10 நீதான் எனக்கு எல்லாம்
இளந்தென்றலுக்கு கிடைத்திருந்த வேலையைப் பற்றி தெரிந்த போது, முதலில் சற்று தயங்கினார் வடிவாம்பாள் பாட்டி. ஆனால், எப்படியோ போராடி அவரை சம்மதிக்க வைத்து விட்டாள் இளந்தென்றல். இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. அடுக்கடுக்காய் பல காரணங்களை அடுக்கிய பிறகு தான், அவளுக்கு பாட்டியிடம் அனுமதி கிடைத்தது. இறுதியில், வேறு எந்த வழியும் இல்லாததால், அரைமனதாய் ஒப்புக்கொண்டார் பாட்டி. தன் மகளை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் அவருக்கு. இது கோதையின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாக இல்லாமல் இருந்திருந்தால், அவர் நிச்சயம் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். கட்டுப்பெட்டியான குடும்பத்தின் வழி வந்த அவர்கள், திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணை, வேலைக்காக வெளியூர் அனுப்பி வைப்பது என்பது நினைத்து பார்க்காத ஒன்று. பாட்டிக்கு திருப்தி அளித்த ஒரே விஷயம், இந்த வேலை வந்தது, பஞ்சாயத்து தலைவர் ரங்கநாதன் மூலமாக என்பது தான். அவர் பொறுப்பேற்றுக் கொண்டதால், சம்மதித்தார் பாட்டி என்று தான் கூற வேண்டும்.
ரங்கநாதனும் தான் கூறியது போலவே, கோதையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே மொத்தமாய் பெற்றுத் தந்தார். பாட்டியும், தென்றலும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். கோதையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான முதல் கட்ட பணத்தையும் செலுத்தினார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான சிறுநீரகத்திற்காக காத்திருக்கும் படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். கோதையுடன் மருத்துவமனையிலேயே தங்கி அவரை கவனித்துக் கொண்டார் வடிவாம்பாள் பாட்டி.
.......
தனது துணிமணிகளை பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தாள் தென்றல். அவளிடம் கொடுக்கப்பட்ட விமான டிக்கெட்டை பெருமையுடன் பார்த்தாள் அவள். தானும் கூட ஒரு நாள் விமானத்தில் செல்வோம் என்பதை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஒருபுறம் சந்தோஷம் இருந்தாலும், மறுபுறம் அவளுக்கு பதட்டமாகவும் இருந்தது. இதுவரை அவள் மதுரையை விட்டு வெளியே சென்றதே இல்லை. ஆனால் இப்பொழுது, தனக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு புதிய நகருக்கு செல்கிறாள். புதிய கலாச்சாரத்தை சேர்ந்த மக்களுடன் அவள் கலந்து பழகியாக வேண்டும். ஒரு வயதான நோயாளியை கவனித்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் அவளுக்கு மிகவும் அன்னியப் பட்ட விஷயங்கள். அவள் இந்த பழக்கமில்லாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லாவிட்டால், அவள் தனது அம்மாவை இழக்க நேரிடும். இந்த வேலையை செய்வதில் அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. குறைந்தபட்சம், இப்படிப்பட்ட ஒரு வழியையாவது கடவுள் அவருக்கு காட்டினாரே...! தனக்கென அவள் பிரத்தியேகமாய் வைத்துக் கொண்டிருந்த மீனாட்சியம்மன் சிலையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.
"நான் ஒரு புது இடத்துக்கு போகப் போறேன். அந்த இடம் எப்படிப்பட்டதுன்னு எனக்கு தெரியாது. ஆனா, நீங்க எனக்கு அங்கேயும் துணையா இருப்பீங்கன்னு எனக்கு தெரியும். எனக்கு வேண்டியதை தான் நீங்க எனக்கு குடுப்பீங்க. நீங்க காட்ற வழியில தான் நான் பயணப்பட்டுக்கிட்டு இருக்கேன். நல்லதோ, கெட்டதோ, எதுவா இருந்தாலும், அது எனக்கு நல்லதா தான் முடியும்... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு"
அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. பாட்டி தான் மருத்துவமனையில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று எண்ணிய போது, அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. ஓடிச் சென்று கதவை திறந்தவள், மாமல்லன் நின்றிருப்பதை பார்த்து திகில் அடைந்தாள். பார்வையாலேயே அவளை எரித்து விடுபவன் போல், அவளை கடுங்கோபத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான். அதே கோபத்துடன் உள்ளே நுழைந்து கதவை சாத்தி தாளிட்டான்.
