கண்களில் கண்ணீருடன் சிலை என இருந்த ஆனந்தியை பார்த்து பயந்த மருதமுத்து அவள் அருகே சென்று ஆனந்தியை உலுக்கினார்.
"ஆனந்தி.... ஆனந்தி... என்னமா ஆச்சு?" என்ற அவரின் குரலில் சுயநினைவு வந்தவள் அவரை அணைத்து தேம்பித்தேம்பி அழுதாள்.
"இங்க பாரு ஆனந்திமா, ஏன்டா இப்படி அழுகுற. இங்க பாருமா. அப்பாக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா. அழாதமா." என அவள் முகத்தை நிமிர்த்தினார்.
"ஏம்பா கடவுள் எங்க வாழ்க்கைல இப்படி விளையாண்டாரு" எனக்கேட்டவள், தன் அழுகையை ஒரு நிமிடம் நிறுத்தி அவர் அணைப்பில் இருந்து வெளிவந்து அவர் முகம் பார்த்து, "உங்கள அப்பான்னு கூப்பிடலாம்ல ."என கேட்க மருதமுத்து நொருங்கிவிட்டார்.
"ஏன்டா அப்பாவை பார்த்து இப்படி கேக்குற? நீ இந்த உலகத்துக்கு வர காரணமா வேணா சிவனேசன் இருக்கலாம். உன் மூனு வயசு வரை தன்னோட கைக்குள்ள பொத்திப் பாதுகாத்தது அரவிந்த் தம்பியா இருக்கலாம். ஆனால் இந்த 15 வருஷமா ஒன்ன என் தோளில் சுமந்து உன்னை என் பொண்ணா பார்க்குறேன். நீ என் பொண்ணுடா எப்பவும். அப்பா உனக்கு எதில் குறை வைத்தேன். அப்புறம் ஏண்டா இப்படி எல்லாம் கேட்கிற." என அவர் கண் கலங்க அவரை அணைத்து "சாரிப்பா." என அழுதாள்.
நிலைமையை சீராக எண்ணி ராம் ஆனந்தியின் அருகே வந்து , "ஆனந்தி கண்ணுல தண்ணி. நம்ப முடியலையே. எப்பவும் ஆனந்தியால தான் மத்தவங்க கண்ணீர் வடிப்பாங்க.இப்ப உல்டாவா இருக்கு." என சீண்டினான்.
"ஏன்டா என் புள்ளையா சீண்டுற?" மருத முத்துவின் மனைவி பர்வதம் ராமின் முதுகில் விளையாட்டாய் ஒரு அடி அடித்துவிட்டு ஆனந்தியை அணைத்துக்கொண்டார்.
அவர்களின் பாசத்தை உள்ளுக்குள் ரசித்தாலும் "நீங்க அவள மட்டும் நல்ல கொஞ்சுறீங்க. இங்க என்னை மட்டும் அடிக்கிறீங்க." என மீண்டும் சீண்டினான்.
"அதுக்கெல்லாம் முக லட்சணம் வேணுமடா ராமண்ணா." என ஆனந்தி அவனை வெறுப்பு ஏத்தினாள்.
"என்கிட்ட இல்லாத முக லட்சணமா" என அவன் தன் காலரை தூக்கி விட்டான்.
அவன் தோளில் தன் முழங்கையை மடித்து வைத்தபடி தன் தாடையை விரலால் தடவியவாறு, "இதை வெளிய யார்கிட்டயும் சொல்லிடாத. அப்புறம் சிரிச்சுருவாங்க." என கலாய்க்க, அவன் அவளை அடிக்க கை ஓங்கினான்.
ஆனால் அவளோ அவனுக்கு போக்குக்காட்டி ஓட ராம் ஆனந்தியை துரத்திக் கொண்டு ஓடினான்.
மருதமுத்தும் ஆனந்தியின் இயல்பு நிலையை பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்தனர்.
ஓடி கலைத்த ஆனந்தி சோபாவில் அமர, சோபாவை சுற்றி வந்து ஆனந்தியின் அருகே அமர்ந்து அவள் தோளின் மேல் கையை போட்டு அணைத்தவாறு அமர்ந்தான், ராம்.
"இப்ப சொல்லு. அரவிந்த் மாமாவை பற்றி நீ பேசுனது தப்புதானே." அக்கறையுடன் கேள்வி கேட்க ஆனந்தி சிரித்தவாறு இருந்த முகத்தை இயல்பாக்கி, ராம் அவளின் தோள் மேல் போட்டிருந்த கையை எடுத்து விட்டு,எழுந்து நின்றாள்.
" நான் போறேன்." என அங்கிருந்து நகர்ந்தாள்.
அரவிந்தை பற்றி கூறினால் ஆனந்தியின் மனது மாறும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் மருதமுத்துவும் பர்வதமும் அரவிந்தின் கடந்த காலத்தைப் பற்றிக் கூறினார்.
