39 காத்திருந்த அதிர்ச்சி
இளந்தென்றல் மதுரைக்கு செல்ல தயாரானாள். அவளது அறைக்கு வந்த மாமல்லன், அவள் முழுவதும் தயாரான நிலையில் கண்ணாடியின் முன் நின்று தன்னை சரி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான். முதல் நாள் அவன் அவளுக்கு பரிசளித்த புடவையை அவள் அணிந்திருந்தாள். புடவையில் அவள் மிக அழகாய் இருந்தாள்... மொத்தமாய் மாறிப் போயிருந்தாள். அவர்களுக்கு திருமணம் நடந்த நாளென்றே அவன் அதை கவனித்திருந்தான். ஆனால், அன்று அவளை ரசிக்கும் சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்கவில்லை. அன்று நடந்த நிகழ்வுகள், அவனுக்கு அந்த மனோ நிலையை அளிக்கவில்லை.
கண்ணாடியின் வழியாக அவனைப் பார்த்த இளந்தென்றல் புன்னகை புரிந்தாள். அவளது புன்னகை சம்பிரதாயமாய் இருந்ததே தவிர, அது அவளது கண்களை சென்று சேரவில்லை. அவள் புன்னகைத்த போதும், தன்னை மறந்து நின்றிருந்தான் மாமல்லன். அவனிடம் சென்று அவனது தோளை லேசாய் தட்டினாள் இளந்தென்றல். *புடவை* உலகத்தில் இருந்து வெளியே வந்தான் மாமல்லன்.
"உங்க கவனம் எங்கு இருக்கு?"
"உன்னோட புடவையில தான்..."
புன்னகையுடன் மீண்டும் கண்ணாடியின் முன் சென்றாள் இளந்தென்றல். அவளை பின்தொடர்ந்து வந்த மாமல்லன்,
"நீ புடவையில் ரொம்ப அழகா இருக்க" என்றான்.
அவனை நோக்கி ஒரு குங்கும சிமிழை நீட்டிய அவள்,
"இதை என் வகிட்டில் வச்சு விடுங்க" என்றாள்.
"நீ உங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றான் ஆச்சரியமடைந்த மாமல்லன்.
"இருக்கு. அதனால?"
"அவங்க இந்த குங்குமத்தை பார்த்து ஏதாவது கேட்டா என்ன செய்வ?"
"நான் சமாளிச்சுக்குவேன்"
"நெஜமாத் தான் சொல்றியா?"
"ஆமாம்"
வேண்டாம் என்று கூறி அவளை வருத்தப்பட செய்ய அவன் தயாராக இல்லை. ஏனென்றால் இது பெண்களின் சென்டிமென்ட் சம்பந்தப்பட்ட விஷயம். சிறு துளி குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்து நிரப்பினான் மாமல்லன்.
அவளிடம் ஒரு டப்பவை கொடுத்தான் மாமல்லன். அதில் இருந்தது ஒரு கைபேசி.
"வச்சுக்கோ. எப்ப என் கூட பேசணும்னு தோணுதோ, அப்போ எனக்கு நீ கால் பண்ணு. நான் உன்னுடைய காலுக்காக காத்திருப்பேன்"
அந்த கைபேசியின் கேமராவை, திறந்து மாமல்லனை புகைப்படம் எடுத்துக் கொண்டாள். அது அவனுக்கு வியப்பை அளித்தது. அது மட்டுமல்லாது அவனுடைய எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
"தென்றல், நீ மதுரைக்கு போனதுக்கு பிறகு தான் எனக்கு ஃபோன் பண்ண சொன்னேன்..."
அந்த அழைப்பை துண்டித்து விட்டு,
"இப்போ நீங்க எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்றாள்.
"எதுக்கு?"
"சொன்னதை செய்யுங்களேன்"
அவளுடைய எண்ணுக்கு அழைப்பு விடுத்தான். அந்த அழைப்பை ஏற்று பேசினாள் இளந்தென்றல்.
