தன்னருகில் யோசனையோடு படுத்திருந்தவளின் தோளில் தன் தாடையை வைத்து அழுத்தியவன், "என்ன யோசனை?" என்றான்.
"நான் செய்யப் போவது சரி தானே மாமா?" என திடுமென்று சந்தேகமாக வினவினாள் அவந்திகா.
"அதில் என்னடா தங்கம் சந்தேகம் உனக்கு? நீ செய்ய விரும்புவது மிகவும் நல்ல செயல் தான்!" என்று அவள் விரல்களை வருடி உதட்டில் பதித்தான் சியாம்.
"ஆனால்... இது குறித்து நிறைய ஆர்டிக்கிள்ஸ், கதைகள், படம் எல்லாம் கூட வந்திருக்கிறதே. அப்படி இருக்கும்பொழுது இதற்கு சரியான வரவேற்பு கிடைக்குமா அல்லது எல்லோரும் சொல்வதை தானே நீயும் சொல்கிறாய் என அலட்சியப்படுத்தி விடுவார்களா?"
சட்டென்று திரும்பி அவள் மீது தன்னுடல் பாரம் அழுத்தாது சரிந்தவன், "செல்லம்மா... நம் மொழியில் சிறந்ததொரு பழமொழி இருக்கிறது உனக்கு தெரியுமா?" என்று விவரம் கேட்டான்.
ம்... என அவள் புருவம் சுருக்க, "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!" என்றுவிட்டு அவள் கன்னத்தை கவ்வினான்.
பளீரென்று முறுவலித்தவள், "புரிகிறது..." என அவனை கீழே தள்ளி அவன் முகம் நோக்கினாள்.
"என்ன புரிகிறது?" என்றான் விரிந்த புன்னகையுடன்.
"அதாவது... கதைகளிலும், படங்களிலும் உள்ளதால் மட்டுமே நம் வாழ்க்கையின் தேவைகளை சரி செய்துவிட முடியாது. அதை நீ நேரிடையாக செயலாற்ற நினைப்பதால், உன்னுடைய முயற்சிக்கு என்று தனி சிறப்பானதொரு வரவேற்பு கிடைக்கும் என சொல்ல வருகிறீர்கள்!"
"எக்ஸாக்ட்லி!" என்று கண்சிமிட்டியவனின் கன்னத்தை நறுக்கென்று கடித்தாள் இவள்.
ஏய்... என்று அவன் வலியில் சிணுங்கும் முன்னே முகம் முழுவதும் மாறி மாறி முத்தமழை பொழிந்தவள், அவனை இறுக கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் தலைசாய்த்து படுத்தாள்.
"தாங்க்ஸ் மாமா... ஏதோ ஒரு வேகத்தில் குழுமத்தை ஆரம்பித்து விட்டேன். திடீரென்று குழப்பம் வந்து விட்டது, இதுபோன்று வம்புக்கென்று யாராவது ஏதாவது கேள்வி எழுப்பினால் எப்படி சமாளிப்பது? உன் செயல் பத்தோடு பதினொன்று போலத்தானே என்பது போல் தோன்றவும் மிகவும் டல்லாகி விட்டது மனது. அதை சரி செய்யதான் கொஞ்ச நேரமாக குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்களிடம் அதை பகிரவும் ஒரே நொடியில் ஒரு பழமொழியை சொல்லி என்னை தெளிவாக்கி விட்டீர்கள் நீங்கள். லவ் யூ மாமா!" என கொஞ்சியவளை தன்னுள் புதைத்துக் கொண்டான் சியாம்.
YOU ARE READING
அழகே அழகே... எதுவும் அழகே!
General Fictionபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் எ...