பாகம் 45
உயர் வகுப்பு, மக்களால் நிரம்பி இருந்த அந்த கூடம், துப்பாக்கி குண்டின் ஓசையால் அதிர்ந்தது. அடுத்த நிமிடம் அந்த அறை முழுவதும் நிசப்தம் நிலவியது. ஏனென்றால், சுட்டவர் சங்கர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தவர் மாஷா. தன் தந்தையின் எந்த செயலுக்கும் அசராத அர்ஜுன், அவருடைய அந்த செயலுக்காக அதிர்ந்து போனான். இந்த அதிர்ச்சி நிறைந்த திருப்பத்தை எதிர்பாராத அவன், சிலை போல் நின்றிருந்தான். இந்துவின் நிலையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டவுடனேயே, அவள் அர்ஜுனை இறுக்கமாக கட்டிக் கொண்டுவிட்டாள்.
பல வருடங்களுக்கு முன் தான் ஆரம்பித்த ஆட்டத்தை, அன்று சங்கரே முடித்து வைத்தார். ரத்தம் வழிந்தோட, தன் கண்களைத் திறந்தபடி கீழே விழுந்து கிடந்தார் மாஷா. தன் கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட்டார் சங்கர். அவரது முகம், தெள்ளத் தெளிவாய் இருந்தது. மாஷாவை கொன்றதற்கான எந்த குற்ற உணர்ச்சியும் அவர் முகத்தில் தென்படவில்லை. சரியான திட்டத்தோடு தான், அவர் அங்கு வந்திருந்தார் போல் தெரிகிறது. போலீசில் பிடிபட்டால் கூட, சும்மா இருக்க மாட்டார் மாஷா. மீண்டும் மீண்டும் ஏதாவது தொந்தரவு கொடுத்துக்கொண்டே தான் இருப்பார். அப்படி இருக்கும் போது, அவரை போலீஸில் பிடித்துக் கொடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? சங்கர் எண்ணியது சரி தான்... மாஷா, அப்படி செய்து தான் இருப்பார்.
வரவேற்புக்கு வந்திருந்த, சங்கருடைய நண்பர் குணசேகரன், அவரை நோக்கி வந்தார்.
"என்ன சங்கர் இப்படி பண்ணிட்ட? நீ இப்படி செய்வேன்னு தெரிஞ்சிருந்தா, மாஷா இந்த ஹோட்டல தங்கி இருக்கிற விஷயத்தை, நான் உன்கிட்ட சொல்லியிருக்கவே மாட்டேன்" என்றார் வருத்தமாக.
குணசேகரன் தான் மாஷா அந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் விஷயத்தை சங்கருக்கு சொன்னவர். மாஷாவை அந்த ஓட்டலில் பார்த்த பொழுது, மாஷா தான் வரவேற்பிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாக தவறாக நினைத்தார் குணசேகரன். கையோடு போனை போட்டு சங்கரை பாராட்டவும் செய்தார். அப்பொழுது தான், மாஷா, திருமண வரவேற்பு நடக்கும் அதே இடத்தில் தங்கியிருப்பதை பற்றி தெரிந்து கொண்டார் சங்கர். மாஷா ஏன் அங்கு தங்கியிருக்கிறார் என்பதை யூகிப்பதில் அவருக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.
குணசேகரனின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல், சங்கர் மேடையை நோக்கி நடந்தார்... தன் மகனை நோக்கி... இந்த முறை, தன்னிடம் நெருங்காமல் அவரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அர்ஜுனுக்கு தோன்றவில்லை. அர்ஜுனை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து. அவன் முகம் கல்லாய் போயிருந்தது. அவனுடைய கண்களோ, அவனுடைய தந்தையின் மீது இருந்தது. மேடையின் மீது ஏறி, அர்ஜுனை கைகூப்பி வணங்கினார் சங்கர்.
"என்னை மன்னிச்சிடு அஜ்ஜு... ( அர்ஜுன் சிறுவனாக இருந்த போது, அவரும் சீதாவும் அவனை அப்படித் தான் கூப்பிடுவார்கள் ) என்னால தான் நீ உங்க அம்மாவை பிரிஞ்சி, யாரும் இல்லாம தனியா கஷ்டப்பட்ட... உன் வாழ்க்கையில மறுபடியும் அப்படி நடக்க நான் விடமாட்டேன். நீ சந்தோஷமா இருக்கனும்... உன்னை மாதிரி நல்லவங்கயெல்லாம் சந்தோஷமா தான் இருக்கணும்... என்னால தான் உன்னுடைய வாழ்க்கை கெட்டுப் போச்சு. அதை சரி செய்ய வேண்டிய கடமையும் என்னுடையது தான். அதை நான் செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்."
