46. ப்ரியா ராஜன்:
"என் பிள்ளைக்கு நான் ஏற்கனவே ஒரு பெண்ணை பேசி முடிச்சுட்டேன்." என அறிவழகி கூற, ஜீவா அதிர்ச்சியில் உறைந்தே போனான்.
அப்போது அங்கு வந்த துருவும் ஆதுவும் விஜயும் ஜீவாவின் அதிர்ச்சியான முகத்தை பார்த்து விட்டு, அறிவழகியை கேள்வியாக பார்க்க, அவர் ஒரு நமட்டு சிரிப்புடன் நின்றிருப்பதை பார்த்துவிட்டு "என்ன?" என்று ஜீவாவை எழுப்பி கேட்டான் துருவ்.
"ஒரு பெ... பேசி... பேசி..." என ஜீவா வார்த்தை வராமல் திணறினான். துருவிற்கு அறிவழகியின் விளையாட்டு சுத்தமாக புரியவில்லை.
"அத்தை என்ன ஆச்சு...?" என்ற ஆதர்ஷினியின் கேள்வியில் அறிவழகி, ஜீவாவிற்கு பிரமோஷன் கிடைத்து இருப்பதையும், ஏற்கனவே தான் ஒரு பெண்ணை ஜீவாவிற்கு பார்த்து விட்டதாகவும் கூறவும் ஜீவாவின் காதலை பற்றி தெரிந்த ஆதுவுக்கும் இது அதிர்ச்சி தான்.
"அம்மா... சூப்பர்மா... நீங்க மருமகளா கொண்டு வர ஆசை பட்டீங்களே. அந்த பொண்ணு தான...? நீங்க சொன்னா ஜீவா கேட்காம இருப்பானா... எந்த பொண்ண வேணும்னாலும் கூட்டிட்டு வந்து கட்ரா தாலியன்னு சொல்லுங்க... மறுபேச்சு பேசாமல் கட்டுவான். ஏன்னா அவன் தாய் சொல்லை தட்டாத பிள்ளை..." என்ற துருவ் ஜீவாவின் புறம் திரும்பி
"ஜீவா வாழ்த்துக்கள்டா...." என்று அவனின் இரத்த அழுத்தத்தை நன்றாக ஏற்றிவிட்டான்.
"அப்போ மூன்று கல்யாணத்தையும் ஒரே மேடையில முடிச்சிடலாம்..." என்று குதுகலிக்க அவனை முறைத்த ஜீவா, 'நீயெல்லாம் ஒரு அண்ணனாடா...' என்று பார்த்துவிட்டு 'அம்மாவிடம் தன் காதல் பற்றி கூறினால் ஏமாற்றம் அடைந்து விடுவார்களோ... ஏற்கனவே அவர் கணவரால் ஏமாற்றம் அடைந்து அவரை இழந்து பிள்ளைகளே உலகம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரின் ஆசையை நிறைவேற்றாமல் இருந்தால் நான் அவரின் பிள்ளையே இல்லை' என நினைத்தவன் அவரின் சொல்லிற்கு பதில் கூறாமல் மௌனமாக நின்றிருந்தான்.
"ஜீவா நான் சொல்வதை தான் கேட்பான்னு எனக்கு தெரியும். அதான் அவனை கேட்காமலேயே நானே பொண்ணை முடிவு பன்னிட்டேன்..." என்றவர் ஜீவாவை அவனின் அறை பக்கம் தள்ளி, "சீக்கிரம் ஃப்ரெஷ் ஆகிட்டு வா... நான் எதாவது ஸ்வீட் செஞ்சு வைக்கிறேன்... என் பிள்ளைக்கு ப்ரொமோஷன் கிடைச்சு இருக்கு..." என்றவர் அவனை அவன் அறைக்குள் தள்ளிவிட்டுவிட்டு, ஆதுவுடன் சமையல் அறைக்குள் செல்ல, அவனை பின்தொடர்ந்தது வந்த துருவும் விஜயும் அவன் அறைக்குள் வந்து, பிறகு ஒருவரையொருவர் பார்த்து கொண்டு பின் வந்த வழியே திரும்பி சென்றனர்.