"என்னோட ஃபோனுக்கு வர்ற முதல் கால் உங்களுடையதா இருக்கணும்னு நினைச்சேன்"
"கிரேசி சென்டிமென்ட்" என்று சிரித்தபடி லேசாய் தலையசைத்த மாமல்லன்,
"ஏன் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க?" என்றான்.
"நான் நல்லா தான் இருக்கேன் "
"அப்படியா? உன் முகத்தைப் பத்தி எனக்கு தெரியாதா? கண்ணாடியில் பாரு, நீ எவ்வளவு சோகமா இருக்கேன்னு..."
"உங்களைப் பார்க்காம எப்படி இருக்க போறேன்னு தெரியல. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்"
இப்படி எல்லாம் பேசுவது இளந்தென்றலா? மலைத்துப் போனான் மாமல்லன். திருமணம் என்னும் பந்தம் தான், இது குறுகிய காலகட்டத்தில், ஒரு பெண்ணை எவ்வளவு தலைகீழாய் மாற்றி விடுகிறது...! இது தான் திருமண பந்தத்தின் மகத்துவம்...!
"நீங்க எப்போ மதுரைக்கு வருவீங்க?"
"ரொம்ப சீக்கிரம்"
"நான் உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன்"
"நானும் உன்னை ரொம்ப காக்க வைக்க மாட்டேன்"
"தெரியும்"
"உன்னோட ஃபிளைட்டுக்கு டைம் ஆகுது. போகலாமா?"
சரி என்று தலையசைத்த இளந்தென்றல், அவன் எதிர்பாராத விதமாய் அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள். அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவளை தன்னருகில் இழுத்து,
"என்னது இது?" என்றான் நம்ப முடியாமல்.
"என் புருஷன் மேல நான் வச்சிருக்குற அன்பு" என்றாள்.
"இவ்வளவு தானா நீ என் மேல வச்சிருக்கற அன்பு? என்னை மட்டும் விட்டுப் பாரு... நான் உன் மேல வச்சிருக்கற அன்பை பார்த்து நீ திக்குமுக்காடி போவ" என்றான்.
வெட்கத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்தாள் இளந்தென்றல். அவள் நெற்றியில் இதழ் பதித்து,
"சீக்கிரமே நான் உன்னை என்னுடையவளா ஆக்கிக்குவேன்..."
"நான் ஏற்கனவே உங்களுடையவள் தானே?"
"நீ உண்மையிலேயே அப்படித் தான் நம்புறியா தென்றல்?"
"நிச்சயமா நம்புறேன். ஏன் அப்படி கேக்குறீங்க?"
"நமக்கு நடந்தது உண்மையிலேயே கல்யாணம்னு நீ நினைக்கிறியா?"
"நம்ம கல்யாணம் நடந்த விதம் வேறயா இருக்கலாம். ஆனா கல்யாணம் கல்யாணம் தான்" என்றாள் உறுதியாக.
"உன் கழுத்துல தாலி இருக்கு... அம்மாவோ, பாட்டியோ அதை பாக்காம கவனமா இரு."
"அதை நான் பார்த்துக்கிறேன் "
"ஆமாம் நீ தான் அதுல எக்ஸ்பர்ட் ஆச்சே..." என்றான் கிண்டலாய்.
"கிண்டல் பண்றத நிறுத்துங்க. போலாம் வாங்க"
அவளது பையை எடுத்துக்கொண்டு இருவரும் விமான நிலையம் நோக்கி புறப்பட்டார்கள். பரஞ்சோதிக்கு ஃபோன் செய்து, அவன் செய்ய வேண்டிய வேலைகளை கூறியபடி நடந்தான் மாமல்லன்.
விமான நிலையம்
"நான் கிளம்புறேன்" என்றாள் தென்றல்.
"சீக்கிரமே உன்னை திரும்ப கூட்டிக்கிட்டு வருவேன்" என்றான் மாமல்லன்.
தன் உயிர் உடலை விட்டு செல்வதைப் போல் இருந்தது இருந்தென்றலுக்கு. அவளது கண்கள் கலங்கின. அவளை நோக்கி நெருங்கிய மாமல்லன்,
"நீ என்னை பலவீனமாக்குற... ப்ளீஸ் அழாதே. அப்புறம் எல்லாத்தையும் விட்டுட்டு நானும் உன் கூட வந்துடுவேன்..." என்றான்.
