தன்னை மறந்திருக்கும் என எண்ணி இருந்த கிராமம் அரவிந்துக்கு கொடுத்த வரவேற்பில் கண்கலங்கினான்.
வருடங்கள் பல கடந்தும் தன் தாத்தா மற்றும் தந்தை செய்த உதவிகள் அவனை அவர்களை மறக்க விடச் செய்யவில்லை என உணர்ந்தான், அரவிந்த்.
"ஏய்யா.... ராசா... எப்படியா இருக்க? நீ காணோம்னு மனசே வெந்து போச்சுய்யா. இப்படி ராஜாவாட்டம் உன்னை பார்த்து தான் நிம்மதியே வருது. எப்படி வாழ்ந்த குடும்பம். இப்ப குடும்பமே இல்லாம செதஞ்சு போயிருச்சு. இப்படியா போகணும்." என ஒரு வயதான பாட்டி புலம்பி தள்ளினார்.
"எது எப்படி போனா என்ன அப்பத்தா. அதான் நீங்க எல்லாம் இருக்கீங்கள. உங்களை விட எங்களுக்கு வேற என்ன வேணும். குடும்பம் இருந்திருந்தா அவங்க பாசம் மட்டும் தான் தெரிஞ்சுருக்கும். இப்போ அவங்க இல்லாததாலவோ என்னவோ மொத்த கிராமத்தோட பாசமும் எங்களுக்கு கிடைச்சிருக்கு."
"உனக்கு உன் அப்பானாட்டம் , தாத்தன் பாட்டன், பூட்டனாட்டாம் ரொம்ப பெரிய மனுசுயா. உன்ன மாதிரியே உன சந்ததியும் வரணும்யா." என மற்றொரு வயதான பெண்மணி கூறினாள்.
அரவிந்தின் கண்கள் ஆனந்தியை ஏறிட, ஆனந்தியோ வேற்று கிரகத்துக்குள் குதித்த ஏலியன் போல கிராம மக்களின் பார்வையில் ஒன்றும் தெரியாது, புரியாது விழித்துக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்த அரவிந்துக்கு சிரிப்பு வர முயன்று அடக்கியவன் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களை ஏறிட்டான்.
"இங்க பாரு இந்த பிள்ளைய அப்படியே நம்ம லட்சுமியை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கு."
" ஆமா அக்கா இதுதான் மகாலட்சுமி சொன்னா கூட நம்பிடலாம் போல. அப்படியே இருக்கு." என ஒரு புறம் ஆனந்தி பற்றிய பேச்சு ஓடியது.
"எப்படியோ பிறக்குறதுக்கு முன்னாடியே எனக்கு பொண்டாட்டி பிறக்க போறேன்னு ஏலம் விட்டவன் இன்னைக்கு நெசத்துக்குமே பொண்டாட்டியாக்கிட்டானே."
"பின்ன வாக்கு தவறாத பரம்பரையாக்கும் அவன் பரம்பரை. சொன்ன சொல்ல காப்பாத்துறவங்கய்யா. " என ஒருபுறம் கூற,
மறு புறமோ "எப்பேர்ப்பட்ட பரம்பரை அது. அந்த பேரை கெடுக்க தான் சிதம்பரம் இருக்கானே. சந்திர நாராயணன் அய்யாவும் நடராஜா ஐயாவும் இருந்த வர்ற ஓஹோன்னு இருந்த கிராமம். நம்மளுக்கு ஏதாவது ஒன்னுனா துடிச்சு வர்ற ஐயாங்க வந்த பரம்பரைல சிதம்பரமும் வந்து நாம்ம கஷ்டப்படும்போது கூட கண்டுக்காம தானே இருந்தார். வெட்கத்தை விட்டு கையேந்தி நின்ன போது கூட அவரு நம்மள மதிக்கலையே. அவரால அவுக பரம்பரைக்கே தலைகுனிவு வந்துருச்சு."
"வீட்டுக்கு ஒரு சனியன் மாதிரி. அந்த பரம்பரைக்கு ஒரு சனியன்னு நினைச்சு விடுங்கலேய்."
