"லூஸு பயல இன்னும் காணலையே! மணிவேற பன்னிரெண்டு ஆக போகுது! எனக்கு வேற தூக்கம் தூக்கமா வருது. பாதி தூக்கத்தில் எழுந்தா பேய்கள் மூன் வாக் போகுமே கனவில். இவன் வருவானா? இல்ல அப்படியே அவன் சது கூட போயிடுவானா?" என்று தனக்குள் பேசிக்கொண்டு சன் மீயூசிக்கில் பாட்டை பார்த்துக்கொண்டு இருந்தாள் இனியா. அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்டது. நெருக்கமாக வீடு இருக்கும் ஏரியாதான். ஆனாலும் பயத்தில் இவளுக்கு உள்ளே உதறியது. யாராக இருக்கும்? என்று யோசித்துக்கொண்டு பயத்தில் வேர்த்து கொட்டியது அவளுக்கு. எழுந்து மெல்ல கதவை நோக்கி போனாள். கதவை திறக்க பயமாக இருந்தது. உடனே போனை எடுத்து விதுலனுக்கு போன் செய்தாள்.
"என்னடி? உள்ளே இருந்துட்டு கதவை திறக்காமல் போன் பண்ணிட்டு இருக்க?" என்று அவன் எரிந்துவிழ "சத்தம் கொடுத்தா என்ன? வாயில் கொழுக்கட்டையா வைச்சிருக்க?" என்று கேட்டுக்கொண்டே கதவை திறந்தாள் இனியா. கதவை திறந்தவள் முகத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.
"என்ன ஜான்சிராணி பயத்துல வேர்த்து ஊத்திடிச்சு போல!" என்று நக்கலாக கேட்டுக்கொண்டே அங்கே இருந்த அந்த சிறிய பெட்ரூமில் சென்று ஒரு தலையணையையும், பெட்சீட்டையும் எடுத்து வெளியே வீசிவிட்டு கதவை பூட்டிக்கொண்டான்.
"திமிரை பாரேன் மன்மதனுக்கு." என்று பல்லை கடித்தவள் ஹாலில் தரையிலேயே படுத்துக்கொண்டாள். உள்ளே கட்டிலில் படுத்தவனோ விட்டத்தை இலக்கின்று பார்த்துக்கொண்டு படுத்திருந்தான். அவன் மனம் எரிமலையாக கொதித்தது. இவன் வாழ்க்கையில் ஒன்றுக்கு இரண்டு பெண்கள் இருந்து அவன் நிம்மதியை குலைப்பது போல தோன்றியது அவனுக்கு. "ஒருத்தி இருந்தாலே மானம், ஈனம் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதில் இரண்டு பேர்." என்று கொதித்தான் அவன்.
சதன்யாவை பார்த்து நடந்ததை எல்லாம் எடுத்து சொல்லி அவளிடமிருந்து ஏதாவது உதவி பெற முடியுமா என்று பார்க்கவே அவன் சென்றான். ஏனோ அவனுக்கு இனியாவுடன் இருப்பதில் இஷ்டமில்லை. கையில் பணம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தவனுக்கு இனியும் அதே போல வளமிக்க வாழ்வு கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மூன்று வேளை உணவும், தங்க ஒரு இடமும், இதையெல்லாம் பெற ஒரு வேலையும் வேண்டும் என்றுதான் அவன் நினைத்தது. அதை யாரிடம் கேட்பது என்றுதான் தயங்கினான். பாத்திரம் அறிந்து பிச்சை எடுக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் யாரிடம் என்று அவனுக்கு தெரியவில்லை. கொடுத்தே பழக்கப்பட்டவனுக்கு கேட்க தயக்கமாக இருந்தது. அதனால் சதன்யாவிடம் கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
YOU ARE READING
விழியோரம் காதல் கசியுதே
Romanceபெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்ட...