"நான் உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன்" என்றாள் கண்ணீரை துடைத்த படி.
"எனக்கு தெரியும்" என்றான் மாமல்லன்.
அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி, சிறுநடை நடந்து அங்கிருந்து செல்ல துவங்கினாள் இளந்தென்றல். அவனை நோக்கி கையசைத்து விட்டு உள்ளே சென்றாள். அவளை அந்த நிலையில் பார்த்த மாமல்லன் மென்று விழுங்கினான். அப்பொழுது அவனுக்கு வந்த அழைப்பு, அவனை
திசை திருப்பியது. அந்த அழைப்பு பரஞ்சோதியிடம் இருந்து வந்தது.
"சொல்லு பரா..."
"...."
"ஆமாம். இப்போ தான் டிராப் பண்ணினேன்"
"...."
"வந்துகிட்டு இருக்கேன்"
மாமல்லன், இளந்தென்றலுடன் பேசிக்கொண்டிருந்ததை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஷீலா, பல்லை நரநரவென கடித்தாள்.
"நாட்டுப்புறத்து பொண்ணு மேல இவ்வளவு பாசமா...? நீ எவ்வளவு நாளைக்கு இந்த நாடகத்தை நடத்துறேன்னு நான் பார்க்கிறேன்..." என்று முணுமுணுத்தாள்.
தன்னை இளந்தென்றல் அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, அவள் பர்தா அணிந்து கொண்டு வந்திருந்தாள். மாமல்லன் அங்கிருந்து சென்று விட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின், விமான நிலையத்தின் உள்ளே சென்று இளந்தென்றல் மதுரைக்கு செல்லும் அதே விமானத்தில் ஏற சென்றாள் அவள்.
விமான நிலையத்தின் வழக்கமான சம்பிரதாயங்களை முடிப்பதற்காக வரிசையில் வந்த அவள், தன் பெயரை கூறினாள். அப்பொழுது அவளுக்கு பின்னால் நின்றிருந்த ஒருவன் அவளை சந்தேக கண்ணோடு பார்த்தான். ஷீலா என்ற பெயர் கொண்ட, இஸ்லாமியர் அல்லாத ஒரு பெண், பர்தா அணிந்திருப்பது ஏன் என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. அவனுடைய துப்பறியும் மூளை அவளது செயல்களை கவனிக்க தொடங்கியது. அவன் வேறு யாருமல்ல, இளந்தென்றலை பின் தொடர பரஞ்சோதியால் நியமிக்கப்பட்ட தமிழ் தான்.
விமான நிலைய அதிகாரிகளுக்கும் அதே சந்தேகம் எழ, அவர்களும் அவளை சந்தேகத்தோடு பார்த்தார்கள்.
"எனக்கு *சன் பர்ன்* இஷ்ஷு இருக்கு. என்னால வெயில்ல போக முடியாது. அதனால தான் முகத்தை மூடி இருக்கேன்" என்றாள் சோகமாக.
தமிழின் துப்பறியும் மூலைக்கு உணவளித்த விஷயம் என்னவென்றால், அவள் விமானத்திற்கு உள்ளேயும் முகத்தை மூடிக்கொண்டு இருந்தது தான். விமானத்தின் உள்ளே வந்த பிறகு முகத்தை மூடி கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஏதோ தவறாய் தோன்றியது அவனுக்கு.
மதுரை
மூன்று மாதத்திற்கு பிறகு வீடு திரும்பும் தங்கள் செல்ல மகளை வரவேற்க கோதையும், வடிவம்பாளும் தயாரானார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மருத்துவமனையில் இருந்து கோதை வீடு திரும்பியிருந்தார். ஆலம் சுற்றி அவளை வரவேற்றார் பாட்டி. கோதையிடம் ஒடி சென்று, அவரை அணைத்துக் கொண்டாள் இளந்தென்றல். கலங்கிய கண்களுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டார் கோதை.
"எப்படி இருக்கீங்க மா?"
