2 இந்து குமாரி
*சங்கர் இல்லம்*
மாஷா, கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால், அவளுடைய காட்டுகத்தலுக்கு சங்கர் செவிசாய்க்கவேயில்லை.
அர்ஜுன் அவரை கத்தியால் குத்த முயற்சித்த நாளிலிருந்து தன்னுடைய செயலுக்காக மனதார வருந்த ஆரம்பித்திருந்தார் சங்கர். அவர் மகனே அவரை கொல்ல நினைத்தது தான், அவரை வெட்கி தலைகுனிய வைத்த சம்பவம். ஆனால், அது காலம் கடந்த ஞானோதயம். தவறுகளை திருத்தியமைக்கும் கட்டத்தை அவர் கடந்து வெகு காலமாகிவிட்டிருந்தது. அனைத்தும் அவர் கைமீறிப் போய்விட்டிருந்தது.
"நீங்க ஒரு உதவாக்கரை. என்னை பாத்து அவன் பேய் மாதிரி கத்தினானே, அப்ப ஏதாவது சொன்னீங்களா? வாய மூடிகிட்டு அப்படியே சிலை மாதிரி நின்னீங்க..."
"என்னை என்ன செய்ய சொல்ற? நான் என்ன செய்ய முடியும்? என்னால் அவன் முகத்தை கூட பார்க்க முடியல. என்னால தான் அவன் தன்னுடைய மொத்த சந்தோஷத்தையும் இழந்து நிற்கிறான். அவனும் சீதாவும் எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்கன்னு தெரியுமா உனக்கு?"
"நானும் தான் என் புருஷனோட சந்தோஷமா இருந்தேன். நீங்க தான் என் மனசை மாத்திட்டீங்க. உங்களால தான் நான் கேடுகெட்டவள்னு பேரெடுத்தேன். எல்லாமே உங்களால தான். நீங்க ரொம்ப மோசமானவர். உங்களுடைய சந்தோஷத்துக்காக நீங்க என்ன வேணும்னாலும் செய்வீங்க. நீங்க ஒரு சுயநலவாதி..."
"நீ தானே உன் புருஷனை பத்தி எப்ப பாத்தாலும் குறை சொல்லி, சொல்லி என்கிட்ட அழுத? நான் உன்னை சமாதானப் படுத்தினப்போ, நீ தான் என்னை கட்டிப்புடிச்சு அழுத..."
"நான் உங்களை கட்டி பிடிச்சப்போ நீங்க ஏன் என்னை தள்ளி விடல? ஏன்னா, உங்களுக்கு அது தேவைபட்டுச்சி. அந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணி, நீங்க என்னை தொட நெனச்சிங்க. உங்க பொண்டாட்டி உண்மையிலேயே நல்லவளா இருந்தா, உங்களுக்கு ஏன் இன்னோரு பொம்பளை தேவைப்பட்டுது?"
"வாய மூடு. உனக்கு சீதாவைப் பத்தி பேச எந்த தகுதியும் இல்ல. அவ கடவுள் மாதிரி"
"அப்புறம் எதுக்கு அவள விட்டுட்டு என் கிட்ட வந்திங்க?"
"என் வாழ்க்கையில நான் செஞ்ச ரொம்ப பெரிய தப்பு அது தான். அவளை இழக்குற வரைக்கும் அவள் எப்படிப்பட்ட உத்தமின்னு நான் உணராம போயிட்டேன். நான் அவளை மட்டும் இழக்கல... என்னுடைய மகனையும் முழுசா இழுந்துட்டேன். என்னால தான் அர்ஜுன் இன்னைக்கு மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கான். அவன் என்னோட பேரை கூட அவன் பேருக்கு பின்னாடி போட்டுக்குறதில்ல. அந்த அளவுக்கு என்னுடைய மரியாதையை அவன்கிட்ட நான் கெடுத்துக்கிட்டேன்." என்றார் வேதனையுடன்.
