8 பிடித்தவனுக்காக
அது ஒரு வார இறுதி...
"ஹாய் நந்து..." என்றாள் அங்கு வந்த குஷி.
"ஹாய்..." என்றான் அவன் சுரத்தே இல்லாமல்.
"என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டல்லா இருக்க?"
"அம்மா இன்னைக்கு சிக்கன் செய்றேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணி இருந்தாங்க. ஆனா செய்யல" என்றான் சோகமாய்.
"ஏன் ஆன்ட்டி?"
"நாங்க நாட்டுக்கோழி, அதாவது வீட்ல வளர்க்கிற கோழி மட்டும் தான் சமைப்போம். தெரிஞ்சவர் ஒருத்தர் கிட்ட அதை கொண்டு வரச் சொல்லி இருந்தேன். ஆனா அவங்களால அதை இன்னைக்கு கொண்டு வர முடியல..."
"அல்லவ்வுக்கு கூட சிக்கன் ரொம்ப பிடிக்கும் இல்ல?"
"ஆமாம். ஆனா, அவன் தன்னோட ஹெல்த்தில் ரொம்ப கான்ஷியஸா இருப்பான். அதனால அவனும் நாட்டுக்கோழி மட்டும் தான் சாப்பிடுவான். எங்க ஏரியாவுல அது கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால அங்கிள் அவருக்கு தெரிஞ்சவர் கிட்ட சொல்லி வச்சு, கொண்டு வர சொல்லுவாரு"
அவளுக்கு சட்டென்று ஏதோ ஒரு யோசனை உதிக்க, அங்கிருந்து சென்று தனது தோழி அர்ச்சனாவுக்கு ஃபோன் செய்தாள். அவள் சென்னை புறநகரில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பது அவளுக்கு தெரியும்
"அச்சு, நான் குஷி பேசுறேன்"
"ஹாய், உனக்கு என்ன திடீர்னு என்ன ஞாபகம் வந்திருக்கு?"
"எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும்"
"என்ன வேணும்னாலும் கேட்கலாம்"
"எனக்கு வீட்ல வளர்க்கிற கோழி வேணும். நாளைக்கு சாயங்காலம் நீ காலேஜுக்கு திரும்பி வரும் போது கொண்டு வா..."
"குஷி, எங்க அம்மா பணம் கொடுத்தா தான் கொடுப்பாங்க. அவங்க ஃபிரியா கொடுக்க மாட்டாங்க..." என்றாள் தயக்கத்துடன்.
"பைத்தியம்... நான் உன்கிட்ட ஃப்ரீயாவா கேட்டேன்? எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லு"
"ஒரு கோழி 400 ரூபா"
"சரி, நான் உனக்கு ஜிபே பண்ணிடுறேன். நீ அதை கொண்டு வரும் போது நான் பஸ் ஸ்டாண்ட்ல வாங்கிக்கிறேன்"
"குஷி, உனக்கு நாட்டுக்கோழி குழம்பு ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியாதே. நான் வில்லேஜ்ல இருந்து தான் வரேன்னு உனக்கு தெரியும் தானே? அப்ப கூட இதைப்பத்தி நீ எங்ககிட்ட ஒரு தடவை கூட சொன்னதே இல்லையே...?"
"இல்ல, இது எனக்காக இல்ல. என் ஃபிரண்டுக்காக"
"ஓகே ஓகே.. நான் நாளைக்கு வரும் போது கண்டிப்பா கொண்டு வரேன்"
"தேங்க்யூ பேபி" என்று திருப்தியுடன் அழைப்பை துண்டித்தாள் குஷி.
மறுநாள் மாலை
குஷி பேருந்து நிலையத்தில் நுழைந்த போது, அங்கு அர்ச்சனாவுடன் காத்திருந்தாள் லாவண்யா.
"லாவண்யா, நீ இங்க என்ன பண்ற?" என்றாள் குஷி.
"அது நான் கேட்க வேண்டிய கேள்வி. ஒவ்வொரு தடவையும் அர்ச்சனா ஊருக்கு போயிட்டு வரும் போது அவளை நான் தான் பிக்கப் பண்ணுவேன். இந்த இடத்துக்கு நீ தான் புதுசு" என்று அர்ச்சனாவுடன் ஹை ஃபை தட்டிக்கொண்டாள் லாவண்யா
"ஆமாம், நீ என்கிட்ட ஒரு தடவை சொன்ன. நான் தான் மறந்துட்டேன்"
"அது சரி, என்ன விஷயம், சிக்கன் எல்லாம் வாங்கிக்கிட்டு போற?"
