10 இனம் புரியா உணர்வு
விடி டிசைன்ஸ் அலுவலகத்தின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு, ஜானகிக்கு ஃபோன் செய்தாள் மீரா. அந்த அழைப்பை ஏற்றார் ஜானகி.
"என்ன ஆச்சு மீரா? முகுந்தனுக்கு ஒன்னும் இல்லையே?" என்றார் பதற்றத்துடன். ஏனென்றால் அன்று காலை தானே அவர் முகுந்தனிடமும் மீராவிடமும் பேசி, முகுந்தனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற விவரத்தை தெரிந்து கொண்டார்? அதனால், மீண்டும் அவன் உடல்நிலை மோசமாகி விட்டதோ என்று எண்ணினார்.
"அவரு நல்லா தான் இருக்காருன்னு என்னால சொல்ல முடியாது" என்று சிரித்தாள் மீரா.
"நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல" என்றார் மீராவின் சிரிப்புக்கு காரணம் புரியாத ஜானகி. ஏனென்றால், முகுந்தனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால், மீரா சிரிக்க மாட்டாள் அல்லவா? அப்படி என்றால் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது.
"அவர் மேனேஜரா வேலை செய்ற அதே விடி டிசைன்ஸ் கம்பெனியில எனக்கு வேலை கிடைச்சிருக்கு" என்றாள் மீரா.
"நிஜமாவா சொல்ற?" என்றார் குதூகலமாக.
"ஆமாம் அத்தை. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டருக்காக காத்துக்கிட்டு இருக்கேன்"
"கடவுள் உனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுக்கட்டும்"
"தேங்க்யூ அத்தை"
"அந்த கல்லொளி மங்கன் என்ன சொன்னான்?"
"எதுவும் சொல்லல. ஆல் த பெஸ்ட் கூட..."
"உனக்கு அங்க வேலை கிடைச்ச விஷயம் அவனுக்கு தெரியுமா?"
"எம்டி கூட சேர்ந்து இன்டர்வியூ பண்ணதே அவர் தான்" என்று சிரித்தாள் மீரா.
"உன்னை பார்த்து அவன் ரியாக்ட் பண்ணவே இல்லையா?"
"இல்ல அத்தை. நான் எங்க உறவுமுறையைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு எங்களுக்குள்ள ஒரு அக்ரீமெண்ட் இருக்கு"
"என்ன்னனது? அவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அதுக்கு நீ ஒத்துக்கிட்டு இருந்திருக்க கூடாது மீரா" என்றார் கோபமாய்.
"அவருக்கு அப்படி சத்தியம் பண்ணி கொடுத்ததே நான் தான் அத்தை"
"ஏம்மா அப்படி பண்ண?" என்றார் அலுப்புடன்.
"அப்படி செஞ்சதால தான் என்னை மும்பையில இருக்கவே அவர் அனுமதிச்சாரு. அவர் என்னை எங்க அம்மா வீட்டுக்கு திரும்பி போக சொன்னார், அத்தை"
"இந்த பையனை நான் என்ன செய்றது?"
"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்"
"நான் அவன் கிட்ட பேசட்டுமா?"
