18 நிச்சயம்
இலக்கியாவின் புன்னகையை பார்த்த முகிலன் மெய் மறந்து போனான். அவளது புன்னகையில் எந்த களங்கமும் இல்லை. இன்னமும் கூட அவனால் நம்ப முடியவில்லை, தன்னை பற்றி அனைத்தும் தெரிந்த பிறகும் ஒரு பெண் அவனை திருமணம் செய்து கொள்ள சித்தமாய் இருக்கிறாள் என்று. இதில் விசித்திரம் என்னவென்றால், அவள் அவனைப் பற்றி தெரிந்து கொண்டதெல்லாம் அவளது தந்தையிடம் இருந்து. இன்னும் சில நாட்களில் அவள் அவனுக்கு மனைவியாக போகிறாள். அவளைப் பார்த்தபடி இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான் முகிலன். அவனுக்கு தூக்கி வாரி போட்டது, தன் கைபேசியை தன் பக்கம் திருப்பி, இளங்கோ பல்லைக்காட்டி இளித்த போது. தனக்கு அருகில் இருந்த சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது முகிலனுக்கு.
"அவங்க ரொம்ப அழகா இருக்காங்க இல்ல?" என்றான் இளங்கோ.
"காலை கட் பண்ணு" என்றான் முகிலன்.
"ஆமாம், அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே...! எப்படி இருந்தது என்னுடைய லைவ் டெலிகாஸ்ட்?"
"ஃபோனை வைடா" என்று அவனே அழைப்பை துண்டித்தான் முகிலன், இளங்கோ அதை செய்யட்டும் என்று காத்திராமல்.
சிரித்தபடி தன் கைபேசியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் இளங்கோ.
தன் இருக்கையை விட்டு எழுந்த தாரணி,
"இலக்கியா, நான் கொஞ்சம் உன்னோட வாஷ் ரூமை யூஸ் பண்ணலாமா?" என்றார்.
"ஓ தாராளமா... வாங்க ஆன்ட்டி" என்றாள் இலக்கியா.
ஆதிரை அவர்களுடன் செல்ல நினைத்தபோது,
"நீ இங்கேயே இரு கா. நான் இப்ப வரேன்" என்று அவரை தடுத்து நிறுத்திவிட்டு இலக்கியாவுடன் சென்றார் தாரணி.
மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்த ஆதிரை, தாரணியை பொருள் பொதிந்த பார்வை பார்த்தார். அதைப்பற்றி கவலைப்படாமல் இலக்கியாவுடன் சென்றார் தாரணி. தன்னறைக்கு அவரை அழைத்துச் சென்று குளியலறை நோக்கி கை நீட்டிய இலக்கியா, அவர் வெளியே வரும் வரை காத்திருந்தாள். அவர் வெளியே வந்தவுடன், அங்கிருந்து செல்லலாம் என்று எண்ணிய போது, அவளை அழைத்தார் தாரணி.
"எனக்கு கொஞ்சம் தண்ணி கொடும்மா"
மேசை மீது வைக்கப்பட்டிருந்த பாட்டிலில் இருந்து ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி அதை அவரிடம் நீட்டினாள் இலக்கியா.
அதை அவளிடமிருந்து பெற்றுக் கொண்ட படி தாரணி கேட்டார்,
"நீ முகிலனை பார்த்திருக்கியா?"
சற்று திகைத்து தான் போனாள் இலக்கியா. அவள் அவனை இரு முறை சந்தித்திருக்கிறாள். ஆனால் அதைப்பற்றி யாருக்கும் தெரியாது. அதிரையிடம் கூட அவள் அதைப்பற்றி கூறவில்லை. தன்னை சமாளித்துக் கொண்ட அவள், உண்மையை கூற தயாரானாள். ஆம் என்று தலையசைத்தாள்.
"அப்படியா?" எங்க?"
"கோவிலில் பார்த்தேன்"
"கோவில்லயா? ஆனா முகிலனுக்கு கோவிலுக்கு போற பழக்கமே இல்லையே" என்றார் நம்ப முடியாத முகபாவத்துடன்.
ஆம் என்று தலையசைத்து புன்னகைத்த இலக்கியா,
"அவரு சாமி கும்பிட கோவிலுக்கு வரல. நான் கோவிலுக்குள்ள நுழையிறதை பார்த்துட்டு வந்ததா சொன்னாரு"
அதைக் கேட்டு தாரணி விழி விரித்தார்.
"அவருக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை அப்படிங்கிறதால, என் மனசை மாத்த கோவிலுக்கு வந்தாரு" என்று அவன் வந்த காரணத்தை விளக்கினாள் இலக்கியா.
"அவன் உன்கிட்ட என்ன சொன்னான்?"
"எல்லாத்தையும் சொன்னாரு"
"எல்லாத்தையும்னா?"
