்?"
"அவங்க பார்த்தா இப்ப என்ன?"
"உங்களுக்கு புரியல... "
"அவங்க வர மாட்டாங்க"
"இல்ல, இல்ல, நீங்க சாப்பிட்டு முடிச்சதுக்கு பிறகு நான் கிச்சன்ல சாப்பிட்டுக்குறேன்"
தனது தட்டை கையில் எடுத்துக்கொண்டு,
"சரி வா, ரெண்டு பேரும் கிச்சன்லையே சாப்பிடலாம்" என்றான் மாமல்லன்.
அதைக் கேட்டு அதிர்ந்தாள் இளந்தென்றல்.
"ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க? உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நீங்க கிச்சன்ல என் கூட சேர்ந்து சாப்பிடுறதை பார்த்தா பாட்டி என்ன நினைப்பாங்க?"
"என்ன நினைப்பாங்க?" என்றான் இதழில் புன்னகைத் தவழ.
"அவங்க நம்ம மேல சந்தேகப்பட வாய்ப்பு இருக்கு"
"எப்படி?"
"ஐயோ... நீங்க என் பின்னாடி சுத்துறீங்கனு அவங்க நினைப்பாங்க"
"அதுல சந்தேகப்பட என்ன இருக்கு? அது சுத்தமான உண்மை தானே?"
"ஏன் புரிஞ்சுக்காம இப்படி பேசுறீங்க?"
"அவங்க வர மாட்டாங்கன்னு நான் தான் சொல்றேனே. சாப்பிட்டு முடிச்சிட்டு ரூமுக்கு போயிட்டா, அவங்க மறுபடியும் வெளியில வர மாட்டாங்க. அது தான் அவர்களுடைய ரெகுலர் ரொட்டீன். அப்படியே அவங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டாலும், இசக்கி அண்ணனைத் தான் கூப்பிடுவாங்க. அதனால அமைதியா உக்காந்து சாப்பிடு."
தயங்கியபடி அமர்ந்து, அன்னபூரணியின் அறைக்குச் செல்லும் பாதையை மீண்டும் மீண்டும் பார்த்தபடி சாப்பிட துவங்கினாள் இளந்தென்றல். அவள் தேவையில்லாமல் பயப்படுவதாய் நினைத்தான் மாமல்லன். இளந்தென்றலோ, பாட்டிக்கு இரவு உணவாய் என்ன சமைப்பது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அவர் கூறிய வழி வகைகளை பின்பற்றி, மீண்டும் அவள் ஏதாவது சமைத்தாக வேண்டும்.
அலுவலகம் செல்ல வேண்டிய அவசர வேலை இருந்ததால், தன் அறைக்கு சென்று தயாரானான் மாமல்லன்.
மாலை
என்ன சமைப்பது என்று புரியாமல், சமையலறையில் விழித்துக் கொண்டு நின்றாள் இளந்தென்றல். மாமல்லன் சர்க்கரை நோயாளி என்பதால், இரவில் அவன் சப்பாத்தி சாப்பிடுவது வழக்கம். ஆனால் பாட்டி சப்பாத்தி சாப்பிடுவாரா என்று அவளுக்கு தெரியவில்லை. நேரடியாக அவரிடம் கேட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அது தான் சரி என்று அவரது அறைக்கு செல்ல திரும்பியவள், மாமல்லன் வருவதை கவனிக்காமல், அவன் மீது மோதிக்கொண்டாள். தடுமாற்றத்துடன் அவளைப் பற்றி நிறுத்தினான் மாமல்லன்.
"சாரி" என்று அவனது முகத்தை ஏறிட்டவள், அவன் நெற்றியில் இருந்த திருநீற்றை பார்த்து ஆச்சரியப்பட்டாள். திருநீறு அணிந்த நெற்றியுடன் பவ்யமாய் இருந்தான் மாமல்லன். இது தான் முதல் முறை அவன் நெற்றியில் திருச்சாம்பல் அணிவது. அவனது பாட்டி தான் அதை அவனுக்கு இட்டிருக்க வேண்டும். அவள் தன் முகத்தை பார்த்துக் கொண்டு நிற்பதை கண்ட மாமல்லன் புன்னகை புரிந்தான். அவனிடமிருந்து விலகி நின்றாள் இளந்தென்றல் சங்கடத்துடன். மாமல்லன் எப்பொழுது அலுவலகத்தில் இருந்து வந்தான் என்று தெரியவில்லை அவளுக்கு.
"பாட்டிக்கு டின்னருக்கு எதுவும் சமைக்க வேண்டாம். அவங்க நைட்ல ஒன்னும் சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு பால் மட்டும் போதும்" என்றான்.
அவனது முகத்தை பார்க்காமல் சரி என்று தலையசைத்தாள் இளந்தென்றல். சிரித்தபடி சமையல் அறையை விட்டு வெளியேறினான் மாமல்லன். நிம்மதி பெருமூச்சு விட்டாள் இளந்தென்றல். இப்பொழுதெல்லாம், திடீரென ஏற்படும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் அவளை தடுமாறத்தான் செய்கிறது.
மறுநாள்
திவசத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் அன்னபூரணியே செய்தார். திவச காரியங்களை குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது அவருடைய பிடிவாதமான கணக்கு. அதனால் யாரிடம் இருந்தும் எந்த உதவியும் அவர் கோர வில்லை. விலக்கி வைத்த குத்து விளக்குகளை கொண்டு வந்து வைத்த இசக்கி, அதில் எண்ணெய் ஊற்ற முயன்றார். அப்போது அன்னபூரணியின் அதட்டலான குரல் அவரை தடுத்தது.