"ஆமாம்... அர்னவுக்காக சமைக்க போறேன்"
"நான் இதை எதிர்பார்த்தேன்... உனக்கு இந்தக் கோழியை சமைக்க தெரியுமா?"
"நான் நிறைய தடவை சிக்கன் சமைச்சிருக்கேன்"
"நாட்டுக்கோழியை அப்படி சமைக்க மாட்டாங்க. அதுக்குன்னு சில டெக்னிக் இருக்கு. அதை அப்படி சமைச்சா சூப்பரா இருக்கும்"
"கடவுளே! அப்படியா...? எனக்கு அது தெரியாதே"
"கவலைப்படாதே! அர்ச்சனா அதுல எக்ஸ்பர்ட். அவ உனக்கு ஹெல்ப் பண்ணுவா"
"இல்ல இல்ல, நீ எனக்கு எப்படின்னு மட்டும் சொல்லு. நானே சமைக்கிறேன்"
லாவண்யாவும் அர்ச்சனாவும் பொருள் பொதிந்த பார்வை பார்த்துக் கொண்டார்கள்.
"சரி, அப்படின்னா வா, உங்க வீட்டுக்கு போகலாம். உனக்கு இதை எப்படி சமைக்கணும்னு சொல்லிக் கொடுத்துட்டு நாங்க கிளம்பறோம்" என்றாள் லாவண்யா.
"தேங்க்யூ சோ மச்,"
........
அர்ச்சனா நாட்டுக்கோழியை எப்படி சமைக்க வேண்டும் என்று குஷிக்கு சொல்லிக் கொடுத்தாள். அவர்கள் அனைவரும் சேர்ந்து சமையலில் ஈடுபட்டிருப்பதை பார்த்த கரிமாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அர்ச்சனா கூறிய முக்கியமான குறிப்புகளை குறித்துக் கொண்டு, சமையலை துவங்கினாள் குஷி
"குஷி, நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா?" என்றாள் லாவன்யா.
"நீ கேட்கவே வேண்டாம். சமைச்சு முடிச்சு, உனக்கு நானே சிக்கன் தர்றேன்" என்று கிண்டலாய் கூறிவிட்டு சிரித்த குஷியை, விளையாட்டாய் ஒரு அடி போட்டாள் லாவண்யா.
"உனக்கு அர்னவை பிடிக்கும் தானே?"
"ரொம்ப பிடிக்கும்"
"நீ இது வெறும் ஃபிரண்ட்ஷிப் மட்டும் தான்னு நினைக்கிறியா?"
வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்த அவளது கை நின்றது.
"எதுக்காக திடீர்னு இப்படி கேட்கிற?" என்றாள் லேசான பதற்றத்துடன்.
"நீங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஃபிரெண்டுன்னு எனக்கு தெரியும். நீங்க ரெண்டு பேரும் முதல்ல மாதிரி பேசிக்கிறது இல்லனாலும், அவர் பெயரை சொல்லும் போதெல்லாம் உன் கண்ணுல மின்னல் அடிக்கிறதை நான் கவனிக்கிறேன். இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் குஷி? என்னை தப்பா எடுத்துக்காத. காதல்னு வரும் போது அர்னவ் எப்படிப்பட்டவர்னு இந்த உலகத்துக்கே தெரியும். நீ பின்னாடி வருத்தப்பட வேண்டாம்னு தான் நான் கவலைப்படுகிறேன்..."
"எனக்கு தெரியல லாவன்யா. அர்னவ்னு வரும் போது நான் விசித்திரமா நடந்துகிறேன்னு எனக்கே தெரியுது. இது ஃபிரண்ட்ஷிப்புக்கு அப்பாற்பட்டதுன்னு நானும் கூட சொல்லுவேன். ஆனா இது நீ நினைக்கிறது தானான்னு எனக்கு தெரியல. காதல் ரொம்ப அழகான உணர்வு. நமக்கு ஏற்பட்டிருக்கிறது காதல் தான்னு புரிஞ்சிக்க ஒரு கட்டம் வரும். அந்தக் கட்டத்தை நான் இன்னும் கடக்கல. அதுவரைக்கும் இது காதல் தான்னு என்னால நிச்சயமா சொல்ல முடியாது."