"வேண்டாம் அத்தை. அவரை நான் பார்த்துக்கிறேன். நீங்க எதுவும் தெரியாத மாதிரியே இருந்துடுங்க"
"ஆனா நான் எப்பவும் உன் பக்கம் தான்"
"அது எனக்கு தெரியும்"
"நீ என்கிட்ட என்ன வேணா கேட்கலாம். நான் உனக்காக என்ன வேணாலும் செய்வேன்"
"தேங்க்ஸ் அத்தை"
"நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். நீ தான் அவனை பத்தின உண்மையை உங்க அப்பா அம்மாவுக்கு தெரியாம மறைச்சி, அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் வாழ்க்கையை ரிஸ்குல போட்டிருக்க"
"எனக்கு அவரைப் பிடிச்சிருந்தது அத்தை. அதனால தான் என் அப்பா அம்மா கிட்ட நான் அவரைப் பத்தி சொல்லல. அவங்களுக்கு மட்டும், அவருக்கு தனிமை மேல இருக்குற காதல் தெரிஞ்சிருந்தா, அவங்க இந்த கல்யாணத்துக்கு நிச்சயம் ஒத்துக்கிட்டு இருந்திருக்கவே மாட்டாங்க"
"நீ அவன் கூட ரொம்ப சந்தோஷமா இருக்கிறதா உங்க வீட்ல நினைச்சுகிட்டு இருக்காங்க"
"சீக்கிரமே அவர் கூட சந்தோஷமா இருப்பேன்"
"உன்னால எப்படி இவ்வளவு நம்பிக்கையா சொல்ல முடியுது மீரா?"
"நான் சமைச்சு கொடுத்த சாப்பாட்டை அவர் சாப்பிட்டாரு. நான் செஞ்ச உதவியை அவர் மறுக்கல. இன்னைக்கு நான் இன்டர்வியூ கொடுக்கும் போது, அவர் என்னை பார்த்த பார்வையில நான் ஏதோ ஒரு வித்தியாசத்தை கவனிச்சேன்"
பெருமூச்சு விட்டார் ஜானகி. அவருக்கு எப்படி தெரியும், இன்று மீரா முகுந்தனின் முகத்தில் கண்டது வேறொன்றுமல்ல, பொறாமை என்று? அது பொறாமை என்று மீராவுக்கே தெரியாதே...! அவள் அதற்கு ஏதோ *புதிதாய்* என்று மட்டும் பெயரிட்டு கொண்டாள்.
"பை, அத்தை"
"ஜாக்கிரதை கண்ணா..."
அழைப்பை துண்டித்தார் ஜானகி.
முகுந்தனுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று தெரிந்த பிறகும், அவனை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பெண்ணை தேடிக் கொண்டுதான் இருந்தார் ஜானகி. ஆனால் அப்படிப்பட்ட ஒரு பெண்ணை தேடி கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமா என்ன? தனக்கு அமையப்போகும் திருமண வாழ்வை பற்றி ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவு இருக்கும். அது வாழ்வின் மிக முக்கியமான, மிக நீண்ட பாதி. ஒரு பெண்ணின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதே அந்த பாதி தான். முகுந்தனிடம் மீராவை கவர்ந்தது என்ன என்று தான் புரியவில்லை. அவனது காதலை தன்னால் பெற்று விட முடியும் என்று எது அவளை நம்ப வைத்தது என்றும் தெரியவில்லை. அவன் புகைப்படத்தை பார்த்த உடனேயே அவள் காதலில் விழுந்தாள். அவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பே அவள் அவனை காதலிக்க துவங்கி விட்டிருக்க வேண்டும்.
புன்னகையுடன் அழைப்பை மீரா துண்டித்த அதே நேரம், அவளது பணி நியமன ஆணையுடன் அங்கு வந்தான் நந்தகோபால். அதே நேரம், நேர்முகத் தேர்வு அறையில் இருந்து வெளியே வந்தான் முகுந்தன்.
"டங்கு, வாசுவோட புது பிஏ எங்க?" என்றான் முகுந்தனை பார்த்து. அவன் முகுந்தனை இப்படி அர்த்தமிலாமல் அழைப்பது வழக்கம். அதை முகுந்தனும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை.
தன் கண்களை ஓட்டிய முகுந்தன், மீரா, ஸ்ரேயாவை பார்த்து புன்னகைப்பதை கண்டான். தன்னை அறியாமலேயே அவன் மென்று விழுங்கினான். ஸ்ரேயா அவனை விரும்புவதை பற்றி, மீராவிடம் கூறி விடுவாளோ? வாழ்க்கையிலேயே முதன்முறையாக தனது *இமேஜை* பற்றி கவலைப்பட்டான் முகுந்தன். அதுவும் அதை தன் மனைவியிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக.
