கடலலையை போல துன்பம் விடாமல் மனிதனை சுழன்று சுழன்று அடிக்கும் போது அவனின் இறுதியான புகலிடம் கடவுள்தான். நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பது துன்பம் நெருப்பாய் நம்மை சுடும் போதுதான் நமக்கு நினைவுவரும். வித்யா இப்போது அந்த நிலையில்தான் இருந்தார்.
இனியா இவர்கள் வீட்டைவிட்டு போய் இரண்டு நாளாகிவிட்டது. மகள் அங்கே சென்றவுடன் மலர்விழி பதறிக்கொண்டு தோழிக்கு போன் செய்தார். வித்யா என்ன பதில் சொல்லுவார்? யாரை குறை கூறுவது? யாருக்கு அறிவுரை சொல்வது? இருபது வயதை கடந்துவிட்டாலே தங்களுக்கு என்று ஒரு கொள்கையையும், கோட்பாட்டையும் வகுத்துக்கொண்டு அது சரியா? தவறா என்று கூட சிந்திக்க மறுக்கும் இளைய சமுதாயத்திடம் என்ன சொல்லிதான் என்ன பயன்?
மருமகளையும் குறை கூற ஒன்றுமில்லை. மகனின் நிலையை பார்க்கும் போது அவனையும் குறை சொல்ல ஒன்றுமில்லை. பிறகு ஏன் இந்த பிரிவினை என்ற ஆராச்சியில் விதுலனின் பெற்றோர்கள். மகளின் குணம் தெரிந்துதான் இந்த திருமணம் வேண்டாம் என்றார்கள் இனியாவின் பெற்றோர்கள். அப்போது நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நின்றுவிட்டு இப்போது பெட்டியும் கையுமாக பிறந்த வீடு வந்த இனியாவை அங்கே இருக்கும் யாருக்கும் எதுவும் சொல்ல மனம் வரவில்லை.
பேச்சிலே விளையாடும் மகள்! 'ஏண்டி எப்போ பாரு பல்லை காட்டிட்டு இருக்க? பொம்பளை பிள்ளையா லட்சணமா அடக்கம் ஒடுக்கமா இரு' என்று சிரிப்பதற்காகவே தாயிடம் திட்டுவாங்கும் மகள்! எதிரே இருப்பவர்கள் ஒன்று சொல்வதற்குள் பத்து வார்த்தை பேசிவிடும் மகள்! இப்போதோ அந்த வீட்டில் இருக்கும் ஒரு கல் தூணை போலவே இருக்கிறாள். அவளாக தேடிக்கொண்டது, நாம் என்ன செய்ய முடியும்? என்று உமையாக அழும் அவளின் பெற்றோர்கள்.
விதுலனை பார்க்க சாதாரணமாக எப்போதும் இருப்பது போலத்தான் இருந்தான். மனைவி வீட்டைவிட்டு சென்றதில் எந்த மாற்றமும் இல்லாதது போல தெரியவும் ஜெய்கணேஷ்க்கு அவன் மேல் சந்தேகம் வந்தது. இனியா எப்போது இந்த முடிவை எடுப்பாள் என்று மகன் காத்துக்கொண்டு இருந்தான் போல என்று எண்ணினார் அவர். தாயுள்ளம் மட்டும் அவன் அவனாக இல்லை என்பதை உணர்ந்தது.
YOU ARE READING
விழியோரம் காதல் கசியுதே
Romanceபெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்ட...