"சரி இருக்கட்டும் விடு. யாருக்கு தெரியும், எதிர்காலம் யாருக்கு எதை சேர்த்து வச்சிருக்கோ...! இப்போ சீக்கிரம் சமைச்சு முடி"
கிராமத்து கைமணத்துடன் அதை சமைத்து முடித்தாள் குஷி. அதன் மனம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை கூட உசுப்பி விட்டது. அந்த வாசனையை பிடித்துக் கொண்டு வந்தார் ரத்னா. அவரைப் பார்த்தவுடன் லாவண்யா பதற்றம் அடைந்தது குஷிக்கு குழப்பத்தை தந்தது. அவள் அர்ச்சனாவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். அதை குஷி கவனித்தாள்.
"கரிமா, என்ன ஒரு வாசனை... நீ கலக்குற போ..." என்றார் ரத்னா.
"ரொம்ப தேங்க்ஸ் ரத்னா. சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு" என்றார் கரிமா, அதை அவர் சமைத்தது போல.
அதை கேட்ட குஷி திடுக்கிட்டாள்
"அம்மா இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஆன்ட்டி, இதை சமைச்சது நான் தான்..." என்றாள் முகத்தை மூஞ்சூறு போல் வைத்துக்கொண்டு.
அவளைப் பார்த்து ரத்னாவும், கரிமாவும் வாய்விட்டு சிரித்தார்கள். அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்று அவர்கள் அப்படி செய்தார்கள் என்று புரிந்தது குஷிக்கு
"நீங்க ரெண்டு பேரும் என்னை கிண்டல் பண்றீங்களா?"
"நாங்க செய்யலன்னா, வேற யார் செய்வா?" என்றார் ரத்னா.
அவர்கள் மீண்டும் சிரித்தார்கள்.
அவர்களது நாடகத்தை புன்னகையுடன் பார்த்துக் கொண்ட லாவண்யாவை பார்த்த குஷி, அவள் கையைப் பிடித்து இழுத்து,
"ஆன்ட்டி, இவ என் ஃப்ரெண்ட் லாவண்யா, இவ அர்ச்சனா. உங்களை மாதிரியே எனக்கு ரொம்ப க்ளோஸ்." என்று கூறிவிட்டு லாவண்யாவின் பக்கம் திரும்பிய அவள்
"இவங்க தான் சின்ன வயசுல இருந்தே என்னோட ஃபேவரைட் ஆன்ட்டி. இவங்களோட வயசை வச்சு தப்பா நெனச்சிடாத. விட்டா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நமக்கு பைத்தியம் பிடிக்க வச்சிடுவாங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ பார்த்தியே அந்த மாதிரி... இவங்க ரெண்டு பேரும் எவர் கிரீன் உமென்" என்றாள் பின்னாலிருந்து ரத்னாவின் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்ட அவள்.
"லாவண்யா, அர்ச்சனா, இவ எப்பவுமே இப்படித்தான்... எல்லாத்தையும் ரொம்ப மிகைப்படுத்தி பேசுவா. அவளுக்கு பிடிச்சவங்களை புகழ்ந்து பேச அவளுக்கு போரே அடிக்காது. ரொம்ப நல்ல பொண்ணு" என்று, தன் தோளின் மீது ஊன்றி இருந்த அவள் கன்னத்தை தொட்டார் ரத்னா.
ஒன்றும் கூறாமல் அவர் கூறியது சரி என்பது போல் தலையசைத்தாள் லாவண்யா. அவளுக்கு ரத்னாவை மிகவும் பிடித்திருந்தது. அவரது எளிமையாய் பழகும் விதம் அவளை கவர்ந்தது.
ரத்னா வந்த பிறகு லாவண்யாவின் நடவடிக்கை விசித்திரமாய் மாறிப்போனது. அவளிடம் இது பற்றி பிறகு பேச வேண்டும் என்று நினைத்தாள் குஷி. சமையலறைக்குச் சென்ற அவள், தான் சமைத்த கறியை ஒரு டப்பாவில் போட்டு எடுத்துக் கொண்டு வந்து அதை ரத்னாவிடம் கொடுத்தாள்.
"நாட்டுக்கோழி..."