போகும்போது அவர்கள் ஜீவாவின் அறைக்கதவை மறக்காமல் சாத்திவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இதை எதையும் உணராமல் ஜீவா அவனின் நினைவுகளில் உழன்று கொண்டு இருந்தான்.
தத்தெடுத்து சென்றவர்கள் ஜீவா ஐந்து வயது இருக்கும் போதே இறந்துவிட, உறவினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தட்டுத்தடுமாறி கல்லூரி முடித்தவன், உறவினர்கள் தன் பேரில் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்ய பார்க்கிறார்கள் என அறிந்து அங்கிருந்து சென்னை பயணமானான். இங்கு வந்ததும் பகுதிநேரம் பணியாற்றி கொண்டு, குரூப் எக்ஸாமிற்கு படித்து கொண்டு இருக்க, அப்போதுதான் அவனின் தோழியும் அவனுடைய கார்டியனின் புதல்வியுமான சஞ்சனா அவனிடம் அவளாகவே தன் காதலை தெரிவித்தாள்.
யாருடைய அன்பும் கிடைக்கப் பெறாமல் வாழ்ந்த அவனுக்கு அந்த காதலை நிராகரிக்க எந்த காரணமும் கிட்டவில்லை. மற்றபடி சிறுவயதில் இருந்தே தன்னுடன் சுற்றும் சஞ்சனாவின் மேல் அவனுக்கு காதல் என்றெல்லாம் இருந்தது கிடையாது. இருந்தாலும் அவளை தவிர்க்க அவன் மனம் விரும்பவில்லை. எனவே தன் சம்மதத்தை தெரிவித்தான். அதனால் தான் ஒருமுறை ஜீவாவால் எந்த ஒலிவுமறைவும் இல்லாமல், வெட்கம் கூச்சம் இல்லாமல் 'சஞ்சனா என் காதலி...' என துருவிடம் கூற முடிந்தது.
அவன் தன் சம்மதத்தை தெரிவித்த பிறகு சஞ்சனா அவனின் எல்லா தேவைகளையும் அவனின் கண் அசைவில் புரிந்து கொண்டு அவனுக்கு எல்லாமுமானாள். அவனுக்கு தேவையான புத்தகங்கள் முதற்கொண்டு அவனின் குடும்பத்தை கண்டறிந்து அவனிடம் சேர்ப்பது வரை அனைத்தையும் செவ்வனே செய்தாள்.
கடமையே என்று தான் ஜீவா தன்னை காதலிக்கிறான் என்று சஞ்சு உணர்ந்து இருந்தாலும் அவள் அவனை விலக்கிவிடவில்லை. 'தொலைபேசியில் காதலாக நான்கு வார்த்தை பேசிக்கொள்ள வேண்டும்... அவனிடமிருந்து அன்பாக நலவிசாரிப்புக்ள் வர வேண்டும்...' என்று அவள் காதல் கொண்ட மனம் ஆசை கொண்டாலும் அதை அவனிடம் அவள் திணித்து இல்லை. அவன் போக்கிலேயே விட்டுவிட்டாள்.
அதனால் தான் அவன் ஒருநாள் பாசமாக பேசியதும், சஞ்சு அவனிடம் 'நீ யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருன்னு உனக்கு தெரியும்... எதுக்கு?' என்றவள் அவனுக்கு தேவையான ராஜேந்திரனை பற்றிய அனைத்து தகவல்களையும் பிட்டு பிட்டு வைத்திருந்தாள். ஒருநாள் இல்லையென்றாலும் ஒருநாள் அவன் என் காதலை உணர்வான் என்று நினைத்திருந்தவள் விரைவிலேயே தன் காதலை அவனுக்கு நன்றாகவே உணர்த்தியிருந்தாள்.
