7 உண்மை அன்பு
மறுநாள் காலை, அர்னவ் எழுந்தவுடன் செய்த முதல் வேலை, அவனது அம்மாவின் கைபேசியை தேடியது தான். வழக்கம் போலவே அது உணவு மேஜையின் மீது இருந்தது. அதை எடுத்து குஷியின் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் ஐ பார்த்துவிட்டு, புன்னகையுடன் அந்த கைபேசியை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு மீண்டும் தன் அறைக்குச் சென்றான்.
குஷியின் வருகை அந்த பகுதியில் இருந்த பெண்களுக்கிடையில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. ஏன் இருக்காது? சிங்கத்தின் குகைக்குள் தைரியமாய் நுழைந்த ஒரே பெண் அவள் தானே...! அவர்களது வினோத பார்வை குஷியை முதலில் குழப்பியது. அர்னவ்வின் பயமுறுத்தும் நடவடிக்கை அவளது குழப்பத்தை தீர்த்தது. அவள் தன்னை மிகச்சிறந்தவளாய் உணர்ந்தாள். அது மட்டுமல்லாது, அஸ்வினும் ஸ்ருதியும், அவளுக்கு அர்னவிடம் இருந்த நட்பை பற்றி முரசு அறிவித்து தெரிவித்தனர். அது அவர்களுக்குள் பொறாமையை கிளப்பியது. அஸ்வினும் சுருதியும் கூறியது உண்மையாக இருக்கும் என்று அவர்கள் நம்பவில்லை.
........
திட்டமிட்ட படியே, அவர்களுக்கு பிடித்த, தொடரை பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான் நந்து கிஷோர். குஷி தன் வீட்டை விட்டு வெளியே வந்த போது, அந்த பகுதி பெண்கள், அவரவர்கள் வீட்டின் வாசலில் நின்று, அவளை பார்த்து ஏதோ முணுமுணுப்பதை கவனித்தாள். அப்பொழுது அஸ்வினும் சுருதியும் அவர்களது நண்பர் பட்டாளத்துடன் அங்கு வந்தார்கள்.
"குஷி அக்கா, இவங்க எல்லாரும் எங்க ஃபிரண்ட்ஸ். இவங்களையும் நாங்கள் கூட்டிக்கிட்டு வரட்டுமா?" என்றாள் சுருதி.
தன் புருவம் உயர்த்திய குஷி, தனது கைபேசியை எடுத்து நந்துவுக்கு ஃபோன் செய்து,
"கொஞ்சம் வெளியில வாயேன்" என்றாள்.
வெளியே வந்த நந்து அங்கு அவள் பிள்ளைகளுடன் நின்றிருந்ததை பார்த்து ஓரளவுக்கு விஷயத்தை புரிந்து கொண்டான்.
"ஒன்னும் பிரச்சனை இல்ல, குஷி. நான் ஹால்ல தான் அரேஞ்ச் பண்ணி இருக்கேன்" என்றான்.
அவன் உள்ளே செல்ல, அனைவரும் அவனை பின்தொடர்ந்து சென்றார்கள். உள்ளே வந்த அவர்கள், அர்னவ் வரவேற்பறையில் அமர்ந்து தனது மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து திகைத்து நின்றார்கள். குஷியும் கூட வியப்படைந்தாள்.
"ஹாய் அல்லவ்" என்றாள் குஷி.
அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
"நீ இங்க என்ன பண்ற அரு?" என்றான் நந்தா.
"ஏன், நான் இங்க இருந்தா உனக்கு ஏதாவது பிரச்சனையா?"
"இல்ல, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நாங்க ஸ்டார்ட் பண்ணிட்டோம்னா உனக்கு தான் பிரச்சனை. அதனால தான் சொன்னேன்"
அர்னவின் கவனம் மீண்டும் மணிக்கணினியின் மீது சென்றது என்று கூறுவதற்கு இல்லை... அவன் கண்கள் மட்டும் சென்றது என்று வேண்டுமானால் கூறலாம்.
அங்கிருந்த சோபாக்களை பிள்ளைகள் அமர்ந்து நிரப்பினார்கள். தங்களுக்கு அமர இடமில்லாமல் குஷியும் நந்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"அரு, நீ உன்னோட ரூமுக்கு போயேன்" என்றான் நந்தா.
"பரவாயில்ல விடு நந்து, நம்ம டைனிங் சேரை எடுத்துக்கலாம்" என்றாள் குஷி.
