பாகம் 16
வித்யா மீதும், வீணா மீதும், தன் பார்வையால் நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார் மாஷா. வீணா பொறாமையால் புழுங்கிக் கொண்டிருக்க, வித்யாவாலோ தன் கண்களையே நம்ப முடியவில்லை. என்ன நடக்கிறது இங்கே? இந்து அவனை கட்டி அணைக்க மட்டும் செய்யவில்லை, அவன் நெற்றியில் முத்தமும் கொடுத்தாள். அவள் எப்படி அதை செய்யலாம்? ஒருவேளை அவள் அவனுடைய வலையில் விழுந்து விட்டாளோ? அப்படி என்றால் மாஷாவுடைய திட்டத்தை அவர் எப்படி நிறைவேற்ற முடியும்?
வித்யாவையும் வீணாவையும் விட, மாஷா தான் அதிகமாய் கலவரப்பட்டு போனார். அர்ஜுனுடைய கதையை சுலபமாக முடித்து விடலாம் என்று அவர் தப்புக் கணக்குப் போட்டிருந்தார். ஆனால், இங்கு அனைத்தும் நேர்மாறாக நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவருடைய துஷ்ட மனம், பரபரவென வேலை செய்தது. அந்த விஷயத்தில் இருக்கும் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்தது.
ஆமாம்... இந்துவிற்கு அவன் மீது விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால், அவனுக்கு அதிகமாய் பாதிப்பு ஏற்படாது. ஆனால் இப்பொழுது, அவருடைய திட்டம் அர்ஜுனின் இதயத்தை நிச்சயம் கூறு போட்டுவிடும். ஏனென்றால் இப்போது உறவுவின், பழத்தின் சுவையை அவனுக்கு காட்டிவிட்டாள் இந்து. மாஷாவின் முகத்தில் ஏற்பட்ட சிரிப்பில், கருநாகத்தின் உஷ்ணம் தெரிந்தது
தன் கையிலிருந்து ஒரு கோடி ரூபாய் நழுவி விடுகிறதே என்ற பயத்தில், மாஷாவின் முகத்தை பார்த்தார் வித்யா. அவர்களை காரில் அமரும்படி கூறினார் மாஷா. அவர்கள் அமரவும், அங்கிருந்து தன் காரை கிளப்பிக் கொண்டு சென்றார்.
சற்று தூரம் வந்த பின், சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார்.
"இந்து அர்ஜுனை விரும்புறான்னு நல்லா தெரியுது. அவ இனிமே நம்மளுடைய திட்டத்திற்கு உதவ மாட்டா." என்றார் மாஷா.
"நான் சொன்னா அவ நிச்சயம் கேட்பா" என்றார் வித்யா.
"இல்லை. நம்மளுடைய திட்டம் அவளுக்கு தெரிய வேண்டாம். அவ அர்ஜுனுடன் நெருக்கமாக இருக்கட்டும்"
"அப்படினா நம்மாள எப்படி அதை செய்ய முடியும்? "
"முடியும்... நான் சொல்ற மாதிரி நீங்க செஞ்சா..."
"எது வேணும்னாலும் செய்றோம்" என்றாள் வீணா
அவர்கள் இந்த முறை என்ன செய்ய வேண்டும் என்ற புதிய திட்டத்தை விவரித்தார் மாஷா.
"ஒரு வேலை, கையெழுத்து போடுறதுக்கு முன்னாடியே அவனுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சினா என்ன செய்யுறது." என்றார் வித்யா நடுக்கத்துடன்.
"பழியை இந்து மேல போடுங்க"
மாஷாவை தயக்கத்துடன் பார்த்தார் வித்யா.
"அதை நான் செய்றேன்" என்றாள் வீணா.
சரி என்று புன்னகைதார் மாஷா.
இதற்கிடையில்...
