"போதும் அத்தை. என் வயிறு பெருசாயிடுச்சு. இதுக்கு மேல சாப்பிட முடியாது." வயிற்றைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான், அரவிந்த்.
" அவ்ளோதான். இன்னும் ஒரே ஒரு வாய்."
" இப்படி சொல்லி சொல்லியே எம்புட்டு வாய் ஊட்டி விடுவீங்க." என்றான், சிணுங்கியபடி.
"விடு தாயி. அவன்தான் போதுமுன்னு சொல்லுதான்ல. நீ சாப்பிடு தாயி. அந்த மீனை எடுத்து லட்சுமிக்கு வை மஞ்சு."
" சரிங்க "என்றவாறே சிதம்பரத்தின் ஆணைக்கு இணங்க மூன்று துண்டு மீன்களை அடுக்கி வைத்தாள்.
" போதும் அண்ணி. அட நீ சாப்பிடு புள்ள.வயசு புள்ள நல்லா சாப்டா தான் ஆச்சு." என்றாள், மஞ்சு உண்மையான அக்கறையுடன்.
மஞ்சுவுக்கு எப்போதும் மகாலட்சுமி மேல் ஒரு தனி பாசம் இருக்கும். அவளை தன் சகோதரி போல்தான் நினைத்தாள்.
" நானும் வயசு பையன் தான். என்னையும் கொஞ்சம் கவனிக்கலாமே. ரொம்ப பசிக்குது." என்றவாறு அங்கு வந்து அமர்ந்தான், சிவபெருமான்.
" ஏன்டா, இன்னைக்கு தான் அம்மா பறக்கிறது நடக்கிறது ஓடுறதுன்னு எல்லாத்தையும் பொங்கி வைச்சுருக்குமே. ஏன் அங்கே போய் சாப்பிடறது தானே." அவளை ஒரு முறை பொய்யாய் முறைத்து பின் சலிப்புடன் ,
"ஆமாம் எல்லாம் எனக்காக பொங்கி வச்சிருக்கு பாரு. போய் வெளுத்துக் கட்ட . எல்லாம் அவ செல்ல பிள்ளைக்காக பண்ணி வச்சிருக்கு. அவன் மிச்சம் வச்ச தான் என் கண்லயே காட்டும்."
" என்னலே சொல்லுற .சிவனேசன் நாளைக்கு வரதா தானே கடதாசியில போட்டிருந்தான்."
சிவனேசன் பற்றி பேச ஆரம்பித்த போதே மகாலட்சுமியின் கன்னங்கள் சிவப்பேற ஆரம்பித்தன.
இதழில் புன்னகையும் இதயத்தில் படபடப்பு கூடிப்போனது. மனதில் அவனைப்பற்றிய எண்ணங்கள் கோலமாக பின்னி விட தட்டிலும் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.
" அப்படி தான் மாமா கடுதாசி வந்தது. அவங்க தோஸ்து யாரோ முத்துவை பார்க்கப் போவதாகவும் பார்த்துட்டு நாளைக்கு வரவும் இருந்தது.
ஆனா நேத்து அவுக எங்கயோ வெளியூருக்கு போயிடாங்களாம். அதான் நேசன் இன்னிக்கி காலேலயே வீட்டுக்கு வந்துட்டான்."
அவளுடைய சிவனேசன் அத்தான் வந்து விட்டார் என தெரிந்ததுமே அவரை காண கண்கள் ஏக்கம் விட்டன.
அவரை எப்படி காண என்று யோசிக்கும் போதே அவளுடைய மூத்த உடன்பிறப்பு அதற்கான வழியை வகுக்க தொடங்கினார்.
" வீட்டுக்கு வரச்சொல்லுப்பா. எம்புட்டு வருசமாச்சுசிவனேசன் ஐ பார்த்து." என வந்து அமர்ந்தார், நடராஜர்.
" அண்ணே உங்க எல்லாரையும் பார்க்க இங்க வரேன்னு தான் சொல்லிருக்கு. இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துரும் மாமா."