"ஏய்யா பேச மாட்டீக. இத்தனை வருஷத்துல எத்தனை நாள் நம்ம ஐயாவுகளை நினைச்சு மருவிருப்போம். நமக்காக எத்தனை செஞ்சாங்க. நம்ம கிராமத்தை அடுத்த கடடத்துக்கு கொண்டு போக நினைச்சாங்க. ஆனா அந்த சிதம்பரம் நம்மளயே அடிமைப்படுத்தி நம்ம நிலத்தை குத்தகைக்கு எடுத்து அடுத்த வேளை சோத்துக்கு கடன் வாங்குற நிலைமைக்கு கொண்டு போனதெல்லாம் மறந்திருச்சாலே."
"விடுலேய். அதா நம்ம நடராஜய்யா மக வந்திருக்காருல. அந்த வயசுலயே அத்தனை பொறுமையா மருவாதயா இருக்கும். இப்போ இல்லாமலா போயிடும்."
தன் சித்தப்பாவால் கிராமமே நிம்மதியை தொலைத்து இருக்கிறது என உணர்ந்தவன் மனம் ஏனோ பாரமானது.
அவன் அறிந்த சிதம்பரம் சித்தப்பா இவ்வாறு இருந்ததில்லை. சிவபெருமானின் சூழ்ச்சியால் வந்த விணை என உணர்ந்தவன் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டான்.
இளசுகள் தன் குடும்ப பெரியவர்களிடம் அரவிந்தின் பரம்பரை கதைகளையும், காதல் கதையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்த அரவிந்த் திரும்ப,யாரோ மறைவது சரியாக தெரிந்தது.
யாராக இருக்கும் என எட்டிப் பார்க்க அவர் அணிந்திருந்த உடை தெரிய யார் என கணித்தவன் ஆனந்தியை அழைத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டான்.
திருவிழாவில் தொலைந்த குழந்தையை போல் முழித்தவள், அரவிந்த் கையை பற்றிக்கொள்ள தூரத்தில் இருந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்களில் கண்ணீர்.
நிம்மதி அடைந்த அரவிந்த் அதற்கு முடிவு கட்ட எண்ணினான்.
"நாம எங்க போறோம். எதுக்கு சேலை கட்ட சொன்னிங்க. பாருங்க நான் குண்டா தெரியுறேன்."
"குண்டவா? ,நீ அழகா இருக்க .அப்படியே மகாலட்சுமி மாதிரி. அவன் கூற்றில் முகத்தை சுளித்தாள், ஆனந்தி.
"என்னாச்சும்மா?"
"ஆனா ஊனா உங்க அத்தை ஞாபகம் வந்திடுமே உங்களுக்கு."
"ஏன் உனக்கு பொறாமையா இருக்கா?"
"பின்ன இருக்காதா?"
"என் அழகு ஆனந்தி . நீ அத்தை பெத்த ரத்தினம். இந்த தேவதையை கொடுத்த அத்தை ஞாபகம் வராட்டி எப்படி." என அவளை நெருங்கி நிற்க மூச்சு முட்டியது ஆனந்திக்கு.
முதன் முதலாக கணவனாய் காதலாய் நெருங்கிய அரவிந்தின் செயலில் கண்ணம் சிவந்தாள், பெண் அவள்.
"சரி சரி டைம் ஆச்சு வாங்க போகலாம்." என அவள் நகர அவள் கையை பிடித்தவன், "ஒன்ன மறந்துட்டியே செல்லக்குட்டி." என குங்குமச்சிமிழ் எடுத்து அவள் நெற்றி வகிட்டில் வைத்து விட்டான்.
அவனையே கண்மூடாமல் ஆனந்தி பார்த்துக் கொண்டிருக்க அவன் அவள் முன் சொடக்கிட்டான்.
"ஆனந்திமா என்னாச்சு!"
"உங்க பேச்சு செய்கை எல்லாம் ஒரு மாதிரி இருக்கு. அதான் நீங்கதானான்னு நானும் பார்த்துட்டு இருக்கேன்."
அதற்கு சிரிப்பை மட்டும் பதிலாய் அளித்தான்
"சிரிச்சு மழுப்ப வேண்டியது. வாங்க போகலாம்." என அவள் முன்னேற அவள் பின் சென்றான், அரவிந்த்.
சிறிது தூர பயணத்தில் ஒரு பெரிய வீட்டின் முன் வந்து நிற்க, ஆனந்தி அந்த வீட்டின் முகப்பை பார்த்துக்கொண்டே இறங்கினாள்.
"யாரு வீடு ஆரு மாமா இது."
"உள்ள போய் பாரு."
"நீங்க"
"இல்ல நான் வரல." என தயங்கினான்.
