5 நாம் சந்தித்து விட்டோம்...
இளந்தென்றலை நோக்கிச் சென்ற மாமல்லன்,
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா, நான் உங்களை ட்ராப் பண்றேன்" என்றான் எந்த தயக்கமும் இன்றி.
இளந்தென்றல் அவனை மறுத்து பேசும் முன், அவளுடன் இருந்த சிறுவன் ஆர்வமாய் கேட்டான்,
"நீங்க நிஜமாவே உங்க கார்ல எங்களை கூட்டிகிட்டு போவீங்களா?"
ஆமாம் என்று புன்னகைத்தான் மாமல்லன்.
"அக்கா, அக்கா, வேண்டாம்னு சொல்லிடாதீங்க அக்கா... வாங்க அக்கா போகலாம்..."
"நம்ம பஸ்ல போகலாம் முன்னா"
"இந்த நேரத்துல பஸ்ஸே வராது கா... வந்தாலும் செம கூட்டமாக இருக்கும். அதான் அவர் நம்மளை விடுறேன்னு சொல்றாரு இல்ல... வாங்க கா" என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
முந்தைய முறை, அவன் அவளை பார்த்த அதே இடத்திற்கு தான் அவள் செல்கிறாளா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் மாமல்லனுக்கு. அவர்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். வண்டியை இயக்கினான் மாமல்லன். அவனை, தன்னிடம் நோக்கி வழிநடத்தினாள் இளந்தென்றல். அவன் அவளைப் பார்த்த அதே இடத்தை நோக்கி அவள் அழைத்துச் சென்றது, அவனுக்கு சந்தோஷத்தை அளித்தது. அதை நிச்சயப்படுத்திக் கொண்ட பின் மெல்ல பேச்சை துவங்கினான்.
"அன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து எப்போ கிளம்பி போன? நல்லபடியா வீடு போய் சேந்துட்ட இல்ல? ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என்றான் ரியர்வியூ கண்ணாடி மூலம் அவளை பார்த்தபடி.
"ம்ம்ம்... என்னை ஏன் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனீங்க? தண்ணி தெளிச்சு எழுப்ப முயற்சி செஞ்சிருக்கலாமே"
அவளை வினோதமாய் பார்த்தான் மாமல்லன், தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சிக்காமல் கூட யாராவது மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்களா என்பது போல.
"எல்லா முயற்சியும் செஞ்சு பார்த்துட்டு, ஒன்னும் வேலைக்கு ஆகலைன்னு தெரிஞ்ச பிறகு தான், உன்னை ஹாஸ்பிடலுக்கு தூக்கிகிட்டு போனேன்"
அவன் கூறிய *தூக்கிக்கிட்டு* என்ற வார்த்தை அவளை மென்று முழுங்க செய்தது. அவளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் தான் அவன் அதை செய்தான். ஆனால் அவனே அதை அவளிடம் கூறிய போது அது அவளுக்கு சங்கடத்தை தந்தது.
"என் முகத்துல தண்ணி தெளிச்சிங்களா?"
"ஆமாம்..."
"நீங்க என்னை தண்ணி குடிக்க வச்சிருக்க மாட்டீங்க... அதான் எனக்கு மயக்கம் தெளியல..."
அவள் மறுபடி மறுபடி சுற்றி சுற்றி அதே இடத்திற்கு வந்ததை பார்த்த போது, அவனுக்கு விசித்திரமாய் இருந்தது. உண்மையிலேயே அவள் விரதம் இருந்திருப்பாளோ? அவன் அவளுக்கு தண்ணீர் புகட்டினானா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறாளோ? அவனுக்கு சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கு மேல், அவன் ஆமாம் என்று கூறும் போது, அவள் முகம் போகும் போக்கை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அன்று, அவன் அதை செய்த போது, அவளை மறுபடியும் பார்க்கவோ, அவளிடம் உண்மையை கூறவோ வேண்டுமென்று அவன் விரும்பவில்லை. ஆனால் இன்று, நான் தான் உனது விரதத்தை முடித்து வைத்தேன் என்று கூற விரும்பினான் அவன். அவள் தனக்காக விரதம் இருக்கவில்லை என்று தெரிந்திருந்த போதும் அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.
