17 வெறும் காகிதம் தானே?
அன்று, இளந்தென்றலின் அம்மாவுக்கு அறுவை சிகிச்சை என்பதால், அவள் மருத்துவமனைக்கு ஃபோன் செய்து, தன் பாட்டி வடிவம்பாளுடன் பேசினாள். பாட்டியின் குரல் மிகவும் உற்சாகமாய் ஒலித்தது.
"என் காசியம்மா... எப்படி டி இருக்க ராஜாத்தி?"
"நான் நல்லா இருக்கேன் பாட்டி. அம்மா எப்படி இருக்காங்க? அவங்களுடைய ஆபரேஷன் எப்படி நடந்தது?"
"அவளுக்கு என்னடி குறை? மகாராணி மாதிரி கவனிச்சிக்கிறாங்க அவளை..."
"நெஜமாவா பாட்டி?" என்றாள் ஆர்வமாய்.
"ஆமாம், டாக்டருங்க எல்லாம் அவ்வளவு அருமையானவங்க. உங்க அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ண டாக்டர், லண்டன்ல இருந்து வந்தவராம். அதுவும், உங்க அம்மாவுக்காகவே அவர் இங்க வந்திருக்கிறதா நர்ஸ் பிள்ளைங்க சொன்னாங்க. அது ஏன்னு உனக்கு தெரியுமா?"
"ஏன் பாட்டி?"
"நீ வேலை பார்த்துகிட்டு இருக்கிற வீட்டோட முதலாளி தான் இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சிருக்காராம்" என்று பாட்டி கூறியதை கேட்டவுடன் ஆடிப் போனாள் இளந்தென்றல்.
"உங்க அம்மாவுக்கு தேவையான எல்லாத்தையும் அவர் தான் கவனிச்சிக்கிறாரு. உங்க அம்மா ரொம்ப குடுத்து வச்சவ. இல்லன்னா அவளுக்கு இப்படிப்பட்ட ஒரு கவனிப்பு கிடைக்குமா? பக்கத்துல இருந்து, உங்க அம்மாவை பார்த்துக்க முடியலையேன்னு நீ வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்ல. உண்மையை சொல்லப் போனா, அவளுக்கு யாரோட உதவியுமே தேவையில்ல. இந்த ஆஸ்பத்திரி பிள்ளைங்க அவளை அப்படி கவனிச்சுக்கிறாங்க"
எதையுமே யோசிக்க முடியாதவளாய் கல்லாய் சமைந்து நின்றாள் இளந்தென்றல்.
"காசி அம்மா... "
"என்...ன பாட்டி...?"
"உன் முதலாளிக்கு நம்ம ரொம்ப கடன் பட்டிருக்கோம். அம்மாவை இழக்கிற வலி எவ்வளவு கொடுமையானதுன்னு அந்த பிள்ளைக்கு தெரிஞ்சிருக்கு. அந்தப் பிள்ளையையும், அவங்க அம்மாவையும் நல்லா கவனிச்சுக்க டா கண்ணு... அந்தப் பிள்ளை செய்ற உதவிக்கெல்லாம் நம்ம என்ன கைமாறு செய்யப் போறோம்னு தெரியல. அவருக்கு கொடுக்கிற அளவுக்கு நம்ம கிட்ட என்ன இருக்கு? அவருக்கு எது சந்தோஷத்தை தருதோ அதை செஞ்சு கொடு. ஏன்னா, நம்மள மாதிரி ஏழைங்க கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு வசதியை உங்க அம்மாவுக்கு அவர் செஞ்சு கொடுத்திருக்காரு"
"சரிங்க பாட்டி" என்ற அவளது குரல் கம்மியது.
"நம்ம ஆஸ்பத்திரியில கட்டின பணத்தைக் கூட நம்ம கிட்டயே திருப்பி கொடுத்துட்டாங்க. அவரே உங்க அம்மாவோட ஆபரேஷனுக்கு தேவையான மொத்த பணத்தையும் கட்டிட்டாராம். அவர் கொடுத்த பணம் அப்படியே தான் இருக்கு. அதனால, அந்த பணத்தை வச்சு, உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு நாங்க யோசிச்சுக்கிட்டு இருக்கோம்"
"ஆனா பாட்டி... "
"இங்க பாரு, நான் நல்ல தனமா சொல்றேன். மறுபடியும், உன்னோட அர்த்தம் இல்லாத பேச்சை ஆரம்பிக்காத. நம்ம ஜோசியர் உன்னோட ஜாதகத்தை பார்த்துட்டு என்ன சொன்னார்னு தெரியுமா?"
எதுவும் கேட்காமல் அமைதியாய் கேட்டாள் இளந்தென்றல்.
