மறக்காதே நீ மறுக்காதே நீ - 1
வானத்தில் சூரியன் மறைந்து கொண்டிருந்த பின் மாலை பொழுது. பறவைகள் குரல் எழுப்பியபடி சிறகுகளை படபடத்தபடி சென்றன. காற்று நின்று போய் இறுக்கமாக இருந்தது. சம்யுக்தாவிற்கு தனது மனது அதை விட இறுக்கமாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
"ஹாய் சம்யு" என குரல் கேட்டு திரும்பியவளின் முகம் மலர்ந்தது.
"ஹாய் ஸ்மிருதி" என்ற சம்யுக்தாவிடம், "என்ன சம்யு, உடனே வா என்று கால் செஞ்சே?" என கேட்டாள்.
"உன்னை பார்த்தே இரண்டு மாசமாயிருச்சு. எப்போ கூப்பிட்டாலும் பிஸியாக இருக்கே. அதனால் தான் உடனே உன்னை வர சொன்னேன்" என தோளைக் குலுக்கினாள்.
"ஒ, தாங்க் காட்" என சொன்னவள், பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள் ஸ்மிருதி்.
அவள் அருகே அமர்ந்த சம்யுக்தா, "ஸாரி ஸ்மிருதி, இரண்டு வாரமா என்னை வீட்டில் ஆபிஸ் கூட போக விடலை. நேற்று தான் அமிதா அண்ணியோட வெளியே போனேன்" என சோர்வாக சொன்னாள்.
"ஏன் சம்யு?" என யோசனையுடன் அவளைப் பார்த்துக் கேட்டாள் ஸ்மிருதி.
"திரும்பவும் ஏதாவது அசம்பாவிதம் நடந்திடும் என்று பயப்படறாங்க" என கவலையாக சொன்னாள் சம்யுக்தா.
"கண்டிப்பாக கவலை இருக்க தானே செய்யும் சம்யு" என சொன்னவள், "எனக்கும் அதே பயம் தான். அதனால் தான் நானும் இரண்டு மாசம் இந்த பக்கமே வரலை. போன தடவை எங்கூட நீ வந்து தான் அந்த மாதிரி நடந்திடிச்சு" என வருத்தமாக சொன்னாள் ஸ்மிருதி.
"சரி விடு, அதுக்கு எந்த விதத்திலும் நீ காரணம் இல்லை. எல்லா பிரச்சனைக்கும் அவன் தான் காரணம்" என வெறுப்பாக சொன்னாள்.
"அப்போ நீ அவனை இன்னும் மறக்கலையா சம்யு?" என கேட்டாள் ஸ்மிருதி.
"மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை" என ஆழ்ந்த குரலில் சொன்னாள் சம்யுக்தா.
"இன்னும் எத்தனை நாள் இப்படியே போகும் சம்யு?" என கவலையுடன் கேட்டாள் ஸ்மிருதி.
"தெரியலை ஸ்மிருதி" என சொன்னவள், அலைபாயும் கண்களுடன் எழுந்து பால்கனிக்குச் சென்று நின்றாள்.
அவள் பின்னே சென்ற ஸ்மிருதி, "சம்யு, மூவ் ஆன். சில நேரங்களில் நம்மை பாதிக்கிற விஷயத்தை மறந்தோ இல்லை கடந்தோ போயிடனும். அதே இடத்தில் நின்னிட்டிருக்க கூடாது" என அழுத்தமாக சொன்னாள்.
"ஸ்மிருதி, எனக்குத் தெரியாம இல்லை. சொல்றது ஈஸி, பட்.. " என மேலே சொல்ல முடியாமல் சம்யுவின் கண்களை நீர் நிறைத்தது.
"எனக்கு புரியாம இல்லை சம்யு. ஆனா நீ இதிலிருந்து வெளியே சீக்கிரம் வந்தா தான் எல்லாருக்கும் நிம்மதி" என அவளைப் பார்த்து ஆதுரத்துடன் சொன்னாள்.
"மித்ரன் எனக்குக் கல்யாணம் செஞ்சிட்டு தான் அவன் கல்யாணம் செஞ்சிப்பேன் என்று பிடிவாதம் பிடிச்சான். நான் தான் அவனை வற்புறுத்தி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வைச்சேன்" என கண்களைத் துடைத்தபடி சொன்னாள்.