"நல்ல ஐடியா" என்று உணவு மேசையிலிருந்து இரண்டு நாற்காலிகளில் கொண்டு வந்து போட்டான் நந்தா.
அர்னவ் அமர்ந்திருந்த ஒற்றை சோபாவின் பக்கத்தில் நாற்காலியை போட்டு, அதன் கைப்பிடியில் வசதியாய் சாய்ந்து அமர்ந்து கொண்டாள் குஷி. அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான் நந்தா.
பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுக்க வந்த ரத்னா, அந்த அமளிக்கு இடையில் அர்னவும் அமர்ந்திருந்ததை பார்த்து வியந்தார். அவனது முகத்தில் வெறுப்புக்கான அறிகுறியே தென்படவில்லை. நிச்சயம் அது வித்தியாசத்தின் சாயல் தான்!
குஷி அர்னவின் பக்கத்தில் அமர்ந்திருந்ததை பார்த்த பிள்ளைகள் வாயை பிளந்தார்கள். பிள்ளைகளை விட அதிகமாய் அந்த படத்தை ரசித்தது குஷி தான். ஆர்வ மிகுதியில் சில முறை அவள் அர்னவின் முதுகை தட்டினாள். திரும்பி அவளை சமதளப் பார்வை பார்த்ததை தவிர வேறொன்றும் செய்யவில்லை அவன். அது பிள்ளைகளுக்கு பேராச்சாரத்தை தந்தது. அவர்கள் படத்தை விட்டு, அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மறுநாள் மாலை
தன் வீட்டின் மாடியில் அமர்ந்து தேநீரை ருசித்துக் கொண்டிருந்தாள் குஷி, தூரத்தில் தெரிந்த கடலை பார்த்தபடி. அடுத்த பால்கனி அர்னவுடையது என்று அவளுக்கு தெரியும். ஆனால் ஒரு முறை கூட அவள் அவனை அங்கு பார்த்ததே இல்லை. என்ன மனிதனோ...! எவ்வளவு அழகாய், இதமாய் இருக்கிறது இந்த இடம்...! அவள் எத்தனையோ கடற்கரை நகரங்களில் வாழ்ந்திருக்கிறாள். ஆனால் கடலை பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் அவளுக்கு அலுப்பதே இல்லை...!
அப்பொழுது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த ஒருவன், அர்னவ் வீட்டின் முன்னால் தன் வண்டியை நிறுத்தினான். பார்க்க அல்ட்ரா மாடனாக இருந்தான்... அலட்டலாகவும் தான்...! வெளியில் இருந்தபடியே நந்தாவை அழைத்தான் அவன். நந்தா வெளியே வந்தான். அவன் நந்துகிஷோரின் நண்பனாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள் குஷி. சிறிது நேரம் நந்துவிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அங்கிருந்து சென்றான் அவன். அவனை நந்து ஏன் உள்ளே அழைத்து பேசவில்லை என்று வியந்த குஷி, மீண்டும் தன் கவனத்தை கடலின் பக்கம் திருப்பியபடி தேனிரை பருகினாள்.
மறுநாள்
முதல் நாள் நந்தாவிடம் பேசிய அந்த வாலிபனியிடமிருந்து குஷிக்கு ஃபேஸ்புக்கில் ஃபிரண்ட் ரெக்வெஸ்ட் வந்தது. எதையோ யோசித்தவள் அதை ஏற்கவில்லை.
மாலை
கல்லூரியிலிருந்து வீடு திரும்பினாள் குஷி. அவர்களது வீதிக்குள் அவள் நுழைந்தபோது, அதே வாலிபன் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி யாருடனோ கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். அவன் குஷியை பார்த்து சிரித்தான். அவள் லேசாய் தலையசைத்து விட்டு மேற்கொண்டு நடக்க முயன்ற போது,
"ஹாய்..." என்றான்
அவளும் தயக்கத்துடன்,
"ஹாய்" என்றாள்.
"என் பேர் விக்னேஷ், நந்துகிஷோர் ஃபிரண்ட்"
"ஓ..."
"நீங்க மும்பையில் இருந்து தானே வந்திருக்கிங்க?"
"ம்ம்ம்"
"உங்க ஃபேஸ்புக் அக்கவுண்டை பார்த்தேன். அதனால தான் ஃபிரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பினேன்"
"ம்ம்ம்.... எக்ஸ்கியூஸ் மீ..." என்று நடந்தாள் அவள்.