"இன்னும் ஆறு மாசத்துல உனக்கு கல்யாணம் நடந்திடுமாம். நீ எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கிற உன்னோட ராஜகுமாரன், இந்த ஆறு மாசத்துல வந்துடுவான்னு நினைக்கிறியா? பதினைஞ்சு வருஷமா வராதவன் இனிமேலா வரப்போறான்?"
"அப்படின்னா எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம், உண்மை இல்லைன்னு சொல்றீங்களா?"
"ஆமாம். அது நிச்சயதார்த்தமே இல்ல. அவங்க அம்மா உன் கழுத்துல ஒரு செயினை போட்டு நீ தான் என் மருமகள்னு சொன்னா, அதுக்கு பேர் நிச்சயதார்த்தமா? நீ எதை நிச்சயதார்த்தம்னு சொல்றியோ, அதை பத்தி அவளோட பிள்ளைக்கு தெரியுமா தெரியாதான்னு கூட நமக்கு தெரியல. நம்ம வாழ்க்கையில சில விஷயங்கள் ஏன் நடக்குதுன்னு நம்மால புரிஞ்சுக்க முடியாது. இதெல்லாம் நம்ம முன் ஜென்மத்து கருமமா இருக்கும். அதனால தான், சிலர் நம்ம வாழ்க்கையில வந்துட்டு போறாங்க. இல்லாத ஒரு விஷயத்தை, இருக்கிறதா நினைச்சு உன்னை நீயே குழப்பிக்காத"
"எல்லாமே காரணத்தோட நடக்கிறதா தான் நான் நம்புறேன் பாட்டி"
"உன்ன சொல்லி தப்பு இல்லடி... உங்க அம்மாவையும் அவளுடைய ஃப்ரெண்டையும் சொல்லணும்... இதுக்காக தான், சின்ன பிள்ளைகளுக்கு முன்னாடி பெரிய விஷயங்களை பேச கூடாதுன்னு சொல்லி வச்சாங்க..." என்றார் பாட்டி காட்டமாக.
"அவங்க என் முன்னாடி எதுவும் பேசல பாட்டி"
"ஆமாம், ஆமாம், நீ தான் அவங்க பேசுறதை ஒளிஞ்சிருந்து ஒட்டு கேட்ட..."
"நான் சீக்கிரமே அவரை சந்திப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"
"ஓ அப்படியா? அவனை எங்க தேடி கண்டுபிடிக்க போற? அவன் யாருன்னு கூட நமக்கு தெரியாது. உன் கழுத்துல செயினை போட்டுட்டு போனதுக்கு பிறகு, அவங்க அம்மா ஒரு தடவை கூட நம்ம வீட்டுக்கு வரவே இல்ல. அவ இன்னும் உயிரோட இருக்காளா இல்லையான்னு கூட நமக்கு தெரியல..."
"பாட்டி தயவு செய்து இப்படி எல்லாம் பேசாதீங்க... அவங்க ரொம்ப நல்லவங்க" என்றாள் தொண்டை அடைக்க.
"நல்லவங்களோ, கெட்டவங்களோ, ஒரு நாள் எல்லாரும் போய் சேர தான் டி செய்யணும்"
"பாட்டி, தயவு செய்து அந்த விஷயத்தை இதோட விடுங்க. அதை பத்தி நான் பேச விரும்பல. எது நடக்கணும்னு கடவுள் முடிவு பண்ணட்டும்"
"அந்த கடவுள் தான் உன் மனசை மாத்தக்கூடிய ஒருத்தரை உன்கிட்ட அனுப்பி வைக்கணும்"
அழைப்பை துண்டித்தார் பாட்டி. அவர் கூறுவது ஒன்றும் தவறில்லை. ஆனால், அவளது மனம், ஏன் *அவர் வரமாட்டார்* என்று நம்ப மறுக்கிறது?
அந்த பிரச்சனையை விட்டு விட்டு மாமல்லனை பற்றி நினைக்கத் துவங்கினாள் இளந்தென்றல். ஏற்கனவே அவர்களுக்கு போதுமான பணத்தை வழங்கியிருந்தான் மாமல்லன். அத்தோடு அவன் நிறுத்தி இருக்க முடியும். ஆனால் அதற்கு மேல் எதற்காக அவன் இதையெல்லாம் செய்கிறான்?
அவளது பார்வை அம்மன் விக்ரகத்தின் மீது விழுந்தது.
"தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு என்ன செய்யறதுன்னு புரியாம இருந்தது. அதனால தான் உங்க மேல கோபப்பட்டுட்டேன். நான் ராட்சசன்னு யாரை நினைச்சுகிட்டு இருந்தேனோ, அவரால தான் இன்னைக்கு அம்மா நல்லா இருக்காங்க. இப்போ நான் என்ன செய்றது? அவரோட விருப்பத்துக்கு மரியாதை கொடுத்து அவரை என்னால ஏத்துக்க முடியாது. அதே நேரம், அவர் என்னோட அம்மாவுக்கு செஞ்சதை என்னால நினைச்சு பார்க்காம இருக்கவும் முடியாது. அவருக்கு நிச்சயம் நான் நன்றி சொல்லியே ஆகணும். ஆனா அதுக்கு முன்னாடி நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க. நான் உங்ககிட்ட அப்படி நடந்திருக்க கூடாது" என்று கடவுளிடம் மானசிக மன்னிப்பு கோறினாள் இளந்தென்றல்.
சிறிது நேரத்திற்கு பிறகு
மாமல்லனின் அறை கதவை தட்டினாள் இளந்தென்றல், அது திறந்தே தான் இருந்தது என்றாலும். அவளை அங்கு பார்த்த மாமல்லன் ஆச்சரியமடைந்தான்.
"நீங்க ஒன்னும் எங்க அம்மாவுக்கு எந்த சலுகையும் கொடுக்க வேண்டியதில்ல" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
குறுக்கே பேசாமல், அவள் முடிக்கட்டும் என்று அமைதியாக நின்றான் மாமல்லன்.
"எங்க அம்மாவை என்னால கவனிச்சுக்க முடியும். நீங்க ஒன்னும் எங்க அம்மாவுக்காக பணம் செலவு செய்ய வேண்டியதில்ல. லண்டன் டாக்டர்... ஃபர்ஸ்ட் கிளாஸ் ட்ரீட்மென்ட்... இதெல்லாம் என்ன? நீங்க நினைக்கிறது தப்பு..."
"நான் எதுவுமே நினைக்கல... நிச்சயமா, நீ நினைக்கிற மாதிரி எதுவும் நினைக்கல..."
"அப்புறம் எதுக்காக இதையெல்லாம் செய்றீங்க?"
"நீயும் உங்க அம்மாவை இழந்திட கூடாதுன்னு தான்... ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். அது பணத்தைவிட ரொம்ப மதிப்பு வாய்ந்தது. நீ தானே சொன்ன இது வெறும் பேப்பர் தான்னு...? உங்க அம்மாவை விட, அந்த பேப்பருக்கு அதிகமான மரியாதையை கொடுத்து, நீ தான் இப்போ என்னை ஆச்சரியப்படுத்துற. சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி உன்னுடைய எண்ணத்தை மாத்திக்காத தென்றல். உன்னுடைய பாயிண்ட்ல ஸ்ட்ராங்கா நில்லு"
அவள் கூறிய வார்த்தையை வைத்தே அவளை அவன் மடக்கிவிட்டதால், பேச்சிழந்து நின்றாள் தென்றல்.
"ஆமாம். நான் தான் லண்டனில் இருந்து ஒரு ஸ்பெஷலிஸ்ட்டை வர வச்சேன்... ஃபர்ஸ்ட் கிளாஸ் ட்ரீட்மென்டுக்கு ஏற்பாடு செஞ்சேன். ஏன்னா, நீ இங்க செலவு பண்ணிக்கிட்டு இருக்கிற உன்னோட பொன்னான *நேரம்* உங்க அம்மாவுக்கு சொந்தமானது. அதுக்கு உரிய மரியாதை கிடைக்கணும். அதைத்தான் நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். உங்க அம்மா கூட இருந்து அவங்களை கவனிச்சிக்க முடியலையேன்னு நீ வருத்தப்படக் கூடாது. எல்லாத்துக்கும் மேல, இன்னொரு காரணமும் இருக்கு. பாட்டி வயசானவங்க. தனியா எப்படி எல்லாத்தையும் சமாளிப்பாங்க? அதனால தான் செஞ்சேன். சிம்பிள்" அதீத அமைதியுடன் கூறி முடித்தான் மாமல்லன்.
*சிம்பிளா?* அவன் செய்ததெல்லாம் சிம்பிளான விஷயமா? அவளது மனதை மாமல்லன் தொட்டு விட்டான் என்று தான் கூற வேண்டும். அவள் எண்ணியது போல் அவன் *வில்லன்* அல்ல. அவன் வில்லனாக இருந்திருந்தால், எப்படி அடுத்தவர்களுடைய உணர்வுகளுக்கு இந்த அளவுக்கு மரியாதை கொடுக்க முடியும்? இவள் தான் அவனைப் பற்றி அப்படியெல்லாம் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறாள் போல தெரிகிறது. எதையோ யோசித்தபடி தயங்கிக் கொண்டு நின்றாள் இளந்தென்றல். அதை கவனித்த மாமல்லன்,
"இன்னும் சண்டை போட வேண்டியது ஏதாவது மிச்சம் இருக்கா?" என்றான் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல். ஆனால் இளந்தென்றல்,
"தேங்க்ஸ்" என்ற போது, அவனால் ஆச்சரிய உணர்வை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
திடீரென்று அவளுக்கு என்னானது என்று எண்ணி முகம் சுருக்கினான்.