"அவன் ஒரு மெண்டல். அவனோட வாழ்க்கையில எந்த முடிவையும் எடுக்கிற திராணி இல்லாதவன். என்னை அவமானப்படுத்தின பாவத்துக்காகத் தான் அவன் இன்னைக்கு தனிமரமா நிக்கிறான். கடைசி வரைக்கும் தனியாவே இருக்கறது தான் அவனுடைய தலையெழுத்து."
"வாய மூடு.. அவனை பத்தி இந்த மாதிரியெல்லாம் பேசினா, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். அவனுக்கு நல்ல வாழ்க்கை தான் அமையும். ஏன்னா, உன்னை மாதிரி அவன் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கல"
"அப்படியா? உங்க புள்ளைக்கு அன்பா இருக்க தெரியுமா? நாலு வார்த்தை அனுசரணையா பேச தெரியுமா? அவனை மாதிரி ஒரு மெண்டலை யாருக்குமே பிடிக்காது"
அடுத்த நொடி, அவள் உடல் அதிரும் வண்ணம் அவள் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. அவள் கழுத்தை பிடித்தார் சங்கர்.
"நான் உன்னை எச்சரிக்கிறேன். இன்னொரு தடவை அவனை மெண்டல்னு சொன்ன, உன்னை கொன்னுடுவேன். ஞாபகம் வச்சுக்கோ"
அவள் கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றார் சங்கர். இப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தான், அவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது. காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருந்துவிடாதல்லவா? வேறு வழி இல்லை... இதையெல்லாம் அவர் அனுபவித்து தான் ஆகவேண்டும். விதைத்ததை அறுத்து தானே தீர வேண்டும்...?
.........
லண்டன் செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்துவிட்டிடிருந்த கிரிக்கு, இப்பொழுது லண்டனுக்கு திரும்பிச் செல்வது கேள்விக்குறியாக இருந்தது.
எதிர்பாராதவிதமாக ஏதோ ஒன்றின் மீது மிகுந்த ஆர்வமாக இருக்கிறான் அர்ஜுன். இல்லை, இல்லை, இந்துகுமாரி என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணின் மீது, ஆர்வமாக இருக்கிறான். யார் அந்தப் பெண்? எதற்காக அர்ஜுன் அந்த பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறான்? அவனுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன உறவு? என்ன காரணத்திற்காக அவள் அவனுக்கு வேண்டும்?
கிரியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் சுழன்று கொண்டிருந்தன. ஆனால், எந்த கேள்வியையும் அர்ஜுனிடம் கேட்க முடியாது. அர்ஜுனுடைய வாழ்க்கை வரலாறு முழுவதும் கிரிக்கு தெரியும். அர்ஜுன், கையாள்வதற்கு சுலபமானவன் இல்லை என்ற பொழுதிலும், அவனுடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும், கிரியை ரொம்பவே கவர்ந்தது.
அவன் லண்டனில் இருக்கும் பொழுது, நலிவடைந்து கொண்டிருந்த ஒரு இரும்பு ஆலையை விலைக்கு வாங்கி, அதை யாரும் எதிர்பாராத வண்ணம் சரிவிலிருந்து மீட்டுக் கொண்டு வந்து, தன்னுடைய திறமையை நிரூபித்துக் காட்டினான் அர்ஜுன்.
கிரிக்கு ஆச்சரியத்தை அளித்தது என்னவென்றால், அர்ஜுனுக்கு திடீரென்று இந்துகுமாரியின் மீது ஏற்பட்டிருக்கும் ஆர்வம். வழக்கமாய் பெண்கள் அவனிடம் நெருங்கவே அஞ்சுவார்கள். அவனிடம் நெருங்க நினைக்கும் பெண்களை, அவன் அவமானப்படுத்த தயங்கியதேயில்லை. அர்ஜுன், பெண்களையே அடியோடு வெறுப்பவன் என்று நினைத்துக் கொண்டிருந்தான் கிரி. அவன் நினைத்தது முழுவதும் தவறும் அல்ல. அவன் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த அனுபவங்களால், அவன் பெண்களை வெறுத்தது உண்மை தான். அதற்கு காரணம், அவன் அம்மாவைப் போல உயர்ந்த பண்புள்ள பெண்கள் இந்த உலகத்தில் இல்லை என்று அவன் நினைத்தது தான். அவன் மனதில் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தள் மாஷா.