சிவனேசன் சற்று நேரத்தில் வந்துவிடுவான் என அறிந்ததும் தட்டில் கைகழுவி வேகமாக தன் அறைக்குச் சென்றாள், மகாலட்சுமி.
அறைக்குச் சென்று கதவை அடைத்து, அவள் தன் படபடப்பைக் குறைக்க எண்ணி நெஞ்சை தன் கைகளால் தாங்கி, கதவில் சாய்ந்து நின்று கொண்டாள்.
அவனை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கப் போவதை நினைக்கும்போதே சந்தோசத்தில் முகமெங்கும் புன்னகை பரவிட கண்களோ வெட்கத்தில் இமையை மூடிக்கொண்டது.
' ஐயோ அத்தான் இப்போ வந்துருவாரு. இப்போ என்ன பண்ண ' என எண்ணியவள், அவளுடைய மரத்தினால் ஆன சிறிய அலமாரியைத் திறந்தாள்.
அலமாரி முழுவதையும் புரட்டியெடுத்து சிவப்பு வர்ண தாவணியை கையில் எடுத்தாள்.
'இந்த நிறம் அத்தானுக்கு ரொம்ப பிடிக்கும்.' என நிமிடத்தில் அந்த தாவணிக்கு மாறி, சடையை நன்கு இழுத்து பின்னல் இட்டாள்.
பின் நினைவு வந்தவளாய் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தவளை இடைமறித்து நின்றான், சிவபெருமாள்.
"மகா, மெதுவா.... எதுக்கு இவ்வளவு வேகமா ஓடி வர்ற...."
" அது...வந்து ... அத்தான்..." என திணறியவளிடம் குறுக்கிட்டான்,
" மகா நீ இந்த தாவணியில அழகாயிருக்க...." என அவளை உச்சி முதல் பாதம் வரை ரசிக்க,
" நிஜமாவா அத்தான்...." என குழந்தை போல் சுற்றி அவனுக்கு தன்னுடைய தாவணியை காண்பிக்க,
"ஆமா மகா அப்படியே தேவதையாட்டம் இருக்க...." என மெய்சிலிர்த்து கூற,
சிவனேசன் இந்த உடையில் பார்த்து என்ன கூறுவார் என நினைக்கும்போதே வெட்க பூ சூடிக்கொண்டாள்.
" உண்மையிலேயே லட்சுமி தேவதை தான். இந்த தேவதை யார் வீட்டுக்கு போகப் போவுதோ..." என மஞ்சு அங்கு வர,
" ஏன் அண்ணி... உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டீங்களா..." என கூறி பின் தான் கூறியதை நினைத்து நாக்கை கடித்துக்கொண்டு திருதிருவென முழிக்க,
சிவபெருமானோ சந்தோசத்தின் உச்சியில் மிதந்து கொண்டிருந்தான்.
" நீ என் பொறந்த வீட்டுக்கு வந்தா என்ன விட சந்தோஷப்படுறது வேறு எவரும் இருக்க மாட்டாங்கல. நீ எங்க வீட்டுக்கு வர்ற நாங்க குடுத்து வச்சுருக்கனும்ல. ஆனா கடவுள் என்ன வச்சுருக்காருன்னு யார்லேய் கண்டா..." என அவளை திருஷ்டி கழித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
" அத்தான்.... அத்தான்..." என சிவபெருமானை உலுக்க,
" என்ன ஆச்சு ... சிலையாட்டம் நிக்கிறீங்க...." எனக் கேட்க,
அப்பொழுதுதான் தன் ஆசை மனைவி மகாவுடன் அவன் வீட்டில் வளைய வருவதைப் போன்று எண்ணி கொண்டிருந்தவன் நிகழ் உலகிற்கு வந்து அவளைப் பார்த்துவிட்டு ,
"ஒரு நிமிஷம் இங்கேயே இரு... நான் வந்துட்றன்." என்றவன் ஒரு நிமிடத்தில் கையில் ரோஜாவுடன் வந்தான்.