அன்று தன் உயிரை அவனுக்காக பணயம் வைத்தபோது அவளின் மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தையும், அதில் வழிந்த இரத்தத்தையும் பார்த்து விட்டு ஜீவா தன் உயிரே சென்றது போல் துடித்த துடிப்பு அந்த வலியையும் தாண்டி அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
அன்று தான் ஜீவா தன் காதலையும் அவளின் காதலின் ஆழத்தையும் உணர்ந்தான். இனி சாகும்வரை அவளை கைவிடக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டவனின் சபதம் இன்று ஆட்டம் கண்டது.
தனிமையே துணையாக இருந்தவனுக்கு வரமாக அவனின் அம்மாவும் சகோதரர்களும் வந்து இருக்க இவ்வளவு நாள் தாய் பாசத்திற்காக ஏங்கியவன் தற்போது அது கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ என்று ஏங்கினான். தன் தாய் தன்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அழிக்க அவன் விரும்பவில்லை. அதே நேரம் அவனின் காதல் கொண்ட மனம் சஞ்சுவை ஏமாற்றவும் விரும்பவில்லை.
தனக்குள் உழன்று கொண்டு இருந்தவன் அங்கிருந்த கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தான். அவனின் கண்களின் ஓரத்தில் ஒருதுளி நீர் வழிந்து அவன் காதை நனைத்தது.
"ஏன் சஞ்சு என்னுடைய குடும்பத்தை என்கிட்ட கண்டுபிடிச்சு கொடுத்த....". என்றவன் கண்களை மூடிக்கொண்டு மௌனமாக மனதிற்குள் கண்ணீர் வடிக்க, அவன் நெஞ்சில் பாரம் அழுத்துவதை போல் உணர்ந்து கண்களை மெல்ல திறந்து பார்த்தான். சஞ்சனா அவன் நெஞ்சில் தலைசாய்த்து படுத்திருப்பதை போன்ற ஒரு பிரம்மை ஏற்பட அதை கலைக்க விரும்பாதவன் அவளின் மேல் கையை போட்டு அணைத்தபடி மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
"ஜீவா... உன்னை நான் சின்ன வயசுல இருந்து பாக்குறேன்டா.... உன்னுடைய தேவை என்னன்னு எனக்கு தெரியும். அது தெரிந்தும் உன்கிட்ட அதை ஒப்படைக்காமல் இருப்பேனா.... அதான் நான் உன்ன பார்க்க வர ராஜேந்திரனை பின் தொடர்ந்து போய் பல பேர விசாரித்து உன்னுடைய குடும்பத்தை கண்டுபிடிச்சேன். உனக்கு உன் குடும்பம் முக்கியமா இருக்கலாம்... ஆனா எனக்கு நீதான் முக்கியம். ஆனாலும் சென்டிமென்டா பேசி என்ன அவாய்ட் பன்ன நினச்ச...." என்றவள் சற்று எம்பி அவனின் காதிற்கு கீழ் பக்கக்கழுத்து பகுதியை பல் பதியுமளவிற்கு கடித்தவள் "கடிச்சே சாப்பிட்டுட்டுவேன்..." என்று கோபமாக எழுந்து அமர்ந்து, ஒரு விரல் நீட்டி எச்சரிக்க, அப்போதுதான் ஜீவா உணர்ந்தான் இ ன்னுது பிரம்மை இல்லை டாட்'ஸ் லிட்டில் பிரின்சஸ் சஞ்சு என்று...
வலியில் கழுத்தை தேய்த்து கொண்டவன் "வேம்ப்பயர்(Vampire), டிராகுலா(Dracula)..." என்று திட்டியபடியே அவளின் கையை பிடித்து கொண்டு "நீ என்னடி என்னுடைய ரூம்ல பன்னற..." என்று கேட்க,
"ஹலோ காவல்துறையை சேர்ந்த காதலரே... இது உன்னுடைய ரூம் இல்லை... நம்ம ரூம். என்னுடைய மாமியார் அதான் உன்னுடைய அம்மாவே சொல்லிட்டாங்க... இனி இந்த கைய பிடிச்சு இழுக்குற வேலைய விட்டுடு... அப்புறம் என் மாமியார்ட்ட சொல்லிடுவேன்..." என்றவளை ஆச்சரியமாக பார்த்தவன் "அம்மாவா...? உனக்கு மாமியாரா....?" என்று கேட்டான்.