"என் ரெக்வெஸ்டை அக்செப்ட் பண்ணுங்க" என்று பின்னால் இருந்து கத்தினான்.
ரத்னா மஹால்
பெரிய ட்ரேவுடன் சமையலறையில் இருந்து வந்தார் ரத்னா. அதில் சாம்பார் வடை வைக்கப்பட்ட சில கிண்ணங்கள் இருந்தன.
"குஷியை கூப்பிட்டீங்களா?" என்றார் அவர்.
"கால் பண்ணிட்டேன்" என்றார் அரவிந்தன்.
அப்போது அங்கு வந்தாள் குஷி.
"இதோ வந்துட்டாளே..." என்றார் அவர்.
"எதுக்கு என்னை வர சொன்னிங்க...?" என்ற அவள், சாம்பார் வடையை பார்த்து,
"வாவ்... இதுக்காக தானா?" என்று ஒரு கிண்ணத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை சாப்பிட்டாள்.
"ஆன்ட்டி நான் உங்க சமையலுக்கு ஒவ்வொரு நாளும் அடிமையாயிக்கிட்டே இருக்கேன்..."
அதைக் கேட்டு சிரித்த அரவிந்தன்,
"ஆமாம், அவள் கைப்பக்குவத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது" என்றார்.
"இன்னொன்னு எடுத்துக்கோ" என்றார் ரத்னா.
"ஒன்னு தானா?" என்று முகத்தை சுருக்கினாள்.
"எத்தனை வேணுமோ எடுத்துக்கோ... போகும் போது கரீமாவுக்கும் எடுத்துக்கிட்டு போ" என்றார் ரத்னா சிரித்தபடி.
"எனக்கு செய்ய வேண்டிய வேலை எவ்வளவு இருக்கு தெரியுமா? நான் இதையெல்லாம் சாப்பிட்டுட்டு அதை எல்லாம் செய்வேன்னு எனக்கு தோணல"
"அப்படின்னா சாப்பிடாத குஷி" என்றான் நந்தா.
அவனை ஒரு அடி போட்டு,
"வாய்ப்பே இல்ல..." என்றாள்.
அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்னவை பார்த்த அவள்,
"ஹலோ, இங்க பாரு. நீ என்னை பார்த்தா, நான் ஒன்னும் உன் கையில இருக்கிறதை பிடுங்கி சாப்பிட்டுட மாட்டேன்" என்றாள்.
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான் அர்னவ்.
"இவன் ஒருத்தன் தான் ரொம்ப ஓவரா பண்றான்...!" என்று அரவிந்தனை பார்த்த அவள்,
"நீங்க இவனுக்கு அர்னவ்னு பேர் வச்சிருக்க கூடாது அங்கிள். அவன் பேருக்கு ஏத்த மாதிரி, உண்மையாவே ஆழமான கடல் மாதிரி மாறிட்டான்..."
"அவனுக்கு அந்த பேர் வச்சதுக்கு ஒரு காரணம் இருக்கு..."
"ஆங்... தெரியும் தெரியும். அவன் பொறந்தப்போ நீங்க ஆழமான கடல்ல கப்பல்ல இருந்தீங்க. அதனால தான் அவனுக்கு அந்த பெயரை வச்சீங்க...!" என்றாள் சலிப்புடன்.
அவள் தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருந்தது, அர்னவை திகைக்க செய்தது.
"என் பேருக்கு அந்த மாதிரி எந்த காரணமும் இல்லையா?" என்றான் நந்துகிஷோர்.
"ஓ இருக்கே...!" என்றாள் குஷி.
அனைவரும் அவளை குழப்பத்துடன் பார்த்தார்கள். ஏனென்றால் அப்படி ஒரு காரணம் இல்லவே இல்லை.
"உன் பாட்டி பஜனை பண்ணிக்கிட்டு இருந்தப்போ நீ பொறந்தியாம். அதனால தான் உனக்கு நந்துகிஷோர்னு பேர் வச்சுட்டாங்க" என்று அவள் கூற, அனைவரும் வாய்விட்டு சிரித்தார்கள்.
அவளைப் பார்த்து முறைத்தான் நந்துகிஷோர்.