" இந்த மஹா. இதை வச்சுக்கோ. இந்த ரோஜா எடுப்பாய் இருக்கும்."
" ஐயோ.... நன்றி அத்தான். நானே ரோஜாவை எங்க போய் பறிக்கலாம்னு தான் யோசித்து வந்தேன். நான் என்ன நெனச்சாலும் நான் சொல்றதுக்கு முன்னாடியே எல்லாமே நீங்களே செஞ்சு கொடுத்து இருக்கீங்க. நீங்க தான் செல்ல அத்தான்..." என கன்னத்தை பிடித்து கிள்ளி ஆட்ட, அவன் வெட்கத்தில் தலை குனிந்தான்.
" இதுக்கே இப்படின்னா நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ என்னை...." என நிமிர்ந்து பார்க்க அங்கு அவள் இருந்த தடயமே இல்லை.
" வாப்பா சிவனேசா.... பட்டணம் எல்லாம் எப்படி இருந்தது. எப்படியோ பட்டத்தை வாங்கிட்டு வந்துட்ட போல." என நடராஜன் வரவேற்க வசீகர புன்னகையுடன் உள் நுழைந்தான் சிவனேசன்.
ராமலிங்கம் மங்களத்திற்கு மூன்று செல்வங்கள். மூத்தவள் மஞ்சுளா. இரண்டாவது சிவனேசன். கடைசியாகப் பிறந்தவன் சிவபெருமாள்.
மஞ்சுளாவிற்கு சிதம்பரத்தை மணமுடித்து வைத்தனர்.
சிவனேசன் சிவபெருமானின் மூத்த சகோதரன். பள்ளிப்படிப்பை முடித்து பட்டணத்திற்கு சென்றவன் வேளாண் துறையில் முனைவர் பட்டம் பெற்று வந்துள்ளான்.
சிவபெருமான் பத்தாம் வகுப்பில் நான்கு முறை முயற்சித்தும் வெற்றி பெறாததால் படிப்பை விட்டு நேரடியாக அவன் பண்ணைகளை பார்த்துக்கொண்டான்.
நடராஜரின் குடும்பம் அளவிற்கு இல்லாவிட்டாலும் சிவனேசனின் குடும்பமும் மிக வசதி படைத்தவர்கள்தான்.
மகா மேல் இருந்த காதலால் பக்கத்து கிராமத்தில் இருந்தாலும் மகாவை காண சிவபெருமான் தினமும் இங்கு வந்து விடுவான்.
ஆனால் சிவனேசன் அரவிந்த் கை குழந்தையாய் பட்டினத்திற்கு சென்றவன் இப்போதுதான் வருகிறான்.
"வாலேய் நேசா... படிப்பெல்லாம் முடிஞ்சுதா..." என்றவாரே உள்ளிருந்து வந்தார், சிதம்பரம்.
" முடிஞ்சது மாமா...."
"ஏலேய் நேசா...." என்ற மஞ்சு அவனை தழுவிக் கொண்டாள்.
" எப்படிலேய் இருக்க. லீவுக்கு கூட வராம அப்படி என்னலே படிப்பு..." என ஆரம்பித்தவர் வருடங்களுக்குப் பிறகு பார்த்த தம்பியிடம் கேள்விகளைத் தொடுக்க, அதற்கு பதில் கொடுத்துக் கொண்டே சிதம்பரமும் நடராஜரும் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த கயலயும் அரவிந்தயும் தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவர்களுக்கு என கொண்டு வந்த விளையாட்டு பொருட்களையும் சாக்லேட்டுகளை எடுத்துக் கொடுத்தான்.
தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தவன் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டான். அவன் கண்களுக்கு யாரும் தெரியவில்லை என்ற போதிலும் காலின் கொலுசு ஒலி மட்டும் கேட்க, ஒலி வந்த திசையை பார்த்தான்.
ஆனால் அங்கு யாரும் இல்லாமல் இருக்க மீண்டும் குழந்தைகளுடன் பேச ஆரம்பித்தான்.