பேச்சை திசை திருப்ப நினைத்த ஸ்மிருதி, "மயூரி எப்படி சம்யு?" என கேட்டாள்.
"அவங்க ரொம்ப சாஃப்ட் அண்ட் ஸ்வீட். எப்படி கிளாஸில் பாடம் எடுக்கறாங்க என்றே தெரியலை. மெதுவாக தான் பேசறாங்க" என சொன்னாள் சம்யுக்தா.
"அப்பறம் எப்படி மித்ரன் லவ் பண்ணாங்க?" என கிண்டலாக கேட்டாள் ஸ்மிருதி்.
"எனக்குக் கல்யாணம் நடக்க இருந்ததுக்கு முன்னாடியே, இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிச்சிருக்கு. என் கல்யாணத்தின் போது நடந்த பிரச்சனையால் மித்ரன் அவ கிட்ட தன் காதலை சொல்லாமலே இருந்திருக்கான். ஆறு மாசம் முன்னாடி அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சதாலே, மித்ரன் வெளிப்படையா தன் காதலை அவகிட்ட சொல்லியிருக்கான். அவங்க வீட்டில் கல்யாணத்தை உடனடியாக முடிக்கணும் என்று நினைச்சாங்க. மித்ரன் என்னை நினைச்சு தயங்கினான். நான் தான் வற்புறுத்தி அவனை சம்மதிக்க வைச்சேன்" என்றாள்.
"ஒகே, நீ எப்போ தான் கல்யாணம் செஞ்சிக்க போறே?" என கேட்டாள் ஸ்மிருதி.
"எனக்கு இப்போ கல்யாணத்தை நினைச்சாலே வெறுப்பா இருக்கு. கண்டிப்பா கல்யாணம் செஞ்சிக்கனுமா என்ன? என்னால் தனியா இருக்க முடியாதா? ஏன் நீ கூட தான் இன்னும் கல்யாணம் செஞ்சிக்காமா இருக்கே" என சத்தமாக சொன்னாள் சம்யுக்தா.
"இந்த பால்கனியில் நீயும் நானும் தானே இருக்கோம். எதுக்கு இப்படி கத்தறே?" என கேட்ட ஸ்மிருதி, "எனக்குச் சரியான ஆள் கிடைக்கலை. கிடைச்ச அடுத்த வாரமே வெட்டிங்க் தான்" என சிரித்தப்டி சொன்னவள், "நீ திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுக்கறதில் தப்பில்லை. ஆனா யார் மேலோ இருக்கிற வெறுப்பில் அந்த முடிவுக்குப் போக வேண்டாம் என்று தான் சொல்றேன்" என சொன்னாள்.
"எனக்கு சசி மேலே வெறுப்பில்லை ஸ்மிருதி" என சொன்னவளை கூர்மையாக பார்த்தவள், "அப்போ அவனை கல்யாணம் செஞ்சிக்க வேண்டியது தானே?" என கேட்டாள் ஸ்மிருதி.
"சசி ஒரு வருஷமா ரொம்ப பிஸியா இருக்கான். பிஸினசையும் பார்த்துட்டு அவங்க அப்பா கேசையும் பார்த்துட்டு ரொம்ப கஷ்டப்படறான்" என கவலையாக சொன்னாள்.
"நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை" என அழுத்தமாக சொன்னாள் ஸ்மிருதி.
"அவங்க அப்பாவை அரெஸ்ட் பண்ண பிறகு சசியிடம் ஏதோ தயக்கம் தெரியுது. இன்னும் சொல்ல போனா என்னை கடத்தினாங்க என்று தெரிஞ்ச பிறகே அவனிடம் ஒரு விலக்கம் தெரிஞ்சது. இன்னும் இரண்டு குடுமபமும் ஃபிரண்ட்ஸாக தான் இருக்கோம். ஆனா அதுக்குப் பிறகு சசி வீட்டில் இருந்து யாரும் கல்யாணத்தைப் பத்தி பேசவே இல்லை" என உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள் சம்யுக்தா.
"சசியையோ அவங்க வீட்டைப் பத்தியோ பேசறதுக்கு முன்னாடி, அவனை கல்யாணம் செஞ்சிக்க நீ தயாராக இருக்கியா?" என கேட்டாள் ஸ்மிருதி.
இல்லை என தலையசைத்து மறுத்த சம்யுக்தாவை கூர்மையாக பார்த்தபடி, "அப்போ சித்தார்த்தை கல்யாணம் பண்ணிக்கோ" என்றாள்.