ஆனால் அதைக் கேட்டும் இவள் அரவிந்தை பற்றி எதுவும் பேசாதது அவர்களுக்கு வியப்பாகவே இருந்தது. குழப்பத்துடன் அவளை ஏறிட்டு,
" எங்க போற?" புருவங்களில் முடிச்சு விட கேள்வி கேட்டான்.
"உன்கிட்ட ஒரே ஒரு பொறுப்ப தான் கொடுத்தாங்க. ஆனால் நீ அதை கூட சரியா பண்ணல."
"என்ன பொறுப்பு?" என மேலும் குழப்பம் அடைந்தான், ராம்.
"என்னை உன் கைல கொடுத்து பத்திரமா பார்த்துக்க சொல்லி தான் என் புருஷன் சொன்னாரு. ஆனா நீ என்னையே கைநீட்டி அடிச்சுட்டல. இரு நான் போய் என் ஆரு மாமா கிட்ட சொல்லி போட்டுக்கறேன்.இப்ப டைமாச்சு ஆருரு மாமா என்னை தேடிட்டு இருப்பாரு." என்றவள் சிரித்துக்கொண்டே வாயிலை நோக்கி முன்னேற மருதமுத்து பர்வதம் ராம் மூவரும் மகிழ்ந்தனர்.
"அது என்ன ஆரு மாமா?" என நக்கல் கலந்த குரலில் ராம் கேள்வி கேட்க, ஆனந்தி ஒரு நிமிடம் நின்று திரும்பி ராமே பார்த்தவள், அவனின் அருகே சென்றாள்.
சோபாவில் அமர்ந்திருந்த ராமின் உயரத்திற்கு குனிந்து, " என் புருஷன் நான் எப்படி வேணா கூப்பிடுவேன். உனக்கு என்ன?" என நிமிர்ந்து கைகளை நெஞ்சின் குறுக்கே வைத்தவாறு தலையை சாய்த்து கேள்வி கேட்டாள்.
"அது சரி. உன் புருஷன் தான் நீ எப்படி வேணாம் கூப்பிடலாம்." என ராம் கூற மருதமுத்து ஆனந்தியின் நெற்றியில் முத்தமிட்டு, "இப்பதாண்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." என தழுதழுத்த குரலில் கூறினார்.
"எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் இரு மாமாவ கஷ்டப்படுத்தி இருக்க மாட்டேன். பாவம் மாமா. பரவாயில்லை இப்பயாவது தெரிஞ்சதே. நான் இப்பவே ஆரு மாமாவ பார்க்க போறேன்." எனக் கூறினாள்.
" இப்பவே பார்க்க போறியா?நைட்டு ரொம்ப நேரம் ஆச்சு. இந்த நேரத்துல நீ தனியா போறது நல்லதுக்கு இல்ல." மருதமுத்து உள்ளுக்குள் சிதம்பரத்தை நினைத்து சிறிது பயந்தார்.
"யாருக்காக பா பயப்படுறீங்க. ஆரு மாமா இருக்கிற வரைக்கும் என்னை யாராலயும் எதுவும் பண்ண முடியாது. நான் இப்பவே கிளம்புறேன்.ப்ளீஸ் என்னை தடுக்காதீங்க." என்றவள் ராமை பார்த்து,
" காலேல 11 மணிவரை குப்புறப்படுத்து தூங்காம அப்பாவையும் அம்மாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வர வழிய பாரு" ஆணை பிறப்பித்து விட்டு திரும்பிப் பார்க்காமல் மகிழ்ச்சியாக சென்றாள்.
ராம் அவளை விட்டு விட்டு வருவதாக கூறியும் அவள் மறுத்து அரவிந்தின் வீட்டு கேட்டை தட்டினாள்.
கேட் மெதுவாக திறக்கப்பட வாயிலை திறந்த வாயிற் காவலனே பார்த்து முறைத்தாள்.
"எவ்வளவு நேரம் தட்டுறது. உட்கார்ந்தே தூங்கிட்டியா? என்ன பண்ண நான் வெளியே போனது கூட தெரியாம. உன்ன நம்பி எப்படி நாங்க நிம்மதியா இருக்க முடியும். நீயே சிதம்பரம்க்கு ரூட் போட்டு கொடுத்துருவ போல.இரு உங்க எல்லாரையும் மாமாட்ட சொல்லி தரேன்." என்று அவனை தன் கைகளால் தள்ளி நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்.
வீட்டில் எல்லா புறமும் தேட அரவிந்த் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. தன்னை தேட சென்றிருப்பான் என் எண்ணி அரவிந்தின் அறைக் கதவை திறந்தாள்.
என்றும் அறைக் கதவை பூட்டி வைத்துவிட்டு செல்பவன் இன்று ஆனந்தியை காணவில்லை என்றதும் பூட்ட மறைந்துவிட்டான். அதனால் ஆனந்தி கதவில் கை வைத்ததும் கதவு திறந்து விட்டது.
உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கட்டிலின் எதிரே ஆனந்தி சேலையுடன் பட்டு சேலையில் இரட்டை சடையுடன் நின்றிருந்தாள்.