அரவிந்தின் தயக்கம் ஏதோ ஒன்றே உணர்த்த அவனை வற்புறுத்த எண்ணாமல் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள், ஆனந்தி.
வீட்டிற்குள் யாரும் இருப்பது போல் தெரியாததால் தயங்கியே நுழைந்தாள்.
" யாராவது இருக்கீங்களா?" என குரல் கொடுத்தாள், ஆனந்தி.
"யாருவே அது?" என ஒரு அறையில் இருந்து வெளியே வந்தவர் தன் கையில் இருந்த பாத்திரத்தை கீழே போட்டார்.
கண்கள் நொடி பொழுதில் கலங்கிவிட, "உள்ளே வந்தது தப்போ" என எண்ணினாள், ஆனந்தி.
"அடியாத்தி , என் தங்கம். எங்கள பார்க்க வீடு தேடி வந்தியா?" என்றவள் ஆனந்தியை இறுக அணைத்து உச்சி முகர ஆனந்திக்கு மூச்சு முட்டியது.
கை கால்கள் நடுங்க ஆனந்தியை ஆசை தீர தடவியவர் பொறுப்புடன், "ஏன் தாயி ஒத்தையிலயா என்ன பாக்க வந்தவ?" என அவளை வீட்டின் கூடத்தில் இருந்த கதிரையில் அமர வைத்து தானும் அவள் அருகில் அமர்ந்தாள்.
"இல்ல. ஆரு மாமா கூட தான் வந்தேன்."
" ஆறா? அது யாருலேய்? "
"அரவிந்த் மாமா. என் புருஷன்."
"அடி சிறுக்கி. கட்டுன புருஷனையா பேர் சொல்லி கூப்பிடுறவ."
"மாமான்னு தான் கூப்பிடுவேன்."
"அப்புறம் எப்படி பேரு வந்ததாம்."
"அப்புறம் எப்படி யாருன்னு சொல்ல முடியும்."
"என்னோட அவரு அப்படின்னு சொல்லணும் புள்ள. சரி எங்க அரவிந்த் தம்பி."
"வெளியே கார்கிட்ட."
"என்ன புருஷனை தனியா விட்டுட்டா உள்ள வந்தவ. என்ன பழக்கவழக்கத்தை கத்து கொடுத்தாக அங்க உனக்கு." ஆனந்தி பயத்தில் முழித்தாள்.
ஆனால் அதை பார்த்து பார்க்கும் நிலையில் தான் அவர் இல்லை.
"ஐயோ பிள்ளைய வாசல்ல நிக்க வச்சுட்டு வந்து இருக்காளே." என புலம்பியவாரே ஓடியவரை விசித்திரமாக பார்த்தாள். ஒரே நொடியில் தனிமையை உணர, அப்பொழுது தான் சுற்றத்தை கவனித்தாள்.
அவர்களின் பரம்பரையில் இயற்கையை எய்திய ஆண் மகன்களின் புகைப்படங்கள் கூடத்தில் வரிசையாக மாட்டப்பட்டிருக்க கடைசியாக இருந்த புகைப்படத்தில் நிலை குத்தி நின்றாள், ஆனந்தி.
அங்கே தன் வயதையும் பார்க்காது ஓடி வந்தவர் காரின் வெளியே காரில் சாய்ந்தவாறு நின்றிருந்த அரவிந்தை பார்த்ததும் கால்கள் ஏனோ தள்ளாடின.
அவரைப் பார்த்ததும் அரவிந்த் நேராக நிற்க அருகில் வந்த மங்களமோ அவன் கன்னத்தில் தன் கையை இறக்கினார்.
தலை குனிந்து நின்றான்.
"ஏய்யா இப்படி பண்ணுன. அவன் பண்ணுன தப்புக்கு எங்களுக்கு ஏன் தண்டனை கொடுத்த. இல்லை இல்லை எல்லாம் என் தப்புதான். அவன பத்தி தெரிஞ்சதுமே அவுக அய்யாவு கிட்ட சொல்லி தோலை உரிச்சிருந்தா இன்னிக்கு உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காதுய்யா. அதனாலதான் எங்களை விட்டு இம்புட்டு வருஷமா தூரமா இருந்தியாயா?"
"ஐயோ ஆச்சி அப்படி எல்லாம் இல்ல. நான் சிவபெருமான் மாமாவ கொன்னுது தப்பு தானே. ஆயிரம் இருந்தாலும் அவர் உங்க மகன் இல்லையா!அதுக்கு நீங்களும் ஐயாவும் என் மேல கோவமா இருக்கீங்களோன்னு தான் ...."