"என்ன செய்ற நீ? உன்னை யார் இதையெல்லாம் செய்ய சொன்னது? இந்த குடும்பத்தை சேர்ந்தவங்க மட்டும் தான் இந்த வேலை எல்லாம் செய்யணும்னு கூட தெரியாதா உனக்கு?"
"மன்னிச்சிடுங்க பாட்டி... "
அவசரமாய் அந்த இடம் விட்டு சென்றார் இசக்கி. அன்னபூரணியின் கோபத்தை பார்த்த இளந்தென்றல் மென்று விழுங்கினாள். கடவுள் நம்பிக்கையே இல்லாத மாமல்லனுக்கு, இவ்வளவு அனுஷ்டனங்களை அனுசரிக்கும் பாட்டி இருக்கிறார் என்பது அவளுக்கு ஆச்சரியம் தந்தது. அவர் முன் செல்லாமல் இருப்பது நல்லது என்று தோன்றியது அவளுக்கு.
தன் அறைக்குச் சென்ற அன்னபூரணி, தன் மகனும், மருமகளும் அவர்கள் திருமணம் செய்து கொண்ட புதிதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, பூஜையில் வைப்பதற்காக அலமாரியில் இருந்து வெளியில் எடுத்தார். அவரிடம் அந்த ஒரு புகைப்படம் தான் இருந்தது. அந்த காலகட்டத்தில் எல்லாம், யாரும், இப்பொழுது எடுப்பது போல் செல்ஃபிகள் எடுத்து குவித்து கொண்டிருக்கவில்லை. அதற்கென்று பிரத்தியேகமாய் போட்டோ ஸ்டுடியோவிற்கு சென்று தான் புகைப்படம் எடுக்கும் வழக்கம் இருந்தது. காதம்பரி இறப்பதற்கு முன், அவரது கணவர், தான் செய்து வந்த தொழிலில் மும்மரமாகிவிட்டதாலும், அவரது கவனமும் வேறு பெண்ணிடம் சென்று விட்டதாலும், தன் மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் எண்ணம் அவருக்கு ஏற்பட வாய்ப்பில்லை அல்லவா? அதனால் சிறிய வயது காதம்பரியின் புகைப்படத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டுபிடிக்கும் வாய்ப்பும் நமது இளந்தென்றலுக்கு இருக்கப் போவதில்லை...!
அந்த புகைப்படத்தை பார்த்த அன்னபூரணியின் கண்கள் கலங்கின.
"உன் பிள்ளையை இந்த உலகத்துல தனியா விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்தது காதம்பரி? உன் புள்ள மேல உயிரையே வச்சிருந்தியே... இப்போ பாரு அவன் அன்புக்காக எப்படி ஏங்குறான்னு... நீ ஏதோ ஒரு ரூபத்துல அவன் கூட தான் இருக்கேன்னு அவன் இன்னும் நம்பிகிட்டு இருக்கான். அதை நானும் நம்புறேன். அவன் ஆசைப்பட்டது அவனுக்கு கிடைக்க வச்சி அவனை சந்தோஷமா வாழ வை..." என்று கண்களை துடைத்துக் கொண்டார் அன்னபூரணி.
அவர் பேசுவதை கேட்டபடி அங்கு நின்றிருந்தான் மாமல்லன். அவனைப் பார்த்து புன்னகைத்த அன்னபூரணி,
"அரைகுறையா துணி உடுத்துன எவளாவது ஒருத்தியை கூட்டிக்கிட்டு வந்து, இவளைத் தான் எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிடுவியோனு நான் பயந்துகிட்டு இருந்தேன். ஆனா நீ உண்மையிலேயே அசத்திட்ட மல்லா" என்றார் அன்னபூரணி.
அதைக் கேட்ட மாமல்லனின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.
"உங்களுக்கு அவளை பிடிச்சிருக்கா பாட்டி?" என்றான்.
"இப்படிப்பட்ட நல்ல பெண்ணை யாருக்காவது பிடிக்காம போகுமா? உன்னோட சந்தோஷத்தை விட வேற எதுவுமே எனக்கு பெருசில்ல..." சற்றே நிறுத்தியவர்,
"நான் வேணும்னா அவ கிட்ட பேசி பார்க்கட்டுமா?" என்றார்.
"வேண்டாம் பாட்டி... அது அவளுக்கு சங்கடத்தை தான் கொடுக்கும். நீங்க, அவ சொன்னதை நம்பின மாதிரியே நடந்துக்கோங்க..."
"ம்ம்ம்ம்..."
"ஆனா, அதுக்காக அவளை வேலைக்காரி மாதிரி நடத்தணும்னு அவசியமில்ல" என்று சிரித்தான்.
"அப்படின்னா, இந்த வீட்டு மருமகளை மாதிரி நடத்தட்டுமா?" என்றார் பாட்டி சிரித்தபடி.
"அந்த நாள் சீக்கிரமே வரும்... அது சரி, இளந்தென்றல் இங்க இருக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?"
"யாரோ ஒரு பொண்ணு தான் எனக்கு ஃபோன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொன்னா"
மாமல்லன் கோபத்தில் பல்லை கடித்தான். அந்த பெண் ஷீலா தான் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் மாமல்லனிடமிருந்து கையெழுத்தை பெற்று, ஆசிரமத்திற்கு தேவையான நிதி உதவியை அனுப்பி வைப்பது அவளுடைய வேலை. பாட்டி ஆசிரமத்தில் இருப்பது, பரஞ்சோதியையும், அவளையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த வேலையை அவள் தான் செய்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே சந்தேகித்தான் மாமல்லன். இப்பொழுது அது ஊர்ஜிதம் ஆகிவிட்டது.
தொடரும்...