என்ற அவரது குரலில் நடுக்கம் தெரிந்தது
"எல்லாம் தான்"
"ஆனா..."
"அவர் என்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எனக்கு எல்லாம் தெரியும். உண்மைய சொல்லப் போனா, அவர் என்கிட்ட சொன்னதை விட அதிகமாவே தெரியும்"
"உனக்கு எப்படி தெரிஞ்சது?"
"எங்க அப்பாவும் அவங்க அப்பாவும் ஃபிரண்ட்ஸ்"
"ஓ... அப்படின்னா உங்க அப்பா அவனைப் பத்தி உன்கிட்ட சொன்னாரா."
"இல்ல. அவர் எங்க அம்மா கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிறது வழக்கம். அப்போ சில சமயம் அவங்க பேசுதை நான் கேட்டிருக்கேன்"
"அப்படி இருந்துமா நீ அவனை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிற?"
"நீங்க என்ன அர்த்தத்துல கேக்குறீங்கன்னு எனக்கு புரியல ஆன்ட்டி"
"அவன் உன்னை விட பத்து வயசு பெரியவன். வழக்கமா பொண்ணுங்க எல்லாரும் இளமையான பசங்களை கல்யாணம் பண்ணி வாழ்க்கையை என்ஜாய் பண்ணனும்னு நினைப்பாங்க. அதோட மட்டுமில்லாமல் அவன் ஒரு..."
அவரது பேச்சைக் குறுக்கீடு செய்து,
"நம்ம இளமையா இருக்கிறது மனசை பொருத்த விஷயம் தானே? இன்னும் கூட, எங்க அப்பா அவருக்கு வயசு ஆச்சுன்னு ஒத்துக்கவே மாட்டாரு... அவருக்கு வயசு அம்பதி அஞ்சு. அதோட மட்டுமில்லாம, அவரோட கடந்த காலத்தைப் பத்தி எனக்கு கவலை இல்ல"
"ஏன்?"
"ஏன்னா, அவர் நல்லவர்"
"அவனை கல்யாணம் பண்ணிக்கணும்னு நீ எடுத்திருக்கிற முடிவு எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தருது. ஆனா, அது நீ நினைக்கிற மாதிரி சுலபமா இருக்காது"
"ஆரம்பத்துல சுலபமா இருக்காது தான்..."
"அப்படின்னா?"
"போகப் போக எல்லாம் மாறும்"
"அது சரி, முகிலனுக்கு உன்னை எப்படி தெரியும்?"
"அப்படின்னா?"
"அவன் உன்னை வந்து கோவில்ல பார்த்தான்னு நீ சொன்ன இல்ல?"
அப்பொழுது தான் இலக்கியாவிற்கு அந்த விஷயம் உரைத்தது. அவள் இதுவரை எப்படி அதை பற்றி யோசிக்காமல் போனாள்?
"ஆமாம்ல? நான் தான்னு இலக்கியானு அவருக்கு எப்படி தெரியும்?" என்று அவரை திருப்பி கேள்வி கேட்ட இலக்கியா,
"அதைப்பத்தி நான் இதுவரைக்கும் யோசிக்காமலேயே இருந்திருக்கேன்..." என்று சிரித்தாள்.
அப்பொழுது அவர்களது பேச்சை கேட்டபடி அங்கு வந்த ஆதிரை,
"நீ சின்னுவை ஏற்கனவே மீட் பண்ணி இருக்கியா?" என்றார்.
ஆம் என்று தலையசைத்தாள் இலக்கியா.
"இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வைக்கிறதுக்காக சின்னு அவளை மீட் பண்ணி இருக்கான்" என்றார் தாரணி.
"அப்படியா?"
ஆமாம் என்று தலையசைத்தாள் இலக்கியா.
அதைக் கேட்ட ஆதிரை திகைப்படைந்தார். அவள் மனதை மாற்ற வேண்டும் என்று அவளை சந்தித்திருக்கிறான் முகிலன். ஆனால் இறுதியில் அவனே திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டான். அப்படி என்றால் அவனுக்கு இலக்கியாவை பிடித்திருக்கிறதா? அதனால் தான் அவன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டானா? அவன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதற்கு காரணம், ஆதிரை அவனை எமோஷனல் பிளாக் மெயில் செய்தது இல்லையா?
"வா கா போகலாம்" என்றார் தாரணி.
"போயிட்டு வரேன் டா" என்று இலக்கியாவிடம் கூறிவிட்டு விடைபெற்றார் ஆதிரை.
முகிலன் ட்ரேடர்ஸ்
தன் அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு தலையை உயர்த்தினான் முகிலன். அங்கு வந்தது அவனது நண்பன் இளங்கோ தான். தன் கையில் இருந்த கோப்பை நோக்கி தன் தலையை கவிழ்த்தான் முகிலன்.