மீராவை நோக்கி சென்ற ஸ்ரேயா, தன்னை அவளிடம் அறிமுகம் செய்து கொண்டாள். முகுந்தனுக்கு பகிர் என்று தூக்கி வாரி போட்டது.
"அவங்க தான்" என்றான் நந்தகோபாலிடம்.
அவன் சுட்டிக்காட்டிய திசை நோக்கி திரும்பிய நந்தகோபால், தான் எதிர்பார்த்து காத்திருந்த தேவதையின் வடிவில் இருந்த பெண்ணை கண்டான். அவனது கண்களில் பொரி பறந்தது. அவனது முகத்தை மெல்லிய பூங்காற்று வருடியது. அவன் பைத்தியக்காரனைப் போல் பல் இளிப்பதை கண்ட முகுந்தன், எரிச்சல் அடைந்தான்.
"அவங்களை கூப்பிடுடா மடையா" என்று அவனது தோளில் ஒரு அடி போட்டு கத்தினான்.
தனது சுய நினைவுக்கு திரும்பிய நந்தகோபால், மீராவை நோக்கி ஓடினான்.
"நீங்க...?"
"மீரா... மீரா ஜனார்த்தனன்..." என்றாள் மீரா.
"ப்ளீஸ், என் கூட வாங்க"
சரி என்று தலையசைத்த மீரா, அவனுடன் நடந்தாள். மீரா ஸ்ரேயாவிடம் எதுவும் பேசாததை கண்ட முகுந்தன் நிம்மதி அடைந்தான். மீரா நடந்த அதே வேகத்தில், அவளைப் பார்த்து புன்னகைத்த படி நடந்தான் நந்தகோபால்.
கோபத்தில் பல்லை கடித்தான் முகுந்தன். இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? எதற்காக, மீரா அவன் வேலை செய்யும் அலுவலகத்தில் வேலைக்கு வந்து சேர்ந்தாள்? அவளுக்கு வேற எந்த நிறுவனமும் கிடைக்கவில்லையா? ஆனால், அவள் அங்கு வேலை செய்தால், அவனுக்கு என்ன வந்தது? அவனுக்கு தெரியவில்லை. அவள் அந்த நிறுவனத்தில் பணிபுரிய வேண்டாம் என்று அவன் நினைத்தான். ஆனால் அதை அவளிடம் அவன் எப்படி கூறுவான்? அவளது வாழ்க்கையில் அவன் தலையிட மாட்டேன் என்றும், அவள் விருப்பத்திற்கு அவள் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவன் அவளிடம் கூறவில்லையா? அப்படி இருக்கும் போது, எப்படி அவளது முடிவில் அவன் தலையிடுவது?
பணி நியமன ஆணையை அவளிடம் கொடுத்த நந்தகோபால்,
"வெல்கம் டு விடி டிசைன்ஸ் ஃபேமிலி" என்றான். அவன் அந்த நிறுவனத்தை ஃபேமிலி என்று கூறியது மீராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆம் அதுவும் ஒரு குடும்பம் போல தான். அவளது கணவன் இருக்கும் இடம் ஆயிற்றே...! அப்படி என்றால் அதுவும் அவளது குடும்பம் தானே?
"தேங்க்யூ மிஸ்டர்....?" என்று நிறுத்தினாள் மீரா.
"நந்தகோபால்... நீங்க என்னை நந்துன்னு கூப்பிடலாம்" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
"நான் உங்களை நாந்தான்னு கூப்பிடலாமா?" என்றாள் மீரா, நந்து என்பது செல்லப் பெயர் போல் இருந்ததால்.
"நந்தாவா? என்னோட பாட்டி என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க" என்று சிரித்தான்.