"எதுக்காக கதவை சாத்தறீங்க? யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க?" என்றாள் தென்றல் பதட்டத்துடன்.
அவள் கூறியதை காதில் வாங்காமல், அவளது தோள்களை இறுக்கமாய் பற்றினான்.
"நான் கேள்விப்பட்டது உண்மையா?"
"என்ன கேள்விப்பட்டீங்க?" என்றாள் அவனது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்ற படி.
"நீ எங்கேயோ போறியாமே?"
"அதைக் கேட்க நீங்க யாரு?"
"எங்க போற? எதுக்காக போற?"
"நான் ஏன் உங்களுக்கு பதில் சொல்லணும்?"
"எனக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும்... ஏன்னா நீ என்னுடைய தென்றல்"
"ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க? நான் தான் சொன்னேன்ல..."
அவளது பேச்சை வெட்டி,
"ஆமாம் நீ சொன்ன... உனக்கு நிச்சயதார்த்தம் ஆயிடுச்சுன்னு... அதைப் பத்தி எனக்கு கவலை இல்ல"
"என் கையை விட்டுட்டு மரியாதையா இங்கிருந்து வெளியே போங்க. இல்லன்னா..."
"இல்லன்னா? இல்லன்னா என்ன செய்வ? ( அவளது தோளிலிருந்து கையை எடுத்துவிட்டு ) செய் பார்க்கலாம்... ( அவளை நோக்கி நகர்ந்தவாறு ) செயின்னு சொல்றேன்ல..." என்றான்.
பின்னோக்கி நகர்ந்த அவள்,
"கத்தி கூச்சல் போட்டு ஊரை கூட்டுவேன்..." என்றாள்.
தனது கைகளை கட்டிக் கொண்டு நின்றான் அவன்,
"நான் உன்கிட்ட தப்பா தான் நடந்துக்கிட்டேன்னு ஒத்துக்குவேன். எனக்கு அந்த தைரியம் இருக்கு. உனக்கு இருக்கா?"
அதைக் கேட்ட தென்றல் அதிர்ந்து நின்றாள். அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. இவனுக்கு தான் எவ்வளவு தைரியம்...! ஆம் அவன் பயம் இல்லாதவனாய் தான் தெரிகிறான். அந்த வார்த்தைகளை உதிக்கும் போது அவனது கண்களில் எந்த சலனமும் இல்லை. அவன், அதை செய்யும் திறம் வாய்ந்தவன் என்பதை அவன் முகபாவனை கூறியது. இதை செய்யும் தைரியம் அவனுக்கு இருந்தால், அவன் வேறு என்ன தான் செய்ய மாட்டான்? அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த பொழுதே அவளது கண்கள் கலங்கியது.
அவளை அழ வைக்க வேண்டும் என்பதற்காக நிச்சயம் மாமல்லன் அப்படி கூறவில்லை. அவனுக்கு வேறு வழி இல்லை. அவனுடைய நிலைபாடு என்ன என்பதை, அவளுக்கு தெரிவித்து தீர வேண்டிய நிலையில் அவன் இருக்கிறான். ஒருவேளை இன்று அவன் அதை செய்ய தவறினால், இதற்குப் பிறகு எப்பொழுதுமே அவனுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம். தன் கையிலிருந்து அவள் நழுவிச் செல்ல அவனால் விட முடியாது. அவள் ஒருத்திக்காக இந்த உலகத்தையே எதிர்க்க அவன் தயாராய் இருந்தான். தற்போது அவனுடைய ஒரே குறிக்கோள் தென்றல் மட்டும் தான்.
"எதுக்காக இப்படி எல்லாம் செய்றீங்க? இதுல என்னோட தப்பு என்ன இருக்கு?"
"என்னை ஏத்துக்க மாட்டேன்னு சொல்றது உன்னோட தப்பு. என்னை வேண்டாம்ன்னு சொல்றது உன்னோட தப்பு. உனக்கு தேவையான எல்லாத்தையும் நான் குடுக்கிறேன்னு சொல்றேனே... வேற என்ன வேணும் உனக்கு? உங்க அம்மாவுடைய ஆபரேஷனை நான் நடத்த மாட்டேனா? அப்புறம் உனக்கு என்ன பிரச்சனை?" என்றான் முடிந்த வரை தன் குரலில் மென்மை காட்டி.
"பணத்தைக் காட்டி என் மனசை மாத்த முயற்சிக்காதீங்க. அந்த காகிதம் என் மனசை மாத்தாது. பணத்துக்காக என்னுடைய கேரக்டரை என்னால விட்டுக் கொடுக்க முடியாது."