"முகிலா உன்னோட கல்யாணம் முறைப்படி நிச்சயம் ஆயிடுச்சு" என்றான்.
சரி என்று தலையசைத்தான் முகிலன், தன் கண்களை கோப்பில் இருந்து அகற்றாமல்.
"இன்னைக்கு தங்கச்சி அழகா இல்ல?"
"எந்த தங்கச்சி?"
"என் தங்கச்சி தான்"
"உனக்கு தான் தங்கச்சியே இல்லையே..."
"நான் இலக்கியாவை தான் சொன்னேன்"
"அவ எப்போ உனக்கு தங்கச்சியானா?" என்றான் தன் புருவத்தை உயர்த்தி.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்து தான்... உன்னோட ஒய்ஃப் எனக்கு தங்கச்சி தானே?" என்றபடி அவன் முன்னாள் அமர்ந்த இளங்கோ,
"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் முகிலா" என்றான்.
தன் இமைகளை அவனை நோக்கி உயர்த்திய அவனது இதழ்கள் சிரிக்கவில்லை,ஆனால் கண்கள் சிரித்தன.
"தங்கச்சியோட போட்டோவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வச்சிக்கிட்டியா?" என்றான் கிண்டலாய்.
"நீ இங்கிருந்து கிளம்புறியா?" என்றான் தன் கையில் இருந்த கோப்பை கவனித்தபடி.
"ஆமா, இப்போதிலிருந்து நான் இங்கிருந்து அடிக்கடி காணாம போக வேண்டி இருக்கும்" என்றான்.
"ஏன்?"
"இன்னும் ஒரு வாரத்துல என் தங்கச்சி கல்யாணம் நடக்க இருக்கு. அதுக்கான வேலையெல்லாம் செய்ய வேண்டாமா?" என்றான்
"ஒரு வாரத்துலயா?"
"ஆமாம், உன் மனசு மாறுறதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்னு எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணி இருக்காங்க. அவங்களுக்கு தெரியாதா உன்னை பத்தி...?" என்றான் கிண்டலாய்.
"நீ இங்கிருந்து கிளம்பு"
"எஸ் பாஸ்" என்றபடி அங்கிருந்து சென்றான் இளங்கோ.
அப்பொழுது முகிலனின் கைபேசி ஒலித்தது. அதில் தன் வருங்கால மனைவியின் எண் ஒளிர்ந்ததை பார்த்து, அவனது முகம் பிரகாசம் அடைந்தது. நான்கு மணி அடிக்கும் வரை காத்திருந்தான் அவன். அவன் ஆர்வத்துடன் இருக்கிறான் என்று அவளுக்கு தெரிய வேண்டாம் என்று...! அழைப்பை ஏற்ற அவன்,
"யார் பேசுறீங்க?" என்றான் வேண்டுமென்றே, அவளது எண்ணை அவன் சேமிக்கவில்லை என்பது போல.
"நான் மிஸ்டர் முகிலன் கிட்ட பேசலாமா?" என்றாள் அவள், தான் அவன் குரலை கண்டுபிடிக்கவில்லை என்பது போல.
தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த முகிலன்,
"ஸ்பீக்கிங்" என்றான்.
"ஓ, அப்படியா? எனக்கு தெரியவே தெரியாது" என்று சிரித்தாள் அவள்.
உதடு கடித்து புருவம் உயர்த்தினான் அவன்.
"என்னோட நம்பரை சேவ் பண்ணாம இருக்குறதுக்காக உங்களுக்கு கடுமையான தண்டனை காத்துக்கிட்டு இருக்கு மிஸ்டர் முகிலன்" என்றாள் எச்சரிக்கும் தொணியில்.
முகிலனின் பக்கம் அமைதி நிலவியது.
"ஹலோ... நீங்க லைன்ல இருக்கீங்களா? இல்ல ஓடி போயிட்டீங்களா?" என்றாள் கிண்டலாய்.
"சொல்லு, எனக்கு எதுக்காக கால் பண்ண?"
"நம்ம ரெண்டு பேருக்கும் நிச்சயம் ஆயிடுச்சு தெரியுமா?"
"ஓஹோ..."
"உங்களுக்கு ஃபோன் பண்ண எனக்கு நிறைய காரணம் இருக்கு. நீங்க சாப்பிட்டீங்களா? நேத்து ராத்திரி நிம்மதியா தூங்குனீங்களா? இப்போ நீங்க என்ன கலர் டிரஸ் போட்டிருக்கீங்க? அப்படின்னு நான் உங்களை என்ன கேள்வி வேணாலும் கேட்கலாம். புரிஞ்சுதா?"
"சரி, இப்போ என்ன கேள்வி கேட்கிறதுக்காக எனக்கு ஃபோன் பண்ண?"