"வாயை கழுவுலேய். அவன பேர கூட சொல்லாத. அவன பெத்த வயிறு எரியுது. அவனெல்லாம் மனச ஜென்மமே இல்லல. தாயா பார்க்க வேண்டியவல சொல்லவே நான் கூசுது. அவன் பண்ண காரியத்தால உங்க வாழ்க்கை போச்சுன்னு அவர் கண்ணீர் விடாத நாளே இல்ல. நீயும் ஆனந்தியும் நல்லா இருக்கிகலா இல்லையான்னு கூட தெரியாம மனுசேன் உள்ளயே புழுங்கி கிட்டு இருக்காரு அவரு."
"நான் ஒரு கிறுக்கச்சி. உன்னைய வெளியவே நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன். உள்ள வாளேய்.. ஐயாவை பாருலேய். அவர் ரொம்ப சந்தோஷப்படுவாரு." என அவன் கையை இழுத்துச் சென்றார், மங்களம்.
கடைசியாக இருந்த புகைப்படத்தில் இருந்த தன் தந்தையை கண்டவள் கண் கலங்கின.
"என் நிலைமைய பாத்தீங்களா அப்பா. இத்தனை வருஷமா நீங்க தான் என் அப்பான்னு கூட தெரியாம இருந்து இருந்திருக்கேன். அன்னைக்கு ஆரு மாமா ரூம்ல தான் உங்களையும் அம்மாவையும் முதமுத பார்த்தேன். உங்க போட்டோ இங்க இருக்குன்னா அப்போ இது உங்க வீடாப்பா. இங்க இருந்து வெளியே போனது என் பாட்டியா?" என புகைபடைத்தை பார்த்து யூகித்துக் கொண்டிருந்தாள்.
சிவபெருமானின் படம் இல்லாததையும் கவனித்தாள்.
"வாலேய். அச்சோ முதமுறையா வாரீங்க. ஆர்த்தி கூட கரைக்கலையே."என்ற மங்களத்தின் குரலில் திரும்பினாள்.
ஆனந்தியின் முகத்தில் புன்னகை படர்ந்தது.
"ஏத்தா, ஆனந்தி இங்க வாத்தா. வந்து தம்பி பக்கத்துல நில்லு." என்றவர் நொடி தாமதிக்காது சமையலறை சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார்.
ஆரத்தியை பார்த்ததும் தனக்கும் அரவிந்துக்கும் திருமணம் முடிந்த அன்று மயில் அம்மா ஆர்த்தி எடுக்க வந்ததும் அதன் பின் நடந்த நிகழ்வும் வெறுப்பும் ஞாபகம் வர கூடவே தற்போதைய காதலும் ஞாபகம் வர மையலுடன் அரவிந்தை நோக்கினாள்.
அரவிந்தின் பார்வையும் ஆனந்தியை வட்டமிட அரவிந்தை நெருங்கி நின்றாள், ஆனந்தி.
"ஏன்த்தா அதான் இவ்வளவு இடம் இருக்கே. ஏன் பேரன இடிச்சிட்டு நிக்கிற. தள்ளி தான் விசாலமா நில்லேன்."
அவர் அப்படி சொன்னதும் ஆனந்தி முகம் வாடிவிட்டது. மெதுவாக அரவிந்தை விட்டு விலகி நின்றாள்.
அவள் வாடிய முகம் அவனை வாட்ட அவளின் இடையில் கரம் கொடுத்தவன் , அவளை தன்னை நோக்கி இழுக்க அவன் அருகில் நெருங்கி நின்றாள், ஆனந்தி.
"இருக்கட்டும் ஆச்சி நீங்க எடுங்க" என்ற அரவிந்தின் செய்கையில் ஆனந்திக்கு மட்டும் அல்ல மங்கலத்திற்கும் வெட்கம் வந்தது.
"அச்சோ சின்னஞ்சிறுசுகளா இது ஒன்னும் பட்டினம் இல்ல. பார்த்து பதிவிசா நடந்துக்கோங்க. " என்று ஆரத்தியை எடுத்து விட்டு அதை கொட்ட வெளியேறினார்.
அரவிந்தின் கண்கள் வீட்டை ஒரு நோட்டமிட்டு எதையோ தேட ஆரம்பித்து விட்டது.
"ய்யா யார தேடுறவ?"