அவர் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது. சீதாவின் மரணத்திற்குப் பிறகு, அன்று தான் அவரை தன்னிடம் பேச அனுமதிக்கிறான் அர்ஜுன். அர்ஜுனை கட்டிக்கொண்டு கதறி அழுதார் சங்கர். வெகுநேரம் அப்படியே நிற்க முடியவில்லை அர்ஜுனால். அன்று அவனுடைய கண்களில், சங்கர், ஒரு பாதுகாவலனாய் தெரிந்தார். அவனுடைய உயிரினும் மேலான இந்துவை அவர் பாதுகாத்திருக்கிறார், மாஷா என்ற அத்தியாயத்தை, அவனுடைய வாழ்க்கை புத்தகத்திலிருந்து கிழித்தெரிந்து...
"என்னை மன்னிச்சிடு அஜ்ஜு... தயவு செய்து என்னை மன்னிச்சிடு"
ஹீனாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி கொண்டே இருந்தது. அவளுடைய அம்மாவின் மோசமான முடிவிற்காக அல்ல... சங்கருக்காக. அவருக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறது என்பது அவளுக்கு தெரியும். ஆனால், அவர் குற்ற உணர்ச்சியில் தினம் தினம் செத்துக் கொண்டு இருந்திருக்கிறார்... இதோ, அதற்கான பலன்... அவர் மீது அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. மாஷாவை வாழ விட்டால், அவர் யாரையுமே வாழ விடமாட்டார் என்பது அவளுக்கு தெரியும்.
அப்போது வெளியிலிருந்து வந்த அமளி, அர்ஜுன் மற்றும் கிரியின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"இந்து, நீ வெளிய வராத. ( ரம்யாவை பார்த்து ) இந்துவை ஜாக்கிரதையா பாத்துக்கோ" என்றான் அர்ஜுன்.
சரி என்று தலையசைத்துவிட்டு, அருகில் இருந்த ஒரு அறைக்கு இந்துவை அழைத்துச் சென்றாள் ரம்யா. ரேவதி அவர்களைப் பின் தொடர்ந்தாள். ஹீனாவோ அர்ஜுனுடன் வெளியே சென்றாள்.
அங்கு, ஒரு மனிதனை காவலர்கள் தடுத்து வைத்திருந்தார்கள்.
"என்ன சார் பிரச்சனை? யார் இவர்?" என்றான் கிரி.
அந்த ஆள் யார் என்பது கிரிக்கு தெரியாது. ஆனால் நமக்குத் தெரியும். அதே ஹோட்டலில், நாம் அவனை மாஷாவுடன் பார்த்திருக்கிறோம். இந்துவைப் கொல்ல, வைர மோதிரம் கொடுத்து, மாஷாவால் நியமிக்கப்பட்ட குமரன் தான் அது.
"இவர் ரிசப்ஷன் ஹாலுக்குள்ள வர ட்ரை பண்ராரு. ஆனா இவர்கிட்ட இன்விடேஷன் இல்ல." என்றார் இன்ஸ்பெக்டர்.
"யார் நீங்க? " என்றான் கிரி.
"நான் இதை ஹோட்டல்ல தான் தங்கி இருக்கேன். ஏதோ பார்ட்டி நடக்குதேன்னு உள்ள வரலாம்னு நெனச்சேன்"
"எந்த ரூம்ல தங்கி இருக்கீங்க?"
"ரூம் நம்பர் 304... செகண்ட் ஃப்ளோர்"
"எதுக்காக ஹோட்டலில் தங்கி இருக்கீங்க? "
"பிசினஸ் விஷயமா வந்தேன்"
"பிசினஸ் விஷயமாக வந்த உங்களுக்கு, யாரோ ஒருத்தருடைய ரிசப்ஷன்ல என்ன வேலை? அதுவும், உங்களை யாரும் இன்வைட் பண்ணாதப்போ, ஏன் வரணும்னு நினைக்கிறீங்க?"
"ரூம்ல உக்காந்து போர் அடிச்சது சார்"
"இன்ஸ்பெக்டர் இவரை செக் பண்ணுங்க" என்றான் கிரி.
குமரனின் கோர்ட் பாக்கெட்டில் அவர்கள் சந்தேகிக்கும் படி எதுவும் கிடைக்கவில்லை தான். ஆனால், அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு பொருளை வெளியே எடுத்த பொழுது, சங்கர் மற்றும் ஹீனாவின் கண்கள் பளிச்சிட்டன. அது குமரனுக்கு மாஷா வழங்கிய வைரமோதிரம்.
"இது எங்க அம்மாவுடைய மோதிரம்" என்றாள் ஹீனா.
அனைவரும் அதனை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.