"இப்போதைக்கு எந்த கேள்வியும் இல்ல. என் நம்பரை சேவ் பண்ணுங்க"
"ம்ம்ம்"
"என்னோட நம்பரை என்ன பேர்ல சேவ் பண்ண போறீங்க?"
"உனக்கு எத்தனை பேர் இருக்கு?"
"எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பேர் தான். ஆனா உங்களுக்கு எப்படி தோணுதோ நீங்க என்னை அப்படி கூப்பிடலாம்"
தன் நெற்றியை தேய்த்து புன்னகைத்தான் முகிலன்.
"நான் உங்க நம்பரை என்னன்னு சேவ் பண்ணி இருக்கேன்னு தெரியுமா?"
என்னவென்று கேட்க வேண்டும் என்று நினைத்தான் அவன், ஆனால்,
"நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க. பை" என்று அழைப்பை துண்டித்தாள் அவள்.
அவள் தன் பெயரை என்னவென்று சேமித்து வைத்திருப்பாள் என்ற ஆவல் அவனுக்கு அதிகமானது. அதை தெரிந்து கொள்ள வேண்டும் அவனுக்கு...! ஆனால் எப்படி?
முகிலன் இல்லம்
ஆதிரையும் தாரணியும், தேநீர் அருந்திய படி இலக்கியாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
"எனக்கு இலக்கியாவை ரொம்ப பிடிச்சிருக்கு கா. அவளுக்கு கூட நம்ம முகிலனை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்"
"ஆமாம், அதனால தானே அவ கல்யாணத்துக்கு சரின்னு சொன்னா..."
"இலக்கியாவுக்கு முகிலனை பிடிச்சிருக்கு, சரி... முகிலனுக்கு அவளை பிடிச்சிருக்கா?"
"அவனுக்கும் அவளை பிடிச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன். அவளை கோவில்ல பாத்ததுக்கு பிறகு தான் அவன் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லி இருக்கான்..."
"ஆனா, முகிலனுக்கு அவளை எப்படி தெரியும்? அவன் அவளை முன்னாடி பார்த்திருக்கானா?"
"இல்ல, அவன் அவளை பார்த்ததே இல்ல"
"அப்புறம்??? நீ ஏதாவது போட்டோ காமிச்சியா?"
சிறிது நேரம் யோசித்த ஆதிரை,
"நான் நற்கிள்ளி அண்ணனோட ஃபோன் நம்பரை கொடுத்தேன். ஒருவேளை அவர் வாட்ஸாப்ப் ப்ரொபைல்ல அவ போட்டோவை பார்த்திருப்பான்னு நினைக்கிறேன்"
"இருக்கலாம்... எப்படியோ, முகிலனுக்கு ஒரு நல்ல பொண்ணு பொண்டாட்டியா கிடைச்சுட்டா.."
"கிடைச்சிட்டாளா?" இதுக்குள்ளயா? அவங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கல ஞாபகம் இருக்கு இல்ல?" என்று சிரித்தார் ஆதிரை
"கிட்டத்தட்ட கல்யாணம் முடிஞ்ச மாதிரி தானே..? அவன் வாழ்க்கையில அந்த பொண்ணு விடியலை கொண்டு வரட்டும்"
"அப்படியா நீ நினைக்கிற?"
ஆம் என்று தலையசைத்தார் தாரணி.
அப்பொழுது தனது கணினி பையுடன் வீட்டுக்குள் வீட்டிற்குள் நுழைந்தான் முகிலன்.
"நான் அப்படி நினைக்கல கா" என்று ஆதிரையை பார்த்து கண்ணடித்து, முகிலன் வந்து விட்டான் என்பதை குறிப்பால் உணர்த்தினார் அவர்.
"ஏன் தாரா அப்படி சொல்ற?"
"நான் இலக்கியாவை பத்தின எல்லா டீடைலையும் கலெக்ட் பண்ண போறேன். மறுபடியும் எந்த தப்பும் நடந்துட கூடாது" என்றார் தாரணி.
அதைக் கேட்டு நின்றான் முகிலன்,
"சின்னு, உனக்கு காபி வேணுமா?" என்றார் ஆதிரை.
வேண்டாம் என்று தலையசைத்த அவன்,
"எனக்கு ஒன்னும் அது நல்ல ஐடியாவா படல. அவங்க கேள்விப்பட்டா ரொம்ப வருத்தப்படுவாங்க" என்றான் அமைதியாக.
அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீ யாரைப் பத்தி பேசுற சின்னு?"
"நீங்க தானே சொன்னீங்க, இலக்கியாவை பத்தி டீடைல்ஸ் கலெக்ட் பண்ண போறதா?"
"ஆமாம்... அதுக்கு?"
"அப்படி செய்யாதீங்க" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் முகிலன்.
முகிலன் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்த அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
தொடரும்...