'இந்த மாதிரி சேல நமகிட்ட இல்லையே.' என யோசிக்கும் பொழுது தான் தெரிந்தது இது இந்த காலத்து புகைப்படம் இல்லை என்று.
ஆனந்தியின் அம்மா மகாலட்சுமி. தான் அச்சு அசலாக மகாலட்சுமியை ஒத்திருப்பதை அப்பொழுதுதான் பிரமிப்புடன் பார்த்தாள்.
அதன் அருகில் மற்றொரு புகைப்படத்தில் மகாலட்சுமியின் மடியில் அரவிந்த் அமர்ந்து இருப்பது போலும். அதன் அருகில் மகாலட்சுமி, சிவனேசன், அரவிந்த், அரவிந்த்தின் கையில் ஆனந்தி இருக்க அது புகைப்படம் ஆக்கப்பட்டு இருந்தது.
அதுதான் தனது தந்தையாக இருப்பார் என தன் கைகளால் வருடினாள்.
சிவநேசன் அருகில் இருந்த மகாலட்சுமி பார்த்து கண்களில் நீர் கோர்க்க, ஒரு பிறந்து ஒரு மாதமே ஆன தன்னை கையில் ஏந்திக் கொண்டிருக்கும் அரவிந்தை விழியகலாமல் பார்த்தாள்.
அதைப் பார்த்ததும் முதன் முதலாக இந்த வீட்டுக்கு வந்தபொழுது அவன் தன்னை தூக்கியது ஞாபகத்தில் வர அரவிந்தை சந்தித்ததிலிருந்து அவனை காயப்படுத்தி விட்டு சென்றது வரை அவள் மனக் கண்ணின் முன் வந்து நின்றது.
தன் உயிரையே காயப்படுத்தி விட்டோம் என நொந்து கொண்டிருக்கும் பொழுது வண்டியின் சத்தம் கேட்டது. கண்களை துடைத்துக்கொண்டு அரவிந்தை பார்க்க வேகமாக ஓடினாள்.
வாயிற்காவலரின் மூலமாக ஆனந்தி வீட்டிற்கு வந்து விட்டாள் என தெரிந்து அரவிந்த் ஆனந்தியை காண வேகமாக வண்டியை விட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைந்தான்.
அதேநேரம் ஆனந்தியும் அரவிந்தின் அறையை விட்டு வெளியே வர கண்களில் பயத்துடன் இருந்த அரவிந்தை பார்த்ததும் அவளையே அவளால் கட்டுப்படுத்த முடியாமல் ஓடி சென்று அரவிந்தை அணைத்துக்கொண்டாள்.
ஆனந்தி திரும்பி வந்ததை நம்ப முடியாமல் இருந்த அரவிந்த்க்கு அவள் அணைத்தது ஆச்சரியமே.
"சாரி..."என மெதுவாக முனங்கினாள்.
தானும் அணைக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்க,
" சாரி ஆரு மாமா. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.இனி உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்." என தன் நெஞ்சில் ஏங்கியவளை, கண்களில் நீருடனும் உதட்டில் புன்னகையுடனும் மனம் குளிர்ந்து ஆனந்தியை இறுக்க அணைத்துக்கொண்டான்.
"ரொம்ப பயந்துட்டேன் ஆனந்திமா." என அணைப்பை இறுக்கி உச்சந்தலையில் முத்தமிட்டான்.
தன் அண்ணனும் அண்ணியும் ஒன்று சேர்ந்ததை அனைவரும் கண்டு மகிழ மணியோ அனைவருக்கும் கண் ஜாடை செய்து அனைவரையும் வெளியேற சொல்ல அனைவரும் வெளியேறினர்.
நிமிடங்கள் கழித்தே தவிர அவர்களின் அணைப்பு முடிந்த பாடில்லை. அதை உணர்ந்த அரவிந்த் ஆனந்தியை அவனிடமிருந்து பிரிக்க முயற்சிக்க ஆனந்தி இன்னும் அவனுள் புதைத்தாள்.
அவளை தன் கைகளில் வைத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன். ஆனந்தியை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
ஆனந்தி அவன் தோளிலிருந்து அவன் மடியில் தஞ்சம் புக, அரவிந்த் ஆறுதலாக ஆனந்தியின் தலையை கோதி விட்டான்.
அரவிந்தின் கைகளிலிருந்த மாயமா? இல்லை தன் காதல் கை கூடி மகிழ்ச்சியா? இல்லை தன்னையே எண்ணி காத்திருந்த அரவிந்தை அடைந்த மனநிறைவா? ஏதோ மனதில் நிம்மதியை ஏற்படுத்த அவனின் உடல் சூட்டில் கண் உறங்கினாள்.
தூக்கத்தில் புரண்டு படுக்க அரைத்தூக்கத்தில் கண்களை மெதுவாக திறக்க, தான் இருந்த இடத்தை பார்க்க முழு தூக்கமும் பறந்தோடியது. எழுந்து அமர்ந்தவள் பெருமூச்சு எடுத்து கோபமானாள்.