சீதாரணி இல்லம்
அன்று அர்ஜுன், பூமியிலேயே இல்லை. இந்துவின் பிறந்தநாளன்று தனக்கு அப்படி ஒரு இதயபூர்வமான பரிசு கிடைக்கும் என்று அவன் எதிபார்க்கவில்லை. அவன் அவளுடைய பிறந்தநாளுக்காக மாங்கு மாங்கென்று செய்த அனைத்தையும், அவளுடைய ஒரே ஒரு செய்கையால் அவள் மிஞ்சிவிட்டாள். அவனுக்கு மனைவியாய் இருக்க சம்மதம் என்று அவளுடைய செயல் மூலம் அவனுக்கு வாழ்நாள் உத்திரவாதத்தை அளித்து விட்டாள். அவள் சாதாரணமாய் அவனுக்கு *நன்றி* என்று கூறியிருக்க முடியும். ஆனால், அவனை கட்டியணைத்து, கவிதையாய் முத்தமும் வழங்கினாள். அப்படி என்றாள் அவனை தன் கணவனாக அவள் ஏற்றுக்கொண்டுவிட்டாள் என்று தானே அர்த்தம்... அவள் தன் சந்தோஷத்தை மட்டும் அவனிடம் காட்டவில்லை, அவனுடைய மொத்த சந்தோஷமுமாய் இருக்க போகும், அவனுடைய எதிகாலத்தையும் அவனுக்கு காட்டிவிட்டாள். தன் எதிர்காலத்தை எண்ணி கனவு காண துவங்கினான் அர்ஜுன்.
இந்துவை தேடி கொண்டு வந்தான் அர்ஜுன். அவளுடைய அறையில் கட்டிலில் அமர்ந்து கொண்டு, தனது புடவை முந்தானையை விரலில் சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அர்ஜூனை பார்த்ததும் எழுந்து நின்றாள். அவளை நோக்கி அர்ஜுன் நெருங்கி வர, அவனுடைய காந்தக் கண்களால் ஏற்கனவே கவரப்பட்டிருந்த அவளை, அந்த பார்வை தன்வசமிழக்க செய்தது. மெல்ல தன் கண்ணை உயர்த்தி அர்ஜுனை அவள் பார்க்க, அவன் மந்திரத்தால் கட்டுண்டவனை போல காணப்பட்டான்.
தன்னிலை மறந்து இருந்த அவனுக்கு தெரிந்ததெல்லாம், அவன் கண்ணெதிரே நிற்கும் தன் தேவதை மட்டும் தான். அவளுடைய முகம் இருந்த நிலை, அவனை மயிர்க்கூச்செரிய செய்தது.
அவள் பூமுகத்தை அவன் தொட்ட போது, அவள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது, அவனுக்கு தைரியம் தந்தது. அவள் இதழை நோக்கி அவன் குனிந்த போது, அவள் கண்ணை முடி, அவனிடமிருந்து முத்தத்தை பெற தயாரானாள். அப்படி எதுவும் நிகழாமல் போகவே கண்ணை திறந்தாள் இந்து. அவள் எதிரில் புன்னகையுடன் நின்றிருந்தான் அர்ஜுன். அவள் முகத்தில் இருந்த தன் கையை எடுத்துவிட்டு, பின்னோக்கி நகர துவங்கினான். அவன் செயல் இந்துவை குழப்பியது. அவன் மனநிலை என்ன என்பதை அவள் அறிந்திருக்க நியாயமில்லை. அவன் முத்தமிடுவதை அவள் தடுக்கவில்லை என்பதால் விண்ணில் பறந்து கொண்டிருந்தான் அர்ஜுன். இது தான் அவனுக்கு வேண்டியது. அவள் தன்னை முழுமையாய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் எண்ணினான்.
ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள் இந்து. அவளுடைய அறையை விட்டு வெளியே வந்தவன், அழைப்பு மணியின் ஓசையைக் கேட்டு நின்றான். வேலன் ஓடிச்சென்று கதவை திறந்தார். அர்ஜுனுடைய முகம், சட்டென்று மாறியது, வித்யாவையும், வீணாவையும் பார்த்து. சீதாராணி இல்லத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து திடுக்கிட்டு நின்றார்கள் அம்மாவும் மகளும்.
அந்த பெண்களை பார்த்து போது, அவன் மனதில் எதிர்மறை எண்ணம் தோன்றியது அர்ஜுனுக்கு. இனம் புரியாத பதட்டம், அவன் இதயத்தை ஆட்கொண்டது. அவர்களுக்கு கிட்டாத வண்ணம், இந்துவை எங்காவது ஒளித்து வைத்துவிட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. மறுபடியும் இந்துவின் அறைக்குள் புகுந்து, கதவை தாளிட்டு, அதன் மீது சாய்ந்து நின்று கண்ணை மூடிக்கொண்டான். அவன் அப்படி நிற்பதைப் பார்த்து, ஒன்றும் புரியாமல் அவளை நோக்கி ஓடிவந்தாள் இந்து.