"ஓகே கூல்... உனக்கு தெரியுமா, இன்னைக்கு எனக்கு ஒருத்தன் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினான். நான் காலேஜை விட்டு வந்துகிட்டு இருந்த போது, அதை அக்சப்ட் பண்ண சொல்லி கேட்டான்"
அவளை கேள்விக்குறியோடு பார்த்தான் அர்னவ்.
"யார் அவன்?" என்றான் நந்து.
"உன்னோட ஃபிரண்டு தான்"
"என்னோட ஃபிரண்டா?" என்று முகத்தை சுருக்கினான் நந்தா.
"ஆமாம், நேத்து உங்க வீட்டுக்கு வந்தான் இல்ல?"
"விக்னேஷா?" என்றான் அதிர்ச்சியோடு நந்தா.
"ஆமா" என்றாள் குஷி.
கோபத்துடன் சோபாவை விட்டு எழுந்தான் அர்னவ். அவனுடைய திடீர் நடவடிக்கை அவளை திடுக்கிட செய்தது.
"நீ அவன் ரெக்வஸ்ட்டை அக்சப்ட் பண்ணிட்டியா?" என்றான் பல்லை கடித்துக் கொண்டு. அவனது முறுக்கிய நரம்புகளை பார்த்து, பயத்துடன் ஆம் என்று தலையசைத்தாள்.
"எதையும் செய்றதுக்கு முன்னாடி எங்ககிட்ட கேக்க மாட்டியா?" என்றபடி நந்தாவை பார்த்த அவன்,
"அவன் உன்னோட ஃப்ரெண்டா?" என்றான் காட்டமாய்.
"நான் எப்போ அப்படி சொன்னேன்?" என்றான் நந்தா நடுங்கியபடி.
"அல்லவ், அது என்னோட தப்பு தான். நான் தான் அவன் நந்துகிட்ட பேசிக்கிட்டு இருந்ததை பார்த்து, அவனோட ஃபிரண்டுன்னு தப்பா நினைச்சுட்டேன்"
"அவன் நந்து ஃபிரண்டா இருந்தா என்ன? அவன் ரெக்வெஸ்டை அக்செப்ட் பண்ணணும்னு என்ன அவசியம் இருக்கு?"
அவனது கோபத்தை பார்த்து திகில் அடைந்தாள் குஷி. அரவிந்தனும் ரத்னாவும் பேச்சிழந்து போனார்கள். அவன் தன் கோபத்தை அவள் மீது காட்டுவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
"இங்க பாரு, இது ஒன்னும் நேவி கோட்ரஸ் இல்ல, எல்லாரும் உனக்கு தெரிஞ்சவங்களா இருக்கிறதுக்கு... இது வேற மாதிரி. இங்க இருக்கிறவங்களை எல்லாம் நீ என்டர்டைன் பண்ணணும்னு எந்த அவசியமும் இல்ல. ஜாக்கிரதையா இரு. இங்க எதுவும் நீ நினைக்கிற மாதிரி இல்ல. அது உன்னை பிரச்சனைல தான் கொண்டு போய் விடும். புரிஞ்சுதா?"
அதே கோபத்துடன் தன் அறைக்கு சென்றான் அர்னவ். சிரித்தபடி ரத்னாவின் பக்கத்தில் அமர்ந்தாள் குஷி.
"அவனை தப்பா நினைக்காத குஷி" என்றார் ரத்னா.
"தப்பா நினைக்கறதாவது... நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கேன் தெரியுமா, டார்லிங்...! என் மேல அவன் எவ்வளவு அக்கறையோட இருக்கான்...!" அவர் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.
"நீ இன்னும் குழந்தையாவே இருக்க" என்றார் அரவிந்தன்.
"எதுக்காக அவன் இவ்வளவு கோபப்பட்டான்?" என்றாள் குஷி.
"விக்னேஷ் நல்லவன் இல்ல. ரொம்ப மோசமானவன்... முக்கியமா பொண்ணுங்க விஷயத்துல..." என்றான் நந்து.
பதற்றத்துடன் நகம் கடித்த குஷி,
"அப்படின்னா நான் அவனை அன் ஃபிரண்ட் பண்ணிடுறேன்" என்றாள்.
"இல்ல, உடனே செய்யாத. ஆனா அப்புறமா மறக்காம செஞ்சிடு..."
சரி என்று தலையசைத்த குஷி, சாம்பார் வடை சாப்பிடுவதை தொடர்ந்தாள். அதை சாப்பிட்டு முடித்துவிட்டு, அர்னவின் அறைக்கு வந்த அவள், அவன் எதையோ ஆழமாய் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். அவன் அருகே சென்று, தன் விரல்களை அவன் முகத்திற்கு முன்னால் சொடுக்கினாள்.