"மக்கு போலிஸ்கார்... உங்க அம்மா பார்த்து இருக்கிற பொண்ணு நான் தான். அவங்க சும்மா விளையாடனாங்க... அதுக்கு இதுதான் ச்சேன்ஸ்ன்னு என்னை கழட்டி விட்டுடுவியா..." என்று அவன் முதுகில் இரண்டு அடி வைக்க, அவள் கையை பிடித்து அப்படியே முறுக்கி அவளின் பின்னால் கொண்டு சென்றவன், மகிழ்ச்சியாக அவளை அணைத்துக் கொண்டான்.
ஜீவா ப்ரொமோஷன் கிடைத்த விஷயத்தை வீட்டினரிடம் கூற வருவதற்கு முன்பே சஞ்சனா அங்கு வங்திருந்தாள். அவர்களின் காதல் விவகாரம் பற்றி அறிவுமதி சற்று கணித்து சஞ்சனாவிடம் கேட்க, அவளும் வெட்கப்பட்டு கொண்டே ஒப்புக்கொள்ள, அறிவுமதியிடம் இருந்து அவளுக்கு கிரின் சிக்னலே கிடைத்தது.
உடனடியாக அறிவுமதி சஞ்சுவின் தந்தையிடம் கைப்பேசி மூலம் சம்பந்தம் பேச, அவரும் கிரீன் சிக்னல் காட்ட, அப்போதுதான் ஜீவா வீட்டினுள் நுழைந்தான். அவனிடம் விளையாட எண்ணிய சஞ்சனா 'நான் அவன் அறையில் ஒளிந்து கொள்கிறேன். நீங்கள் அவனிடம் பெண் பார்த்து விட்டாதாக கூறுங்கள்...' என அறிவுமதியிடம் கூறிவிட்டு, ஜீவா அறையில் ஒலிந்துக்கொண்டு அவர்கள் பேசுவதை கதவின் இடுக்கின் வழியே பார்த்து கொண்டு இருந்தாள்.
ஜீவா அறிவுமதியிடம் தன் காதல் விவகாரம் பற்றி கூறாததில் உள்ளுக்குள் என்னவோ உடைந்தது போல் இருந்தாலும் அவனின் மனநிலையை அவன் கண் அசைவிலேயே புரிந்து கொண்டு அமைதி காத்தாள்.
ஆனால் அவனோ அறைக்கு வந்த பிறகு, அவள் இருப்பதை கூட கவனிக்காமல் என்னவோ யோசித்து கொண்டு இருப்பதையும், துருவும் விஜயும் அவன் அறைக்குள் வந்துவிட்டு சஞ்சனா இருப்பதை பார்த்து விட்டு, நமட்டு சிரிப்புடன் கதவை சாற்றி விட்டு செல்வதையும் கண்டவள், அமைதியாகவே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து இருந்தாள். ஆனால் அவன் படுக்கையில் படுத்து கண்ணீர் வடிக்கவும் தன் அமைதியை கலைந்து அவனின் நெஞ்சில் தலை சாய்த்து படுத்தவள் அவனை வம்பிழுத்து தாங்க நடத்திய சிறு நாடகத்தை கூறியிருந்தாள்.
******
"மாது... ஜீவாக்கும் சஞ்சுவுக்கும் கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க..." உற்சாகம் மிகுதியில் மாதுவுக்கு கைப்பேசியில் அழைத்த விஜய், அவள் அழைப்பை ஏற்றதும் விஷயத்தை கத்தி கூற, மாது தன் காதில் இருந்து கைப்பேசியை சற்று நகர்த்தி காதை குடைந்து கொண்டே அவனின் மகிழ்ச்சியில் அவளும் பங்குகொண்டு பேசிக்கொண்டு இருந்தாள்.