"அய்யா வீட்ல இல்லையா?" ஒரு பெருமூச்சு விட்ட மங்களம், " வாயா என்கூட." என ஒரு அறைக்கு செல்ல படுக்கையில் கிடந்தார், ராமலிங்கம்.
"ஆச்சி ஐயனுக்கு என்ன ஆச்சு?"
"கவலைதான். உங்க ரெண்டு பேர பத்தி தான்." என்றவர் கண்ணில் பொங்கி வந்த கண்ணீரை முந்தானைக் கொண்டு அணையிட்டார்.
அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு விளித்த ராமலிங்கம், வாட்ட சட்டமாக கம்பீரம் குறையாமல் தன் கண் முன் நிற்பவனை குழப்பத்துடன் பார்த்தவர் கண்கள் அவன் பின்னால் பயந்து கொண்டே தன்னை பார்த்தவளின் முகத்தில் விழ, குழப்பம் எல்லாம் தெளிந்து புன்னகை உதட்டில் குடிப்பெயர்ந்தது.
தான் காண்பது கனவு இல்லை என்பதை அறிய தன் மனைவியை ஏறிட அவரும் அதே புன்னகையுடன், "ஆமாங்க நம்ம அரவிந்தும் ஆனந்தியும் தான்."
"ஐயா என்ன ஆச்சுயா?"
"ஐயா ராசா எப்படி இருக்க? நீ இருக்கியா செத்தியான்னு கூட தெரியாம அந்த தறுதலைய பெத்ததுக்கு குற்ற உணர்வோட வாழ்ந்துட்டு இருக்கேன். என் கை கால் விழும் போதே என் உயிரும் போயிருக்கணும். ஆனா நீ உயிரோட இருந்தா உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் தாலேய் என் உசுர பிடிச்சுகிட்டு இருக்கேன்." என பெருமூச்சுடன் கஷ்டப்பட்டு பேசினார், ராமலிங்கம்.
அவரின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இத்தனை நாட்களின் குற்ற உணர்ச்சி அரவிந்தை பார்த்ததும் பொங்க ஆரம்பித்தது.
"ஐயா என்னங்கய்யா. பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க. எங்களுக்கு ஒன்னும் இல்ல. இங்க பாருங்க நானும் ஆனந்தியும் சந்தோஷமா இருக்கோம். ஆனந்தி இங்க வா"யென அவளை அருகில் அழைத்தவன் ராமலிங்கத்தின் கையின் மேல் அவள் கையை வைக்க அவரின் கண்களில் கண்ணீர்.
அதை ஆனந்தி மெதுவாக துடைத்து விட்டாள்.
"ஏன் தாத்தா அழுகுறீங்க?"
"ஊருக்கெல்லாம் கல்யாணம் காட்சி பண்ணி வக்கிறேன்.என் சொந்த பேத்தி நீ. உன்னோட கல்யாணத்தை பார்க்கிற தகுதியக்கூட இழந்துட்டேன் போலமா.அதான் நீங்க என்னைய பாக்கவே வரல. இந்த கிழவன் குற்ற உணர்ச்சியோடவே இருக்கட்டும்னு நினைச்சிங்களா?"
" அச்சோ அப்படியெல்லாம் இல்ல தாத்தா. எனக்கு நீங்களாம் இருக்கீங்கண்ணே தெரியாது. தெரிஞ்சிருந்தா எப்பவோ வந்திருப்போம். அப்புறம் என் கல்யாணம் எனக்கே தெரியாது. அப்போ எப்படி உங்க கிட்ட சொல்லி இருப்பேன்." அந்த நிமிடம் ஆனந்தியின் குரலில் வருத்தத்தின் சாயல் தெரிந்ததை அரவிந்தும் கவனித்தான்.
"என்னய்யா சொல்றா?" குழப்பத்துடன் அரவிந்தை நோக்க அரவிந்தோ சிவபெருமானையும் முரளியையும் கொலை செய்த பிறகு நடந்த அத்தனை விடயங்களையும் அவர்களிடம் கூற அவர்களின் மூலம் முகமோ உணர்வுகளை மாற்றி மாற்றி பிரதிபலித்தது.