அவள் கூறியது அதை மட்டும் தான். ஒரு நமட்டு புன்னகை பூக்காமல் இருக்க முடியவில்லை ரத்னாவினால். வழக்கம் போல் அவளிடம் விளையாடலாம் என்று நினைத்தார் அவர்.
"தேங்க்யூ சோ மச். அங்கிளும் நந்துவும் நிச்சயமா இதை விரும்பி சாப்பிடுவாங்க" என்றார்.
"அப்படின்னா அல்லவ் சாப்பிட மாட்டானா? அவனுக்கு இது ரொம்ப பிடிக்கும் தானே?" என்றாள் சோகமாய்.
"ஆமாம். அவனுக்கு பிடிக்கும். ஆனா இதை சாப்பிடற அதிர்ஷ்டம் அவனுக்கு இல்ல. அவன் டின்னருக்கு வெளியில போயிருக்கான்" என்றார் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.
"அதனால என்ன? அவன் திரும்பி வந்ததுக்கு பிறகு அவனுக்கு குடுங்க"
"அவனைப் பத்தி உனக்கு தெரியாது. அவன் ரொம்ப ஹெல்ப் கவுன்ஷியஸ். அவன் ஒரு தடவை சாப்பிட்டு முடிச்சிட்டா, மறுபடியும் எதையும் சாப்பிட மாட்டான்"
அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த குஷி,
"அவனும், அவனோட ரூலும்... மத்தவங்கள வெறுப்பேத்துறதுக்குனே இப்படி எல்லாம் செய்கிறான் போல..." என்றாள்.
"உனக்கும் உன்னோட நாட்டுக்கோழிக்கும் தேங்க்யூ சோ மச், செல்லம்! பை..." என்று அங்கிருந்து சென்றார் ரத்னா.
லாவண்யாவும் அர்ச்சனாவும், தன் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு நின்ற குஷிக்காக மனதார வருத்தப்பட்டார்கள். பாவம் அவள், அவ்வளவு விருப்பத்தோடு அதை சமைத்ததே அர்னவுக்காகத்தானே...!
ரத்தின மஹால்
இரவு உணவிற்காக அனைவரும் உணவு மேஜையில் கூறினார்கள். கோழிக்கறி வைக்கப்பட்டிருந்த டப்பாவை திறந்தவுடன் அதிலிருந்து வீசிய மனம் அனைவரையும் அதை நோக்கி இழுத்தது.
"இன்னைக்கு நீ சிக்கன் சமைச்சியா? சொல்லவே இல்ல..." என்றார் அரவிந்தன்.
"அம்மா, வாசனையே வாயில எச்சில் ஊற வைக்குது" என்றான் நந்தா.
"எதுக்காக மா ராத்திரியில சமைச்சீங்க? மத்தியானம் சமைச்சு இருந்தா நல்லா சாப்பிட்டு இருக்கலாம் இல்ல. டின்னருக்கு போய் சமச்சி இருக்கீங்களே..." என்றான் அர்னவ்.
"கூல் அரு... நீ நிறைய சாப்பிடாதே" என்றான் நந்தா.
"ஆமாம், எனக்கு ரெண்டு மூணு பீஸ் போதும்" என்றான் அர்னவ்.
"நீ ராத்திரியில சமைக்க மாட்டியே... இது எங்கிருந்து கிடைச்சிது உனக்கு?" என்றார் அரவிந்தன்
"இதை நான் சமைச்சேன்னு எல்லாரும் நினைக்கிறீங்களா? இதை சமைச்சது நான் இல்ல"
அனைவரும் ரத்னாவை பார்த்தார்கள், இவ்வளவு சுவை, மனத்தோடு அதை சமைத்தது யார் என்று தெரிந்து கொள்ள.
"இதை சமைச்சது குஷி"
இரண்டு துண்டுகளை எடுத்துக்கொண்டு அந்த டப்பாவை கீழே வைக்க முனைந்த அர்னவ், அதிலிருந்து மேலும் சில துண்டுகளை எடுத்துக் கொண்டான், அதன் ருசியை அறிவதற்கு முன்பே...
"அரு, இது சீட்டிங்... நீ நிறைய சாப்பிட மாட்டேன்னு சொன்ன இல்ல? அப்புறம் எதுக்காக இத்தனை எடுக்கிற?" என்றான் நந்தா.
"ஒரு நாள் சாப்பிட்டா ஒன்னும் கெட்டுப் போயிடாது... நான் எடுக்கிறது என்னோட ஷேர் தான்" என்றான் அமைதியாய்.