"சசியை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொன்னதால், சித்தார்த்தை கல்யாணம் செஞ்சிக்கனும் என்று அவசியமில்லை" என ஆழ்ந்த குரலில் சொன்னாள்.
"சம்யு, அப்போ எதுக்கு அவன் உன்னை கடத்தலை என்று போலிஸில் பொய் சொன்னே?" என கேள்வியாக அவளைப் பார்த்தாள்.
"ஸ்மிருதி, இதைப் பத்தி நாம் ஏற்கெனவே நிறைய தடவை பேசிட்டோம். அப்பா குமரவேல் கொலையைப் பத்தி வெளியே சொல்லாம குற்றவுணர்ச்சியால தவிச்சிட்டிருந்தார். வெற்றிவேல் தாத்தாவுக்கு இரண்டாவது முறை ஹார்ட் அட்டாக் வந்தது அவரால் தான் என்று தெரிஞ்சதும் இன்னும் நொறுங்கிட்டார். சித்தார்த் ஜெயிலுக்குப் போனா வெற்றிவேல் தாத்தாவால் தாங்க முடியாது என்று நினைச்சார். எங்கிட்ட அவனை அடையாளம் காட்ட கூடாது என்று சத்தியம் வாங்கிட்டார். அது வெற்றி வேல் தாத்தாவுக்கும், சித்தார்த்துக்கும் செய்யற பிராயசித்தமா நினைச்சார்" என்றாள்.
"எஸ், அதையே தான் நானும் கேட்கிறேன். அங்கிள் உன்னை அடையாளம் தானே காட்ட வேண்டாம் என்று சொன்னார். நீ எதுக்குத் தேவையே இல்லாம, அவனுக்காக ஓடி போனேன் என்று பொய் சொன்னே?" என கிண்டலாக கேட்டாள்.
"ஒழுங்கா அடையாளம் தெரியலை என்று சொன்னா, அந்த கேஸ் முடியாது. திரும்பவும் ஏதோ ஆதாரம் எடுத்திட்டு வந்து அகிலனோ, மித்ரனோ அவன் மேலே குற்றத்தை நிருபிக்க முயற்சி செய்வாங்க. அது தான் ஒரேடியா இந்த கேஸை மூட அப்படி பொய் சொன்னேன்" என்றாள்.
"நீ அப்படி சொன்னா சசி உன்னை கல்யாணம் செஞ்சிக்க மாட்டான் என்று நீ யோசிக்கலையா? இல்லை சசியை கல்யாணம் செஞ்சிக்க வேண்டாம் என்று தான் அப்படி சொன்னியா?" என யோசனையாக கேட்டாள்.
"நான் அப்போ இதைப் பத்தி யோசிக்கலை" என் சொன்னவளை நம்பாமல் பார்த்தாள் ஸ்மிருதி.
"சசி வேண்டாம் என்றால் விட்டுடலாம். ஏன் சித்தார்த்தை வேண்டாம் என்று சொல்றே?" என ஆர்வத்துடன் கேட்டாள்.
"சித்தார்த் என்னை விருபறதாகவோ, கல்யாணம் செஞ்சிக்கிறேன் என்று சொல்லவே இல்லை" என சீரியசாக சொன்னாள் சம்யுக்தா.
"ஐயோ, இது ஜோக்கா. எனக்குச் சிரிப்பே வரலை" என நக்கலாக சொன்னாள் ஸ்மிருதி.
"ஸ்மிருதி, நான் சீரியசாக தான் சொல்றேன். அவன் எங்கிட்ட சொல்லவே இல்லை" என சொன்னாள் சம்யுக்தா.
