இத்தனை நாள் தன்னை ஒரு நொடியும் பிரியாது பணிவிடை செய்து வந்தாளாகிலும் இப்போது விழிப்பு வந்ததும் ஒரு நொடியும் அருகிலமர அஞ்சுவதைக் கண்டு வியப்புக்கும் பெருமிதத்துக்கும் உள்ளானான் இளங்குமரன். இருப்பினும் கொள்ளையனான தன்னிடம் இத்தனை அன்பு காட்டுதல் சாத்தியமா என்றும் விளங்கவில்லை அவனுக்கு. அதைத் தாங்க இயலாது கேட்டும் விட்டான் “என்னைப் பார்த்ததும் காவலர்களிடம் ஒப்படைக்காது இங்கு கொண்டுவந்து வைத்திருக்கக் காரணம் என்ன? மேலும் தாங்கள் யாரென்றும் அறிந்தகொள்ள விழைகிறேன். நன்றி கூறக்கூட தங்கள் பெயர்கூடத் தெரியாது எனக்கு. அந்த மதிற்சுவர் தாண்டி இருந்த குளத்திற்கு வந்த என்னை இப்படி தனியறையில் வைத்துப் பார்த்துக்கொள்வதன் காரணமென்ன?”
“காரணமின்றி எதுவும் நிகழ்வதில்லை. காரணங்களுக்காக மட்டுமே கூட எதுவும் நிகழ்வதில்லை. பெயருக்கு நன்றி கூறப் பெயர் எதற்கு?” என்று நிதானமாக வினவினாள்.
“அதுவும் சரிதான். ஆனால் தாங்கள் யாரென்று நான் தெரிந்துகொள்ள வேண்டாமா?”
“ஓ. அதற்கென்ன. நான் கார்மேகக்குழலி. இந்நாட்டு இளவரசி. ஆனால் எனக்கு அதிலெல்லாம் பெரிய ஆர்வமில்லை. இருப்பினும் என் அனுமதியின்றி என் அந்தப்புரப் பகுதிக்குள் நுழைந்த நீங்கள் யார் என்பதையும் அதற்கான காரணத்தையும் கூறலாமே. அதன்பிறகு தங்களை நான் ஏன் சிறைக்கு அனுப்பாமல் இங்கு வைத்து சீராக்கி சீராட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்” என்றாள்.
இதை எதிர்பாராத இளங்குமரன் ஒரு நொடி சிந்தித்துப் பின் தன்னைப் பற்றிக் கூறலானான்.” இதுவரை என்னைப் பற்றி நான் யாரிடமும் கூறவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலைகளிலும் நான் உண்மைகளைக் கூறியதில்லை. ஆனால் உன்னை மன்னிக்கவும், உங்களைக் கண்டதும் எனக்குப் பொய் கூறத் தோன்றவில்லை. என் பெயர் இளங்குமரன். கோரமலைக் காடுகளே என் பிறப்பிடம். எனக்கு தாய் தந்தையர் என்று யாருமில்லை. ஆனால் தாயினும் மேலாக என்னைக் கவனித்துக் கொள்பவர்கள் எனது குரு வெண்முகில்வேள் அடிகளும், என் நண்பன் மதிமாறனுமே.
YOU ARE READING
கோரநாடு
Historical Fictionவான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய் ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும் கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற வான்புக ழோர்கோர நாடு. அரசியலில் காலமாற்றமே இல்லை. எல்லாக் காலத்திலும் ஆசை, துரோகம், சூழ்ச்சி, வஞ்சம், நட்பு, நம்பிக்கை இவையனைத்தும் தொடர்ந்துக...
கோரநாடு- 9. மஞ்சத்துறை நெஞ்சம்
Start from the beginning