அவன் அப்படி கூறியதில் ரத்னாவுக்கு வியப்பு எதுவும் இல்லை. அவன் பழையபடி குஷியிடம் பேசுவதில்லை தான். அதற்காக அவனுக்கு அவளை பிடிக்காது என்று அர்த்தமல்ல. வேண்டிய நேரம் எடுத்துக்கொண்டு பொறுமையாய் அதை சுவைத்து சாப்பிட்டான் அவன். அதைப் புகழ அரவிந்தனும் நந்துவும் வார்த்தைகளை தேடிக்கொண்டே சாப்பிட்டார்கள். அதைப் பற்றி எல்லாம் அர்னவ் கவலைப்படவில்லை. அவன் வாய்விட்டு பாராட்டவும் அவசியமில்லை. அவன் வழக்கமாய் சாப்பிடுவதை விட அதிகமாய் சாப்பிட்ட உணவின் அளவிலிருந்தே தெரிந்தது, அவனுக்கு அது எவ்வளவு பிடித்திருந்தது என்று
"அவ இதை எங்கிருந்து வாங்கிட்டு வந்து சமைச்சா?" என்றார் அரவிந்தன்.
"அவ ஃபிரண்டு பொன்னேரியில இருக்காளாம். அங்கிருந்து வாங்கிட்டு வர சொல்லி சமைச்சா"
"அவளுக்கு நாட்டுக்கோழி இவ்வளவு பிடிக்கும்னு எனக்கு தெரியாது" என்றார் அரவிந்தன்.
"அவளுக்கு பிடிக்கும்னு அவ சமைக்கல... அவளுக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தருக்கு பிடிக்கும்னு சமைச்சா..." என்றார் கிண்டலாய்.
அர்னவ்வால் புன்னகைகாமல் இருக்க முடியவில்லை.
"அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அரு. அவ கொஞ்சம் கூட மாறலைன்னு உனக்கு புரியலையா? எதுக்காக அவகிட்ட இருந்து நீ விலகியே இருக்க? உனக்கு நாட்டுக்கோழி பிடிக்கும்னு நான் சாதாரணமா தான் சொன்னேன். அவ ஃபிரண்டுக்கு ஃபோன் பண்ணி வர வச்சு, யாருடைய ஹெல்பும் இல்லாம அவளாவே மனசார சமைச்சு கொடுத்திருக்கா"
"ஆமாம் அரு, அவ நம்மளோட பழைய குஷியே தான். அவ கூட ஃபிரண்டா இருக்க ட்ரை பண்ணு. அவள் சந்தோஷப்படுவா" என்றார் அரவிந்தன்
சரி என்று தலையசைத்தான் அர்னவ். அவள் தனக்காக, தனக்கு பிடித்தவற்றை செய்வது அவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அவள் சிறிதும் மாறாமல் இருந்தது அவனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. அவன் மனதில் இருந்த பயம் தான் அவன் அவளிடம் நெருங்காமல் இருந்ததற்கு காரணம். எந்த பெண்ணையும் நம்புவதற்கு அவன் தயாராக இல்லை. ஆனால் அவனது இடத்தை குஷி வேறு யாருக்கும் கொடுக்க தயாராக இல்லை என்பது தெரிந்த பின், அவன் மனம் நிம்மதி அடைந்தது.
ஆனால் அதே நேரம், அவனுக்கு தயக்கமாகவும் இருந்தது. அவனுக்கு தெரியும், அவன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவள் அவனை நோக்கி பத்தடி ஓடி வருவாள் என்று. அவளைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாது. அவன் அதற்கு தயாரா?
அவன் அவள் முடியை பிடித்து இழுத்ததும், கன்னத்தைப் பிடித்து கிள்ளியதும், அவளது சாக்லேட்டை பிடுங்கி தின்றதும், துரத்தி துரத்தி வெறுப்பேற்றியதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவன் மறுபடி அவளிடம் அப்படியெல்லாம் பழக ஆரம்பித்து விட்டால் அவள் என்ன செய்வாள்? என்று அவன் மனதில் தோன்றிய எண்ணத்தை குறித்து அவனே ஆச்சரியமடைந்தான். அவனையும் அறியாமல் அவனது இதழ்கள் புன்னகை புரிந்தன.
தொடரும்...