கதிரவனும் மேற்கில் தலைசாய விரையவே நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மக்களின் கோபம் முற்றிலும் முல்லைநாட்டரசன் தனிக்கோவேளின் மீதே திரும்பியது. இந்த நிலையில் யாரும் எதிரபாராத விதமாகக் காட்டெருமைகள் கூட்டம் நகருக்குள் புகுந்தது. வழக்கமாக கோட்டைக்கு வெளியே காட்டுப்பகுதிகளில் மாலை நேரம் காட்டெருமைகள் கூட்டம் இறங்கியோடுவதும் பிற விலங்குகள் ஊர் புகுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதானென்றாலும் கோட்டைக்குள் அப்படி நடந்ததில்லை.
மூன்று முதன்மை வாயில்கள் மூன்று உப வாயில்கள் என ஆறு வழிகளைத் தவிர வேறு வழிகளே கிடையாது. அதிலும் கோட்டையின் ஒருபுறம் முற்றிலும் மலையால் சூழப்பட்டிருப்பதாலும் மற்ற பகுதிகள் சமவெளிப்பகுதி என்பதாலும் வடக்குப்பகுதியில் மட்டுமே இத்தகைய வனவிலங்குகளின் ஊர்வலம், காட்டுயானைகள் வலசைபோதல் ஆகியன நிகழும். அப்படியாயினும் கோட்டைக்குள் இதுகாறும் இப்படி நிகழ்ந்ததில்லை.
கணக்கிலடங்காக் காட்டெருமைகளின் கூட்டம் தெருவெங்கும் திமிறிக் கொண்டு ஓடத் துவங்கியதும் மக்கள் குழப்பத்தில் கூச்சலிட்டுக் கொண்டு அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓட ஆரம்பித்தனர். இவ்வலறலைக் கேட்டு வெளியே வந்த இளங்குமரனும் மதிமாறனும் உடனடியாக அருகிலிருந்த கட்டடத்தின் கூரை மீது ஏறி நின்று கீழே நிகழ்வனவற்றையும் காட்டெருமைகள் வரும் திசையையும் பார்த்தனர்.
ஒரு கணப்பொழுதும் தாமதிக்காது தன் குறுவாளைத் தலைகீழாகத் திருப்பி அதன் கைப்பிடிப் பகுதியிலிருந்து ஒரு வித வினோதமான உரத்த ஒலியை உண்டாக்கினான். உடனே பல்வேறு பகுதியில் வேறு வேறு வேலை செய்து கொண்டிருந்தவர்களில் ஒரு சிலர் அந்தத்த வேலைகளை அப்படியே விட்டுவிட்டு நகரின் மையப்பகுதியை வந்தடைந்தனர். கொல்லர், குயவர், பெருவணிகர், சிறுவணிகர், கணக்கர் ஏன் அந்தப் புறமிருந்த படைவீரர்கள் சிலர் முதற்கொண்டு அனைவரும் அந்த ஒலி வந்த திசை நோக்கிக் கூடினர். யாரோ ஒருவன் உயரமான இடத்தில் நின்று விசித்திரமான ஒலியொன்றை எழுப்புவதையும் அதைக் கேட்டுவிட்டு ஆங்காங்கே அவரவர் தொழிலைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவனை நோக்கி மந்திரம் போட்டவர்கள் போல் செல்வதையும் பார்த்து ஆச்சர்யத்தில் அமிழ்ந்து போனார்கள்.
YOU ARE READING
கோரநாடு
Historical Fictionவான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய் ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும் கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற வான்புக ழோர்கோர நாடு. அரசியலில் காலமாற்றமே இல்லை. எல்லாக் காலத்திலும் ஆசை, துரோகம், சூழ்ச்சி, வஞ்சம், நட்பு, நம்பிக்கை இவையனைத்தும் தொடர்ந்துக...
கோரநாடு- 13. காலநெருப்பு
Start from the beginning