ஆனால் இப்பொழுது அவன், ஒரு பெண்ணை தீவிரமாய் தேடிக் கொண்டிருக்கிறான். அதுவும் அவளைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது. தேவையில்லாமல் எந்த ஒரு விஷயத்திலும் இறங்க மாட்டான் அர்ஜுன். அப்படி என்றால், இந்துகுமாரியிடம் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் ஒளிந்திருக்கிறது. அது என்னவாக இருக்கும்? கிரிக்கு பதில் கிடைக்காவிட்டாலும், அர்ஜுனிடம் கேட்கும் தைரியமும் எழவில்லை.
சீதாராணி இல்லம்
கிரியின் எண், அவனுடைய கைபேசி திரையில் ஒளிர்ந்ததைப் பார்த்து புன்னகைத்தான் அர்ஜுன்.
"சொல்லு கிரி..."
"நீ கொடுத்தது ஃபேக் அட்ரஸ். அந்த இடத்தில் ஒரு பாழடைஞ்ச வீடு தான் இருக்கு. அக்கம் பக்கத்துல கூட வீடுங்க இல்ல."
அதைக் கேட்டு, தன் முஷ்டியை இறுக்க மடக்கினான் அர்ஜுன்.
"நீ சொல்றது உண்மையா?" என்றான் ஆத்திரத்துடன்.
"என்னுடைய சோர்ஸ், எப்பவுமே நம்பிக்கைக்கு உரியவங்களா தான் இருப்பாங்க"
"நேரா சிட்டி ஹாஸ்பிடலுக்கு போ. அங்க தான் அவளுக்கு ஹார்ட் ட்ரான்ஸ்பிளான்டேஷன் நடந்தது. அங்கிருந்து எவ்வளவு டீடைல்ஸ் வாங்க முடியுமா வாங்கு"
"ஓகே"
தன் இருசக்கர வாகனத்தில் குதித்து அமர்ந்தான் கிரி. சிட்டி மருத்துவமனையை நோக்கி வண்டியின் ஆக்சிலேட்டரை முடுக்கினான்.
நிலை கொள்ளாமல், இங்கும் அங்கும் தவிப்புடன் நடந்து கொண்டிருந்தான் அர்ஜுன். அவனே மருத்துவமனைக்கு நேரில் சென்று அவளைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று தான் அவனுக்கு ஆசை. ஆனால், அவன் பெரும்பாலும் மக்களுடன் உரையாடுவதை விரும்புவதில்லை. ஏனென்றால், பெரும்பாலானவர்கள் அவனுடைய பொறுமையை மிகவும் சோதிக்கிறார்கள். அவனுடைய செயலுக்கு, விளக்கமும், காரணமும் கேட்டால் அவனுக்கு கோபம் பீறிடுகிறது. அவனிடம் வேண்டாத கேள்விகளை கேட்பதும் அவனுக்கு பிடிக்காது. சரியான பதில் கொடுக்காதவர்களையும் அவனுக்கு பிடிக்காது. அவன் யாரையும் எளிதில் நம்புவதில்லை. கிரி ஒருவன் தான் அவனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக இருந்து வருகிறான். ஆனால், கிரி ஒருவனுக்குத் தான் தெரியும், அர்ஜுனுடைய நம்பிக்கையை சம்பாதிக்க அவன் என்ன பாடு பட்டான் என்பது...!