மீண்டும் யாரோ தன்னை வெறிப்பதை போல இருக்க, இந்த முறையும் கொலுசொலி மட்டும் கேட்க வேறு யாரையும் பார்க்க முடியவில்லை.
இதே நிலைதான் மகாலட்சுமிக்கும்.
சிவனேசன் வந்ததிலிருந்து அவனைப் பார்க்க வேண்டி எட்டிப் பார்க்க அவள் பார்வையில் கிடைத்தது அவன் முதுகுப்புறம் மட்டுமே.
வேறு வேறு இடங்களில் இருந்து முயற்சி செய்து பார்த்தும் அவன் காதுகளை பார்க்க முடிந்ததே தவிர அவன் முகம் பார்க்க முடியவில்லை.
அவன் முன்னால் சென்று பார்க்கவும் நாணம் அவளை தடுத்து நிறுத்தியது. இருந்தும் அவனைப் பார்க்க போகும் ஒரு நொடி தரிசனத்திற்காக அவள் மனது ஏங்க ஆரம்பித்தது.
எங்கே அவன் தன்னை பார்த்து விடுவானோ என பயந்த வாறு மறைந்திருந்து பார்க்க முயன்று தோல்வியைத் தழுவியவள், இதற்குமேலும் பார்த்தால் யாரிடமாவது மாட்டி மானம் போகும் என உணர்ந்து தோல்வியை ஒத்துக் கொண்டு, திரும்பிப் போக, அவள் கையைப் பற்றி அவன் புறம் இழுத்தான், சிவனேசன்.
திடீரென அவளை பற்றி இழுத்ததும் அவன் மேலே மோதி மீண்டாள்.
தன் எதிரில் நிற்பவனை கண்டு கண்கள் படபடவென பட்டாம்பூச்சியின் சிறகு போல படபடக்க, கண்களில் ஆனந்தமும் படர அதிர்ச்சியில் திறந்திருந்த அவள் வாயை தன் இரு விரல் கொண்டு மூடி அவன் அவள் கண்களோடு அவன் கண்களை கலக்க விட்டான்.
பட்டுப் பாவாடை சட்டையில் இரட்டை சடையுடன் பார்த்த சிறுமி. பருவமடைவதற்கு முன் தாய்மையை உணர்ந்தவள். தான் கட்டிய ஓலை அறையில் கண்ணீருடன் வேண்டாம் என ஏக்கமாய் அவனைப் பார்த்த பருவமங்கை.
இன்று அழகு பதுமையாய் சிவப்பு வண்ண தாவணியில் ஒற்றை ஜடை பின்னல் இட்டு சடையின் ஓரத்தில் ரோஜா எட்டிப் பார்க்க இதயத்தை சுண்டி இழுக்கும் பேரழகியாய் இருந்தாள்.
அரும்பு மீசை குறும்பு பார்வையுடன் பார்த்தவள். இன்று ஆணழகனாய் கட்டிளங்காளையாக , அரும்பு மீசை இல்லா விட்டாலும் இன்னும் அதே குறும்பு பார்வையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு முகத்தில் வெட்கம் அவளை சூடிக்கொள்ள தலையை குனிந்தாள், மகாலட்சுமி.
அவள் கண்கள் அவனை விட்டு அகல,
" உனக்கு என்ன வேணும். ஏன் என்னையே பார்த்துட்டு இருந்த. அது சரி... முதல்ல நீ யாரு... அத சொல்லு..." என்றான், குறும்புகளை மறைத்து.
அவன் தன்னை கண்டுகொண்டான் என வெட்கப்பட்டவள், அவனின் யார் நீ என்ற கேள்வியில் ஏமாற்றம் அடைந்தாள்.