"அது காகிதம் இல்ல... பணம். அதுக்காக தான் நீயும் ஓடிக்கிட்டு இருக்க... அர்த்தமில்லாத காரணத்தை தேடுறதை நிறுத்து தென்றல்"
"நான் வேற ஒருத்தருக்கு நிச்சயம் செய்யப்பட்டவ அப்படிங்கிறதை, பணத்துக்காக என்னை மறக்க சொல்றீங்களா? பணத்துக்காக உறவையும், கொடுத்த வாக்கையும் மறக்கிறவ நான் இல்ல. இந்த உலகத்தில் ஒன்னை விட ஒன்னு எப்பவுமே பெட்டரா தான் தெரியும். ஒவ்வொரு முறையும் பெட்டரான விஷயத்தை பார்க்கும் போது, மனசை மாத்திக்கிட்டே இருக்கிறது எனக்கு பிடிக்காது. இது தான் நான். தயவுசெய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. என் பின்னாடி சுத்துறதை நிறுத்துங்க"
தனது பொறுமையை இழந்து கொண்டிருந்த மாமல்லன், பல்லை கடித்தபடி அவளை நோக்கி முன்னே நகர்ந்தான். அவன் முன்னேறி வருவதை பார்த்து பின்னோக்கி நகர்ந்த அவள் சுவற்றில் முட்டிக்கொண்டு நின்றாள்.
"இப்போ நீ சொன்னியே, இது தான் என்னை உன் பின்னாடி சுத்த வைக்குது. இதுவரை நான் யார்கிட்டயும் பார்க்காத இந்த குணம் தான், உன் முன்னாடி என்னை நிக்க வச்சிருக்கு" என்று அவள் சாய்ந்திருந்த சுவற்றை ஓங்கி குத்தினான்.
"இப்படி எல்லாம் நடந்துக்கிற உங்களை யாருக்கு தான் பிடிக்கும்? இப்படித் தான் ஒரு பொண்ணு கிட்ட பேசுவாங்களா?"
"என்னை இப்படி எல்லாம் நடந்துக்க வைக்கிறதே நீ தான். சரின்னு ஒரு வார்த்தை சொல்லி பாரு... நான் எவ்வளவு இனிமையானவன்னு நீ தெரிஞ்சிக்குவ... நீ என் வாழ்க்கையில வேணும் தென்றல். நான் இதுவரைக்கும் யார்கிட்டயும், எதுக்காகவும் போய் நின்னதில்ல. ஆனா இப்போ நான் அதை செஞ்சுகிட்டு இருக்கேன். ஏன்னா, நான் உன்னை இழக்க விரும்பல"
"உங்களுடையதா இல்லாத ஒரு விஷயத்தை நீங்க எப்படி இழப்பீங்க? நான் உங்களுடையவ இல்ல. என் மேல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. அப்படி இருக்கும் போது, இதுல இழக்கவும் எதுவும் இல்ல."
"இருக்கா, இல்லையாங்கறது அவங்கவங்களை பொறுத்த விஷயம். உன்னைப் பொறுத்தவரை நான் யாரோவா இருக்கலாம்... ஆனா என்னைப் பொறுத்தவரை எனக்கு நீ தான் எல்லாம். அதை நான் எப்படி நடத்திக் காற்றேன்னு நீ பாக்க தான் போற"
"உங்க கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல. எல்லாம் தலைவிதிபடி நடக்கட்டும்"
"என்னோட விதியை நிர்ணயிக்கிறவன் நான் தான். இப்போ, உன்னோட விதியையும் நான் தான் நிர்ணயிக்க போறேன்..."
"நீங்க என்னோட விதியை நிர்ணயிக்கப் போறீங்களா? இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா?" என்ற போது அவனது குரலில் எகத்தாளம் தெரிந்தது.
"அதை நீயே இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சிக்குவ. இவ்வளவு பேசுறியே, உன்னை நிச்சயம் பண்ணவனை பத்தி என்கிட்ட சொல்லு. அவன் என்ன செய்றான்? எங்க இருக்கான்? எவ்வளவு சம்பாதிக்கிறான்? அவன் பெயர் என்ன?"
"ஏன் கேக்குறீங்க?" என்றாள் பதட்டத்துடன்.
"கவலைப்படாத... எடுத்த உடனேயே எல்லாம் அவனை நான் கொன்னுட மாட்டேன்... ( என்று கள்ளப்புன்னகை உதிர்த்தவன் ) முதல்ல அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பேன்..."
"எப்படி உங்களால இப்படி எல்லாம் யோசிக்க முடியுது?"