"என்னங்க... என்ன ஆச்சுங்க?" என்று அவன் கண்ணத்தை லேசாய் தட்டினாள்.
கண்ணை திறந்த அவன், எதை பற்றியும் யோசிக்காமல், அவளை இருக்கமாய் கட்டி அணைத்துக் கொண்டான். பூச்சாண்டியை பார்த்து பயந்த பிள்ளை, அம்மாவிடம் தஞ்சம் அடைவது போல.
அவனுடைய அதிவேக இதயத் துடிப்பை அவள் உணர்ந்தாள். அவனை இப்படி நடக்க வைப்பது என்ன என்று அவளுக்கு புரியவில்லை.
அப்போது வித்யா, அவளுடைய பெயரை கூறி அழைப்பதை கேட்டாள் இந்து.
"இந்து... நீ எங்க இருக்க? இவ்வளவு பெரிய பங்களாவுல நாங்க உன்னை எப்படி கண்டு பிடிக்கிறது?"
வித்யாவின் குரலைக் கேட்டு அவள் விழிகள் விரிந்தன. வித்யா இங்கு வந்து விட்டாரா? சந்தோஷமாய் உணர்வதற்கு பதில் அவள் மனம் ஏன் நிம்மதி இழக்கிறது? அவள், அவன் பிடியில் இருந்து வெளியே வர எத்தனித்த பொழுது, தன் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டான் அர்ஜுன்.
"ஏங்க... அம்மா வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்..."
இயலாமையால் தன் கண்ணை மூடிக்கொண்டான் அர்ஜுன்.
"அவங்க நம்மளோட விருந்தாளிங்க. நம்ம அவர்களை வரவேற்கனும்"
தன் பிடியை தளர்த்தி விட்டு, ஆமாம் என்று தலையசைத்தான் அர்ஜுன்.
"வாங்க..."
"நீ போ" அந்த இடத்தை விட்டு அகன்று சென்றான், அவனுக்கு அவர்களை வரவேற்க விருப்பம் இல்லாததால்.
இந்து, அவர்களை நோக்கி வந்தாள். அவளை பார்த்தவுடன், அவளை நோக்கி ஓடிச் சென்று, அவளை கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார் வித்யா.
"எப்படிமா இருக்க? நாங்க எவ்வளவு தவியா தவிச்சு போனோம்னு உனக்கு தெரியாது. நீ ஏன் இப்படி பாக்கவே கவலையா இருக்க? நீ இங்க சந்தோஷமா இல்லையா? எனக்கு தெரியும், உன்னால இங்க சந்தோஷமா இருக்க முடியாது. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிகிட்டு வந்தா, எந்த பொண்ணு தான் சந்தோஷமாக இருப்பா? "
"நான் சந்தோஷமா இருக்கேன் மா"
வித்யா ஒரு நொடி தடுமாறினார். வீணாவோ பொறாமையில் வெந்தாள். இப்படிபட்ட பணக்கார வாழ்வு கிடைத்தால், அவள் ஏன் சந்தோஷமாக இருக்க மாட்டாள்...? என்று நினைத்தாள் வீணா.
"நீ என்னை சந்தோஷ படுத்தத் தான் பொய் சொல்றேன்னு எனக்கு தெரியும். என்னை விட யாரு உன் மனசை நல்லா புரிஞ்சுக்க முடியும்?" என்றார் வித்யா
"நான் பொய் சொல்லலம்மா. நான் நிஜமா சந்தோஷமா தான் இருக்கேன்"
என்று அவள் கூறியது, அர்ஜுனின் இதழ்களை புன்னகைக்க வைத்தது. வித்யாவின் அடுத்த வார்த்தைகள், அந்த புன்னகையை துடைத்தெரிந்தது.
"அப்படின்னா, நான் சொன்ன மாதிரி தான் நீ நடந்துக்கிட்டு இருக்கன்னு நினைக்கிறேன்... " என்றவளை குழப்பத்துடன் பார்த்தாள் இந்து.
"எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? எனக்கு ரொம்ப பசிக்குது" என்று, இந்து மேலும் யோசித்து ஏதும் கூறும் முன், அவளுடைய கவனத்தை திசை திருப்பினாள் வீணா.
சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சமையலறையை நோக்கி சென்றாள் இந்து. அர்ஜுன், அங்கு தான் நின்று கொண்டு, அவர்களுடைய பேச்சை கவனித்துக் கொண்டிருக்கிறான் என்று, வித்யாவிற்கு சைகையால் உணர்த்தினாள் வீணா.
"சொன்ன மாதிரியே, நம்முடைய திட்டத்தை, இந்து நல்லபடியா நடத்திகிட்டு இருக்கா போல தெரியுது" என்றாள் வீணா.
"ஆமாம். அவ சொன்ன மாதிரியே, அவனை சீக்கிரமாவே அவளுடைய வலையில் விழ வச்சிட்டா. அவளுடைய திட்டத்தை என்கிட்ட சொல்லும் போது, நான் ரொம்ப பயந்தேன்." என்றார் வித்யா.
"அவரும் இந்துவுடைய நடிப்பை, நம்ப ஆரம்பிச்சிட்ட போல தெரியுது" வீணா.
"எனக்கும் அது தான் புரியல, எப்படி அவன் அவளை அவ்வளவு சீக்கிரம் நம்பிட்டான்னு..." வித்யா.
"நமக்கு தெரியாதா, இந்து எவ்வளவு திறமையானவன்னு... பாவம்... அவரும் அவளை நம்பிட்டாரு... " வீணா.
"இதெல்லாம் விதி. அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி, அவளுடைய வெறுப்பை அவன் சம்பாதிச்சிட்டான். அவனுக்கு சரியான பாடத்தை சொல்லிக் கொடுக்குற வரைக்கும், அவ சும்மா இருக்க மாட்டா"
இதையெல்லாம் கேட்ட அர்ஜுனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கூறவும் தான் வேண்டுமா? அவனைச் சுற்றி இருந்த அனைத்தும் இருட்டாகி போனது. அவனால் எதையுமே பார்க்க முடியவில்லை. இந்து நடிக்கிறாளா? அவள் அவனை ஏற்றுக்கொண்டது நடிப்பா? இது தான் அவளுடைய திடீர் மாற்றத்திற்கு காரணமா? அவள் அவனிடம் காட்டிய அன்பு, அவனை பழிவாங்க தானா? அவளை நம்புவதில் அவன் அவசரம் காட்டி விட்டானோ? அவனுடைய கண்கள் குளமானதை அவனால் தடுக்க முடியவில்லை.
துரோகம்... அவனை துண்டாடும் வார்த்தை. ஏன் எப்பொழுதும் அவனே அதை மறுபடி மறுபடி எதிர்கொள்ள நேரிடுகிறது? அவன் அறைக்கு சென்று, கட்டிலில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டான். இந்துவுடன் இருந்த அந்த நொடிகள் எவ்வளவு அழகானவை...! அருமையானவை...! அவள் எவ்வளவு அழகாய் பேசினாள்.... எவ்வளவு அழகாய் பார்த்தாள்... எவ்வளவு அழகான நயணம் அவளுடையது... அவளுடைய அந்த செயல்கள் அனைத்தும் நடிப்பா? அவனால் நம்பவே முடியவில்லை.
ஏதோ ஒரு உணர்வு, அவனுடைய ஆழ்மனதை தட்டியது.
"பொரு அர்ஜுன்... " என்று அவனை எச்சரித்தது.
இந்துவைப் பற்றி பேசிய அந்த இரு பெண்மணிகளும் நல்லவர்கள் அல்ல என்பதை நீ மறந்து விடாதே. அவர்களின் வார்த்தைகளை நம்புவது, மதிநுட்பம் உள்ளவன் செய்யும் வேலை அல்ல. அவசரப்படாதே... இது இந்துவை பற்றிய சமாச்சாரம்... உன் மனைவி... உன் வாழ்க்கை... உன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்... நீ கேட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட்டுவிட்டு, இந்த விஷயத்தை அர்ஜூனின் பாணியில் கையாள்.
நீண்ட பெருமூச்சு விட்டு தன் மனதை ஆசுவாசப் படுத்திக் கொண்டான் அவன். அது தான் சரி. கண்முடிதானமாய் யாரையும் நம்புவது தவறு... இந்துவாகவே இருந்தாலும்... என்ன செய்வது என்பது தீர்மாணிக்க பட்டது. அர்ஜுன், தனது மனைவியை சோதனைக்கு உட்படுத்த தயாராகிவிட்டான்... அவனுடைய பாணியில்...
தொடரும்...