"நான் வந்ததை கூட கவனிக்காம அப்படி என்ன தீவிரமா யோசிச்சுகிட்டு இருக்க?"
"அவனை அன் ஃபிரண்ட் பண்ணு"
"யாரை?"
"விக்னேஷை" என்றான் கோபமாய்.
"ஆனா ஏன்?"
"அவன் நல்லவன் இல்ல. நல்ல பொண்ணுங்களுக்கு ஃபிரண்டா இருக்கிற தகுதி அவனுக்கு இல்ல"
"நான் அவ்வளவு நல்ல பொண்ணா?" என்றாள் சந்தோஷத்துடன் விழி விரித்து.
அவளுக்கு பதில் கூறாமல் அவன் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவனுக்கு முன்னாள் வந்து, அவனது வழியை மறித்தாள். அவன் அவளுக்கு இடது பக்கம் செல்ல முயன்ற போது, அவளும் இடது பக்கம் நகர்ந்தாள். அவன் அவளுக்கு வலது பக்கம் செல்ல முயன்ற போது, அவளும் வலது பக்கம் நகர்ந்தாள். அதை அவள் மேலும் இரண்டு முறை செய்தாள்.
"நீ என்னை நல்ல பொண்ணுன்னு சொல்ற வரைக்கும் உன்னை போக விடமாட்டேன்"
"அதை சொல்றது அவசியமா?"
"வேற யாராவதா இருந்தா சொல்ல வேண்டாம். நீயா இருக்குறதால நிச்சயம் சொல்லணும்"
"நீ சின்ன குழந்தை மாதிரி நடந்துக்கிற"
"நம்ம எல்லார்குள்ளயும் ஒரு குழந்தை இருக்கு. அது நமக்கு பிடிச்சவங்க முன்னாடி தான் வெளியே வரும்னு உனக்கு தெரியாதா?" என்று அவன் மூக்கை தட்டினாள்.
அவளது பதிலை கேட்டு வாயடைத்துப் போனான் அர்னவ். அவளது வாதத்தை, விவாதமாக்க அவன் விரும்பவில்லை, முடித்து விட எண்ணினான்.
"ஓகே ஃபைன்... நீ ரொம்ப நல்ல பொண்ணு...! போதுமா?"
"நான் விக்னேஷ் கூட பேச கூடாதுன்னு நினைக்கிற. ஏன்னா அவன் கெட்டவன். நீயும் என்கிட்ட பேச மாட்டேங்குற. அப்படின்னா நான் யாரு கிட்ட பேசுறது?"
"நீ தான் வயசு வித்தியாசமே இல்லாம எல்லாரோடவும் என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கியே...! அப்புறம் என்ன பிரச்சனை?"
அவளுக்கு தெரியும் அவன் ரத்னா, நந்து, அஸ்வின், சுருதி ஆகியோரை பற்றி தான் பேசுகிறான் என்று.
சட்டென்று உணர்ச்சிவசப்பட்ட அவள்,
"எல்லாரும் அல்லவ் ஆக முடியாது. என்னை சிரிக்க வச்சு, சிரிக்க வைக்கிறதுக்காகவே அழ வச்சு, எனக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து என்னை சமாதானப்படுத்தின அவனை மாதிரி யாராலயும் வர முடியாது. அவன் எனக்கு திரும்ப கிடைக்கவே மாட்டானா? எது உன்னை தடுக்குதுன்னு எனக்கு புரியல. உன் மனசுல இருக்கிற கசப்பான நினைவுகளை எல்லாம் அழிச்சிடக் கூடிய சக்தி எனக்கு இருக்கக் கூடாதான்னு நினைக்கிறேன்..."
அவளது பலவீனத்தை பார்க்க சகிக்காமல், எதிர்ப்புறம் திரும்பி நின்றான்.
"நீ ஒரு விஷயத்தை மறக்காதே... உண்மையான அன்பை நீ உதாசீனப்படுத்தினா, நீ அதை தேடும் போது அது உனக்கு கிடைக்காது" என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிப் போனாள்.
உண்மையான அன்பா? அவள் கூறியதன் அர்த்தம் என்ன? அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு சிலை போல் நின்றான் அர்னவ்.
தொடரும்...