அதே இரவில், குறிப்பிட்ட அதே நேரத்தில் முடிந்து போன அஸ்வின் அபர்ணாவின் நிச்சயம் குறித்து ரதிநந்தனாவும் அவள் பாட்டி வள்ளியும் பேசிக்கொண்டிருந்தனர்.அல்ல கூற்று தவறு. அவர் தொடர்ந்து திட்ட, இவள் அர்ச்சனையாய் வாங்கி கொண்டிருந்தாள் என கூறுவதே சரி. திட்டல் என்றால் குரல் உயர்த்தி கடுஞ்சொல் கூறுவதெல்லாம் அல்ல ஆதங்கமே வார்த்தைகளாய்.
கிட்டத்தட்ட சில நூறு மைல்களுக்கு அப்பால் அவர் வருத்தமாய் பேசுவதை ஏதோ நேரில் கேட்பது போல அவள் முகத்தை வைத்திருந்தாள். உண்மையாய் அவள் முகம் அப்படித்தான் இருந்தது. சோகமாய்!
அதற்காக ரதி பேசாமல் இல்லை. தன் பக்க கருத்தையும் அவ்வப்போது பேச்சினூடே கூறி கொண்டிருந்தாள்.
கடுஞ்சொல் பிரயோக படுத்துவது மட்டுமின்றி ஆதங்கம் வருத்தம் இவற்றை வெளிப்படுத்துவதும் ஒருவகையான திட்டு தான். இதற்கு மாற்று பெயராக அறிவுரை புத்திமதி என சொல்லலாம். என்ன வெளிக்காட்டும் முறை வேறுபட்டாலும் யுக்தி ஒன்றுதான். அமைதியாக கூறினால் ஏற்றுக்கொள்ளாத நாம், அடாவடியாக கூறினால் செய்வோமே. இதுவே திட்டு, அறிவுரை இரண்டின் வித்தியாசம்.
உரிமையானவர்கள், உண்மையானவர்கள், அன்பானவர்கள், அரணாகி நின்றவர்கள் திட்டினால் மட்டும் எதிர்த்து பேச வார்த்தை வருவதில்லை. எதிர்த்து பேசினாலும் 'நம் அம்மாதானே. வேறு யாரிடம் எதிர்த்து பேசுவோம்' என ஒரு எண்ணம். எதிர்த்தரப்பினருக்கு 'நம் பிள்ளையை திட்டாமல் வேறு யாரிடம் உரிமையாக கேட்பது' என எண்ணம். சுருங்க சொல்லப்போனால் திட்டுவது பெற்றோரின் உரிமை. எதிர்ப் பேச்சு பிள்ளைகளின் செல்லம்.
"ஏன் அம்மு அபர்ணா நிச்சயத்துக்கு போகல? அப்பா கூப்பிட்டும் நீ போகாம இருந்திருக்க கூடாது?"
"உன்ன கூப்பிடாத இடத்துக்கு நான் எப்படி போக முடியும் பாட்டி? எனக்கு பிடிக்கல. உங்கள கூப்பிட்டா நானும் வரேன். இல்லனா நானும் போகமாட்டேன்"
பேச்சு இதுதான். அபர்ணாவின் நிச்சயத்திற்கு ரதிநந்தனா செல்லவில்லை. கண்ணன் அழைத்தும் கூடவே அண்ணன் அழகர் அழைத்தும் அவள் செல்லவில்லை. வேலை இருக்கு என கூறிவிட்டாள். சொன்னபடி வேலையையும் வைத்துக்கொண்டாள். இது ரதி நந்தனாவின் பாட்டி வள்ளிக்கு தெரிய வர, இன்று கேட்கிறார். வள்ளி, கண்ணனின் தாயார்.