"ஹாஸ்பிடல்ல நடக்கிற விஷயத்தை எல்லாம் பாட்டி சொன்னாங்க. அம்மா நல்லா இருக்காங்க... உங்களால. தேங்க்யூ"
புன்னகையுடன் அவள் கூறிய நன்றியை ஏற்றுக்கொண்டான் மாமல்லன். ஆனால், அவளுடைய செய்கை அவனை வெகுவாய் குழப்பியது. சிறிது நேரத்திற்கு முன்பு தான், அவளுடைய அம்மாவிற்கு உதவிய அதே காரணத்திற்காக அவனிடம் சண்டையிட்டாள். இப்பொழுது அதற்காக அவனுக்கு நன்றியும் கூறுகிறாள். அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது?
"அம்மாவை ட்ரீட் பண்ண டாக்டர்கிட்ட நான் பேசலாமா?"
"தாராளமா பேசலாம். ஆனா அவருக்கு தமிழ் தெரியாது"
"சரி"
தனது கைபேசியை எடுத்து, அந்த மருத்துவருக்கு ஃபோன் செய்தான். அவர் மாமல்லனின் அழைப்பை ஏற்றார்.
"ஹலோ டாக்டர் நான் மாமல்லன் பேசுறேன்."
"....."
"நான் நல்லா இருக்கேன் டாக்டர். கோதை மேடம் எப்படி இருக்காங்க?"
"....."
"தேங்க்யூ டாக்டர். அவங்களோட டாட்டர் உங்க கிட்ட பேசணுமாம். பேசுறீங்களா?"
தன் கைபேசியை இளந்தென்றலிடம் நீட்டினான். அவள் பேச துவங்கினாள்... அவளது அம்மாவின் உடல் நலத்தை பற்றி விசாரித்தாள்... வெகு தரமான ஆங்கிலத்தில்... மாமல்லனுக்கு வியப்பளித்து. அவளது ஆங்கிலப் புலமையை கேட்ட மாமல்லன் திகைத்து நின்றான். அவள் இவ்வளவு நேர்த்தியாய் ஆங்கிலம் பேசக் கூடியவள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. கண்ணிமைக்காமல் அவளை பார்த்துக் கொண்டு நின்றான். பேசி முடித்துவிட்டு அவனது கைபேசியை அவனிடமே திரும்ப கொடுத்தாள்.
"உனக்கு இவ்வளவு நல்லா இங்கிலீஷ் பேச தெரியுமா? ஆனா, நீ பேசி நான் பார்த்ததே இல்லையே?"
"டாக்டர் கிட்ட இங்கிலிஷ்ல பேசினேன், ஏன்னா, அவருக்கு தமிழ் தெரியாது. இதுக்கு முன்னாடி பேசுற சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கல. அதனால நீங்க பார்த்திருக்க முடியாது"
"இவ்வளவு நல்லா இங்கிலீஷ் தெரிஞ்சு வச்சுக்கிட்டு ஏன் பேசாம இருக்க?"
"நமக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிருக்குனா, அதை வெளியில காட்டி தான் தீரணுமா? இங்கிலீஷ் ஒரு லாங்குவேஜ்... நாலெட்ஜ் இல்ல. எப்ப தேவையோ அப்போ மட்டும் பேசலாமே..." என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் இளந்தென்றல்.
அவனுடைய ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. இந்தப் பெண் உண்மையிலேயே மிகவும் வித்தியாசமானவள். தினம், தினம் அவன் ரசிக்கத்தக்க விதத்தில் ஏதாவது ஒரு காரணத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறாள். பொதுவாகவே, எல்லோரும் தங்கள் ஆங்கில புலமையை மற்றவரிடம் காட்டிக்கொள்ள தான் விரும்புவார்கள். ஆனால், இந்தப் பெண் மட்டும் எப்போதும் மாறுபட்டு நிற்கிறாள். இவள் எப்பொழுதுமே பொதுவானவர்கள் *பட்டியலில்* சேர்வதேயில்லை... தனித்தே நிற்கிறாள்... தனித்தன்மை வாய்ந்தவளாய்...!
தொடரும்...