"நீங்க என்னை பாட்டின்னு கூப்பிட்டாலும் நான் அதைப் பத்தி கவலைப்பட மாட்டேன்" என்று சிரித்தாள் மீரா.
சங்கடத்துடன் தன் தலையை சொறிந்தான் நந்தகோபால். மீராவாவது அவனது பாட்டியாவது...!
"வாய்ப்பே இல்ல. நீங்க என்னோட பாட்டியாக முடியாது" என்றான் அவசரமாக.
"ஏன்?"
"சின்ன வயசுல எனக்கு உங்களை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் இருந்தா"
"உங்க சின்ன வயசு ஃப்ரெண்ட், சின்ன வயசுலயே புடவை கட்டிக்கிட்டு இருந்தாங்களா?" என்றாள் கிண்டலாக.
"இல்ல இல்ல... இப்ப வேணும்னா அவங்க புடவை கட்டி இருக்கலாம். ஆனா இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியாது" என்றான் சோகமாய். ஆனால் அவனுக்கு அப்படி ஒரு தோழியே இல்லை என்பது தான் உண்மை.
"வாங்க, நீங்க வாசு கிட்ட இந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்ல ஸைன் வாங்கணும்" என்றான் நந்தகோபால்.
வாசுவின் அறையை நோக்கி நடந்தாள் மீரா. அவளை பின்தொடர்ந்தான் நந்தகோபால். வாசுதேவனுடன் இருந்த ஜெகதீஷ், மீராவை பார்த்தவுடனேயே தன்னை மறந்தான். அவளைப் பார்த்து புன்னகைத்தான் வாசு. தனது பணி நியமன ஆணையை அவனிடம் கொடுக்க, அவன் அதில் தன் கையொப்பமிட்டான்.
"இவர் ஜெகதீஷ். நம்ம ப்ரொடக்ஷன் ஹெட்"
"ஹாய்" என்றாள் மீரா.
புன்னகையுடன் தலையசைத்தான் ஜெகதீஷ்.
"இவர்..." என்று நந்தகோபாலை அவளுக்கு அறிமுகம் செய்ய விழைந்தான் வாசு. அவனை தடுத்து,
"நந்தகோபால்... அசிஸ்டன்ட் மேனேஜர்" என்றாள் மீரா.
தன் பெயரை அவள் கூற கேட்ட நந்தகோபாலின் முகத்தில் மின்னல் வெட்டியது.
"உங்களுக்கு எந்த சந்தேகமா இருந்தாலும் இவங்க ரெண்டு பேர் கிட்டயும் கேட்கலாம். இந்த கம்பெனியை பத்தி நீங்க தெரிஞ்சுக்க, இவங்க ரெண்டு பேரும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. உங்களோட போஸ்டை பத்தி உங்களுக்கு நந்து டீச் பண்ணுவான்"
"ஓகே சார்..."
"சார் வேண்டாம்... வாசு போதும்" என்றான் வாசுதேவன்.
சரி என்று தலையசைத்தாள் மீரா
"நந்து, அவங்க கேபினை அவங்களுக்கு காட்டு. இன்னையிலிருந்து அவங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிடு" என்றான் வாசுதேவன்.
"வாங்க மீரா போகலாம்" என்றான் நந்தகோபால்.
அவர்கள் கண்ணாடியால் சூழப்பட்ட மீராவின் அறையை நோக்கி வந்தார்கள்.
"நீங்க எங்கிருந்து வரீங்க மீரா?" என்றான் நந்தகோபால்.
"பாரேல்" என்று உண்மையைக் கூறினாள் மீரா.
"அப்படியா? நம்ம மேனேஜர் டங்கு, ஐ மீன் முகுந்தன் கூட அங்கிருந்து தான் வரார்"
ஒன்றும் கூறாமல் ஒரு சமதள பார்வை பார்த்தாள் மீரா.