மீண்டும் மீண்டும் கடிகாரத்தை பார்த்தபடி இருந்தான் அர்ஜுன். எதற்காக கிரிக்கு இவ்வளவு நேரம் ஆகிறது? பொருக்க மாட்டாமல் அவனே கிரியை அழைத்தான். அவனுடைய அழைப்பை உடனே ஏற்றான் கிரி.
"என்னடா பண்ணிகிட்டு இருக்க நீ? எதுக்காக இவ்வளவு நேரம் ஆகுது உனக்கு?"
"ஆபரேஷனுக்கு முன்னாடி, அவங்க தங்கியிருந்த லாட்ஜ்க்கு நான் இப்ப போய்கிட்டு இருக்கேன்."
"லாட்ஜா?"
"ஆமாம். அவங்களுக்கு தெரிஞ்சவங்க சென்னையில யாருமே இல்லன்னு நினைக்கிறேன். நான் இன்னும் நல்லா விசாரிச்சுட்டு சொல்றேன்."
"ஓகே, குயிக்"
அழைப்பை துண்டித்து, கைபேசியை கட்டிலின் மீது வீசி எறிந்துவிட்டு, கட்டிலின் மீது வெறுப்புடன் அமர்ந்தான் அர்ஜுன்.
ஒரு மணி நேரம் கழித்து...
அர்ஜுன் எதிர்பாராத வண்ணம், தான் சேகரித்த விஷயங்களை அவனிடம் கூற, கிரி நேரிலேயே வந்தான்.
"என்ன ஆச்சு, கிரி?"
"அவங்க பாண்டிச்சேரியில் இருக்குற கீழுர் வில்லேஜை சேர்ந்தவங்க. ஹாஸ்பிடல்ல அட்மிஷன் கிடைக்கிறதுக்கு முன்னாடி, மன்னடியில இருக்கிற ராம் லாட்ஜில் தான் தங்கி இருந்திருக்காங்க. லயன்ஸ் கிளப் மூலமா அவங்களுக்கு ஃப்ரீயாவே ஆபரேஷன் நடந்திருக்கு. அவங்க கூட, அவங்க அம்மாவும், தங்கையும் தங்கி இருந்தாங்களாம். ஆனா எதுக்காக அவங்க ஃபேக் அட்ரஸ் கொடுத்தாங்கன்னு தான் புரியல. ஹாஸ்பிடல்ல இருக்கிறவங்களுக்கு அவங்கள பத்தி எந்த டீடெயிலும் தெரியல"
பல்லைக் கடித்துக் கொண்டு, தன் கண்களை சுழற்றினான் வெறுப்புடன் அர்ஜுன். எப்படி தான் அவளை கண்டுபிடிப்பது?
"ஆனா, அந்த லாட்ஜ் ஓனர் பொண்ணு, தன்னோட மொபைல்ல அவங்களை விளையாட்டா ஃபோட்டோ எடுத்திருக்கா. அதை நான் உன்னுடைய ஃபோனுக்கு அனுப்பியிருக்கேன்."
கட்டிலின் மீது பாய்ந்து, தன் கைப்பேசியை எடுத்து, அவசரமாய் அதை திறந்து, இந்து குமாரியின் புகைப்படத்தை பார்த்தான் அர்ஜுன்.
இந்துகுமாரியின் மாசற்ற புன்னகையும், மின்னும் கண்களும், அவனுள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை பாய்ச்சியது. அவனுக்குள் ஏதோ மாறுவதை உணர்ந்தான் அவன். அவனுடைய இதயத்துடிப்பு *தொம் தொம்* என்று முரசை போல் ஒலித்தது.
எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தோம் என்று தெரியாமல், அவள் புகைப்படத்தை பார்த்தபடி, அப்படியே அமர்ந்திருந்தான் அர்ஜுன். ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்திலேயே, அவளால் ஈர்க்கபட்டுவிடுவோம் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.
தொடரும்...