காரை சாலையின் ஓரமாய் நிறுத்திவிட்டு, தன்னை சீட் பெல்ட்டில் இருந்து விடுவித்து கொண்டு, அவளை நோக்கி திரும்பினான்.
"அப்படி கூட யாராவது செய்வாங்களா? உனக்கு தண்ணி கொடுக்காமலா நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருப்பேன்? உனக்கு நான் தண்ணி கொடுத்தேன்" என்றான் அவள் கண்களை உற்று நோக்கியபடி.
தன் பார்வையை வேறு பக்கமாய் திருப்பி கொண்டாள் இளந்தென்றல். கலாச்சாரத்தை பின்பற்றும் குடும்பத்தின் வழிவந்தவளாக இருப்பாள் போலிருக்கிறது. தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று விரதம் இருந்திருப்பாள். முன்பின் தெரியாத ஒருவன் அவள் விரதத்தை முடித்தால், அவளுக்கு பதற்றமாக இருக்காதா? மனதிற்குள் எண்ணியபடி மீண்டும் வண்டியை கிளப்பினான் மாமல்லன்.
அவர்களுடைய இருப்பிடத்திற்கு சற்று முன்னதாகவே, வண்டியை நிறுத்தச் சொன்னாள் இளந்தென்றல்.
"ஏன் கா இங்கேயே நிறுத்த சொல்றீங்க?" என்றான் அவளுடன் வந்த சிறுவன்.
"நம்ம இங்கிருந்து நடந்து போகலாம்"
"நான் உங்களை உங்க இடத்திலேயே இறக்கி விடுறேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல" என்றான் மாமல்லன்.
"இல்ல வேண்டாம்... தேவையில்லாத விமர்சனங்களுக்கு இடம் கொடுக்க நான் விரும்பல. ஆனா நீங்க கொஞ்ச நேரம் இங்க காத்திருக்க முடியுமா?"
ஏன்? என்று கேட்க வேண்டும் என்று தான் தோன்றியது மாமல்லனுக்கு. ஆனால் ஏன் என்று ஏன் கேட்க வேண்டும், அவளுக்காக காத்திருக்க அவன் தயாராக இருக்கும் போது? சரி என்று தலையசைத்தான். அவளும் அந்த சிறுவனும் கூட்டத்திற்குள் புகுந்து காணாமல் போனார்கள். அவர்கள் செல்வதை பார்த்தபடி அமர்ந்திருந்தான் மாமல்லன்.
சிறிது நேரத்தில், அந்த சிறுவன் பின் தொடர அவள் ஓடி வருவதை பார்த்தான் மாமல்லன். தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்று மற்றும் பார்த்துவிட்டு மீண்டும் காருக்குள் ஏறினாள் அவள், இந்த முறை முன்னிருக்கையில்... அந்த சிறுவன் பின் இருக்கையில் ஏறிக்கொண்டான். அவள் மூச்சு வாங்க ஓடி வந்ததை பார்த்த மாமல்லன் வியந்தான். தனது துப்பட்டாவில் மறைத்து வைத்திருந்த, கைக்குட்டையில் மூட்டை கட்டப்பட்டிருந்த, பணத்தை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி பிரித்துப் பார்த்த மாமல்லன், அதில் பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து, தான் சேமித்து வைத்திருந்த உண்டியலை உடைத்து அதை அவள் கொண்டு வந்திருக்கிறாள் என்று புரிந்தது கொண்டான். கேள்விக்குறியுடன் அவளை நோக்கினான்.
"அன்னைக்கு என்னோட ஹாஸ்பிடல் பில்லை நீங்க குடுத்தீங்கல்ல, அதுக்காக இந்த பணம்"
"நான் உன்னை கேட்டேனா?" என்றான்.