"ஆமாம். இது மாஷாவுடைய மோதிரம். நான் உங்ககிட்ட கொடுத்த போட்டோஸ்ல, இந்த மோதிரத்துடைய போட்டோவும் இருக்கு. நீங்க வேணும்னா செக் பண்ணிக்கோங்க" என்றார் சங்கர்.
"அப்படின்னா, இவன் தான் உங்க வீட்லயிருந்து நகைகளை திருடி இருக்கணும்" என்றார் இன்ஸ்பெக்டர்.
ஹீனா சங்கரை பார்க்க, அவர் அவளை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.
"நீங்க சொல்றது சரி. இவனை அரஸ்ட் பண்ணுங்க" என்றார் சங்கர்.
"இல்ல... நான் எந்த நகையையும் திருடல. இந்த மோதிரத்தை எனக்கு மாஷா மேடம் தான் கொடுத்தாங்க"
"இவன் பொய் சொல்றான். எனக்கு தெரியாம, மாஷா இதை இவனுக்கு கொடுத்திருக்கவே முடியாது. இவன் வேணுமின்னே அவ மேல பழி போடுறான். அவ ரொம்ப நல்லவ" என்றார் சங்கர்.
"அப்படியா? அவங்க ரொம்ப நல்லவங்களா இருந்தா, உங்க மருமகளை கொல்ல சொல்லி என்கிட்ட ஏன் கேட்டாங்க?" என்று உளறினான் குமரன்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டார் சங்கர். ஹீனாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது... இப்படிப்பட்ட ஒரு அம்மாவிற்கு பிறந்த அவமானத்தில்...
"அவனை கொண்டு போங்க" என்றான் கிரி.
"மாஷாவை கொன்ற குற்றத்துக்காக நாங்க, மிஸ்டர் சங்கரையும் கூட்டிக்கிட்டு போயாகணும்" என்றார் இன்ஸ்பெக்டர்.
முதல் முறையாக, தன் தந்தைக்காக வருந்தினான் அர்ஜுன்.
"நான் ரெடி" என்றார் சங்கர்.
கிரியை பார்த்து ஏதோ சைகை செய்தான் அர்ஜுன். அதை புரிந்து கொண்ட கிரி,
"ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர்" என்று கூறிவிட்டு உள்ளே ஓடினான்.
சில வினாடிகளில், அவன் இந்துவுடன் வந்தான். சங்கரின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற குனிந்தாள் இந்து. அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்படும் வகையில், அர்ஜுனும் அதையே செய்ய முயன்றான். அவர்களை அப்படி செய்ய விடாமல் தடுத்தார் சங்கர்.
"இப்படிப்பட்ட மரியாதைக்கு எல்லாம் நான் தகுதி இல்லாதவன். நான் பாவம் செஞ்சவன். உங்க முன்னாடி நிக்கிறதுக்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதுக்காக நான் ரொம்ப சந்தோஷபடுறேன். அதுவே எனக்குப் போதும். நீங்க சந்தோசமாக இருந்தா நானும் சந்தோஷமா இருப்பேன்..."
கண்ணீருடன் அவரை அணைத்துக் கொண்டாள் ஹீனா. அவர் எதுவும் கூறும் முன்,
"ஹீனாவை நான் பாத்துக்கறேன் பா" என்றாள் இந்து.
பெருமிதத்துடன் அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, அங்கிருந்து போலீசுடன் சென்றார் சங்கர். தன் அம்மாவை எண்ணி கண்ணை மூடினான் அர்ஜுன். அவனுடைய மூடிய விழிகளுக்குள் திருப்தி புன்னகை பூத்தார் சீதா.
"அர்ஜுன், நீ இவங்க எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போ. மிச்ச வேலையை நான் பாத்துக்குறேன்" என்றான் கிரி.
சரி என்று தலையசைத்துவிட்டு, இந்து, ஹீனா, ரம்யா மற்றும் ரேவதியுடன் சீதாராணி இல்லம் வந்து சேர்ந்தான் அர்ஜுன் கனத்த இதயத்துடன்.
அவனுக்கு சங்கரை பிடிக்காது என்றாலும், அன்று நடந்த அனைத்தும் அவனை பலவீனமாக்கி இருந்தது. அவர் உதிர்த்த வார்த்தைகள் அவனுடைய காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவை எதுவுமே பொய்யாய் அவனுக்கு தோன்றவில்லை. தன்னுடைய வருத்தத்தை வெறும் வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுத்தாமல், அதை செயலிலும் காட்டி, மீதி இருக்கும் தன் வாழ்நாளை சிறையில் இட்டு நிரூபித்திருக்கிறார் சங்கர்.
தொடரும்...