"நான் என்ன செய்றது? எல்லாமே உன்னால தான். நீ என்ன நினைக்கிற, நீ அவனைப் பத்தி என்கிட்ட எதுவும் சொல்லலைனா, என்னால அவனை கண்டுபிடிக்க முடியாதா? என்னோட ஆளுங்க அவனை தேடிக்கிட்டு இருக்காங்க. இன்னும் ரெண்டு நாள்ல கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவாங்க. நான் சொன்ன மாதிரி அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பேன்... நீ சொன்னியே காகிதம்னு... அந்த காகிதம் தான் அந்த சான்ஸ். ரொம்ப சீக்கிரம் அந்த காகிதத்துடைய சக்தி என்னன்னு நீ தெரிஞ்சிக்குவ. என்னால நிச்சயமா சொல்ல முடியும், அவன் உன்னை மாதிரி இருக்க மாட்டான். உன்னை விட பணம் தான் முக்கியம்னு, அதைத் தான் தேர்ந்தெடுப்பான். உன்னை விட, உன்னோட கேரக்டரை விட அவனுக்கு பணம் தான் பெருசா தெரியும். அப்போ என்ன செய்வ?"
கண்ணிமைக்காமல் அவனையே வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு நின்றாள் தென்றல். மாமல்லன் கூறுவதெல்லாம் நடந்தால் அவள் என்ன செய்வாள்? தனக்கு நிச்சயிக்கப்பட்டவன், தன்னைத்தான் தேர்ந்தெடுப்பான் என்று அவளால் நிச்சயம் கூற முடியாது. யாராக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க தானே நினைப்பார்கள்? அதுவும் உடல் உழைப்பு இல்லாமல் பணம் கிடைக்கிறது என்றால், யாருக்குத் தான் கசக்கும்? பணத்தை வேண்டாம் என்று கூற அவன் என்ன முட்டாளா? இந்த மனிதனும் ஒருவேளை பணத்தோடு நிறுத்தாமல், கொன்று விடுவேன் என்று மிரட்டினால், அவன் என்ன தான் செய்வான்? நிச்சயம் ஓடித்தான் போவான்.
அதன் பிறகு, இந்த மனிதன் நேரடியாக அவளது அம்மாவிடமும் பாட்டியிடமும் வந்து திருமணம் பேசினால் என்னாவது? அவர்களது பேச்சை அவளால் எப்படி மறுக்க முடியும்? ஏற்கனவே பாட்டியிடம் இவன் நற்பெயரை சம்பாதித்து விட்டான்... இந்த விஷயத்தில் யோசிக்க நிரம்ப இருக்கிறது.
தன் விரல்களை சொடுக்கி, அவளை சிந்தனையில் இருந்து வெளியே கொண்டு வந்தான்.
அவளை குழப்புவதற்காக தான் அவனை கொன்று விடுவேன் என்று மிரட்டினான் மாமல்லன். மென்மையான உள்ளம் படைத்த அவள், அவன் உயிர் வாழட்டும் என்று அவளாகவே பின் வாங்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஒருவருடைய உயிர் என்று வரும் பொழுது, அவள் பிடிவாதமாக இருக்க மாட்டாள் என்று நம்பினான் மாமல்லன். அவள் எப்படி பட்டவள் என்பதை தான் அவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே...! அவன் நினைத்தது போலவே அவள் திகைத்து நின்றாள்.
"பயந்துட்டியா?" என்றான்.
தன் மனதில் எழுந்த பயத்தை மறைத்துக் கொண்டு,
"நான் ஏன் பயப்படனும்? உங்க பணத்தால நீங்க யாரை வேணா மாத்த முடியும். ஆனால் என்னை மாத்த முடியாது"
"யாரு யாரை மாத்துறாங்கன்னு பாக்கத் தானே போறோம்..."
எச்சரிக்கை நிறைந்த கூரிய பார்வையை அவளை நோக்கி வீசி விட்டு அங்கிருந்து அகன்றான் மாமல்லன், தென்றலை பயத்தில் நனைய விட்டு...
அவள் பயந்தாள்... எப்பொழுதும் இல்லாத அளவிற்கு... அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது,? அவனுடைய பார்வையில் இருந்து தன்னை மறைத்துக் கொள்ள, ஒரு பாதுகாப்பான இடம் அவளுக்கு தேவைப்பட்டது. அவனது விருப்பப்படி எல்லாம் நடப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க அவள் தயாராக இல்லை. ஒரு வேளை, அவளது இருப்பிடத்தை அவன் தெரிந்து கொண்டு விட்டால் என்ன செய்வது? அவன் வேறு ஏதாவது ஒரு வழியில் அவளை தொல்லை செய்தால் என்ன செய்வது? இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்...
தொடரும்...