"உங்களை மாதிரி ஒரு அந்நியன் கிட்ட இருந்து எந்த உதவியும் வாங்கிக்க நான் விரும்பல"
தன்னை *அந்நியன்* என்று அவள் குறிப்பிட்டதை அவன் விரும்பவில்லை. ஆனாலும் அவள் நினைப்பது தவறில்லையே... அவளைப் பொறுத்தவரை, அவன் அந்நியன் தான். ஏனென்றால் அவள் அவனை சந்தித்து சில மணி நேரம் தான் ஆகிறது. அவளுடைய நினைவுகளால் இரவும் பகலும் விரட்டப்பட்டு கொண்டிருந்தது இவன் தானே...!
"நீ என்னை சந்திக்காம இருந்திருந்தா, இந்த பணத்தை என்கிட்ட எப்படி திருப்பிக் கொடுத்திருப்ப?" என்ற கேள்வியால் அவளை மறக்க முயன்றான்.
"ஆனா, நம்ம சந்திச்சிட்டோம்..."
"ஆமாம்... நம்ம சந்திச்சிட்டோம்" என்றான் புன்னகையுடன், நான் உன்னை கண்டுபிடித்து விட்டேன் என்ற அர்த்தத்துடன்.
"இந்த பணத்தை வாங்கிக்கோங்க"
"யாருக்கு பண தேவை இருக்கோ, அவங்க கிட்ட நீயே கொடுத்துடு"
"அப்படின்னா உங்க அம்மாவுடைய மருந்துக்காக அதை நீங்களே வச்சுக்கோங்க அக்கா" என்றான் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன்.
அவனை, *சும்மா இரு* என்று கண்களால் மிரட்டினாள் இளந்தென்றல்.
"இந்த பணத்தை நீயே வச்சுக்கோ தென்றல்" என்றான் மாமல்லன்.
"நீங்க யார் எனக்கு பணம் கொடுக்க? நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது. நான் உங்க உதவியை ஏத்துக்குவேன்னு நீங்க எப்படி எதிர்பார்க்கிறீங்க? உங்க கூட நான் கார்ல வர ஒத்துக்கிட்டதே, இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கணும்னு தான்."
அந்த பணமுடிச்சை டேஷ் போர்டில் வைத்துவிட்டு, அதற்கு மேல் அங்கு தாமதிக்காமல், வண்டியை விட்டு கீழே இறங்கி சென்றாள் இளந்தென்றல்.
அவளைப் பின்தொடர்ந்து இறங்க முற்பட்ட சிறுவனை தடுத்து நிறுத்தினான் மாமல்லன்.
"ஏய், உன் பேர் என்ன?"
"சுந்தரேசன்"
"சுந்தர், இந்த பணத்தை கொண்டு போய் உங்க அக்கா கிட்ட குடு"
"ஐயையோ... நான் அப்படி செஞ்சா, அக்கா என்கிட்ட பேச மாட்டாங்க" என்றான் திகிலுடன்.
"உங்க அக்கா எப்பவுமே இப்படித் தானா, இல்ல, புதுசா பாக்குறவங்க கிட்ட மட்டும் தான் இப்படி நடந்துக்குவாங்களா?"
"எப்பவுமே இப்படித் தான்... உண்மையை சொல்லப் போனா, உங்ககிட்ட ரொம்ப மரியாதையா பேசினாங்க... அவங்களுக்கு சுய கௌரவம் ரொம்ப ஜாஸ்தி"
சின்னப் பையன் வாயிலிருந்து வந்த பெரிய வார்த்தையை கேட்டு திகைத்தான் மாமல்லன்.
"இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"
"அக்கா தான் சொல்லிக் கொடுத்தாங்க. எங்க அக்கா கூட இருந்தா, நீங்களும் இதையெல்லாம் கத்துக்குவீங்க"
அதைக் கேட்ட மாமல்லன் புன்னகைத்தான்.