"சம்யு, நான் அவனை மாலில் ஒரே ஒரு தடவை தான் பார்த்தேன். எனக்கே அவன் உன்னை விரும்பறான் என்று பார்த்தவுடனே தெரிஞ்சது. எனக்கு மட்டுமில்லை, உங்க வீட்டில் இருக்கிறவங்க, அகிலன், அமிதா, வெற்றிவேல் தாத்தா, நாதன் அங்கிள், ரவிகுமார், ஏன் சசிக்கே அவன் உன்னை விரும்பறான் என்று அப்பவே தெரியும். அது உனக்குத் தெரியலை என்று சொன்னால நம்பற மாதிரியில்லை. வார்த்தையால சொன்னா தான் காதலா சம்யு? அவன் உன்னை பார்க்கிற ஒவ்வொரு பார்வையிலும் அதைத் தானே சத்தமாக சொல்லிட்டிருந்தான். அவன் உன்னை விருமப்றதை ஒரு தடவை கூட எங்கேயும் மறைச்சதே இல்லை,. எங்க எல்லாருக்கும் கேட்டது, உனக்குக் கேட்கலை என்று சொன்னால், எப்படி நம்பறது? அவன் உங்கிட்ட சத்தியமங்கலத்தில் சொல்ல வந்த போதும், கடைசியா போலிஸ் ஸ்டேஷனில் சொல்ல வந்த போதும் நீ தானே அவனை சொல்ல விடலை. சரி, அவன் இப்போ வந்து தன் காதலை சொன்னா உடனே சம்மதம் சொல்லுவியா?" என கேட்டாள் ஸ்மிருதி.
இல்லை என்று வேகமாக தலையசைத்து மறுத்தவளை கேள்வியுடன் பார்த்தாள் ஸ்மிருதி.
"சித்தார்த் என்னை காரணம் சொன்னாலும், அவன் என்னை கடத்தினதை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது. என்னோட திருமணத்தை நிறுத்தினதை எந்த விதத்திலேயும் என்னால ஒத்துக்கவே முடியலை. என் மனசில் அந்த காயம் ஆறவே ஆறாது" என கோபமாக சொன்னாள்.
"ஒகே, சசியும் வேண்டாம். சித்தார்த்தும் வேண்டாம். வேற யாரையாவது கல்யாணம் செஞ்சிக்கோ. பழசையெல்லாம் மறந்துட்டு, புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பி சம்யு" என நெகிழ்ந்த குரலில் சொன்ன ஸ்மிருதி, "இரண்டு வருஷமாக நடந்ததையே நினைச்சிட்டிருந்தா ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்க அப்பா அம்மா மட்டுமில்லை சம்யு, நீ ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிட்டா தான் எல்லோருக்குமே நிம்மதி, முக்கியமா சசிக்கும், சித்தார்த்துக்கும்" என சொன்னாள்.
"ஏன் அவங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனை? ஒருத்தன் தன் பிஸினஸில் தீவிரமாக இருக்கான். இன்னொருத்தன் ஒன்றரை வருஷமா நான் இருக்கேனா இல்லையா என்று கூட பார்க்கலை. என்னோட பேசவோ, தொடர்பு கொள்ளவோ ஒரு தடவை கூட முயற்சிக்கலை. இத்தோட நாலு தடவை சென்னை வந்தும், என்னை ஒரு முறை கூட சந்திக்கவேயில்லை. ஏன் மித்ரனோட கல்யாணத்துக்குக் கூட அவன் வர போறதில்லை" என வேகமாக மூச்சிறைக்க சொன்னவளை ஆர்வத்துடன் பார்த்தாள் ஸ்மிருதி.
"சம்யு, உனக்கே உன் மனசில் என்ன இருக்கு என்று புரியலை. அது சீக்கிரம் உனக்கு தெரிய கடவுள் தான் வழி செய்யனும்" என்று சொல்லி விட்டு எழுந்தாள் ஸ்மிருதி.
"ஸ்மிருதி, என மனசில் என்ன இருக்கு? நான் தான் உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேனே?" என கவலையுடன் கேட்டாள் ஸம்யுக்தா.
"சம்யு, சில உணர்வுகளை சொல்லி புரிய வைக்க முடியாது. அதை அவங்களே தான் உணரனும். அதை மத்தவங்க சொன்னாலும், மறுக்க தான் தோணும். இன்னும் கேட்டா, நம்மையே அது இல்லை என்று சொல்லி ஏமாத்திக்க தோணும். திருமப் திரும்ப அதையே சொல்லி, நம்மையும், மத்தவங்களையும் நம்ப வைக்க முயற்சிப்போம். நான் சொல்றது புரிய வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக உனக்குப் புரியும்" என்றாள் ஸ்மிருதி.
குழப்பத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தவளிடம், "எதையும் போட்டுக் குழப்பிக்காதே. சந்தோஷமாக இரு. நான் உன்னை கல்யாணத்தில் பார்க்கிறேன்" என கதவை திறந்து வெளியே சென்றாள் ஸ்மிருதி.