பேப்பர் போட் !
தனது அறையின் பால்கனியில் நின்று தேநீரை சுவைத்துக்கொண்டிருந்தான் நகுலன். அவனது கண்கள் இரண்டும் ரசனையில் ஆழ்ந்திருந்தது. தனது காதலியை காணும் ஒரு பதின்வயது பையனின் பார்வையும் ரசனையும் எதிர்பார்ப்பும் பூரிப்பும் மகிழ்ச்சியும் எப்படி இருக்குமோ அப்படி தான் இப்போது இருந்தது அவனுக்கும். இப்போது மட்டுமல்ல எப்போதும் அப்படித்தான்.
அவனது இப்பார்வைகள் துளியேனும் மாறவில்லை இன்றளவும் . முப்பத்தி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மண்ணில் பொழியும் மழையின் மேல் உள்ள சுவாரசியம் இன்னும் அவனுக்கு குறைந்தபாடில்லை.
பாரபட்சம் இன்றி பாரெங்கும் பொழியும் மழையை தன் பார்வையை பரப்பி அவன் பார்க்க அண்டை வீட்டு குட்டி வாண்டுகள் காகிதக்கப்பல் செய்து விளையாடிக்
கொண்டிருந்தனர் .ஆறரை வயது நகுலன் அவன் நினைவிற்கு வந்தான்.
தன் தாத்தா பயிற்றுவித்த படியே காகிதக்கப்பல்கள் செய்து கொண்டிருந்தான் குட்டி நகுலன். சிதறிய மழைத்துளிகள் சிற்றாராய் ஓடிக்கொண்டிருந்தன .
வெள்ளை காகிதத்திலான அவனது கப்பலை தன் நெஞ்சை நிமிர்த்தி ஒரு மாலுமியின் மிடுக்கோடு அச்சிறு ஓடையில் செலுத்தினான். சிறு சிரமுமின்றி வளைந்து நெளிந்து தண்ணீரின் போக்கில் உல்லாசமாக சென்றது அது .
வானிலிருந்து வரும் குட்டி திரவக்குமிழிகள் சொட்டு சொட்டாய் அதன் மேல் விழ அக்காகிதம் மெல்ல ஈரத்தில் ஊறி சாய்ந்து சென்று இறுதியாக அடைந்த இடத்தில் அதைப்போலவே பத்து பதினொரு காகிதக்கப்பல்கள் சாய்ந்துகிடந்தன.