"ஆனா, உங்களுக்கு அவர்கிட்ட லிஃப்ட் மட்டும் கிடைக்காது" என்றான் சீரியஸாக.
அது அவளுக்கு தெரியாதா என்ன?
"டங்குனு சொன்னீங்களே அப்படின்னா என்ன?"
"அதுக்கு எந்த அர்த்தமும் இல்ல... அவனோட வாழ்க்கையை போலவே.... அதனால தான் நான் அர்த்தமில்லாம எதையாவது சொல்லி அவனை கூப்பிடுவேன்"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"அவனை மாதிரி ஒரு விறைப்பான ஆளை நீங்க பார்க்கவே முடியாது. அவன் யார்கிட்டயும் பேச மாட்டான். யார் கூடவும் கலந்து பழக மாட்டான். எப்பவும் தனியாவே இருக்கணும்னு நினைப்பான். அவனால அது எப்படி முடியுதுன்னு தான் எங்களுக்கு தெரியல"
"விருப்பங்கள் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும். அவர் மத்தவங்க கிட்ட இருந்து மாறுபட்டு இருப்பார் போலிருக்கு..."
அவளை ஒரு அதிசயம் போல் பார்த்தான் நந்தகோபால்.
"நம்மெல்லாம் ரொம்ப காமனானவங்க. நம்ம ஃபிரெண்ட்ஸ் கூட இருக்கணும்னு நினைப்போம்... சினிமா பார்க்க விருப்பப்படுவோம்... பிடிச்சவங்க கூட நம்ம நேரத்தை செலவிட நினைப்போம். அது மாதிரி, அவர் தனியா இருக்க விருப்பப்படுறாரு. தனிமையில இருக்கிற சுகம் என்னன்னு நம்ம புரிஞ்சுக்காத வரைக்கும், அவரோட நிலைப்பாட்டையும் நம்மால் புரிஞ்சிக்க முடியாது. அதனால அவர் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லைன்னு சொல்லிட கூடாது"
"ஒரு விஷயம் சொல்லட்டுமா மீரா? அவனோட நடவடிக்கையை பாசிட்டிவா பார்த்த முதல் நபர் நீங்க தான்... ஒருவேளை கடைசி நபரா கூட இருக்கலாம்"
"எல்லாருக்கும் ஒரு பாசிடிவ் சைடு இருக்கும், நந்தா"
"ஆனா, தயவுசெய்து அவன்கிட்ட பேச மட்டும் முயற்சி பண்ணாதீங்க. அவன் உங்களை காயப்படுத்த தயங்க மாட்டான்"
எப்படி அவள் அவனிடம் நெருங்காமல் இருப்பது? அவன் அவளது கணவனாயிற்றே. அப்போது முகுந்தன் தன் அறையை விட்டு வெளியே வருவதை கண்ட மீரா, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
"இது தான் உங்க கேபின்"
"தேங்க்யூ நந்தா"
"மை ப்ளஷர்"
"நீங்க இன்னைக்கு லஞ்ச் கொண்டு வந்திருக்க மாட்டீங்க இல்லையா?"
"ஆமாம், கொண்டு வரல"
"நம்ம ஆஃபிஸ்ல கேன்டீன் இருக்கு. நான் உங்களை கூட்டிட்டு போறேன்"
"சரி" என மழை சாரல் போல் அவனைப் பார்த்து புன்னகைத்தாள் மீரா.
அதைக் கண்ட முகுந்தன், நந்தகோபாலை பார்த்து அவளுக்கு சிரிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று எண்ணினான். அவன் அவளிடம் வழிகிறான் என்று அவளுக்கு புரியவில்லையா? அவளுக்கு பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில், இந்த மடையன் நந்தகோபால் என்ன செய்ய காத்திருக்கிறானோ தெரியவில்லை. அவள் மற்றவருடன் நட்புடன் பழகுவது அவனுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. ஆம், அவனுக்கு தெரியத்தான்வில்லை...!
தொடரும்...