துருவ் மூலமாக இந்த விஷயம் நவீனுக்கும் தெரியவர அவன் தன் வீட்டிலும் தன் அத்தை வீட்டிலும் செய்தியை பரப்பியவன், சுதாவிற்கும் கூறி ஜீவாவின் நிலைமையை நினைத்து சிரித்து கொண்டு இருந்தான். திருமணமாகபோகும் மூன்று ஜோடிகளும் மகிழ்ச்சியில் திளைத்த்திருக்க, வேறுபுறம் ஆதர்ஷினி கோபத்தில் குலாப்ஜாமூன் செய்கிறேன் பேர்வழி என்று எண்ணையில் இட்ட உருண்டைகளை கருக்கிக் கொண்டு இருந்தாள்.
'ஜீவாக்கு குலாப்ஜாமூன் பிடிக்கும், மெதுவடை பிடிக்கும், கொண்டகடலை பிடிக்கும்னு தெரியுது இல்ல... எந்த பொண்ண பிடிக்கும்னு தெரியாதா...' என மனதிற்குள் திட்டியவள் தன் மாமியாரிடம் வாயை திறக்கவில்லை. அறிவுமதியும் அவளின் கோபத்தை புரிந்து கொண்டு தன் மகனின் மேல் ஆது வைத்திருக்கும் அக்கறையால் மகிழ்ந்தவர், துருவிற்கு தேனீர் எடுத்து செல்லும்படி கட்டளையிட அவளும் அவளின் அறையை நோக்கி சென்றாள்.
துருவ் படுக்கையில் படுத்துக்கொண்டு கைப்பேசியில் தீவிரமாக எதையோ நோண்டிக் கொண்டு இருக்க, அவனின் அருகில் இருந்த டீடேபுளின் மேல் 'நங்'கென தேனீர் கோப்பையை வைத்தவள் "பப்பு அத்தை தான் ஏதோ பொண்ணு பார்த்து இருக்கேன்னு சொன்னாங்கன்னா நீங்களாவது அவங்களுக்கு சொல்லியிருக்க வேண்டாமா..." என பொறிந்தாள்.
"என்ன சொல்லியிருக்க வேண்டாமா..?" அவனின் அசால்டான பதிலில் கடுப்பானவள்,
"அதான் ஜீவா சஞ்சு லவ் மேட்டர்..."
"ஆதுமா...ஜீவா உன்கிட்ட சொன்னானா அவன் சஞ்சுவ லவ் பன்னறான்னு..." என்று கேட்டதும் அவள் இல்லை என்று தலையாட்ட "அப்புறம் எப்படி சொல்லர..." என்று கேட்டான்.
"அது அவங்க கண்ணுல தெரிஞ்சது. அவங்க பார்வையாலேயே பேசிகிட்டாங்களே..." என்று கூற அவளை முறைத்தவன் "என்னை தவிர யார் கண்ணாலேயே காதல் மொழி பேசனாலும் புரிஞ்சுக்கிறடி..." என்று அவளின் காலை வாரியவன் "அம்மா பார்த்து இருக்கிற பொண்ணு நம்ம சஞ்சு தான்..." என்று கூற ஆதர்ஷினியும் மகிழ்ச்சியில் திளைத்தாள்.
மூன்று ஜோடிகளுக்கும் ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.
திருமண நாளும் நெருங்க மாப்பிள்ளையும் பெண்ணும் பார்க்கக்கூடாது என்று பெரியவர்கள் கட்டளையிட்டுவிட விஜய், ஜீவா, நவீன் மூவரும் தவித்துபோகினர்.
மாலை என் வேதனை கூட்டுதடி...
காதல் தன் வேலையை காட்டுதடி...
எனை வாட்டும் வேலை ஏனடி...
பதில் சொல்வாய் கண்மணி...
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி...
என் காதல் வீணை நீ...
********
எழுத்தாளர்: ப்ரியாராஜன்
ஐடி: PriyaRajan012345
********