"ஜெயிலுக்காயா போன. நீ ஏன் போன. உனக்கு எதிரா யார் சாட்சி சொல்ல போறா. ஆனந்தியை விட்டுட்டு எப்படியா போன. இந்த மாப்பிள ஏன் தான் இப்படி எல்லாம் பண்ணிட்டு திரியிராரோ தெரிய மாட்டேங்குது. ஐயோ இந்த குழந்தை நிலைமையை நினைச்சா ..."மங்கலம் புலம்ப ஆரம்பிக்க, அவரை சமாதானப் படுத்தினான், அரவிந்த்.
சிறிது நேரத்தில் சமாதானமானவர் மட மடவென அரவிந்த் ஆனந்திக்காக விருந்தை தயார் செய்தார்.
அவர்கள் மனதும் வயிறும் நிறைந்து வீடு திரும்பிய பின்னரும் ராமலிங்கம் மங்கலம் தம்பதியினர் அவர்களை மனதில் அசை போட்ட வண்ணம் இருந்தனர்.
மங்களத்தின் மனதில் ஆனந்தி கூறியவையே வந்து நின்றது.
"ஏன் தாயி, உங்களுக்கு கல்யாணமாகி ஆறு மாசம் இருக்குமா?"
"மேலயே இருக்கும் பாட்டி."
"பாட்டி இல்ல. அப்பத்தான்னு சொல்லு தாயி."
"போ பாட்டி அப்பத்தா அப்பம் தாலாம் நல்லாவே இல்ல. நான் பாட்டின்னு தான் கூப்பிடுவேன்."
"சரி எப்படி வேணா கூப்பிட்டுக்க. உன் கிட்ட ஒன்னு கேட்கணும்."
"கேளுங்க பாட்டி."
"ஏதாவது நல்ல செய்தி இருக்கா?"
"அதுக்குத்தானே வந்திருக்கோம். நாளைக்கு கழிச்சு கோர்ட்ல ஹியரிங் இருக்கு. இந்த தடவை நமக்கு சாதகமா தான் வரும்ன்னு ஆரு மாமா சொன்னாங்க." என்றவள் பின் மாமா சொன்னாங்க என்றாள்,ஆரு என அழைத்ததை நினைத்து பயந்து.
ஆனால் மங்கலமோ அதை கவனிக்கும் நிலையில் இல்லை.
"அடியேய் , நானு நல்லா செய்தின்னு சொன்னது உண்டா இருக்கியான்னு கேட்டு."
"அப்படின்னா என்ன பாட்டி?"
"அட கூறுகெட்டவளே உன்னை வச்சு என் பேரென் என்ன கஷ்டப்படுறானோ?"
"என்னது நான் உங்க பேரன கஷ்டப்படுத்துறேனா நல்ல கதையால இருக்கு."
"ஏன்டி கூறுகெட்டவளே, மசக்கையா இருக்கியான்னு கேட்டா அப்படின்னா என்னன்னு கேட்கிற வ. "
"ஓ மாசமா இருக்கேனான்னு கேக்கறீங்களா. அதை நேரடியா கேட்க வேண்டியதுதானே அதெல்லாம் ஒன்றும் இல்லை."
"ஒன்னும் இல்லையா.உன் அம்மா கல்யாணம் ஆகி ரெண்டாவது மாசத்துலயே உண்டாயிட்டா. நாலாம் கல்யாணமான அடுத்த மாசமே உண்டாயிட்டேன். நீ ஆறு மாசத்துக்கு மேலாகுதுன்னு சொல்ற இன்னும் நல்ல செய்தி இல்லையா?"
"அச்சோ பாட்டி உங்க வீட்டுக்காரர் மாதிரி இல்ல என் வீட்டுக்காரரு. நாங்க இன்னும் எங்க வாழ்க்கையே ஆரம்பிக்கல" என்றாள், வெகுளியாக.
"அடி என்னாத்தா சொல்ற?"
"ஆமா பாட்டி, மாமா தான் இந்த கேசு முடியட்டும் அப்புறம் நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம்னு சொன்னாங்க." என்ற ஆனந்தியின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
"மங்களம் ... ஏ... மங்கலம்..." என்ற குரலில் தெளிந்தார், மங்கலம்.
"என்னங்க?"
"ரொம்ப நேரம் கூப்பிடுறேன். என்ன யோசனை?"
"ஒண்ணும் இல்லைங்க. உங்களுக்கு ஏதும் வேணுமா?"
"ஆமா. நம்ம பாண்டியன என்னை வந்து பார்க்க சொல்லு." என்றவர் மனதில் அரவிந்த் கூறிச் சென்றதே நிழல் ஆடியது.