"உங்க அக்கா சொல்லிக் கொடுக்க ரெடியா இருந்தா, நானும் கத்துக்க ரெடி தான்"
"அப்படி நடக்கணும்னா நீங்க எங்க அக்காவுக்கு ஃபிரண்ட் ஆகணும்"
"சரி... என்ன மருந்தை பத்தி நீ சொன்ன?"
"அக்காவோட அம்மா உடம்பு சரியில்லாம இருக்காங்க. அவங்க மருந்தை பத்தி தான் சொன்னேன்"
"அவங்க அப்பா என்ன செய்றாரு?"
"அவங்க அப்பா இறந்து போயிட்டாரு"
"அப்படின்னா, அவங்க குடும்பத்துக்காக யார் சம்பாதிக்கிறது?"
"வேற யாரு? தென்றல் அக்கா தான்"
"அவங்க வேலை செய்யறாங்களா? எங்க?"
"ஆமாம். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ராயல் மெர்சன்ட் கம்பெனியில. இன்னைக்கு செகண்ட் சாட்டர்டேயில்ல, அதனால தான் அவங்களுக்கு லீவு"
"அவங்க குடும்பத்துல வேற யாரெல்லாம் இருக்காங்க?"
"அக்கா, அவங்க அம்மா, அவங்க பாட்டி"
அப்பொழுது தன்னை தேடிக்கொண்டு இளந்தென்றல் வருவதை கண்டான் சுந்தர்.
"சரி, நான் போறேன். இல்லனா அக்கா என்னை திட்டுவாங்க"
இளந்தென்றல் தன்னை பார்ப்பதற்கு முன், காரை விட்டு இறங்கிய சுந்தர், சுற்றிக்கொண்டு சென்று அவள் பின்னால் நின்றான். அவனை தன்னுடன் இழுத்துக் கொண்டு நடந்தாள் இளந்தென்றல். மாமல்லனை நோக்கி திரும்பிய சுந்தர், அவனை நோக்கி தன் கட்டைவிரலை உயர்த்தி, சிரித்து விட்டு சென்றான்.
அவள் செல்வதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மாமல்லன். அவள் வைத்து விட்டு சென்ற பணமுடிப்பின் மீது அவன் பார்வை சென்றது. தனது நிறுவனத்தை நேர்மையாய் நடத்தி செல்வதற்காக, அவனது நேர்மையை பாராட்டி, வருமானவரித்துறை அவனுக்கு *தங்க சான்றிதழ்கள்* வழங்கி கௌரவித்திருந்தது. இளந்தென்றல் கொடுத்து விட்டு சென்ற இந்த பண முடிப்பிற்கு முன்னால், அந்த சான்றிதழ்கள் பெரிதல்ல. அவளுடைய ஏழ்மை நிலையிலும் அவனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவள் நினைத்தாளே... அவளுக்கு யார் சான்றிதழ் வழங்குவது? அவன் சரியாய் வருமான வரி செலுத்துவதில் கூட, தனது நிறுவனம் எல்லாராலும் கவனிக்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கம் இருந்தது. ஆனால் அவளிடம் அப்படி எதுவும் இருப்பதாய் தெரியவில்லை...!
"மேல மேல உன்னை நினைச்சுக்கிட்டே இருக்க, எனக்கு ஏதாவது ஒரு காரணத்தை நீ கொடுத்துகிட்டே இருக்க, தென்றல்... உண்மையிலேயே நீ ரொம்ப வித்தியாசமானவள்" என்று எண்ணினான் மாமல்லன்.
அவள் கொடுத்து விட்டு சென்ற பணத்தை எடுத்து, அதனை வாசம் பிடித்து, கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தான். அவனுடைய அந்த செயல், அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. அவனுக்குள் ஏற்பட்டிருந்த அந்த புதிய உணர்வு அவனுக்கு பிடித்திருந்தது.
தொடரும்...