அவனுக்கு தான் யார் என்பதைக் கூட நினைவில் இல்லை என்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவளின் மூக்கு துடிக்க, கண்கள் அணையை திறக்க காத்திருக்க,
" நான்.... நான்...." என திக்கியவளாய் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க,
" வெயிட்... வெயிட் ... வெயிட்... என பொரிந்தவன், கொஞ்சம் குனிந்து குனிந்தவளுடைய முகத்தை பார்த்து,
" பாவாடை சட்டை போட்டு அரவிந்த என் கைல கொடுங்கன்னு அழுதுட்டே மூலையில் உட்கார்ந்து, தாய்மாமன் யாரும் இல்லன்னு அந்த முறையில் இருக்கிற என்னை ஓலை கட்ட சொல்லும்போது முறைச்சு முறைச்சு பார்த்தீயே அந்த பாப்பாவா நீ .." என கண்களில் குறும்புடன் அவளை பார்க்க, அவன் தன்னை கண்டு கொண்டான் என்னும் மகிழ்ச்சியில் மீண்டும் வெட்கம் ஆர்ப்பரிக்க, இதழ்கள் விரித்து,
" நான் ஒன்னும் உங்களை மொறச்சு பாக்கல. நீங்களாவது உதவி செய்வேங்களான்னு தான் பார்த்தேன்.
அப்புறம் நான் ஒன்னும் பாப்பா இல்ல. பெரியவள் ஆயிட்டேன்." என்றால் கன்னங்கள் சிவந்து தலையை ஆட்டியவாறு.
அவன் அவளுடைய பட்டாம்பூச்சி கண்களை பார்த்து, "அப்போ மொறச்சு பாக்கல சரி. இப்ப எதுக்கு பார்த்த .... அதுவும் மறைஞ்சு மறைஞ்சு... " என்றான் புருவங்களை உயர்த்தி அவன் எதிர்பார்க்கும் பதிலை எதிர்பார்த்து....
" அது . அது... நான் ஒன்னும்..." என வார்த்தைகள் தடுமாற,
"ஹா... அண்ணி... இதோ வந்துட்டேன்.
அண்ணி கூப்பிடுறாங்க. நான் வரேன்." என யாரும் அழையா அழைப்புக்கு அவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமல் கொலுசொலி ராகம் பாட ஓடினாள்.
அவள் நிலையை அறிந்தாலும், "ஏய் சுமி..." என்றான்.
அவன் அழைப்பில் திரும்பி நின்றவள் ,அவனை முறைத்துவிட்டு, பார்வையை வேறு புறம் திருப்பி, தாவணியின் தலைப்பை விரலில் சுற்றிக்கொண்டே,
" என்னை தான் மறந்துட்டீங்கன்னு நெனச்சேன். என் பேர கூட மறந்து இருப்பீங்கன்னு எனக்கு தான் தெரியாம போச்சு...." என்றாள், வருத்தமான கரகர குரலில்.
முதலில் குழம்பியவன், பின் அவள் அருகில் வந்து,
" உன் பேரு மகாலட்சுமி தானே." என கண்களில் மின்னலுடன் அவனை ஏறிட்டாள்.
" எல்லோரும் உன்ன லட்சுமின்னு கூப்பிடுறாங்க. பெருமாள் கூட உன்ன மகான்னு நான் கூப்டுறான்.
அவங்க எல்லாரையும் மாதிரி நான் உன்ன கூப்பிட விரும்பல. அதனாலதான் லட்சுமி ல இருக்கிற சுமிய மட்டும் எடுத்து கூப்பிட்டேன். உனக்கு பிடிக்கலையா...."
" பிடிச்சிருக்கு...." என்றால் சிவந்த கன்னங்களை மறைத்தவாறு.
" ஏன் நான் மட்டும் அப்படி கூப்பிட்டேன்னு நீ கேட்க மாட்டியா...."
" ஏன்...."
" அது...."
" மாமா .... நீங்க கொடுத்த பொம்மைய கயல் தர மாட்டேங்குற. நீங்க வந்து வாங்கி கொடுங்க.." என அவன் கையை பிடித்து அரவிந்த் இழுக்க, பின்னால் ஆள் அரவம் கேட்க அங்கிருந்து நழுவினாள், சுமி.
💖💖💖💖💖
Nxt ud...