"உன்னோட புண்ணியத்துல நான் ரொம்ப நல்லா இருக்கேன் டா" என்றார் கண்களை துடைத்தபடி.
"ப்ளீஸ் அழாதீங்கம்மா"
"உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எனக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தா கூட, என்னை காப்பாத்த இவ்வளவு முயற்சி செஞ்சி இருப்பானான்னு எனக்கு தெரியல. நான் உன்னால தான் இன்னைக்கு உயிரோட இருக்கேன். உங்க அப்பா உயிரோடு இருந்திருந்தா, ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்"
"எமோஷன் ஆகாதீங்க மா. உங்களை காப்பாத்த வேண்டியது என்னோட கடமை தானே? இன்னைல இருந்து நான் தான் உங்களை பாத்துக்க போறேன்" என்றாள் சந்தோஷமாக.
"நீ செய்ய வேண்டிய கடமையை ஏற்கனவே செஞ்சிட்ட தென்றல்... இப்போ கடமையை செய்ய வேண்டியது, எங்களுடைய முறை" என்றார் கோதை.
"ஆமாண்டா கண்ணு... நாங்க எங்களுடைய கடமையை எவ்வளவு சிறப்பா செய்யறோம்னு நீ பார்க்கப் போற... தயாரா இரு" என்றார் வடிவாம்பாள்.
"அப்படின்னா?"
"உனக்கு கல்யாணம் முடிவு பண்ண போறோம்"
"என்ன்னனது?" என்றாள் அதிர்ச்சியுடன் தென்றல்.
"ஆமாண்டா காசியம்மா... நான் தான் உன்கிட்ட அதை பத்தி ஏற்கனவே சொல்லி இருந்தேனே... நாங்க உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து வச்சிருக்கோம். அவங்க இன்னைக்கு சாயங்காலம் உன்னை நிச்சயம் பண்ண வராங்க" என்று ஒரு இடியை அவள் தலையில் இறக்கினார் வடிவாம்பாள்.
"என்னை கேக்காம நீங்களா எப்படி முடிவு பண்ணீங்க?" என்றாள் தென்றல் தவிப்புடன்.
"ஏன் தென்றல்? உனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை நாங்க பார்க்க மாட்டோம்னு நினைக்கிறியா? இல்ல, எங்களுக்கு அந்த உரிமை இல்லையா?"
"நான் அப்படி சொல்லல மா..."
"வேற எப்படி சொல்ற?" என்றார் வடிவாம்பாள்.
"அவ இப்ப ரொம்ப பெரிய பொண்ணா ஆயிட்டா, சம்பாதிக்கவும் ஆரம்பிச்சிட்டா, அதனால எல்லாத்தையும் தானாவே முடிவு செய்யணும்னு நினைக்கிறா போல இருக்கு" என்றார் கோதை வருத்தத்துடன்.
"அம்மா தயவு செய்து என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க"
"நீ ஏன் எங்களை புரிஞ்சுக்க மாட்டேங்குற? கடவுள் அருளால, உன் கல்யாணத்தை நடத்துற அளவுக்கு போதுமான அளவு பணம் நம்மகிட்ட இப்போ இருக்கு. அது கரைஞ்சு போறதுக்கு முன்னாடி உன் கல்யாணத்தை நடத்தணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு?"
"ஆமாண்டா கண்ணு எங்க சூழ்நிலையை நீயும் புரிஞ்சுக்கோ" என்றார் வடிவாம்பாள்.
"அம்மா, எனக்கு யோசிக்கவாவது கொஞ்சம் டைம் கொடுங்க..." என்று தன் அறையை நோக்கி நடந்தாள்.
உள்ளே வந்து கதவை சாத்தி தாளிட்டவள், மாமல்லனுக்கு ஃபோன் செய்தாள். ஆனால் அவனது கைபேசி வாய்ஸ் மெயிலில் இருந்தது. அவன் தான் கூறினானே, அங்கு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்று... அப்படி என்றால், அவன் பிஸியாக தானே இருப்பான்? எரிச்சலுடன் தனது கைபேசியை கட்டிலின் மீது வீசி எறிந்தாள் இளந்தென்றல்.
தொடரும்...